Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 10

 

*10*

“என்னங்கடா நடக்குது இங்க? எவன் வீட்டுக் கூடாரத்தில் எவன் குளிர் காயுறது? எழுந்திருங்க தடிமாடுகளா?” என்று கடுகடுத்தவன் வயல் வரப்பில் அங்குமிங்கும் போதையின் பிடியில் விழுந்துக் கிடந்த அவனின் சகாக்களை காலால் எட்டி உதைத்தான். 

புலர்ந்து கதிர்களை வீசத் துவங்கிய ஆதவனின் வெக்கையைக் கூட பொருட்படுத்தாமல் மதுபோதையின் பிடியில் கீழே அலங்கோலமாய் கிடந்தவர்கள் தச்சனின் அதட்டலுக்கு சிறு அசைவைக் கூட காட்டவில்லை.

“எவ்ளோடா குடிச்சி தொலைச்சீங்க… இப்படி மட்டையாகிக் கிடக்குறீங்க…” என்று எரிச்சலுற்றவன் வேகமாய் மோட்டார் அறைக்குச் சென்று அங்கிருந்த வாளியில் தண்ணீர் பிடித்து வந்து அவர்கள் மீது ஊற்றினான்.

குணாவிடம் லேசாய் அசைவு தெரியவும் அவனிடம் சென்ற தச்சன் அவன் காலை எத்தியபடியே, “டேய் குணா எழுந்திருச்சு தொலைடா தடிமாடு… உன்கிட்ட என்ன சொல்லிட்டு போனேன். நீ என்ன செஞ்சு வச்சிருக்க?”

தச்சனின் தொடர் உசுப்பலில் கண்களை தேய்த்துக்கொண்டே எழுந்தமர்ந்து விழித்தான் குணா. கைகள் தரையில் ஊன்றியிருக்க நின்றுகொண்டிருக்கும் தச்சனை நிமிர்ந்து பார்க்க கண் கூசியது அவனுக்கு. அதனால் விழிகளை தாழ்த்தி குரலை மட்டும் உயர்த்தினான், “எப்போடா வந்த ஊரிலிருந்து?” 

“நான் வந்தது இருக்கட்டும். தினம் தண்ணி பாய்ச்சி, களையெடுக்க ஆள் பார்த்து வைக்க சொன்னா வயல் மொத்தத்தையும் களையெடுத்து வச்சிருக்க? தண்ணியையே பார்க்காம எல்லாமே காய்ந்து வாடி வதங்கி போயிருக்கு. போதாதற்கு எலி வேறு துளிர்த்து வந்திருந்த நெற்கதிரை கொறிச்சிட்டு போயிருக்க. அப்புறம் என்ன டாஷ்டா பண்ணிட்டு இருக்கீங்க இங்க? யாரைக்கேட்டு இங்க சரக்கடுச்சீங்க? அங்கங்க சரக்கு பாட்டில், பிளாஸ்டிக் பை, கப்பு, ஊறுகாய், சிப்ஸ் பாக்கெட்டுன்னு நிலத்தை குப்பையிடமா ஆக்கி வச்சிருக்கீங்க? ஒருவாரம் வயலை உன்னால ஒழுங்கா பார்த்துக்க முடியாதா? உன்னை நம்பி இதை ஒப்படைத்ததாலத் தான் கல்யாணத்திலும் மாமா காரியத்திலும் பிசி ஆகிட்டேன். ஆனா நல்லா புடுங்கி வச்சிருக்க…” 

தச்சனின் வசவில் தூக்கம் மொத்தமும் கலைந்து கைலியை சரிசெய்து கொண்டு நிதானமாக எழுந்தான் குணா.

“என்னடா மச்சி சூடா இருக்க?” 

“கொலைவெறியில் இருக்கேன்…” என்று கத்திய தச்சன் குணாவின் சட்டையை பிடித்து அருகில் இழுத்து சேதமாகியிருந்த பயிர்களை காண்பித்து, “என்னடா இதெல்லாம்? நீ பார்த்துக்குறேனு சொன்னதால தானே உன்னை நம்பி விட்டுட்டு போனேன்… ஆனால் என்ன பண்ணி வச்சிருக்க நீ?”

தன் சட்டைக் காலரை பிடித்திருக்கும் தச்சனின் கரத்தை வெடுக்கென தட்டிவிட்ட குணா, “ஒழுங்கா பேசு… நீ சொன்னதை தான் செஞ்சேன். தினம் மூணு வேலை தண்ணி பாய்ச்ச சொன்ன… உன் கல்யாணத்திற்கு முதல் நாள் பாய்ச்சினேன். அடுத்த நாள் உன் கல்யாணத்திற்கு வந்துட்டேன். திரும்ப அடுத்த நாளே கரெண்ட்டும் வரல தண்ணீரும் வரல. என்ன செய்றதுன்னு கேட்க உனக்கு போன் போட்டா உன் மாமனார் காரியத்தில் பிசியா இருந்த… போன் கூட எடுக்கல… சரின்னு நானே என்னனு ஈபியில் விசாரிச்சா… இந்த த்ரீ பேஸ் இலவச மின்சாரத்திற்கு நீ அப்பளை பண்ண கொடுத்த டாகுமெண்ட் எதிலோ ஏதோ மிஸ்டேக் இருக்குனு கரெண்ட்டை நிறுத்தி வச்சிருந்து இருக்காங்க.”

“மிஸ்டேக்கா? நான் எல்லாமே சரியாத்தானே கொடுத்தேன்.”

“எல்லா அசலும் நகலும் சரியாத்தான் கொடுத்திருக்க ஆனால் கொடுக்க வேண்டியதை சரியா கொடுத்தியா? இப்போ புதுசா ஒரு ஆபிசர் வந்திருக்கார்… அவருக்கு சில ஆயிரங்களை வெட்டுனாத் தான் இலவச மின்சாரமாம். பணமும் என் கையில் இல்லை… அதை புரட்டி கொடுக்க வேண்டிய இடத்தில கொடுத்து திரும்ப கரெண்ட் வாங்கவே மூணு நாளாச்சு. நேத்தி அந்தியில தான் திரும்ப கரெண்ட் விட்டானுங்க…” 

“அதுவரைக்கும் பயிறை காயப் போட்டிருக்க… எலி நாசம் பண்ணது கூட தெரியாம புடுங்கிட்டு இருந்துட்டு இந்த தடிமாடுகளையும் இங்க சரக்கடிக்க வச்சிருக்க… கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடா உனக்கு…”

“இதையே நானும் கேட்கலாம். கல்யாணமாகி ஒருவாரம் ஆகப்போகுது, இந்த ஒருவாரம் முழுதும் வயலுக்குத் தான் வரமுடியலை ஆனால் வயலில் வேலை நடக்குதா, ஏதாவது பிரச்சனை இருக்கான்னு ஒரு போன் போட்டு கேட்கக் கூடவா முடியல? நான் போட்டாலும் உனக்கு லைன் போகல.” தச்சனைப் போல கத்தவில்லை, ஆனால் வார்த்தைகள் அதற்கான அழுத்தத்தோடும், அர்த்தத்தோடும் வெளிவந்தது.

சட்டென்று தன் புறம் திரும்பிய குற்றச்சாட்டில் நிதானித்த தச்சன் மெல்லிய குரலில், “மாயவரம் போகும்போது போன் சார்ஜர் எடுத்துட்டு போகலடா… லோ பேட்டரியில் தான் யூஸ் பண்ணேன்… அங்கேயும் சரிவர சார்ஜ் போடமுடியலை… அந்த குட்டீசும் என் கூடவே இருந்தாங்க, நேரம் போனதே தெரியல… அதோட நீ பார்த்துப்பேன்னு தைரியத்தில் இருந்துட்டேன்…”

“இப்போ நல்லா வியாக்யானம் பேசு… எனக்கு இங்கன உன்னோட வயலில் மட்டும் வேலையில்லைடா… எங்க வீட்டு தோட்டத்துக்கு தேங்காய் வந்து இறங்கியிருக்கு. கொப்பரை தேங்காய் எல்லாம் பிரிச்சி எடுத்து, நார் உரிச்சு எக்ஸ்போர்டுக்கு அனுப்பனும், அப்பாவுக்குத் துணையா அந்த வேலையும் செஞ்சிட்டு இருக்கேன். அதில் இந்த எலிப் பிரச்சனை எல்லாம் கவனிக்கலடா…”

“அப்போ இவனுங்க?” என்று வயலில் சிதறிக் கிடந்த மற்ற கூட்டாளிகளை கைகாட்டினான் தச்சன்.

“உன் கல்யாணத்துக்கு ட்ரீட் வேணும்னு வந்து நின்னானுங்க… நான் தான் நீ வந்ததும் பார்த்துக்கலாம்னு சொல்லி அனுப்பியிருந்தேன். அப்படியும் கேட்காம தச்சன் தான் இல்லை இது நம்ம தச்சன் வயல் தானேனு அவன் கல்யாணத்தை கொண்டாடுவோம்னு இங்கன வந்து சரக்கடிச்சிருக்கானுங்க… விஷயம் தெரிஞ்சி இவனுங்களை போகச் சொல்லலாம்னு வந்தேன்... என்னையும் சேர்த்து குடிக்க வச்சிட்டானுங்க… வரப்பிலிருந்து தள்ளி தான் உட்கார்ந்து குடிச்சானுங்க… எப்போ இப்படி இங்கன வந்தோம்னு தெரியல...” என்று இப்போது பம்முவது குணாவின் முறை.

“ஆகமொத்தம் சொதப்பியாச்சு… அதுதானே…” என்று தரையை உதைத்துவிட்டு மோட்டார் அறையின் நிழலில் சென்று தரையில் அமர்ந்துகொண்டான் தச்சன். அவனைத் தொடர்ந்து வந்த குணாவும் மோட்டார் போட்டு தன்னை சுத்தம் செய்துகொண்ட பின் தச்சனின் அருகில் அமர்ந்துகொண்டான்.

“நாம நினைச்ச மாதிரி இது எளிதான வேலை இல்லை தச்சா… சாதிச்சிடுவோம்னு சொல்றதைவிட அதை செய்யறது கடினமா இருக்கு. ஏதாவது ஒன்றில் சொதப்பினாலும் மொத்தமும் நாசமாகிடும் போல… எலி வயலில் புகுந்து பயிரை நாசமாக்கும்னே எனக்கு இப்போ தான் தெரியும்… நேத்து கவனிக்கும் போது கொஞ்சம் வாட்டமா தெரியவும் ஏதோ பூச்சிப்பட்டிருக்கும்னு நினைச்சேன்…”

“ப்ச்… நான் ஏதேதோ பிளான் பண்ணி உழைச்சிட்டு இருந்தேன். கடைசியில் இப்படி ஆகிடுச்சு. தப்பிய பயிரை அறுவடை செஞ்சாலும் போட்ட காசு வராது. இதுக்கே ஒவ்வொன்றிற்கும் அப்பா கிட்ட தான் கடன் வாங்குனேன். நான் கூட சமாளிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனால் இங்க வந்து நிலவரத்தை பார்த்த பிறகு அந்த நம்பிக்கை துளியும் இல்லை.” என்று தச்சன் விட்டேற்றியாய் பேச ஆதரவாய் அவன் தோள் தட்டினான் குணா.

“குறுவை சாகுபடியில் விட்டதை சம்பாவில் பிடிச்சிடலாம்டா…”

“ம்ச்… குறுகிய காலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும் இந்த குறுவையிலேயே நம்மால ஒன்னும் கிழிக்க முடியல… இதில் சம்பா சாகுபடிக்கு உழைப்பும் காலமும் அதிகம் தேவை. குறுவை அளவுக்கு லாபம் சம்பாவில் வரும்னு சொல்ல முடியாது.” தச்சனின் குரல் தாழ்ந்திருக்க, முதல் முறையாய் ஏதோ சொல்லணா பயம் வந்திருந்தது அவனிடத்தில். எதனால் என்று ஆராயுமளவுக்கு பொறுமை இல்லாதவனுக்கு ஒன்று மட்டும் புரிந்திருந்தது… தோற்றுப் போனவனாய் குந்தவை முன் நிற்க அவன் தன்மானம் இடம் கொடுக்காது என்பது தான் அந்த மாற்றம்.

“அனுபவப்பட்டவர்கள் உதவி இல்லாம நாமா செய்வதில் சிக்கல்களும் தவறுகளும் வர்றது இயற்கை தான்… இந்த முறை செய்த தவறை அடுத்த முறை திருத்திப்போம். நீ வீம்பு பிடிக்காம உங்கப்பாகிட்ட ஆலோசனை கேளு. நம்ம வயசு அவரோட அனுபவம்.”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… அவர் ஏதாவது நொட்டம் சொல்லிட்டே இருப்பாரு… மாயவரம் போற வழியில் ஆடுதுறையில் நெல் ஆராய்ச்சி மையம் இருக்கு. அங்க தனிப்பட்டவர்கள் ஆராய்ச்சி செய்றத்துக்கு, புதுசா வேளாண்மையில் ஈடுபடுறவங்க, சுயதொழில் செய்றவங்க, லேடுசுக்குன்னு உதவுற மாதிரி ஏதோ தனி துறை இருக்காம். அடுத்த சாகுபடிக்கு அங்க போய் விசாரிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்… இப்போவே போக வேண்டியது தான்… அவங்க ஏதாவது உதவுறாங்கலான்னு பார்ப்போம்…”

“உங்கப்பாகிட்ட கேட்கக் கூடாதுனு அப்படி என்னடா வீம்பு உனக்கு? இந்த நிலத்தை மட்டும் அவரிடமிருந்து வாங்கி இருக்க? இதுவும் வேண்டாம்னு உதறித்தள்ளிட்டு உன் உழைப்பில் ஒரு செண்ட்டு நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்ய வேண்டியது தானே? அவரோட நிலமும் பணமும் வேணும் ஆனால் அவரோட ஆலோசனை வேண்டாமா? இதென்னடா நியாயம்?” பல நாட்களாகவே தச்சனிடம் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்ததை இன்று சந்தர்ப்பம் அமைந்ததும் கேட்டுவிட்டான் குணா.

அவனை நிமிர்ந்து பார்த்த தச்சன் பின் பார்வையை வயலில் செலுத்தி, “பெருசா ஒன்னுமில்லை… எவ்வளவு திட்டுனாலும் அடிச்சாலும் என்னை எங்கேயும் தனியா விட்டதில்லை. வெளியூரில் படிக்கிறேன்னு கேட்ட போது கூட விடல… கைக்குள்ளேயே வச்சி வளர்த்தாரு… அதுக்கு நியாயமான காரணமும் இருக்கு…. ஆனாலும் அவரோட துணை இல்லாம என்னோட உழைப்பில் எனக்கே எனக்குன்னு என் பெயர் சொல்றபடி ஏதாவது செய்யணும்னு ஆசை. அதனால் தான் அவர்கிட்ட நான் எதுவுமே கேட்குறது இல்லை. இது பூர்வீக வயல். அதுதான் இதை கேட்டு வாங்குனேன். மற்றபடி பிள்ளை முன்னேற பணம் கொடுக்குறது எல்லாம் அவரோட கடமைடா… அதைக் கூட பெரிய மனசு பண்ணி நான் கடனாத் தான் வாங்கியிருக்கேன்.” தீவிரமாய் ஆரம்பித்த பேச்சின் இறுதியில் தச்சனின் இயல்புநிலை திரும்பியிருந்தது. எவ்வளவு நேரம்தான் அவனும் சுயத்தை விட்டு சுயசோகச்சரிதை பாடிக்கொண்டிருப்பான். அதெல்லாம் அவனுக்கு செட்டே ஆகாதே… 

“சரி சரி… பிரெண்டு ரொம்ப பீல் ஆயிட்டீங்க… ஒரு தம் அடிங்க எல்லாம் சரியாகிடும்…” என்று குணா தச்சனின் கையில் ஒரு சிகரெட்டை திணிக்க, அதையே வெறித்துப் பார்த்தான் தச்சன்.

“என்னடா அதையே முறைச்சு முறைச்சு பார்த்துட்டு இருக்க… இந்தா லைட்டர்.” என்று அதையும் தச்சனின் கையில் திணிக்க, அந்த சிகரெட் துண்டை முன்னும் பின்னும் திருப்பி ஆராய்ச்சியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த நொடியே அதை வீசியெறிந்தான்.

“டேய் ஏன்டா தூக்கிப்போட்ட?” என்று கேள்வியாய் பார்த்த குணா மொத்த பாக்கெட்டையும் அவனிடம் நீட்டி, “நல்லாயில்லையா… வேற எடுத்துக்கோ…”

பார்வையை இலக்கின்றி ஓரிடத்தில் பதித்து, “எனக்கு வேண்டாம். நீ போய் அவனுங்களை எழுப்பு.” 

“இன்னைக்கு சூரியன் மேற்கிலிருந்து உதிச்சிதா என்ன?” என்றவன் வியப்பாய் மேற்கு நோக்கி பார்வையை செலுத்த அவன் தலையிலேயே ஒரு தட்டுதட்டினான் தச்சன்.

“என்னை பத்தி ஆராய்ச்சி பண்ணாம நீ போய் அவனுங்களை க்ளியர் பண்ணி அனுப்பிவிடு… இனி இந்த பக்கமே வரக்கூடாதுன்னு கண்டுச்சி அனுப்பு. நான் இருக்குற காண்டுல அவனுங்கள போட்டு வெளுத்துடுவேன் அப்புறம் அதுக்கும் வீட்டில் பேச்சு வாங்கணும். இப்போதைக்கு பிரச்சனை எதுவும் வேண்டாம்…”

“ஓ… இப்போ புரிஞ்சிடுச்சு. வீட்டம்மா உத்தரவா எல்லாம்? அதுதான் சார் இவ்வளவு பொறுப்ப்பா பேசுறீங்க…” என்று குணா கேலி போல இழுக்க, மென்னகை வெடித்தது தச்சனின் முரட்டு அதரங்களில். 

“உத்தரவு இல்லை மிரட்டல்.” என்றான் பல்லை காட்டிக்கொண்டு… 

“அதுவும் சரிதான்… அந்த பொண்ணு அடங்குற வகை இல்லை அடக்குற வகைனு எனக்கு எப்போவோ புரிஞ்சிடுச்சு…” என்ற குணாவின் நினைவுகளில் அவளை சந்தித்த முதல் முறையே தச்சன் செய்த திருகுதாளத்தில் காரணமேயின்றி இவன் திட்டுவாங்கியது வந்து சென்றது.

“சரி நான் அவனுங்களை அனுப்பிட்டு வீட்டுக்கு போயிட்டு வரேன்… நீ இதெல்லாம் சரி பண்ணி வை… வாடியது போக மீதி எவ்வளவு தேறுதுன்னு பார்த்து அதையாவது காப்பாத்துவோம்.” என்றுவிட்டு குணா சென்றுவிட, வேலை செய்ய ஏதுவாய் சட்டையை கழற்றி மோட்டார் ரூமில் வைத்துவிட்டு பேன்ட்டையும் மாற்றிவிட்டு கழனியில் இறங்கினான் தச்சன். அதன் பிறகு வேலை சரியாக இருக்க அவன் திரும்ப வீட்டிற்கு செல்லவே மணி மூன்றாகிவிட்டது.

வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் எப்போதுமே முற்றத்திலோ இல்லை திண்ணையிலோ அமருபவன் நீலா திட்டினால் தான் எழுந்து தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளவே செல்வான். இன்று வீட்டினுள் நுழைந்தவுடனேயே தண்ணீர் அருந்திவிட்டு நேரே கொல்லைக்குச் சென்று கை, கால் கழுவிவிட்டுத் தான் வீட்டினுள் வந்தான்.

அவனுக்கு மதிய உணவை தயாராய் எடுத்துவைத்து நீலா அமர்ந்திருக்க அவரிடம் சென்றவன், “குந்தவை எங்க?” கேள்வியை நீலாவிடம் கேட்டுவிட்டு பார்வையை வீட்டினுள் தேடலாய் சுழலவிட்டான்.

“ரொம்பத் தேடாத… அவ ரூமில் பரிட்சைக்கு படிச்சிட்டு இருக்கா…” என்று நீலாவே பதில் சொல்ல, ‘என்னடா நடுக்குது இந்த வீட்டுல…’ என்று நினைத்துக்கொண்டே உண்ண அமர்ந்தான்.

“அவள் சாப்பிட்டாளா?” 

“நீ வருவேன்னு நான் சாப்பிடாம காத்திட்டு இருந்தேன்.”

‘இது என்ன மாதிரியான பதில்.’ என்பது போல நீலாவைப் பார்க்க, சட்டென்று உரைத்தது உண்மை. இதுவரை அவன் வெளியில் சென்றுவிட்டு வந்து உண்ணும் போதோ, உண்ட பின்னோ வீட்டினர் சாப்பிட்டார்களா என்று கேட்டதுகூட இல்லை. இன்றோ… நீலாவின் பாவனையை பார்த்த பின் இன்று மட்டும் ஏன் இந்த சந்தேகமும் நினைப்பும் வந்து தொலைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தலை குனிந்துவிட்டான் தச்சன்.

மகள்களைப் பெற்ற அன்னைகளுக்கு இருக்கும் விட்டுக்கொடுக்கும் தன்மை மகன்களை பெற்ற அன்னையர்களுக்கு இருப்பதில்லை. பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிந்த கணம் அவள் இன்னொரு வீட்டுக்கு போகப்போகிறவள் என்ற மெய்யும் சேர்ந்தே மனதில் பதிகிறது. மகளை திருமணம் செய்து வேறு குடும்பத்திற்கு கணவனுடன் அனுப்பும் எந்தவொரு தாயும் மகளை கட்டிய மருமகன் தன்னிடமிருந்து தன் மகளை பிரித்து அழைத்துச் செல்கிறான் என்று சொல்வதில்லை. சீராட்டி பாராட்டி அவள் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்றே அனுப்பி வைக்கிறாள். ஆனால் மகன்களை பெற்ற அதே தாய் தான் மருமகள் வந்த பின்பு மகனை தன்னிடமிருந்து பிரிக்கிறாள் என்று மருமகள் மீதே குற்றம்சாட்டுகிறாள். இருபாலினரையும் ஒரே கருவறையில் சுமந்து வளர்த்த அன்னையவளிடம் தெறிக்கும் இந்த முரண் முறையாய் கையாளப்படுவதில்லை.

“நீங்க வந்தாச்சா… சீக்கிரம் வந்திருக்கலாமே… உங்களுக்காக அத்தையும் சாப்பிடாம காத்திட்டு இருக்காங்க. அத்தை நீங்களும் அவரோடவே உட்கார்ந்து சாப்பிடுங்க. நான் பரிமாறுறேன்.” என்று தச்சனின் குரல் கேட்டு அங்கு வந்து நின்றாள் குந்தவை.

குந்தவையைக் கண்டதும் தச்சனின் முகம் தானாய் மலர, மகனை பன்மையில் விளிக்கும் அவளை வியப்பாய் ஏறிட்டார் நீலா. நீலா எதுவும் சொல்லாமல் இருக்க, அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டு பொறுப்பை தனதாக்கிக் கொண்டாள்.

“மாமாவுக்கு கொடுத்துவிடுற மாதிரியே இவருக்கும் கொடுத்துவிட்டா இவரும் நேரமா சாப்பிடுவாரு, நீங்களும் நேரமா சாப்பிட்டு ஓய்வெடுக்கலாமே அத்தை.” உணவு பரிமாறிக்கொண்டு கேள்வியாய் நீலாவைப் பார்க்க, அவரும் இயல்பாய்,

“உங்க மாமா அளவுக்கு இவனுக்கு வேலை கிடையாது. மதியம் சாப்பிட வந்தா கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு போகலாம்னு எவ்வளவு நேரமானாலும் இவனை வீட்டுக்கு வரச் சொல்லிடுவேன்.”

“அப்போ நாளையிலிருந்து நீங்க எங்ககூடவே சாப்பிடுங்க… அவர் முன்னபின்ன ஆனாலும் தாங்கிப்பாரு… நீங்க வயிறை காயப்போட வேண்டாம். நேரத்திற்கு சாப்பிடணும்.” என்றாள் குந்தவை.

பிரச்சனைகள் எல்லாம் சரியானது போன்ற பிம்பத்தை இவர்களின் உரையாடல் கொடுத்தாலும் அதை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் தச்சன்.

“நிசமாவே நீங்கத் தான் பேசுறீங்களா இல்லை உங்களோட ஆவி எதுவும் பேசுதா?” என்று கண்களை சுருகியவனை இருபெண்களுமே முறைத்தனர்.

“நோ முறைப்ஸ்… இப்படி ஒவ்வொரு பொழுதுக்கும் ஒவ்வொரு மாதிரி இருந்தா நானும் என்னத்தான் நினைக்கிறது?”

“உங்களுக்கு என்ன பிரச்சனை இப்போ? பேசாம சாப்பிடுங்க. அத்தை எவ்வளவு நேரம் தான் பட்டினியா இருப்பாங்க.” என்று குந்தவை விழிகளை உருட்டி அதட்ட போலியாய் அவளை முறைத்துவிட்டு உணவில் கவனம் செலுத்தினான் தச்சன். நீலா மருமகளை மெச்சுதலாய் பார்த்துவிட்டு விரைவாய் உண்டு முடித்து எழ, தச்சனும் குந்தவையிடம் கண்சிமிட்டிவிட்டு அறைக்குச் சென்றான். 

மீதமிருந்த பாத்திரங்களை ஒழித்த குந்தவை, “பாத்திரம் எல்லாத்தையும் கொல்லையில் போட்டு தேச்சிடவா?” 

“அதெல்லாம் வேண்டாம். நீ கொல்லையில் போட்டுட்டு போய் படி, நான் அந்தியில தேச்சிக்கிறேன்.” என்றதை மறுக்கலாம் என்று நினைக்கும் போதே, “சொன்னா கேட்டுக்கணும் குந்தவை.” என்ற நீலாவின் அழுத்தமான கட்டளை தடுத்தது.

நீலா சொன்னது போல அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு அறைக்குள் நுழைய, அதற்காகவே காத்திருந்த தச்சன் பட்டென கதவை சாற்றி தாழிட்டான். அடுத்து என்ன செய்வான் என்ற யூகம் இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் இன்னும் திறக்காமல் ஓரமாய் இருந்த தன் பைகளை எடுத்து அதிலிருந்த மாற்று உடைகளை பிரித்தெடுத்து அங்கிருந்த செல்ப்பில் அவனது உடைகளுடன் சேர்த்து அடுக்கினாள். புதிய உடைகளை அங்கிருந்த புதிய பீரோவிலும் அடுக்கினாள்.

“ஒருத்தன் வேலை செஞ்சி கலைச்சிபோய் வந்திருக்கானே அவனை கவனிப்போம்னு இல்லாமல் நீ என்னடி இப்போ தான் அடுக்கிக்கிட்டு இருக்க… புதுசா கல்யாணம் ஆனவங்க பண்ற வேலையா இது?” தன்னை கவனிப்பால் என்று எதிர்பார்த்து ஏமாந்தவன் எரிச்சலாய் மொழிந்து சுணக்கத்துடன் கட்டிலில் அமர்ந்துகொண்டான்.

“வேற என்ன வேலை செய்யணும் இப்போ?” என்று கேள்வி எழுப்பியபடியே அவன் புறம் திரும்பியவள், இருக்கரத்தையும் இடையில் வைத்து புருவங்களை உயர்த்த, அவளின் ஆர்வமின்மையில் அவனது உற்சாகங்கள் வடிந்தது. 

“ஒன்னுமில்லை போடி… உன்கிட்ட ஒன்னு சொல்லணும்னு ஆசையா வந்தேன்… கேட்டா நீ சந்தோசப்படுவேன்னு பார்த்தேன்… ப்ச்… போ…” என்று கைகளை உதறிவிட்டு படுத்துக்கொள்ள அவனையே குறுகுறுவென பார்த்துக்கொண்டு நின்றாள் குந்தவை.

கோபித்துக் கொண்டாலாவது தன்னை நெருங்கி வருவாள் என்ற எதிர்பார்ப்பில் அவன் கண்களை மூடிக்கொண்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்திருக்க அவள் வந்தபாடில்லை.

“சரியான அழுத்தக்காரி… ராங்கி… திட்டனும், அடிக்கணும்னா மட்டும் சுறுசுறுன்னு இருப்பா… இப்போ பாரு அவள் பாட்டிற்கு அவள் வேலையை பார்த்துட்டு இருக்கா… இங்க நீ புலம்பிட்டு இருக்க…” என்று ஓசையில்லாமல் இதழ்களுக்குள்ளேயே முணுமுணுத்தவன் வேண்டுமென்றே அப்படியும் இப்படியும் திரும்பி ஓசை எழுப்ப அனைத்தையும் சிறுநகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் குந்தவை.

“கிட்ட வராளா பாரு… நீதான் மானக்கெட்டு அவள் எவ்வளவு அடிச்சாலும் திரும்பத் திரும்ப அவள்கிட்டேயே போய் பல்லை காட்டிகிட்டு நிக்குற…” சுயவசவுகள் தொடர்ந்து கொண்டிருக்க, துணிகளை அப்படியே போட்டுவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவனைத் தாண்டி உள்ளே ஏறி சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள் குந்தவை.

கொலுசொலியும், அவளது அசைவுகளையும் மிக அருகினில் உணர, ஆவலுடன் விழிகளை பிரித்தவன் பார்வையில் விழுந்தது புத்தகத்தை மடியில் திறந்துவைத்துக் கொண்டு அதிலேயே பார்வை பதித்திருக்கும் குந்தவை தான். 

பொங்கி வந்த பாலில் தண்ணீர் தெளித்தது போல சுரத்தை இழந்தவன் மறுபுறம் திரும்பி அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.

“ராட்சசி… தெரிஞ்சே வேணும்னு செய்றா…”

“இன்னைக்கு பிரியாணில காரம் கொஞ்சம் தூக்கலா போச்சு… சரி இனிப்பா ஏதாவது செய்யலாம்னு பார்த்தேன் ஆனால் வேண்டாம் போலிருக்கே… வேலை மிச்சம்… நாமளும் தூங்குவோம்.” என்று தச்சனை பார்த்துக்கொண்டே சொன்ன குந்தவை, அவன் தன்புறம் திரும்பவும் புத்தகத்தை மூடி சுவரோரம் வைத்துவிட்டு தலையணையை நேராய் போட்டு படுக்க ஆயத்தமானாள்.

தச்சன் திரும்பினானே ஒழிய வேறெதுவும் செய்யவில்லை. கண்களைக் கூட திறக்கவில்லை. ‘என்னை சுத்தல்ல வீட்டீல்ல நீயும் இப்போ அதை நல்லா அனுபவி..’ என்று கருவிக்கொண்டே அவன் இமைகளை பூட்டியிருக்க, இப்போது ஏமாறுவது குந்தவையின் முறை. 

கருத்து வேறுபாடுகள் இருக்கிறது தான்… தச்சன் செய்யும் சில காரியங்களும் பிடிக்கவில்லை தான்… பிரச்சனைகள் கூட அப்படியே தான் இருக்கிறது. ஆனால் பிடித்திருந்தது இந்த பெருந்தச்சனை.

அவ்வப்போது சண்டையே என்றாலும் அந்நேரத்தில் பேச்சினூடே எழும் சந்தேகங்களை வெள்ளந்தியாய் அவன் வெளிப்படுத்தும் யாவும் அவன் மனதில் ஒன்றை வைத்து வெளியில் ஒன்றை பேசுபவன் இல்லை என்பதை அப்பட்டமாய் காட்டும் அவனின் நேர்மை பிடித்திருந்தது அவளுக்கு. எவ்வளவு சண்டை போட்டாலும் திரும்பத்திரும்ப தன்னையே நாடும் அவனின் பாசம் பிடித்திருந்தது. அதிகாரமாய், வீம்பாய், செல்லமாய் என அவனுடன் மல்லுக்கு நின்று சீண்டுவது கூட இப்போது பிடிக்கத் துவங்கியுள்ளது. வீட்டினரிடம் தனக்காக பேசியிருக்கிறான் என்று சண்டையின் போது மாமியாரின் வழிவந்த செய்தியும், அவளுக்காய் அத்தனை பேர் முன்னிலையும் அவள் தந்தையின் இறுதி காரியங்களை தனதாக்கிக் கொண்டதும் அவளை நெகிழ்த்தவே செய்தது. இந்த நெகிழ்ச்சியும் பிடித்தமும் அவனிடம் வெகுநேரம் கோபம் கொண்டிருக்க விடுவதில்லை. அதற்காக அவனிடம் உருகி உருகி வழியவும் பிடிக்கவில்லை… அப்படி செய்யவும் இன்னும் வரவில்லை எனும்போது அவளுக்கு வருவதை தானே அவள் செய்ய முடியும்.

ஏமாற்றமாய் உணர்ந்தவள் படுத்துக்கொள்ள… சட்டென வந்து மேலே விழுந்தது அவனின் கரமும், காலும்.

“இனிப்பெல்லாம் வேண்டாம்… எவ்வளவு காரம் இருந்தாலும் எனக்கு பிரியாணி தான் வேணும்.” என்று செவியில் கிசுகிசுத்தவனை தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக்கொண்டாள் குந்தவை.

சுகமாய் அவள் கழுத்தினில் முகம் புதைத்து அவளை அணைத்தவாறு படுத்திருந்தவன் இன்னுமே அவளை ஒண்டிக்கொள்ள காற்று தான் அவர்களுக்கிடையில் சிக்கி திணறவேண்டியிருந்தது.

“காலையில் வாங்குனது பத்தலையா? திரும்ப பிரியாணி கேட்குற?” அவளது கேள்விகூட காரமின்றி கொஞ்சலாய் வர இருவரின் அகமுமே நிறைந்திருந்தது.

“அது வேற இது வேற… அந்த பிரியாணிக்கான இன்றைய கோட்டா முடிஞ்சிடுஞ்சு… இப்போ வேற வேணும் எனக்கு.”

வேற என்ன வேணும் என்பதுபோல அவனைப் பார்க்க, தலையை நிமிர்த்தியவன் அவள் விழியை நேரே சந்தித்து, அவள் நாசியருகே ஊதியவன், “குணா சிகரெட் கொடுத்தான்.” என்று நிறுத்த, அவளின் முகம் சட்டென யோசனையை தத்தெடுத்து இலகுத்தன்மை மறைய காத்திருந்தது.

“நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.” என்றதும் தான் அவளின் மனம் சற்று அமைதியாகியது. ஆனாலும் சஞ்சலம் இருக்கத்தான் செய்தது, அதை பொறுமையாய் கேட்கவும் பழக முயன்றாள்.

“இன்னைக்கு மட்டுமா இல்லை எப்போதுமேவே?”

“என்னைக்குமே…” என்று மெல்லிய குரலில் ராகம் இழுக்க, அவன் முகத்தை வன்மையாய் பற்றி அழுத்தமாய் முத்தம் வைத்தாள் குந்தவை.

“ஹுர்ரே… என் பொண்டாட்டி அவளாவே முத்தம் கொடுத்துட்டா…” என்று சீண்டலாய் குரலை உயர்த்தியவனின் குரவளையை பிடித்து கடிப்பது போல பாவனை செய்துவிட்டு உற்சாகமாய் சிரிக்க, மீதமிருந்த அந்த பிற்பகல் பொழுதிலும் உற்சாகத்திற்கு பஞ்சமில்லை.

No comments:

Post a Comment

Most Popular