Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 8

 

*8*

மாலை வேலையெல்லாம் முடித்து வீட்டிற்குள் நுழைந்ததுமே தனக்கு தண்ணீர் எடுத்து வந்து நீட்டியவளை ஆச்சர்யமாய் பார்த்த அன்பரசன், “என்னமா அதுக்குள்ள வந்துட்ட? பரீட்சை முடிஞ்சதும் அனுப்பி வைக்குறேனு தகவல் சொன்னாங்க?”

“இங்கிருந்தே போயிக்கிறேன் மாமா. புக் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்ற குந்தவை சங்கடமாய் முறுவல் உதிர்க்க, அன்பரசனின் பார்வை கேள்வியுடன் நீலாவை தேடியது.

“எப்படி வந்த மா? சங்கடம் ஒன்னும் இல்லையே. இன்னும் ரெண்டு நாள் அங்கேயே தங்கிட்டு வந்திருக்கலாம் உங்க அம்மாவுக்கும் ஆறுதலா இருந்திருக்கும்.”

“அவங்க தான் வண்டியில் கூட்டிட்டு வந்தாங்க மாமா. இப்போ தான் வந்தோம். எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை. அம்மாவும் இருந்துப்பாங்க.” என்று வாய் தான் மொழிந்ததே ஒழிய மனம் முழுதும் அவள் பிறந்தகத்தில் தான் இருந்தது. 

எப்படி சமாளிக்கப் போகிறார்களோ? என்ன செய்யப் போகிறார்களோ?... சேமிப்பை வைத்து அத்தியாவசிய தேவைகளை சமாளித்துவிடும் அளவுக்கு இருப்பு இருக்கிறது ஆனால் வரும் மாதங்களுக்கான வீட்டு வாடகை, திருமணத்திற்கு என்று வாங்கிய ஒருலட்ச ரூபாய் கடனுக்கான வட்டி, நிரந்தர மாத வருமானமின்மை என்று கழுத்தை நெருக்கும் நிலை தான் வீட்டினில்… பரீட்சை துவங்கவே இன்னும் ஒருவாரத்திற்கு மேல் அவகாசம் இருக்க, அதன் பிறகு பரீட்சைக்கு இடையில் படிக்கவென கிடைக்கும் விடுமுறைகள் சேர்த்து பரீட்சை முடியவே ஒருமாதம் ஆகும். அதுவரை அங்கு தங்கியிருந்து அனைத்திற்கும் ஏதாவது வழி ஏற்படுத்தி தீர்வு கண்டுவிட வேண்டும் என்ற நினைப்பில் தான் பரீட்சையை காரணம் காட்டி அங்கேயே தங்குகிறேன் என்று சொல்லியிருந்தாள். அதற்கு வேட்டு வைக்கும் விதமாய் நீலா வருத்தம் தெரிவித்துவிட, அவளுக்குமே இந்த நேரத்தில் எவரையும் பகைத்து கொண்டு வாழ விருப்பமில்லை. நீலாவிடம் பேசுகிறேன் என்று தச்சனிடம் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்த நொடி நீலாவின் அலைபேசி எண் கூட தன்னிடம் இல்லை என்பது புரிய, தவறு தன்மீது தானோ என்ற எண்ணம் ஆழமாகியது. தச்சனிடம் சண்டை மட்டுமே போட்டிருக்கிறாள் அதைத் தவிர்த்து அந்த குடும்பத்தில் தான் இன்னும் ஐக்கியமாகவில்லை என்ற பிழை உணர்ந்தவுடன் சுமதியிடமும் விஷயத்தை கூற, சுமதி அவளை பேக் செய்து உடனே திருநறையூருக்கு அனுப்பி வைத்துவிட்டார். 

“எங்க யாரையுமே காணோம்?”

“கொல்லையில் காஃபி குடிச்சிட்டு இருக்காங்க. ஏதாவது வேணுமா மாமா?”

“உங்க அத்தையை நான் கூப்பிட்டேன்னு சொல்லுமா…” என்றவர் மற்றொரு அறைக்குள் புகுந்துகொள்ள, காலியான தண்ணீர் சொம்பை சமையல் மேடையில் வைத்துவிட்டு நீலாவை தேடிச் சென்று அவரிடம் அன்பரசன் அழைத்ததை கூற, அமைதியாய் உள்ளே சென்றுவிட்டார் நீலா. செல்லும் அவரையே தொடர்ந்த அவளது பார்வையை கவனித்த தச்சன்,

“ஏய் என்ன வேடிக்கை? நீ இப்படியே பார்த்துட்டு இருந்தா நீலாவதி வந்து உன்னை கொஞ்சிட போறதில்லை. பொறுமையா பேசிக்கலாம் இங்க உட்காரு.” 

“ஆமா அண்ணி நீங்க இப்படியே பார்த்துட்டு இருந்தால் எங்கம்மா கொஞ்ச மாட்டாங்க, என் அண்ணன் தான் கொஞ்சுவான்.” என்று மூக்கை நுழைத்த திவ்யாவின் தலையை கொட்டியவன், குந்தவையின் கையை பட்டும்படாமல் பிடித்து அவளை துணி துவைக்கும் சலவைக் கல்லில் அமரவைத்தான். மற்றவர்கள் பாத்திரம் துலக்கவென சலவைகல்லை ஒட்டியே அங்கே போடப்பட்டிருந்த சிமெண்ட் தரையை தாண்டி கீழே மண் தரையில் கால்நீட்டி அமர்ந்திருக்க, சங்கடத்துடன் குந்தவை எழப்பார்த்தாள். ஈரமில்லாததால் கீழே அமர்ந்தபடியே தச்சன் அவள் கையை அழுத்திப் பிடித்து அவளை எழவிடாமல், “நீ மேலேயே உட்காருடி…” 

“இல்லை உங்க கூடவே உட்கார்ந்துக்குறேன்…” என்று எழுந்துவிட, கத்தி மேல் நிற்பது போன்று தவிப்புடன் ஒருவித அழுத்தத்தில்… மூச்சுவிடவே ஆயிரம்முறை யோசித்து தயங்கித் தயங்கி செய்பவளை பரிவாய் பார்த்த மங்களம், “இங்கன என் பக்கத்தில் வா குந்தவை…” என அவளை அருகில் அழைத்து அமரவைத்துக் கொண்டவர் திவ்யாவிடம் திரும்பி, “செழிப்பா இருக்குற நாலு கொய்யா இலையை பறிச்சிட்டு போய் கஷாயம் போடுடி. நாலு சீரகத்தையும் அதோட சேர்த்து போட்டு நல்லா கொதிக்க வை. சுகர் அதிகமாகிடுச்சி போல குதிகால் எரியுது.” என்க, திவ்யா கொய்யா இலைகளை பறிக்க,  குந்தவையின் பார்வை அங்கிருந்த பச்சைகளில் படிந்தது. செம்பருத்தி, மல்லி, முல்லை, ரோஜா, நந்தியாவட்டம், அரளி, தும்பை, கனகாம்பரம் என்று பூச்செடிகள் ஒருபுறம், கொய்யா, எலுமிச்சை, மாங்காய், கத்திரிக்காய் என்று காய், கனிகள் மறுபுறம் என்று இருபுறமும் அழகாய் வரிசைகட்டி பராமரிக்கப்பட்டிருந்தது. புதிதாய் வைத்திருந்த மருதாணியும் வெற்றிலையும் கூட சிறிதாய் ஒரு ஓரத்தில் துளிர்விட்டு மேலெழும்பி வந்துகொண்டிருந்தது.

விழி எடுக்காமல் இயற்கையில் லயித்து, இயற்கையின் வாசனையை நாசியினுள் இழுத்தபடியே, “நேர்த்தியா பராமரிச்சிருக்கீங்க.” என்று குந்தவை எண்ணங்களை வெளிப்படுத்த, அவள் அகத்தில் இருந்த அழுத்தமும் அமைதியான தென்றலில் மறைந்து கரைந்து, அதன் சீரான மென்னிசையில் உற்சாகமாய் உணர்ந்தது.

“நீலா தான் எல்லாத்தையும் பார்த்துகுறா... நீயும் போக போக பழகிக்கலாம்.” என்று மங்களம் சொல்லவும் திக்கென்றது குந்தவைக்கு. சிறு சிறு வேலைகள் செய்வாள் தான் ஆனால் இவ்வளவு பெரிய இடத்தை பராமரிப்பதை நினைத்தாலே முதுகுவலி வந்துவிடும் போலிருந்தது.

குந்தவையின் மீதே பார்வை பதித்திருந்த தச்சனின் கண்ணில் அவளது பாவனைகள் பட்டுவிட, “அவளை பயமுறுத்த தான் பக்கத்தில கூப்பிட்டு உட்கார வச்சிருக்கியா கிழவி?” என்று பொங்கிக்கொண்டு வர, மங்களம் அவனை கூர்ந்து பார்த்து, “கட்டிகிட்டவ மேல பாசம் இருக்கலாம், இருக்கணும். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் அதை நீ வெளிப்படுத்துற விதத்திற்கு எல்லைகள் இருக்கனும்.”

“இதென்ன வம்பா இருக்கு கிழவி? என்னவோ யாருக்கும் தெரியாம அடுத்தவன் பொண்டாடி மேல பாசம் வச்சு கொஞ்சுற மாதிரி மறஞ்சி மறஞ்சி கொஞ்ச சொல்ற? என் பொண்டாட்டி நான் எங்க, எப்படி வேண்டும்னாலும் கொஞ்சுவேன்... நீ வேணும்னா கண்ணையும் காதையும் மூடிக்கோ...” என்று பேசுபவனை குந்தவை ஆவென்று பார்த்திருக்க, அவர்கள் அசந்த நேரம் குந்தவையின் கன்னத்தில் பட்டென்று ஒரு இச்சு வைத்துவிட்டு உள்ளே ஓடியே விட்டான் தச்சன்.

“கூறுகெட்டவன் இவனுக்கு எதை எங்க செய்யணும்னே தெரியாது. பாதி பிரச்சனையை உனக்கு இவனே இழுத்து விட்டுருவான்.” என்று மங்களம் தலையில் அடித்துக்கொள்ள குந்தவை பட்டென்று எழுந்தாள் அவன் பின்னே செல்ல...

“அட நீ எங்க ஓடப்பார்க்குற? உன்கிட்ட பேசத்தான் திவ்யாவை உள்ளே அனுப்புனேன் இந்த பய கலவரம் பண்ணிட்டான். உட்காரு இப்படி...” என்று வலுக்கட்டாயமாக அவளை அமரவைக்க, நெளிந்துகொண்டே அமர்ந்தாள் குந்தவை. வீட்டினருடன் இன்னும் பழக்கமே ஆகாத நிலையில் அவர்களுடன் சரளமாக பழக வழி எற்படுத்துவதை விட்டுவிட்டு இப்படி சங்கடத்தில் தன்னை நிறுத்திவிட்டானே என்று தச்சனின் மீது கோபம் எட்டிப்பார்த்தது குந்தவைக்கு.

“நீலா நல்லவ தான் ஆனால் எங்க இவனும் கையை விட்டு போயிடுவானோன்னு அவளுக்கு பயம் வந்துடுச்சி. உன் மேல தச்சன் வச்சிருக்க பாசம் தான் அவள் பயத்தோட முகாந்திரம். அது தேவையில்லாத பயம்னு நீ புரியவச்சிட்டா உரசல் வராது. இல்லை நான் எதுக்கு அதெல்லாம் செய்யணும் என் புருஷன் மட்டும் எனக்கு போதும்னு நினைச்சா நிம்மதி தான் பறிபோகும். அனுபவத்தில் சொல்றேன், விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. இப்போவே ரொம்ப உரசி விரிசலை வளர்த்துக்காத... நீ படிச்ச பொண்ணு இதுக்கு மேல நீயே முடிவு பண்ணிக்கோ...” என்று மங்களம் அவள் உச்சியில் லேசாக தட்டிவிட்டு உள்ளே சென்றுவிட, குந்தவையின் எண்ணங்கள் முழுதும் நீலாவை சுற்றியே வந்தது. என்னதான் எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்? அனைத்தையும் செய்யும் முன்னே அனுமதி வேண்டனுமா? நாம் நினைத்தபடி, நம் பிறந்தவீடு போல இவ்விடம் இருக்காதோ? என்ற எண்ணங்கள் ஆழியாய் அவளுள் அசுரவேகமெடுக்க, அதே சிந்தனையுடன் வீட்டினுள் நுழைந்தாள்.

பிறந்தது முதல் பெற்றவருடன் அவர்களது பழக்கவழகங்களை பின்பற்றி வாழ்ந்திருக்க, மணம் முடித்து இன்னொரு வீட்டிற்கு வரும் புதுப்பெண்ணை தங்கள் சூழலுக்கு மாற அவகாசம் கொடுப்பதில்லை. ஆனால் அவர்களின் மீது மலையளவு எதிர்பார்ப்பு வைத்து அதை ஈடுசெய்யும் முன்னரே அதை நிறைவேற்றவில்லை என்று குறைபடிப்பவர்கள் ஏராளம்.

தன்னை பின்தொடர்ந்து வருவாள் என்று எண்ணி தச்சன் அறைக்குச் சென்றிருக்க, அவள் வரவில்லை எனவும் திரும்ப அறையிலிருந்து வெளியே வந்தவன் குழப்பமுடன் வீட்டினுள் நுழையும் குந்தவையை கண்டு யோசனையுடன் நெருங்கி, “பிரியாணி கிடைக்கும்னு நினைச்சா இதென்ன தயிர்சாதமும் இல்லாமா போச்சா?”

அவன் குரலில் தெளிந்தவள் பார்வை முறைப்பாய் மாறி, “பிரியாணி விருந்தே தரேன் வரீங்களா?” என்று கேட்க, நொடியே என்றாலும் அவள் விழிகளில் வந்துச் சென்ற பழைய மின்னலும் வேகமும் அவனை உற்சாகமாக்கின.

உல்லாசமாய் விசிலடித்தவன் அவளை சீண்டும் பொருட்டு வேகமாய் அவள் இடை சுற்றி வளைத்து, அவளை தன் நெஞ்சோடு இழுத்தணைத்து, “உன்னோட மாமன் எல்லாத்துக்கும் ரெடி தான்டி...” என்று நகைப்புடன் இதழ்கள் அவள் கன்னத்தில் உரசும்படி வார்த்தைகளை பிரயோகிக்க, கூசி சிலிர்த்தவள்,

“போடா கிறுக்கு பயலே... நடுவீட்டுல என்ன பண்ணுற?” என்று நாணப் புன்னகை சிந்தி, அவன் நெஞ்சினில் கைவைத்து அவனை ஒரே தள்ளாய் தள்ளிவிட்டு அறைக்கு ஓடிவிட்டாள் குந்தவை.

அவள் ஓடும் வேகத்திற்கு ஏற்ப அவளது காலில் புதிதாய் மின்னிய கொலுசும் மெல்லிசை வாசிக்க, ‘உனக்கு பிரியாணி மட்டுமில்லை பிரியாணி விருந்தே கன்பார்ம்டா தச்சா...’ என்று அவள் ஓடுவதையே புன்னகை மாறாமல் பார்த்து நின்ற தச்சன் தலையை சிலுப்பிகொண்டு அங்கிருந்து நகர, அவன் நேரமோ குந்தவை நேரமோ அன்பரசனின் பேச்சில் சற்று தணிந்து அறையிலிருந்து வெளியே வந்த நீலாவின் மனதில் மீண்டுமொரு நெருடல். பிடிக்காத மருமகள் கைபட்டா குத்தம் கால்பட்டா குத்தம் என்பது போல ஏனென்றே புரியாத தெரியாத நெருடலும், பயமும் நீலாவை மீண்டும் சூழ்ந்து கொண்டன. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்தது அடுத்தடுத்த விதியின் விளையாட்டும்.

“நீ தான் குந்தவையை இப்போவே வரச் சொன்னியா?” என்ற கேள்வி தான் கணவரை தேடிவந்த நீலாவிடம் முதலில் கேட்கப்பட்டது. அதிலேயே மனம் சுனங்கிய நீலா,

“நான் ஒன்னும் வரச் சொல்ல. ஏன் அங்க தங்குறதை பற்றி குந்தவை சொல்லலைன்னு தான் கேட்டேன்.”

“அந்த பொண்ணே இப்போ தான் அப்பாவை இழந்து நிக்குது. அதுகிட்ட ஆதரவா நாலு வார்த்தை பேசு, சும்மா தேவையில்லாததை மனதில் போட்டு குழப்பிக்காத...” என்று அன்பரசன் சொல்லியிருக்க,

“என்னமோ எனக்கு மட்டும் தான் அவங்க செஞ்ச காரியத்தில் விருப்பம் இல்லை என்கிற மாதிரி பேசுறீங்க? உங்களுக்கும் ஈமச் சடங்கில் தச்சனும், குந்தவையும் நடந்துகிட்டது பிடிக்கல தானே?” என்று எதிர்கேள்வி எழுப்பியிருந்தார் நீலா.

“அதில் எனக்கும் வருத்தம் தான். ஆனால் அதை வெளிகாட்ட இது நேரம் இல்லை நீலா. நம்ம பையன் கல்யாணம் நடந்து இன்னும் ஒருவாரம் கூட முடியல அதுக்குள்ள நம்மை மனசு அறிந்து அந்த பொண்ணு நடந்துக்கணும்னு எதிர்பார்க்கக் கூடாது. போக போக நம்ம குடும்பத்துக்கு எது சரிவரும் வராதுனு நீ தான் எல்லாத்தையும் குந்தவைக்கு சொல்லிக் கொடுக்கணும். நாளைக்கு இந்த குடும்பத்தை வழிநடத்த போறது குந்தவை தான். அதற்கு அவளை தயார்படுத்தணும் அதை விட்டுட்டு பயந்துட்டு இருக்காத... நம்ம காலம் வேற இப்போ இருக்குற காலம் வேற... பசங்க வெளிப்படையா சில விஷயங்களை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இவனும் அந்த ஆர்வக்கோளாரில் தான் இயல்பா குந்தவை மீது இருக்கும் தன்னோட விருப்பத்தை வெளிப்படுத்துறானே ஒழிய அதன் வெளிப்படைதன்மைக்கு பின்னாடி நம்ம மேல இருக்குற பாசம் குறைஞ்சிட்டதா அர்த்தம் இல்லை. குடும்பத்தோட ஒற்றுமை குந்தவை கையிலும் உன் கையிலும் தான் இருக்கு. தச்சன் உன் கையிலேயே இருக்குறதும் உன்னோட செயலில் தான் இருக்கு. அவன் இப்போ நமக்கு பையன் மட்டுமில்லை குந்தவைக்கும் உரிமைப்பட்டவன். புரிஞ்சி நடந்துக்கோ...” என்று அன்பரசன் நீண்ட விளக்கம் கொடுத்திருக்க, நீலாவும் சற்று ஆசுவாசமானார்.

ஆனால் அதெல்லாம் குந்தவையின் வார்த்தை பிரயோகங்களை கேட்டதும் பின்னே சென்றுவிட்டது. என்ன இவள் மட்டுமரியாதை இல்லாமல் என் பையனை ஒருமையில் பேசுகிறாள் என்று குந்தவையின் மீது முதலில் கடுப்பு வர, மகன் முகத்தில் தெரிந்த அவளது வார்த்தைகளுக்கான பிரதிபலிப்பு பயத்தை இன்னுமே கிளப்பிவிட்டது, ‘என்னவோ பரிசு வாங்குன மாதிரி இப்படி பல்லை காண்பிக்கிறான்,’ என்று செல்லும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டார்.

“என்னம்மா சிலை மாதிரி நிக்குற? பாட்டி கசாயம் கேட்டாங்க. கொதிக்க விட்டிருக்கேன், கொதிச்சது போதுமான்னு வந்து பாரேன். எனக்கு பதம் தெரியல.” என்று திவ்யா வந்து அவரை உசுப்பும் வரை அப்படியே நின்ற நீலா, ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு சமையலறைக்குச் சென்றார்.

தயங்கித் தயங்கி அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்த குந்தவையும் இவர்களை தொடர்ந்து வந்து,

“நைட்டுக்கு என்ன செய்யணும் அத்தை?”

நீலா திரும்பி ஒருபார்வை பார்த்தவர் மீண்டும் பார்வையை அடுப்பின் மீது பதித்து கசாயத்தை கலக்கிவிட்டபடியே, “தச்சன் ராத்திரி டிபன் தான் சாப்பிடுவான். அவனுக்கு மட்டும் ஏதாவது செஞ்சிடு.” என்க,

“மத்தவங்களுக்கு எல்லாம்?”

“மதியம் வடிச்ச சோறு தான்.” என்க, அந்த பதிலில் குந்தவையின் முகம் சுருங்கியது. அவளுக்கு இரவில் சாதம் சாப்பிடவே பிடிக்காது. அதற்காகவே அவர்கள் வீட்டில் பழக்கத்தை மாற்றிக் கொண்டார்கள். இங்கு?

“எல்லோருமே சூடா டிபன் சாப்பிடலாமே அத்தை? எப்படியும் அவருக்கு டிபன் செய்யணும் தானே அப்படியே எல்லோருக்கும் சேர்த்து செஞ்சிடலாமே?” என்று தயக்கத்தை உடைத்து அந்த வீட்டினுடன் ஒன்ற முயல்வோம் என்று முதல் அடி எடுத்து வைத்தாள் குந்தவை.

“இதையேத் தான் நானும் அடக்கடி சொல்றேன். இந்த அம்மா கேட்க மாட்டேங்குறாங்க... அம்மா நம்ம வீட்டு புதுவரவே சொல்லியாச்சு... டிபனே செய்யலாம்மா...” என்று திவ்யா நச்சரிக்க,

“சோறு வீணாகிடுமே...” மகள் சொன்ன பிறகு கொஞ்சம் இறங்கி வந்தார் நீலா...

“மாட்டுக்கு வச்சிடலாம்.”

“மாடு இருக்கா இங்க?” என்று குழப்பமாய் கேட்டாள் குந்தவை.

“நீங்க பார்க்கலையா? நம்ம வீட்டு இடது பக்கம் தான் மாட்டுக் கொட்டகை இருக்கு.”

“கவனிக்கல அண்ணி.”

“நைட் டிபன் நானே செஞ்சுக்குறேன். திவ்யா நீயும் குந்தவையும் போய் பால் கறக்குறவங்க வாடிக்கை பால் ஊதிட்டு வந்து எல்லாத்தையும் சுத்தம் செய்ய ஆரம்பிச்சிருப்பாங்க, அதை மேற்பார்வை பாருங்க. அப்படியே செடி எல்லாத்துக்கும் தண்ணி ஊத்துங்க.” என்று அனுப்பி வைக்க, திவ்யா குந்தவையை தள்ளிக்கொண்டு வெளியே வந்து, “உங்க புண்ணியத்தில் இன்னைக்கு டிபன்...” என்று குதூகளித்துக் கொண்டே மாட்டுக் கொட்டகைக்கு அழைத்துச் செல்ல,

“எனக்காக இல்லை அண்ணி உங்களுக்காகத் தான் டிபன் செய்ய ஒத்துட்டு இருப்பாங்க.” என்று குந்தவை மறுக்க, அதை காதில் வாங்கவே இல்லை திவ்யா.

மாட்டுக் கொட்டகையை நெருங்க நெருங்க மாட்டின் சாண வாடையில் தன் துப்பட்டா கொண்டு மூக்கை மூடிக்கொண்டாள் குந்தவை. அதையே விசித்திரமாய் பார்த்த திவ்யா, “என்ன இதுக்கே இப்படி ஆகிட்டீங்க?”

“இல்லை எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை.” திவ்யா எதுவும் தவறாய் எடுத்துக்கொண்டு வீட்டினில் சொல்லி இதுவேறு பிரச்சனை ஆகிவிடுமோ என்று தயங்கித் தயங்கிக் கூறினாள் குந்தவை.

“பரவாயில்லை இனி பழகிக்கோங்க.” என்று திவ்யா முடித்துக்கொள்ள, அழுத்தத்தில் அமிழ்ந்து உருமாறியிருந்த குந்தவையின் இயல்பு அவளை நிம்மதியாய் இருக்கவிடவில்லை. அனைத்தையும் பார்க்க பார்க்க ஏதோ ஒரு அழுத்தம் வந்து எறிக்கொண்டது. எல்லாவற்றிற்கும் தயங்கித் தயங்கி உணர்வுகளை மறைத்து அடுத்தவர் வாய் பார்த்து நிற்பது எரிச்சலை தருவதாய் இருந்தாலும் தந்தையின் இழப்பு நினைவு வந்து, அமைதியாய் அனைத்தையும் கையாண்டு விட்டுக்கொடுத்துப் போகவேண்டும் என்று எடுத்திருந்த முடிவை நியாபகப்படுத்தி அவளை அமிழ்த்தியது.

குந்தவையின் அமைதியை உணர்ந்த திவ்யா நட்பாய் புன்னகை உதிர்த்து, “நீங்க பயப்பட வேண்டாம். இதெல்லாம் மேற்பார்வை பார்த்தால் போதும் அண்ணி. உங்களுக்கு பெருசா இங்க வேலை இருக்காது. வாடிக்கையா ஒரு இருபது வீட்டுக்கு கொடுப்பதால ஆள் வச்சி தான் எல்லாம் செய்றோம்.”

“நம்மோட தோட்டம், வயல் எல்லாம் இங்கிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கு அண்ணி. மெயின் ரோட்டுக்கு போய் ஊருக்கு மறுபக்கம் போகணும். நடந்து அங்கே போறதுக்குள்ள சோர்வாகிடும் நீங்க இன்னோரு நாள் பைக்கில் அண்ணனோட போய் பாருங்க.”

திவ்யாவின் பேச்சுக்கள் குந்தவையின் மனதை வெகுவாய் சாந்தப்படுத்த, அவளுமே இயல்பாய் இருக்க முயன்றாள், “இந்த ஊரே அமைதியா இருக்கு.” 

“ஆமா ஆமா… சின்ன ஊரு தானே அண்ணி. சின்னதும் பெருசுமா மொத்தமே பத்து தெரு தான் இருக்கும்.” என்று பதில் சொல்லிக்கொண்டே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச ஹோஸ் பைப்பை சொருக, “குடுங்க அண்ணி நான் செய்றேன்.” என்று குந்தவை இடைப்புகுந்தாள்.

“ஆரம்பத்தில் இதெல்லாம் செய்யணும்னு நமக்கு ஆசையா தான் இருக்கும் ஆனால் போகப்போக எவ்வளவு வேலை தான் செய்யுறதுன்னு சலிப்பு வந்துடும். இனி இதெல்லாம் நீங்க தானே செய்யப் போறீங்க இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.” என்று திவ்யாவே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச, குந்தவை அமைதியாய் நின்றுகொண்டாள். 

வாழ்க்கை இனி எப்படி செல்லப் போகிறது என்ற நிலையற்ற தன்மை நிலைத்திருக்க அனைத்தையும் மெளனமாய் கடப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை குந்தவைக்கு. 

சொன்னபடியே நீலாவே அனைவருக்கும் இரவு உணவு தயாரித்து வைத்திருக்க, குந்தவை அந்தி பொழுது முழுதும் திவ்யாவையே வால்பிடித்துக் கொண்டு சுற்றினாள். நீலாவை இவளும் நெருங்கவில்லை அவரும் இவளை கண்டுகொள்ளவில்லை.

இரவு உணவின் போது அனைவருமே முற்றத்தில் சுற்றி அமர்ந்திருக்க,

“என்ன இன்னைக்கு எல்லோருக்கும் டிபன் செஞ்சுருக்க?” என்று அன்பரசன் விளிக்க,

துரிதமாய் வந்தது திவ்யாவின் பதில், “அண்ணி உபயம்.”

அதைவிட விரைவாய், “ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டாங்களா?” என்று வந்து விழுந்தது தச்சனின் வியப்பு.

“அதுக்குத் தான் முயற்சி பண்றேன்,” என்று திவ்யா முணுமுணுக்க, நீலா தன் மக்கள் இருவரையும் ஒருசேர முறைத்துவிட்டு,

“திவ்யாவும் குந்தவையும் கேட்டாங்க, அதுதான் செஞ்சேன்.” என்று பொதுவாய் சொல்ல, அவர் மனதில் என்ன ஓடுகிறது என்று அன்பரசனாலே கண்டுகொள்ள முடியவில்லை.

“சரி சரி... உங்களுக்கு கஷ்டமா இல்லைனா தினமும் எல்லோருக்கும் இதுவே செஞ்சுடுங்க.” என்று பொதுவாய் சொல்லிவிட்டு அன்பரசன் உணவில் கவனம் செலுத்த, தச்சன் பார்வையாலே குந்தவையிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தான். அவள் கண்டுகொள்ளவே இல்லை, தன் வாழ்க்கை மொத்தமும் அந்த உணவுத் தட்டில் இருப்பது போன்று அதிலிருந்து பார்வையை விலக்கவே இல்லை.

உண்டு முடித்த பாத்திரங்களை திவ்யா கொல்லையில் எடுத்துக்கொண்டு போய் போட, அதை தேய்க்க அமர்ந்தாள் குந்தவை. தன் வீட்டினில் நின்று கொண்டே சிங்க்கில் எல்லா பாத்திரங்களையும் தேய்த்து பழகியவளுக்கு இங்கே சிறிய குண்டுபல்ப் வெளிச்சத்தில் கீழே வாகாய் ஊனி அமரவே கடினமாய்த் தான் இருந்தது. எப்படியோ துப்பட்டாவை அங்குமிங்கும் சுற்றி ஒழுவழியாய் அமர, நீலா வேகமாக வந்து, “நீ போய் தூங்கு குந்தவை. நான் காலையில் தேய்ச்சிகிறேன்.”

“இல்லைத்தை... நீங்க தானே எல்லா வேலையும் பார்க்குறீங்க. நானும் கொஞ்சம் செய்றேன்.” என்று இவள் மறுக்க,

“சொன்னா கேட்டுகணும் குந்தவை. எல்லோரும் தூங்கப் போயாச்சு, நீயும் போ...” என்று அழுத்தமாய் சொல்ல அதை மறுக்க முடியவில்லை குந்தவையால்... அப்படியே போட்டுவிட்டு எழுந்தவள் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்தாள்.

“என்ன வேணும்?”

“இல்லை இங்க இவ்வளவு இருட்டா இருக்கு...” என்று இழுத்தவள் உடனேயே, “ஒன்னுமில்லை...” என்று சொல்லிவிட்டு சற்று தள்ளி இருந்த கழிவறை நோக்கி இருட்டில் வேக எட்டுக்கள் வைத்து நடந்தாள். அவள் என்ன கேட்க வந்திருப்பாள் என்பதை உணர்ந்த மங்களம் நடந்து செல்லும் வழியின் லைட்டை போட்டுவிட்டு அவள் வரும்வரை கழிவறை அருகிலேயே நின்றார். திரும்பி வந்த குந்தவை அங்கு பரவியிருந்த வெளிச்சத்தையும் நீலாவையும் பார்த்து திகைத்து பின் அவர் செல்வதற்காக நிற்கிறார் என்று நினைத்துக்கொண்டு தள்ளி நடக்க, அவரோ இவள் பின்னேயே வந்தார்.

“லைட் சுவிட்ச் இங்க தான் இருக்கு,” என்று ஓரிடத்தை காட்டியவர், “இருட்டில் தனியா வர பயமா இருந்தால் தச்சனை கூப்பிட்டுகோ, இல்லைனா என்னை கூப்பிடு.” என்று சாதாரணமாய் சொன்னவர் உள்ளே நுழைந்ததும் இரும்புக்கதவை பூட்டிவிட்டு மரக்கதவையும் சாற்றி, “தினம் எல்லா லைட்டும் அமர்த்தியாச்சான்னு பார்த்துட்டு இந்த ரெண்டு கதவையும் நல்லா பூட்டிடணும். திருட்டு பயம் இல்லைதான் ஆனால் அதுக்காக அலட்சியமாக இருக்கமுடியாதே...”

எல்லாம் தெரிந்து கொள்ளட்டும் என்று அவளுக்கு தகவல் சொல்கிறாரா இல்லை இனி இதெல்லாம் நீதான் செய்ய வேண்டும் என்பதற்காக சொல்கிறாரா இல்லை உடன் வருகிறாளே என்று பேச்சு கொடுக்க இதெல்லாம் சொல்கிறாரா என்று புரியாமல் விழித்தாள் குந்தவை.

“என்ன முழிச்சிகிட்டு நிக்குற? போய் தூங்கு.” என்றுவிட்டு நீலா சமையலறை விளக்கை அணைக்க, யோசனையோடே தங்கள் அறைக்குச் சென்றாள்.

திருமணத்தன்று எப்படி இருந்தானோ அதேப்போல கால் மேல் கால்போட்டு காலை ஆட்டிக்கொண்டு மேல்சட்டையின்றி மெத்தையில் படுத்திருந்தான் தச்சன். சிந்தனையுடன் வந்தவள் கருத்தில் அதெல்லாம் பதியாமல் போக, தேமேவென அலைபேசியில் அலார்ம் வைத்தபின், விளக்கை அணைத்துவிட்டு மெத்தையில் அவனைத் தாண்டி சுவரோரம் படுத்துக்கொண்டாள். தன்னை கவனிப்பாளா என்று பொறுத்து பொறுத்துப் பார்த்தவன், அவளிடமிருந்து அசைவில்லை என்றவுடன் சீண்டும் பொருட்டு அவள் மீது கை போட, திடுகிட்டவள் திரும்பவெல்லாம் இல்லை தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தன் இடையில் விழுந்திருந்த அவன் கரத்தின் மீது தன் கரத்தை வைத்துக்கொண்டாள் குந்தவை.

அவளது அமைதியில் மனம் சோர்ந்துபோக, கையை உருவிக்கொண்டவன் அவளை வலுக்கட்டாயமாக தன்புறம் திருப்பி, தாடையை அழுத்திப் பிடித்து, “ப்ச்... என்னடி பிரச்சனை உனக்கு?”

விழிகள் கேள்வியுடன் அவனை நோக்க, வார்த்தைகள் அகத்தை திறந்தது, “அத்தையை எப்படி அணுகுறதுனே தெரியல...”

“எதுக்கு நீலாவை பார்த்து இப்படி பயப்படுற? என்கிட்ட என்ன பேச்சு பேசுன, அதே மாதிரி நேரா அம்மாகிட்டேயே போய் பேசிட வேண்டியது தானே?”

“தெரியாத மனிதர்களிடமும் நமக்கு ரொம்ப நெருக்கமானவர்களிடமும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாய் எப்படி வேண்டுமென்றாலும் தைரியமா பேசிடலாம். தெரியாதவங்க கடந்து போயிடுவாங்க, நெருக்கமானவங்க நம்ம பேச்சுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை புரிஞ்சிப்பாங்க. ஆனால் இந்த ரெண்டுகெட்டான்... நமக்கு வேண்டியவங்க ஆனால் நெருக்கம் இல்லாதவங்க அவங்களை பகைச்சிக்க முடியாது. தணிஞ்சி தான் பேசணும்.”

“என்னை மட்டும் காய்ச்சி எடுத்த இப்போ என் அம்மாவுக்கு மட்டும் இவ்வளவு யோசிக்குற?”

“அப்போ என் பின்னாடி எனக்கு ஆதரவா என் அப்பா இருந்தாங்க. நீ செய்யுறது எல்லாமே சரியா இருக்கும்னு சொல்லி சொல்லியே என்னை ஊக்கப்படுத்துவாங்க. எவனா இருந்தாலும் பார்த்துக்கலாம்னு தைரியமா பேசுனேன் ஆனால் இப்போ அவர் இல்லையே...” என்று சொல்லும்போதே விசும்பல் வெளிப்பட்டது.

“ச்சு... நீ தைரியசாலின்னு நினைச்சேன்... நீ என்ன அப்பா அப்பான்னு உன்னையே நீ தொலைக்குற...”

“நான் சரியா செய்வேன்னு சொன்ன அப்பாவையே என்னோட வீம்பால பேசாம இருந்து அவரை மேல அனுப்பிட்டேன். இனி யாரையும் நான் பகைச்சிக்குறதா இல்லை. இருக்குறவரை நம்மை சுற்றி உள்ளவங்க மனசு நோகாம பார்த்துக்கணும், ஆனால் அது முடியுமான்னு தெரியல... நான் சரியா இருக்குற மாதிரி தான் எனக்குத் தோணுது ஆனால் அது மற்றவர்களுக்கு தப்பா தெரியுது. இதை எல்லாம் எப்படி மாத்தப்போறேன்? இல்லை நானே மாறப் போறேனா எதுவுமே எனக்குப் புரியல... ஒரே குழப்பமா இருக்கு.” என்று அவள்பாட்டிற்கு பேசிக்கொண்டு செல்ல, அடங்கி அமைதியாய் அவனின் ஆதரவை யாசித்து காத்திருக்கும் தெளிவற்ற குந்தவையையும் பிடிக்கவில்லை அவனுக்கு. 

“பிரியாணி தான் இல்லைனு பார்த்தால் இப்போ நீ தயிர்சாதமாகவும் இல்லைடி... நீலாவையே நினைச்சிக்கிட்டு இருக்காத? அவங்க பையனையும் கொஞ்சம் கவனிடி...” என்றவன் குனிந்து அவள் கன்னத்தில் வலியாது கடித்துவிட்டு அவளைக் காண அவளிடம் மறுப்புக்கான சாத்தியகூறு தெரியவே இல்லை.

“என்னடி அமைதியா இருக்க? தள்ளிவிடுவ இல்லைனா கன்னத்திலே பளாருன்னு ஒன்னு விடுவேன்னு எதிர்பார்த்தேன்.” என்று வியப்பாய் வினவ, மெல்லிய முறுவல் மட்டுமே அவளிடம்...

“என்னடி சிரிக்குற?”

“பிரியாணி விருந்து கேட்டுட்டு அது கிடைக்கும் போது என்ன தொனதொனணு பேச்சு வேண்டிக்கிடக்கு உனக்கு?” என்று மையலாய் பேசியவளை நம்பாமல் பார்த்தான் தச்சன்.

“ஏய் என்னடி ஒரு மார்க்கமா பேசுற?”

“வேண்டாம்னா போடா...” என்று நகைப்புடன் அவனை தள்ளிவிட்டு திரும்பி படுத்துக்கொள்ள, அதற்கு மேலும் அவனின் நிலையை கேட்கவும் வேண்டுமா... உருண்டு அவளையும் சுவரோடு தள்ளி அணைகட்டியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக்கொள்ள, சீரற்ற மூச்சுகளும், எண்ணிலடங்கா முத்தங்களும், மிச்சங்களும் போட்டி போட்டுக்கொண்டு அடுத்தடுத்து அரங்கேற அவளின் கொலுசொலி மட்டுமே அங்கு மொழி பேசின.

ஓய்ந்து போய் நடுநிசியில் தூங்கியவர்கள் விடிந்தது தெரிந்தும் விழி பிரிக்கவே பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

“எனக்கு தூக்கம் வருதுடா... ஆனால் அலார்ம் அடிச்சிடுச்சு.” என்று அறைதூக்கத்தில் பிதற்றிகொண்டே அவன் நெஞ்சில் இவள் பிராண்ட,

“ச்சு... பேசாம தூங்குடி...” அவன் அதட்டி அவள் கரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.

“முதல் நாளே தாமதமா எழுந்தா நல்லாயிருக்காது...” என்று இடைவெளி விட்டு வார்த்தைகளை வீசியவள் முகத்தை அவன் நெஞ்சத்தில் தேய்த்து சோம்பல் முறிக்க முயன்றாள்.

அவளின் தீண்டலில் நெளிந்தவன், புருவம் சுருக்கி, “மனுஷனை ராத்திரியும் தூங்கவிடுறது இல்லை இப்போவும் விடுறது இல்லை.” என்று முனுகிக்கொண்டே விழித்தவன் அவளை புரட்டிப்போட்டு, போட்ட கோடுகளை திரும்ப போட ஆரம்பிக்க, தன் இதழில் ஊர்ந்து உட்புக முயலும் அவனது அதரங்களை தடுத்து ஒருவழியாய் விழித்தாள் அவள்.

“கெட்டப்பையன்டா நீ...” தூங்கி எழுந்து சோபைக் குரலில் அவனை மையலுடன் நோக்க,

துரித முத்தங்களை அவள் முகத்தினில் வாரியிறைத்து, “ரொம்ப ரொம்ப கெட்டப்பையன் இந்த குந்தவைக்கு.”

அவன் முகத்தினை பிடித்து தடுத்து நிறுத்தியவள், “ஆனால் இந்த குந்தவை இப்போ நல்ல்ல மருமகளா நடந்துக்கணும்... சோ நகரு, நான் குளிச்சிட்டு வந்துறேன்.” என்கவும், அவளுக்கு வழிவிட்டவன் தன் மேல்சட்டையை மாட்டிக்கொண்டே,

“ஆனால் நீ அந்தர்பல்டி அடிச்சிட்டடி... நீ இருந்த பார்முக்கு எப்படியும் முதல் கல்யாண நாள் வரைக்கும் நான் பிரம்மசாரி தான்னு நினைச்சேன்...” என்று இயல்பாய் சொல்ல அவள் சொன்ன பதிலில் இவன் முகம் சுருங்கியது.

“எப்படியும் வாழ்ந்து தானே ஆகணும். அது நேற்றா இருந்தா என்ன இன்னும் ஒரு வருஷம் கழிச்சி நடந்தால் என்ன?” என்றவள் தன் துணிகளை எடுத்துக்கொண்டு வெளியேற முயல, அவளை தடுத்தவன், “என்ன இப்படி சுரத்தையே இல்லாம சொல்ற?”

அவனை கூர்ந்து பார்த்தவள் மென்னகை பூசிக்கொண்டு, “இதுக்கு பிரியாணியோட பதில் வேணுமா இல்லை தயிர்சாதத்தோட பதில் வேணுமா?”

“என்னடி புதிர் போடுற? ரெண்டு பதிலையும் சொல்லு...”

கண்களை சிமிட்டியவள் அவனை நெருங்கி அவன் விழிகளில் விழி கலந்து, அவன் கன்னத்தை கரங்களில் தாங்கி, “ரெண்டு பதிலும் ஒன்னு தான். அப்பாவுக்கு செய்ய வேண்டிய கடமையை உரிமையா நான் செய்யுறேன்னு சொன்ன போது யாருமே என்கூட நிக்கல... நீங்க மட்டும் தான் இருந்தீங்க எனக்காக... என் வீட்டில் கூட யாருமே என் சார்பா பேசல... என்னோட உரிமையை கேட்டபோது தப்புனு தான் சொன்னாங்க, ஆனால் நீங்க எனக்காக செஞ்சீங்க. நான் எவ்வளவு முற்போக்கா பேசினாலும் அது சபையில் எடுபடல... நிதர்சனம் வேறு கோட்பாடுகள் வேறாக இருந்துச்சு, ஆனால் நீங்க அதை இணைச்சீங்க. அதுக்கான மதிப்பும், நன்றியுணர்வும் என்னைக்கும் என்கிட்டே இருக்கும்.”

அவளது பதிலில் கடினம் ஏறிக்கொள்ள, கன்னத்தில் இருந்த கரத்தினை வேகமாய் உதறியவன், “மண்ணாங்கட்டி... நன்றிக்காக செஞ்சியா இதெல்லாம்... இன்னொரு முறை இப்படி பேசுன கொன்னுடுவேன் உன்னை... ஒழுங்கு மரியாதையா உனக்கு நீயே போட்டுட்டு இருக்கும் திரையை விட்டு வெளியே வா... எனக்கு அந்த குந்தவையைத் தான் பிடிச்சிருக்கு. போலியா வாழுற இவளை இல்லை.” என்று ஆள்காட்டி விரலை அவள் புறம் நீட்டிச் சொல்ல, இதழை இறுக பூட்டிக்கொண்டவள் அவனிடம் எதுவும் சொல்லாமல் குளிக்கவென அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

செல்லும் அவளையே கடுப்புடன் பார்த்து நின்றவன் காற்றிலேயே ஒரு குத்து விட்டான்.

ஆமாம். அவனும் அப்படித்தான் நினைத்தான். எப்படியும் வாழத்தானே போகிறோம் அது எப்படி நடந்தால் என்ன என்று… ஆனால் இப்போது அது இனிக்கவில்லையே. வெளியில் தித்திப்பாய் காட்டிகொண்டு உள்ளே கசப்பாய் இருப்பதற்கு பதில் முன்பு போல வெளியில் காட்டமாய் உள்ளே தித்திப்பாய் இருந்தது கூட இனிப்பாய் தானே இருந்தது.

“தச்சா... டேய் எழுந்தியா இல்லையா?” என்று அன்பரசனின் சத்தமான குரல் அவனை மேலும் சிந்திக்கவிடாமல் செய்ய, சிகையை சரிசெய்து கொண்டு வெளியே சென்றான்.

“என்ன?” என்று அலட்சியமாய் கேட்டுகொண்டே முற்றத்திற்கு வர அங்கு அன்பரசன் கோபமுடனும், நீலா அவர் அருகிலேயே கையை பிசைந்துகொண்டு நின்றார்.

“என்னடா பண்ணி வச்சிருக்க நிலத்துல? எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னேன் மண்ணை பொன் போல பார்த்துக்கணும்னு. நீ என்ன செஞ்சிருக்க? உன் பிரண்டுனு ஊருக்குள்ள திரியுற மொத்த ஊதாரியும் உனக்கு கொடுத்த நிலத்தில தான் கும்மியடிச்சிட்டு திரியுது. இதுதான் நீ விவசாயம் பாக்குற லட்சணமா? ரெண்டு நாள் அங்க போகமுடியலைன்னு இன்னைக்கு காலையிலேயே அங்கு போய் பார்த்தா பாதி பயிரை எலி நாசம் பண்ணிட்டு போயிருக்கு மீதியை உன் பிரெண்டு கூட்டம் சிகரெட், சாராய பாட்டிலை போட்டு நாசம் பண்ணி வச்சிருக்கானுங்க... ஏற்கனவே நீயும் குடிச்சிட்டு அந்த இடத்தில கூத்தடிச்சதால தான் உனக்கு எதுவுமே கொடுக்காம இருந்தேன். இப்போ கல்யாணம் ஆகப்போகுது உருப்படியா இருப்பேனு பார்த்தால் திரும்பவும் நீ எதுக்கும் லாயக்கு இல்லைன்னு நிரூபிச்சிட்ட... உன்னை நம்பி பொன்னையும், பொண்ணையும் கொடுத்துட்டேன் அதுக்காகவாவது இனி ஒழுங்கா இருக்குற வழியைப் பாரு...” என்று கத்திவிட்டு அன்பரசன் சென்றுவிட நீலாவும் அவரை சமாதானப்படுத்த அவர் பின்னேயே சென்றார்.

வீராப்பாய் பேசி வாங்கிய நிலத்தை வைத்து எவ்வளவோ சாதிக்க வேண்டும் என்று எண்ணமிட்டிருக்க, அதில் குணாவையும் கூட்டு சேர்த்து வேலைகள் செய்திருக்க அது அனைத்தும் வீண் எனும் விதமாய், மீண்டும் தோற்றுவிட்டாய் என்று தந்தை குத்திக்காட்டி பேசியது ஈட்டியாய் பாய்ந்து அவனை கூனிக் குறுகச் செய்தது. ஏற்கனவே குந்தவையின் பேச்சில் சுணங்கியிருந்த மனம் தந்தையின் பேச்சில் முற்றிலும் துவண்டுவிட இதுபோன்ற நேரங்களில் எப்போதும் அவனுக்கு துணையாய் இருப்பதையே இப்போதும் தேடிப் போனான். வீட்டினில் எப்போதும் செய்ததில்லை ஆனால் இன்று மனம் அதை நாடிச் செல்ல, வேகமாய் ஒரு சிகரெட்டை எடுத்தவன் கொல்லைக்குச் சென்று தன் மனப்புகைச்சலை சுருள் சுருளாய் புகை விட்டு தள்ளினான்... அவன் ஆவலாய் எதிர்பார்த்த அதிரிபுதிரியான அசல் பிரியாணி தயாராகி வரப்போவது தெரியாமல்... 

No comments:

Post a Comment

Most Popular