Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 23





*23*


மதியநேர உணவை முடித்த கையோடு உடலைத் தளர்த்தி ஓய்வாய் தோட்டத்தில் கால்நீட்டி மெளனமாய் படுத்திருந்தவனை சோபையாய் பார்த்தாள் குந்தவை.

“ரொம்ப அடக்கமானவன் மாதிரி நடிக்காதடா…” என்றுமில்லாத தச்சனின் அமைதி குந்தவையை சோர்வடைய வைக்க, அவனை சுரண்டினாள் குந்தவை.

முகத்தை சுழித்த தச்சனோ முனகளாய், “என்னை நோண்டாத குந்தவை… அப்புறம் நான் ஏதாவது இடக்கா பேசுவேன், நீ உடனே கோபப்படுவ… சண்டை பெருசாகி ரெண்டு பேரும் முகத்தை தூக்கி வச்சிப்போம். என்னால தினமெல்லாம் உன்கிட்ட கோபப்பட்டு பேசாம, உன் மேல கை போட்டு தூங்காம இருக்க முடியாது.”

“ஓ! அப்போ இதுதான் விஷயமா! என்கிட்ட நீதானடா கோச்சிகிட்டு முதுகை காண்பிச்சி தூங்கிட்டு இருந்த! நானா உன்னை கைபோட்டுக்க வேண்டாம்னு சொன்னேன்?” என்று குந்தவை உதட்டை பிதுக்கி தோள்களைக் குலுக்க, சிணுங்களுடன் அவள் புறம் திரும்பினான் தச்சன்.

“அப்போ நீ என் மேல கை போட வேண்டியது தானேடி… ராத்திரி ஒருத்தன் எவ்வளவுதான் கஷ்டப்படுறது?”

“ஐயே ஆசைதான்… சார் ஏதோவொரு சினிமா பாட்டை பார்த்துட்டு வந்து அதில இருக்குற மாதிரியே வெட்டவெளியில் மழையில நனைஞ்சிக்கிட்டு கிஸ் வேணும்னு கேட்டது மட்டுமில்லாம அதில வர ஹீரோயின் என்ன டிரெஸ், என்ன டிசைனில் ப்ளவுஸ் போட்டிருக்கான்னு நோட் பண்ணி அதுமாதிரியே என்னை போடச் சொல்லுவாராம்… நாங்க அப்படியே ஈன்னு பல்லை காட்டிட்டு இருக்கணுமா… நியாயமா நான்தான் உன்கிட்ட கோச்சிகிட்டு பேசாம இருக்கணும். ஆனா சார் பெரிய இவராட்டம் முறைச்சிக்கிட்டு எனக்கு முதுகை காட்டி படுப்பாராம். நான் உடனே வந்து சமாதானப்படுத்தனுமாம்… உடம்பு முழுக்க கொழுப்பு உனக்கு.”

“பாரு! இப்போ கூட உனக்கு சத்தம் போட மட்டும்தான் வருது.” என்றான் குறையாய்.

“உன்னோட செயலுக்கான எதிர்வினைதான் என்னோட கோபத்துக்கான காரணம். அதை அப்படியே நேக்கா மறைச்சி என் மேல மட்டும் தப்பிருக்கிற மாதிரியே குறைசொல்ல வேண்டியது.” என்றாள் அவளும் தன் செயல்களை நியாயப்படுத்தும் விதமாய்.

“ம்ச்… பாரு வாண்டடா வந்து சண்டையை கிளப்பிவிடுற… இந்த வம்புக்கு தான் பிரச்சனையே வேண்டாம்னு நான் கம்முன்னு இருக்கேன்…”

“நம்புற மாதிரி வேறெதாவது சொல்லு… எனக்குத் தெரியும் உன்னால பேசாமெல்லாம் இருக்க முடியாது....”

“அடியேய் நம்புடி… எப்போதும் நீ நச்சரிச்சிகிட்டே இருந்தா எனக்கும் கடுப்பாகுதுள்ள. முன்னாடி வீட்டுல மட்டும் தான் சண்டை வந்துச்சு… நாள் முழுக்க வேலை செஞ்சிட்டு உன்கிட்ட வர்றோம்கிற சந்தோஷத்தில் இருப்பேன் அப்போ எல்லாமே சுவாரசியமா இருந்துச்சு. இப்போ இருபத்திநாலு மணிநேரமும் என்கூடவே இருக்க… நிமிஷத்துக்கு நிமிஷம் சண்டை வருது. எரிச்சலாகுது… அளவுக்கு மீறி எதுனாலும் சலிப்பு தட்டுது…”

“நான் உனக்கு சலிச்சு போயிட்டேன்… அதுதானே சொல்ல வர?” என்ற தன் யூகிப்பை ஒருமாதிரி அழுத்தமான குரலில் அவள் வெளிப்படுத்த, பதட்டமாகிவிட்டான் தச்சன்.

“ஏய் ஏன்டி எல்லாத்திலேயும் வினையை கண்டுபிடிக்குற? நான் எதார்த்தமான சொன்னேன் நீ அப்படியே அதை வேற அர்த்தத்தில் புரிஞ்சிகிட்ட. பக்கத்தில் இல்லாதப்போ தான் அவங்க அருகாமைக்காக மனசு ஏங்கும். அவங்ககிட்ட போகணும்னு தோணும். இந்த அர்த்தத்தில் நான் சொன்னேன்.”

“எப்படி யோசிச்சாலும் நீ சொன்னதுக்கான அர்த்தம் நான் இப்போ பக்கத்திலேயே இருக்கிறதால சலிச்சி போயிட்டேன். என்னோட இருக்க பிடிக்கலை உனக்கு.”

“ஷப்பா… நான் சொன்னது தான் நடக்குது பாரு. எந்த வழியில போனாலும் முட்டு சந்தில் முட்டி நிக்குற மாதிரி எப்போதும் வாக்குவாதத்தில் வந்து முட்டிட்டு நிக்குறோம். இந்த அரைமணி நேரம் தான் கொஞ்சம் ஓய்வா இருக்க முடியும். அதையும் இப்படி பேசி வேஸ்ட் பண்ண வேண்டாம்டி… அறுவடை வேலையே மூச்சுமுட்டுற அளவுக்கு இருக்கு.” என்று தச்சன் சோர்வாய் சொல்ல, குந்தவைக்கு அவனின் தவிப்பு புரிந்தது.

சட்டென எழும் சினத்தை பலநேரம் அவளால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் அவர்களுக்குள் எழும் சண்டையை நினைத்து வருந்தி அவளின் கொஞ்சலுக்காய் அவன் ஏங்கிப் பேசும் நேரம் அமைதியாகிவிடுவாள். அப்படி பலதில் பிரத்யேக நேரமாகியது அந்நொடிகளும்.

அவன் சிகையை கலைத்தவள், “ரொம்ப டல்லடிக்கிற, பொழைச்சு போ… கொஞ்ச நேரம் தூங்கு. எல்லாரும் என்ன பண்றாங்கன்னு நான் போய் பார்க்குறேன். குணா அண்ணனையும் இங்க அனுப்பிவிடுறேன். அவரும் ஓயாம வேலை பார்க்குறாரு.” என்றுவிட்டு எழ முயன்றவள் கரத்தை பிடித்து நிறுத்தினான் தச்சன்.

“நீ ரெஸ்ட் எடு, நானே அஞ்சு நிமிஷத்தில் போய் பார்க்கிறேன். எப்படியும் மெஷின் ஹீட் குறைஞ்ச பின்னாடி தான் மீதி வேலை ஆரம்பிக்கும். அதுவரை அறுவடை செஞ்சதை உலர்த்தனும். வைக்கோலை தனியா கட்டி வைக்கணும்.” காத்திருக்கும் வேலைகளை எளிதாய் சொன்னவன் அவற்றை மனதில் வரிசைப்படுத்தி அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்ற யோசனையில் ஆழ, குந்தவை எழுந்துவிட்டாள்.

“நான் சும்மா தான இருக்கேன். நான் பாக்குறேன். பத்து நாளா நீதான் அலைஞ்சிட்டே இருக்க… இப்போ ரெஸ்ட் எடு…” என்று அவனின் வேலைப்பளு உணர்ந்து குந்தவை பொறுப்பை தனதாக்கிக்கொள்ள, அவன் வாய் சும்மாவா இருக்கும்! தானாய் வம்பிழுத்தது.

“இப்போவாவது நான் வேலை செய்றேன்னு ஒத்துக்கிறீயே… இல்லைனா மாமனாரும் மருமகளும் சேர்ந்து நான் எதுவுமே பண்றது இல்லைன்னு முடிவுகட்டி எல்லாத்தையும் அவன்கிட்ட கொடுத்திடுவீங்க.”

“யாரு, எதை கொடுத்தோம் இப்போ? தேவையில்லாம பேசாத… மாமாவே அத்தானை வருந்தி வருந்தி கூப்பிட்டாலும் அவங்க வயல் பக்கமே வர்றது இல்லை.” என்று அவள் மறுப்பு சொல்ல, சும்மாவே ராஜன் மீது கடுப்பில் இருப்பவன் குந்தவை ராஜன் சார்பாய் பேசினால்… இருக்கும் வேலையை விட்டுவிட்டு வம்புக்கு இறங்கினான்.

“அதுதானே! அவன் ஏன் வரப்போறான்! அவன் ஹாயா வெட்டியா ஊரை சுத்திட்டு இருக்கான். லாரி வச்சிருக்கேன் புதுசா இன்னொன்னும் வாங்கப் போறேன்னு கதை அளந்தான். ஆனா ஒன்னுத்தையும் காணோம். நான் சுத்தின போது மட்டும் ஆவூன்னு புலம்புனாங்க. இப்போ அவன் தடிமாடு மாதிரி சுத்திட்டு இருக்கான், அவனை யாரும் கேக்குறது இல்லை… இந்த நீலா அவனையே தலையில தூக்கி வச்சி கொண்டாடிட்டு இருக்கு. விட்டா இடுப்புல தூக்கிவச்சு சாப்பாடு ஊட்டிவிடும் போல…”

ராஜராஜன் பேச்செடுத்தாலே ஆர்வமின்மையை வெளிப்படுத்தும் கணவனை என்னதான் செய்வது? என்ற சோர்வு வந்திருந்தது குந்தவைக்கு. அவளும் அதட்டி, திட்டி, கொஞ்சி என அவன் மண்டையில் உறைக்கும்படி எத்தனையோ முறை சொல்லிவிட்டாள் ராஜனை அண்ணனாய் பார் என்று. கேட்டால்தானே இந்த பிடிவாதக்காரன்! காரணமேயின்றி வறட்டு வீம்பை பிடித்துக்கொண்டு உளருபவனை எப்படியாவது மாற்றிட வேண்டும் என்ற எண்ணம் வலுபெற்றுக்கொண்டே சென்றது ஒருசில காரணத்தினால்.

“என்னடி பதில் சொல்ல முடியலையா? பேச்சையே காணோம்?”

“நீங்க புரிஞ்சிக்காம பொறாமையில பொங்குறதுக்கு என்னோட சக்தியை நான் வீணடிக்கிறதா இல்லை பெருந்தச்சன் சார்.” உள்ளே எரிச்சல் மூண்டாலும் அதை அடக்கி பல்ளித்தபடியே அவள் பரிகாசமாய் சிரிக்க, பற்களை நறநறவென கடித்த தச்சனோ கடுப்புடன்,

“பேருல கூட ஓரவஞ்சனையா அவனுக்கு மட்டும் ராஜா பேரு ராஜராஜன்னு ஆனா எனக்கு… அசிங்கமா பெருந்தச்சன்னு…” என்று அவன் முகத்தை சுழிக்கவுமே அவளது பொறுமை காற்றி பறந்தது.

“சினிமாவை கட் பண்ணைனும் முதல்ல… அதை பார்த்து பார்த்து தான் நீ கெட்டுப்போயிருக்க…”

“ஸ்ஷ்… இப்போ என்ன கெட்டு போயிட்டேன் நானு?” என்று தச்சன் நெஞ்சை நிமிர்த்தி எகிறிக்கொண்டு எழ, அவன் நெஞ்சில் கைவைத்து அவனை லேசாய் பின் தள்ளினாள் குந்தவை.

“ஒண்ணா ரெண்டா…. நிறைய இருக்கு… இதோ இப்போ புதுசா ஒன்னை கிளப்பி இருக்கீயே! அப்படி என்ன உன் பேருல அசிங்கத்தை கண்டுட்ட? வித்தியாசமான பேரு தான் ஆனா கல்வெட்டில் நிலைச்சு இருக்குற ஒருத்தரோட பெயரை எவ்வளவு ஆசையா உனக்கு வச்சிருப்பாங்க. ஆனா நீ ஏதோ சினிமா பார்த்துட்டு வந்து அதுல வர்ற வசனத்தை காப்பியடிச்சி இங்க உளறிகிட்டு இருக்க… கண்டதை நினைச்சி என்னை டென்ஷன் பண்ணாம வேலைக்கு கிளம்பு முதல்ல… உன்கிட்ட பேசிபேசி என்னோட பீபி தான் ஏறுது…”

“எனக்கு மட்டும் இனிக்கவா செய்யுது? என்னோட பீபியும் தான் ஏறுது… இந்த இம்சைக்கு தான் ஆரம்பத்திலிருந்து சொல்றேன் இங்க வராதேன்னு கேட்குறீயா நீ? முதல்ல உனக்கு இந்த இடம் செட் ஆகாதுன்னு தான் நினைச்சேன் ஆனா இப்போ புரியுது நீ இங்க வர்றது எனக்கு செட்டே ஆகாது. ஏதோ டீச்சர் பரீட்சை பேப்பரை திருத்துற மாதிரியே வார்த்தைக்கு வார்த்தை என்னை திருத்த கிளம்பியிருக்க… உன் மாமனார் தானே இதுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருப்பாரு. எனக்கு தெரியும் அவர் சொல்லி தான் நீ இங்க வந்திருப்ப… இல்லைன்னா உனக்கு பிடிக்காததை செய்ய வருவீயா…” வாக்குவாதத்தில் பிறப்பெடுத்த எரிச்சலில் கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓட, தச்சனும் தம்கட்டி கத்தினான்.

ம்கூம் குந்தவை அதற்கும் மேல்! அவனை பொருட்படுத்தாது,

“என்னால சும்மா சும்மா உனக்கு விளக்கம் குடுத்துட்டு இருக்க முடியாது. உனக்கு தோள் கொடுத்து உனக்கு உதவியா இருக்கலாம்னு தான் வந்தேன்… அது உனக்கு பிடிக்கலைன்னா நான் எதுவும் செய்ய முடியாது. எனக்கு என் புருஷன் முன்னேறி மேல வரணும் நானும் ஏதாவது உருப்படியா செய்யனும் அவ்வளவு தான்… நாம இங்க சண்டை போடுறது நமக்கு தான் லாஸ்... தலைக்கு மேல வேலை கிடக்கு… நான் போறேன். நீ இங்கேயே நின்னு கத்திட்டு இரு.” என்றுவிட்டு அவனை கண்டுகொள்ளாமல் குந்தவை வேகமாய் அங்கிருந்து நகர்ந்துவிட,

ஆத்திரத்தில் தரையை உதைத்த தச்சன், “இம்சைடி… நீ நினைக்குறது சொல்றது மட்டுந்தான் நடக்கணும். ஆனா நான் சொல்ற எதையும் கேட்கமாட்ட…” ஆதவனின் வெம்மைக்கு நிகராய் அவனும் தகிக்க பாவம் அவனை கண்டுகொள்ளதான் யாருமில்லை.

*

“நீங்க கொஞ்ச நேரம் தோட்டத்தில் உங்க தோஸ்த்தோட ரெஸ்ட் எடுங்களேன்…” விழிகள் அனைத்தையும் கவனித்து புத்தியில் பதித்துக்கொள்ள, தனியாய் ஒரு ஓரமாய் நின்ற குணாவிடம் சென்று நின்றாள் குந்தவை.

“சும்மா தான் நிக்குறேன்மா… இன்னும் யாரும் சாப்டுட்டு வரலை. அதுவரை தோராயமா எவ்வளவு மூட்டை தேறும்னு கணக்கு பார்த்துட்டு இருக்கேன்’.”

“எவ்வளவு தேறுனாலும் ஐம்பது மூட்டையை தனியா வச்சிடுங்க. அதை விக்க வேணாம்.” என்று சொன்னவளை கேள்வியாய் பார்த்தான் குணா.

“எதுக்குமா? எப்போதும் அன்பு அப்பா எல்லா மூட்டையையும் அரசு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பண்ணிடுவேன். அதேமாதிரி இங்க அறுவடை ஆகுறதையும் நல்லா காய வச்சி மூட்டை கட்டி கொள்முதல் பண்ணிடுங்கன்னு சொன்னாங்க. தச்சனும் அப்படியே பண்ணிடலாம்னு சொன்னான்.”

“முதன்முதலா விளைச்சல் பார்த்திருக்கோம். அதை அப்படியே காசாக்காம உங்களுக்கு ஒரு நாற்பது, வீட்டுக்கு ஒரு அஞ்சு, அண்ணி வீட்டுக்கு ஒரு அஞ்சு மூட்டைன்னு பிரிச்சிடுவோம்னு பாக்குறேன். மீதியை கொள்முதல் பண்ணிடுங்க. நான் மாமாகிட்ட சொல்லிடுறேன்.” என்றவளை ஆச்சர்யமாக பார்த்த குணா, மறுக்கும் விதமாய்,

“எனக்கு எதுக்கும்மா? கொள்முதல் பண்றதுக்கு முன்னாடி பத்து மூட்டையை பிரிச்சி பக்கத்து ஊரில் இருக்கும் அரிசி மில்லுக்கு அனுப்பி வச்சிடுறேன். சின்ன மில்லில் மட்டும்தான் பத்து மூட்டை அரைக்க முடியும். அதுவும் கொஞ்சம் காலதாமதம் ஆகும். ஆனா கிடைச்சிடும்.”

“இதுல உங்களோட உழைப்பு தான் அதிகம் இருக்கு. விளையுறதை கொள்முதல் பண்ணி பணமா உங்களுக்கு கொடுக்க எனக்கு விருப்பமில்லை. நீங்களும் பணமா வாங்கமாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். அதுனால மூட்டையை பிரிச்சிக்கலாம். இது உங்களுக்கானது, உங்களோட உழைப்பு. சொல்லப்போனா இது கம்மி தான், இதில் எவ்வளவு வருமானம் வரும், விளைச்சல் இருக்கும்னு தெரியலை. அதுனால தோராயமா நாற்பதுன்னு சொன்னேன். கடைசியில எவ்வளவு வருதோ அதை சமமா பிரிச்சிக்கலாம்.”

“ஐயோ என்னமா சமமா பிரிச்சிக்கலாம்னு சொல்ற… நான் எந்த பலனையும் எதிர்ப்பார்க்காம நட்புங்குற அடிப்படையில் தச்சனுக்காக வந்தேன். மற்றபடி எனக்கு எதுவும் வேண்டாம். தச்சன் ஆசைப்பட்டது நிறைவேறினாலே போதும். எனக்கு தேங்காய் ஏற்றுமதி வர்த்தகம் இருக்கு.”

குணா மறுப்பதிலேயே குறியாய் இருக்க, இது சரியாய் வராது என்றுணர்ந்த குந்தவை அவனுக்கு பேசும் வாய்ப்பை தராத வண்ணம் அதிகாரத் தோரணையில், “நான் உங்களுக்கு வேணுமான்னு கேக்கல… உங்களை பிரிச்சி எடுத்து வைக்கச் சொன்னேன்… உங்களுக்கு சேர வேண்டியது உங்க வீட்டுக்கு வந்து சேரும்.”

இனி குந்தவையிடம் பேசி ஒன்றும் ஆகாது என்றுணர்ந்த குணாவும் சிரித்து மழுப்பினான், “அதுதானே குந்தவை இவ்வளவு நேரம் பொறுமையா பேசுதேன்னு நினைச்சேன்… எனக்கும் ஆர்டர் தானா? நான் தச்சன்கிட்ட பேசுறேன்.”

“அவர்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். அவரும் டபுள் ஒகே சொல்லியாச்சு…”

“என்ன ஒகே சொல்லியாச்சு?” அவர்களின் உரையாடலின் பிற்பாதியை மட்டும் கேட்ட தச்சன் அங்குவந்து நின்றான்.

குந்தவை அவன்புறம் திரும்பி ஒருமுறை முறைத்துவிட்டு இதழ்களை இறுக பூட்டிக்கொள்ள, ‘பெரிய்ய இவ… சிலுப்புறா… போடி.’ என்று முனுகிய தச்சன் குணாவை கேள்வியாய் பார்த்தான்.

“கொள்முதல் பண்றதுக்கு முன்னாடி மூட்டையை தனியா எடுத்து வைக்க சொல்லுச்சு… வேண்டாம்னு சொன்னா கேக்க மாட்டேங்குது.” என்றான் குணா குறையாய்.

தச்சனோ அடங்காது, “அது தேறாத கேஸு… ஒன் வே. ஆர்டர் மட்டும் தான் வரும், நாம திரும்ப எது சொன்னாலும் அங்க ஏறாது. நோ என்ட்ரி.”

‘ஆஹா… நம்மளையும் இவிங்க புகைச்சலுக்குள்ள இழுக்க பார்க்குறான்… தப்பிச்சி ஓடிடு குணா, குந்தவை வேற ஃபார்முக்கு வந்துடுச்சு… இந்த தச்சன் வாயும் அடங்காது.’ விபரீதம் உணர்ந்தவன் தச்சனிடம் பல்லை காட்டிவிட்டு,

“எனக்கு கொஞ்சம் டையர்டா இருக்கு மச்சான்… நான் போய் ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு வரேன்.” என்று நழுவிக்கொள்ள, கணவனும் மனைவியும் மட்டும் தனித்திருந்தனர்.

இருவருமே ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நிற்க, அன்று வேலைக்கு வந்தவர்களில் ஒரு பெண்மணி ஆடி அசைந்து தச்சனிடம் வந்து நின்றார்.

“இந்த பக்கம் சின்ன தம்பி வாசம் வீசுதே… கூலியை கொஞ்சம் பார்த்து குடுக்குறது. நீங்க வந்த நேரம் விளைச்சலும் அமோகமா இருக்கே!” தனக்கு சாதகமாய் எதுவும் கிடைக்குமா என்ற நோக்கில் அவர் கொக்கி போட, தச்சனின் எண்ணம் அவரின் சின்னத்தம்பியிலேயே நின்றது. ராஜன் ஒருமுறை அவனை அப்படி அழைத்தது நினைவு வந்து ஒரு வினாடி அவனை தேங்க வைத்தது. அதற்குள் அந்த பெண்மணி குந்தவையை பிடித்துக்கொண்டார்.

“அம்மணியும் இருக்கீங்க… கொஞ்சம் பார்த்து செய்றது. இந்த கழனி மாதிரியே எங்க மனசும் பர்ஸும் நிறைஞ்சிடும்.”

குந்தவை பதில் சொல்லும் முன்னமே முந்திக்கொண்ட தச்சன், “அப்புறம் எங்க சட்டை ஓட்டையாகிடும் க்காவ்… நாத்துநட கூப்பிட்டப்போ பெருசா பிகு பண்ணிட்டு வரமாட்டேன்னு போன… இப்போ நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை இல்லாததால் இங்க வந்திருக்க. அங்க வேலையிருந்தா வருவீயா நீ?”

“உனக்கு வாக்கு கொடுத்துட்டு வேலைக்கு வராத மாதிரியே பேசுறீயே தச்சா?”

“வேற எப்படி பேசுறது? விவசாயம் செய்ய நிலத்தை மட்டும் நம்புனா பத்தாது உங்களை போல ஆளுங்களையும் நம்பிதான் இதில் இறங்குறோம். ஆகோ ஓகோன்னு லாபம் பார்க்கலைனாலும் உங்களுக்கு கொடுக்க வேண்டிய நியாயமான கூலியை கொடுக்கிறோம். ஆனா நீங்க வரமாட்டேங்கிறீங்க… நீங்க வருவீங்களாங்கிற சந்தேகத்தில் அதிக வாடகை கொடுத்து மெஷின் வச்சி வேலையில் இறங்குனா அப்போ வேலை வேணும்னு வந்து நிக்குறீங்க. மெஷினுக்கு வாடகையும் கொடுத்துட்டு உங்களுக்கும் கூலியோட படியளந்து கொடுத்தா எங்களுக்கு எப்படி கட்டுபடியாகும்? இதை இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான். இதுனாலேயே பாதி பேர் நிலத்தை பிளாட் போட்டு வித்திடுறாங்க… நீங்க தொடர்ந்து நம்ம இடத்துக்கு வாங்க அடுத்த அறுவடைக்கு பாப்போம்.” என்று தச்சன் கறாராய் சொல்ல, அந்த பெண்மணி முனகிக்கொண்டே நகர்ந்துவிட்டார்.

அருகிலிருந்த குந்தவையோ அவனை ஆவென்று பார்த்து நின்றாள்.

“நீ என்னடி ஆன்னு பார்த்துட்டு நிக்குற?”

“டேய்… இப்படியெல்லாம் உனக்கு பேசத் தெரியுமா? வீட்டுல உருப்படியான பேச்சை பேச ஆரம்பிச்சாலே அங்கிருந்து ஓடிடுவ… இப்போ இவ்வளவு பேசுற… ஏதோ உனக்கும் கொஞ்சம் விஷயமெல்லாம் தெரியுது.”

“ஏய் பல்லை பேத்துடுவேன்டி… ஒண்ணுமே தெரியாத மடச்சாம்புராணின்னு நினைச்சிட்டீயா என்னை?”

இயல்பாய் துவங்கிய பேச்சுகூட மோதலில் முடிந்தால் என்னதான் செய்வது!

“நான் நினைக்கலை… நீதான் நினைச்சிட்டு இருக்க போல, அதுதான் அந்த வார்த்தை உன் வாயில வருது.” என்று குந்தவை அப்படியே பேச்சை அவன்புறம் திருப்ப, வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அவளை முறைத்தான்.

“கொழுப்புடி உனக்கு… என்னை வச்சி நல்லா செய்யுற! வாயில்லா பூச்சியா அப்பாவியா உன்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன்… எல்லாம் என் நேரம். உன்னை பிடிச்சி தொலைச்சிடுச்சு.”

“பெரிய்ய இவரு… பிடிச்சதால பொறுத்து போற மாதிரி பேசவேண்டியது. பிரியாணி வேணும்னு பக்கத்துல வருவீல்ல அப்ப இருக்கு உனக்கு கச்சேரி.” ஏட்டிக்குப் போட்டியாய் பிணக்கு முடிய, விழியை உருட்டி மிரட்டல் விடுத்த குந்தவை, கோபத்தில் மூச்சுவாங்கியபடி நிற்க, அவள் எதிரேயே தலையிலடித்துக் கொண்டான் தச்சன்.

“இன்னைக்கும் வடை போச்சே… இதுக்குத் தான் பேசமாட்டேன்னு சொன்னேன் கேட்டீயா நீ! என் வாயை கிளறி திருப்தியா விருந்து முடிச்சாச்சா? கிளம்புடி… போ…”

“போறேன் போறேன்… போகாம இங்கேயே நின்னு உன்னை பார்த்துட்டா இருப்பாங்க…” என்று கழுத்தை வெட்டிச் சென்றவள் அதன்பின் மாலை வீடுவந்த பிறகுகூட பேசவில்லை.

ஒரே வண்டியில் வந்திறங்கினாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பாராது தனித்தனியாய் வீட்டினுள் நுழைய, அவர்களைக் கண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தான் ராஜராஜன்.

பொறுக்குமா தச்சனுக்கு? தன்னை பார்த்து அவன் சிரிப்பதா என்று சிலிர்த்துக்கொண்டு அவன் எதிரே சென்று நின்றான், “எதுக்கு இப்போ சிரிக்கிற?”

உர்ரென்று தன்முன்னே நியாயம் கேட்க வந்திருப்பவன் போல் விறைப்பாய் நிற்கும் தம்பியைக் காணக்காண ராஜனின் இதழ்கள் அகண்டு கண்கள் மின்னியது.

“அதெப்படி தினம் ஒரேமாதிரி ஒரே ரியாக்ஷனோட ரெண்டு பேரும் வரீங்கன்னு நினைச்சேன். தானா சிரிப்பு வந்துடுச்சு… உங்க ரெண்டு பேருக்கும் பால்ய திருமணம் பண்ணி வச்சிட்டாங்களோன்னு சந்தேகமா இருக்கு.” என்று ராஜன் பெருநகையுடன் கூற, தச்சனுக்கு அத்தனை உவகையில்லை அவனது கேலிப்பேச்சுக்களில்.

“வெட்டியா இருந்தா இப்படித்தான் கேவலமா யோசிக்கத் தோணும். உருப்படியா ஏதாவது செய்யப்பாரு இந்த சந்தேகேமெல்லாம் வராது.”

“தம்பி சொல்லுக்கு மறுப்புண்டோ!” என்று ஆணையை ஏற்பவன் போல் ராஜன் தலையை சரிக்க, தச்சன் தலையிலடித்துக் கொண்டான், “வக்கனையா பேசுற…”

தச்சன் எரிச்சலாவதை உணர்ந்து அவனை நெருங்கி அவன் தோளில் கைபோட்ட ராஜன் இயல்பாய், “உனக்கு பேசவேத் தெரியாத மாதிரி நடிக்காதடா தச்சா… அலைஞ்சிட்டு வந்திருக்கீயே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவோம்னு நினைச்சேன். உனக்கு பிடிக்கலைனா விடு, நான் பேசலை.”

தோளை உதறி ராஜனின் கரத்தை விலக்கியவன், பல்லிடுக்கில், “ரொம்ப சந்தோஷம்.” என்று முணுக, அந்நேரம் சரியாய் எதிரில் வந்து அவர்களை மடக்கினார் அன்பரசன். அவர் குரலிலும் உடல்மொழியிலும் கவலை தெரிய, அது என்னவென தனையன்கள் விசாரிக்கும் முன்னர் அவரே அருகில் வந்தார்.

“ரெண்டு பேரும் இங்கதான் இருக்கீங்களா? ரெண்டு பேரும் சேர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டுக்கு போயிட்டு வந்துடுங்களேன்…”

“என்னப்பா விஷயம்?”

“அங்க எதுக்கு இப்போ?”

அன்பரசனின் கவலை ராஜனை தொற்றிக்கொள்ள, தச்சனிடம் பெரிதாய் பதட்டமில்லை.

“அறுவடை செஞ்சதை கொள்முதல் பண்ண கிடங்கில் இன்னைக்கு முன்னூறு மூட்டை இறக்கி டோக்கன் போட்டுட்டு வந்தேன். நாளைக்கு காலை முதல் வேலையா நம்மோட மூட்டையை கொள்முதல் பண்றேன்னு சொன்னாங்க… ஆனா இப்போ வேற தகவல் வந்திருக்கு. பக்கத்து ஊரில் உள்ளவங்க நெல்லையும் நம்ம கொள்முதல் நிலையத்தில் கமிஷன் வாங்கிக்கிட்டு அவங்களோடதை முதலில் கொள்முதல் பண்ணப் போறாங்களாம். வேற ஊர்காரங்க இங்க கொள்முதல் பண்ணா நம்ம ஊருல அறுவடை ஆகியிருக்கிற நெல்லை கொள்முதல் பண்ணி விலை நிர்ணயம் செய்றது தாமதமாகும். இப்போ வேற கண்ட நேரத்தில் மழை பெய்யுது. நெல் மழையில் நனைஞ்சி, சாக்கு மக்கிப்போய் தரம் குறைஞ்சிடும். அப்புறம் நியாயமான விலை நமக்கு கிடைக்காது.”

அன்பரசன் கவலையாய் சொல்ல, தச்சன் முற்றத்தில் தளர்வாய் அமர்ந்து அன்பரசனை அதிருப்தியுடன் ஏறிட்டான், “சாக்கு பாற்றாக்குறையா இருக்கு. அதை கேட்டாலே அங்கிருக்கிற கிளார்க் அந்த குதி குதிக்குறாரு. அதோட கமிஷன் வாங்கிட்டு இப்படி பக்கத்து ஊர்க்காரங்களை உள்ள விடுறதே அந்த ஊராட்சி மன்றத் தலைவியா இருக்கே கலைச்செல்வி, அதோட புருஷன் தான்… நாம போய் பேசுனா உடனே ஒத்துப்பாங்களா என்ன! கட்டுகட்டா பணத்தை குடுத்தா நமக்கு சாதகமா பேசுவாரு.”

“அதுக்காக அப்படியே விட்டுற முடியுமா? நீ போய் பேசுடா… அந்த பொண்ணு தானே தலைவர் பதவியில இருக்கு, நியாயமா அதுதான் மக்களுக்கு என்ன தேவைன்னு கவனிச்சு செய்யனும். ஆனா அது சீட்டுல அந்த பொண்ணோட புருஷன் வந்து உட்கார்ந்து அவனே ஜெயிச்சு அந்த பதவிக்கு வந்த மாதிரி அதிகாரம் பண்ணிட்டு இருக்கான். நேர்ல பார்த்தா மட்டும் கும்பிடு போட்டு பவ்யமா பேசுறான், ஆனா நம்ம அடிமடியிலேயே கைவைக்கிறான்.

நான் பேசிப்பார்த்தேன் நம்மூர் நெல்லில் ஈரப்பதம் அதிகமிருக்கு. இன்னும் காயனும்னு சப்பை கட்டு கட்டுறான்… நாம காய வச்சிதான் எடுத்துட்டு போறோம். ஆனாலும் இப்படி ஏதாவது காரணம் சொல்றாங்க. நீங்க போய் ஒருமுறை பேசிப் பாருங்க… விளைச்சல் அமோகமா இருக்கு, மீதி இருக்குற கொஞ்சம் கடனை அடைச்சிடலாம்னு பாக்குறேன், இவன் விடமாட்டான் போலிருக்கு…” அன்பரசனிடம் வருத்தம் மேலோங்கியிருக்க, தச்சனோ சலித்துக்கொண்டான்.

“நம்ம பேசுனா ஒன்னும் நடக்காது. அவன் பெரிய இடத்துல காசு வாங்கிட்டான்… நீயும் தான் இவ்வளவு நாளா விவசாயம் பார்க்கிற, பண்ணையாரா முன்னேறி இந்த ஊரை ஒரு கலக்கு கலக்கியிருக்க வேணாமா… அப்படி நடந்திருந்தா எல்லோரும் நமக்கு கைகட்டி நின்னுருப்பானுங்க… இப்போ பாரு நாம கைகட்டி நிக்க வேண்டி இருக்கு.”

“நானா இருக்கப்போய் ஏதோ கொஞ்சம் நிலம் வாங்கிப் போட்டு இருக்குறதை பெருக்கியிருக்கேன். என் காலத்துக்கு அப்புறம் நீ என்ன பண்ணப் போறியோன்னு தெரியல. என்ன ராஜா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற? நீயும் இதெல்லாம் தெரிஞ்சிக்கோ… நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் தான் இதையெல்லாம் பார்த்துக்கணும்.” என்று அன்பரசன் தன் மூத்த மகனை உள்ளிழுக்க, அவனோ தூக்கத்திலிருந்து விழிப்பவன் போல் திடுக்கிட்டு நிமிருந்து அமர்ந்து முழுத்து, “என்னப்பா?” என்க,

அதனை தவறாது கவனித்துவிட்ட தச்சனோ சத்தமாய் சிரித்தான்.

“தூங்கிட்டான்… என்னை சொல்லுவ, இப்போ பாரு அவன் கூட தூங்குறான். அவ்வளவு அறுவை போடுற நீ!” என்று கேலிபேச, அன்பரசன் முகத்தை சுழித்தார்.

“இவன் திருந்தவே மாட்டான்!”

“டேய் சும்மா இருடா….” என்று அவனை அதட்டிய ராஜன் தந்தையை தீர்க்கமாய் பார்த்து, “தச்சனே எல்லாத்தையும் பார்த்துக்கட்டும் அப்பா. எனக்கு இதில் நாட்டமில்லை. நான் டவுன் பக்கம் பழக்கடையும், காய்கறி கடையும் சேர்த்தார்போல வைக்கலாம்னு யோசனையில் இருக்கேன். இங்க இருக்குற சந்தை நிலவரத்தை கணிச்சிட்டு நானே உங்ககிட்ட இதைப் பத்தி பேசலாம்னு இருந்தேன்.”

“முடிவு பண்ணிட்ட… இனி பேசி என்ன செய்ய? ஒன்னுக்குள்ள ஒண்ணா இங்கேயே இருப்பேன்னு நினைச்சேன்…” ராஜனின் முடிவில் அன்பரசனுக்கு வருத்தமே.

“ஏன் ராஜா இப்படி சொல்ற? அண்ணனும் தம்பியுமா சேர்ந்து எல்லாத்தையும் பார்த்துப்பீங்கன்னு நினைச்சோம். கொஞ்ச நாள் வீட்டுல இருந்துட்டு அப்பாக்கு துணையா சம்பா சாகுபடியில் இறங்கிடுவேன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன்.” அமைதியாய் அவர்களது உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த நீலா தச்சனுக்கு காபி ஆற்றி கொடுத்துவிட்டு ராஜனிடம் தன் மனத்தாங்களை இறக்கிவைக்க, மறுப்பாய் தலையசைத்தான் ராஜராஜன்.

“வேலை தான் வேற. மத்தபடி இங்கதானே இருக்கேன்… அவன் விவசாயத்தை பார்க்கட்டும், நான் வியாபாரத்தில் இறங்குறேன். போகப்போக நம்ம தோட்டத்தையே பெருசு பண்ணி அங்க விளையுறதை நம்ம கடையிலேயே சந்தைபடுத்தி இன்னும் விரிவுப்படுத்துவோம். இப்போ நான் ஓட்டுற லாரியை சரக்கு எடுக்க பயன்படுத்திக்கிட்டா லோடு இறக்க கொடுக்கிற வாடகை மிச்சமாகும். இன்னொரு லாரி வாங்க சேமிச்சி வச்சிருக்கும் பணத்தில் கடை ஆரம்பிச்சிடலாம்.” என்று ராஜன் எல்லாவற்றையும் பக்காவாய் முடிவு செய்து சொல்ல, அன்பரசன் தயக்கம் தகர்ந்துவிட்டது.

“இதுவும் நல்ல யோசனைதான்… உங்களுக்கு எதில விருப்பமோ அதை செய்யுங்க.” என்று அன்பரசனும் பச்சைக்கொடி காட்டிவிட, தச்சனுக்கு தலைகால் புரியவில்லை.

“உருப்படியா யோசிச்சிருக்க…” என்று தச்சன் ராஜனைப் பார்த்து உல்லாசமாய் சீட்டியடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, ராஜன் அழகாய் புன்னகைத்தான்.

“சரி இது போகட்டும். கொள்முதல் பிரச்சனைக்கு என்ன பண்றது?” அன்பரசன் மீண்டும் விட்ட இடத்தில் துவங்க, தச்சனே பதில் கூறினான்.

“வேற வழியே கிடையாது. ஏதாவது அதிரடியா செய்யணும். அந்த கலைச்செல்வி புருஷன் பெரிய ஆள்தான். ஆனா பெரிய ஆள்னாலே போட்டிக்குன்னு ஒருத்தன் இருப்பானே… அவனை நான் கவனிச்சிடுறேன். மீதி செய்ய வேண்டியதை அவனே நமக்கு செஞ்சி கொடுத்திடுவான்.”

“அதெல்லாம் வேண்டாம். எல்லாரும் ஒரே குட்டையில் விழுந்த மட்டை தான். இன்னைக்கு எதிர்கட்சியா இருக்குறவன் நாளைக்கு பதவிக்கு வந்ததும் அவன் வேலையை காட்டுவான். நாம யாரையும் பகைச்சிக்க வேண்டாம்.”

“அப்புறம் என்ன தான் தீர்வு இதுக்கு?”

“பேசித்தான் பார்க்கணும். நீயும் குணாவும் ஒருமுறை பேசுங்க. பார்த்து பேசு, வார்த்தையை விட்டுறாத.”

“சரி சரி சொல்லிட்டீல்ல விடு… ம்மா சுடுதண்ணி போடுமா… வெந்நீர் குளியல் போட்டா தான் உடம்பு வலியெல்லாம் குறையும்.” என்று சோம்பல் முறித்த தச்சன் எழுந்து அறைக்குச் சென்றுவிட, நீலா மகன் கேட்டதை நிறைவேற்ற எழுந்துவிட்டார்.

“ராஜனோட ஜாதகத்தில் மஞ்சள் தடவி சாமிகிட்ட வச்சி வேண்டிட்டு எடுத்துவந்து கொடுத்துட்டு போ நீலா… இன்னைக்கு ஒரு வரன் வந்திருக்கு, அவங்களுக்கு ராஜன் ஜாதகம் வேணுமாம். இன்னைக்கே போட்டோ எடுத்து அனுப்பி வச்சிடுவோம்.” என்று அன்பரசன் இயல்பாய் நீலாவை கேட்க, அவரும் இயல்பாய் சம்மதிக்க, ராஜன் அதிர்ந்துவிட்டான்.

“அம்மா என்கிட்ட கேட்கவே இல்லை, அப்பா நீங்களும் இதைபத்தி ஒண்ணுமே சொல்லலை. இப்ப என்ன அவசரம்?” திருமணத்திற்கு பெண் பார்க்கிறார்கள் என்ற விஷயமே அவனுக்கு புது செய்தியாய் இருந்தது.

“என்ன அவசரமா? வயசு ஏறிட்டே போது ராஜா… இதுவே லேட்டு.” என்றார் நீலா.

“ம்மா இப்போ வேணாமே!”

“என்ன வேண்டாம்? இதெல்லாம் நேரம் வரும்போதே முடிச்சிடனும்.” என்றார் அன்பரசனும் தீர்மானமாய்.

“அப்பா…”

“உன் தம்பி மானத்தை இப்படி வாங்குறீயே ராசா… உனக்கு பொண்ணு பாக்குறோம்னு அவன்கிட்ட சொன்னதும் பறக்காத குறையா மிதந்திட்டு இருந்தான். நீ என்னன்னா இப்படி சொல்ற?”

“ஏய் கிழவி அவன் இப்போ கேட்டானா நான் என்ன பண்ணேன்னு. நீயா ஏன் என்னை டேமேஜ் பண்ற. பேசாம உக்காந்து டீவி சீரியலை பாரு.” சட்டையை கழற்றிவிட்டு குளிக்கத் தயாராய் வெளியவந்த தச்சன் மங்களத்தின் பேச்சில் நின்று அவர் தலையை லேசாய் தட்டிவிட்டுச் சென்றான்.

“நீலா சீக்கிரம் ஜாதகத்தை எடுத்து வந்து கொடுத்துட்டு தச்சனுக்கு என்ன வேணும்னு பாரு… அப்புறம் நொய்யு நொய்யுன்னு பிணாத்துவான். குந்தவை அவங்க இந்த வாட்சாப்பில் போட்டோவையும் ஜாதகத்தையும் அனுப்ப சொன்னாங்க. போட்டோ எடுத்து நீ கொஞ்சம் பார்த்து அனுப்பிவிடுமா.” என்று குந்தவையிடம் தன் அலைபேசியை நீட்ட, அவ்வளவு நேரம் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாய் இருந்த குந்தவை, ராஜனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே அலைபேசியை வாங்கினாள்.

ராஜன் பாவமாய் முகத்தை வைத்து அனுப்பாதே என்று ஓசையின்றி முணுமுணுத்து மறுப்பாய் தலையசைக்க, அன்பரசனை கண்ட குந்தவை, “மாமா இங்க நெட்வொர்க் சரியா கிடைக்கலை. நானே அத்தைகிட்ட வாங்கி போட்டோ எடுத்து அனுப்பிடுறேன். நீங்க யாருக்கு அனுப்பனும்னு மட்டும் சொல்லுங்க.”

“அதுல கடைசியா ஒரு நம்பருக்கு பேசியிருப்பேன். அந்த நம்பருக்கே அனுப்பிடு. அவங்களும் விவரம் அனுப்புறேன்னு சொன்னாங்க. வந்திருக்கான்னு பாரு.” என்றவரிடம் தலையசைத்துவிட்டு நீலாவிடம் ராஜனின் விவரங்களை வாங்கிக்கொண்டு குந்தவை வெளியே செல்ல, அவளைத் தொடர்ந்து அவள் பின்னேயே சென்றான் ராஜன்.

“அனுப்பாதேன்னு சொல்றேன்… ஆனா நீ கண்டுக்காம உன் வேலையை பார்த்துட்டு இருக்க? விட்டா அவங்ககூட சேர்ந்து எனக்கு கல்யாணமே பண்ணிவச்சிடுவீயோ?”

“அதிலென்ன சந்தேகம்? நான் தான் உங்க கல்யாணத்தை முன்ன நின்னு செய்யப்போறேன். இந்த வீட்டு மருமகளா அது என்னோட உரிமை.” என்று குந்தவை உரிமையை நிலைநாட்ட, ராஜன் அவளை சோகமாய் பார்த்து வைத்தான்.

“எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி சொல்லலாமா?”

“எனக்கு என்ன தெரியும்? நீங்க ஏதாவது என்கிட்ட சொன்னீங்களா என்ன?” என்று அவள் இடக்காய் கேட்டுவைக்க, ராஜன் பெருமூச்சிழுத்து,

“நீயே தான கண்டுபிடிச்ச அப்புறம் எதுக்கு இந்த வீண் வேலை?”

“நான் கண்டுபிடிச்சாலும் என்னால எதுவும் பண்ணமுடியலையே. நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக தான் நான் இன்னும் இதில் தலையிடாம இருக்கேன் அத்தான். இல்லைனா எப்போவே வீட்டில் சொல்லி அவகிட்ட பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டியிருப்பேன்.”

ராஜன் போல் வளவளவென இழுத்து பொறுமை காப்பது குந்தவைக்கு சற்றும் ஒத்துவராத காரியம். அவளேதான் நிதானமாய் அடிகள் எடுத்து வைத்து, வானதிக்கு யோசிக்க நேரம் கொடுத்து அவளுக்கான வாழ்க்கையை அவளே முடிவு செய்ய வேண்டுமென ஆரம்பத்தில் சொன்னாள். ஆனால் என்று ராஜனுக்கு வானதி மேல் அபிப்பிராயம் இருக்கிறது என்று தெரிந்ததோ அன்றிலிருந்து இது ஒத்துவரும் வராது என்ற முடிவை எடுத்துவிட வேண்டுமென தவிக்கிறாள். இந்த ராஜன் மட்டும் அதற்கு அணை போட்டுக்கொண்டிருக்கிறான்.

“எப்படி? அவளை வற்புறுத்தி தானே! என்னோட விருப்பத்தை மட்டும் தான் நான் சொல்லியிருக்கேன். அதுக்கான பதில் இன்னும் அங்கிருந்து வரலை. இப்போ விஷயம் வீட்டிற்கு தெரிஞ்சா ஒன்னு பிரச்சனை வரும் இல்லைனா வானதியை எல்லோரும் சம்மதிக்க சொல்லி வற்புறுத்துவீங்க. என்ன முடிவா இருந்தாலும் அதை வானதியே சொல்லட்டும். நான் எதையும் ஏற்க தயாராய் இருக்கேன்.” என்றான் அவனும் தீர்க்கமாய்.

“முடிவு வராது எதிர்ப்பார்க்காதீங்க, நானே அவகிட்ட பேசுறேன்னு நானும் ஒரு மாசமா சொல்றேன், நீங்க கேக்க மாட்டேங்குறீங்க. அவள் சொல்ல மாட்டா… ஒத்துவரும், வராதுன்னு அவள் நேரடியா உங்ககிட்ட சொல்ல மாட்டா…”

“அது என் பிரச்சனை குந்தவை. நான் அவகிட்ட பதில் வாங்கிக்குறேன். நீ அவளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடு. அவ நல்லா யோசிக்கட்டும்.” ராஜனின் பேச்சுக்கள் வானதியின் சார்பாகவே இருந்தது.

“எத்தனை நாளுக்கு யோசிப்பா? உங்க விருப்பத்தை சொல்லிட்டு வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுது இன்னும் பதில் வரலை. அவளுக்கு அழுத்தம் கொடுக்காத வரைக்கும் அவள் எந்த முடிவுக்கும் வரமாட்டா…”

“இதுதான் வேண்டாம்னு சொல்றேன். எதுக்கு அழுத்தம் கொடுக்கணும்? அவளுக்கு வாழ்க்கையில் பிடிப்பு வரணும், தன்னம்பிக்கை வரணும்னு தானே நீ அவளை வேலைக்கு போகச்சொல்லி கட்டாயப்படுத்தின. இப்போதான் தன்னம்பிக்கை வந்திருக்கு, இனி யோசிப்பா. அதுக்கான சூழலை நாம தான் கொடுக்கணும். அவள் யோசிக்கட்டும்னு நினைச்சி தான் நான் அவளை அதுக்குபிறகு தொந்தரவு செய்யலை.”

“விளங்கிடும். நீங்க ஸ்பேஸ் கொடுக்கிறேன்னு விலகி நில்லுங்க. விருப்பத்தை சொல்லிட்டு இந்த மனுஷன் எங்கேயோ காணாம போயிட்டாரு, இதெல்லாம் கனவா நனவான்னு அங்கொருத்தி யோசிச்சிட்டு இருப்பா. கன்னாபின்னான்னு யோசிக்கிறவ யார்கிட்டேயும் சொல்லவும் மாட்டா. உள்ளேயே வச்சி புழுங்குவா. நீங்க உண்மையாவே அவளை நல்லா பார்த்துக்கணும்னு ஆசைப்பட்டா நீங்க அமைதியா இருங்க, நான் பேசுறேன் அவகிட்ட. எனக்கு என் அக்கா வாழ்க்கை ரொம்ப முக்கியம் அத்தான். அவள் முடியாதுன்னு சொல்லிட்டா நீங்க அவளை தொந்தரவு செய்யக்கூடாது.”

“அவ ஓக்கே சொல்லிட்டா நீ மறுக்கக்கூடாது குந்தவை.” என்று டீலுக்கு டீல் பேசினான் ராஜன்.

அவனைப் பார்த்து சன்னமாய் சிரித்த குந்தவை, “மறுக்கனும்னா எப்போவோ மறுத்திருப்பேன். இப்படி பொறுமையா உங்ககிட்ட பேசிட்டு இருக்க மாட்டேன்.”

“சரிவிடு… ஏதாவது காரணம் சொல்லி இந்த ஜாதகம் அனுப்புறது போட்டோ எடுக்குறது எல்லாதையும் தள்ளிப்போடு. நான் வானதிகிட்ட இன்னொரு முறை பேசுறேன். அப்படியும் சரியா வரலைன்னா அப்புறம் உன்னோட விருப்பம்.”

“வானதிக்காக எதுவும் செய்வேன்… இதுகூட செய்ய மாட்டேனா… சீக்கிரம் அவகிட்ட பதில் வாங்குங்க. அவள் இங்க வந்தா உங்களைவிட அதிகமான சந்தோசம் எனக்குத்தான். என் கூடவே, என் கண்முன்னாடியே அவளை பத்திரமா பார்த்துப்பேன்.” என்று கண்களில் கனவு மின்ன சொன்னவள் திடுமென ஏதோ நினைவு வந்தவளாய் குறும்பாய் கண்சிமிட்டி, “ஆமா என்ன புதுசா கடை வைக்கப்போறேன்னு சொல்லிட்டு இருந்தீங்க அத்தான்? என்ன விஷயம்?”

“கண்டுபிடிச்சிட்டீயா… எல்லாம் காரணமாத்தான்… ஒரே கல்லில் ரெண்டு மாங்கா… நான் விவசாயம் பண்ணலைன்னு தெரிஞ்சா உன் புருஷனும் சரி, அக்காளும் சரி ரெண்டு பேரும் நிம்மதியாகிடுவாங்க. தச்சனுக்கு எங்க அவனை பின்னாடி தள்ளி அவனோட கனவை நான் வாழ்ந்துடுவேனோன்னு பயம், உன் அக்காக்கு சொல்லவே வேண்டாம்.

விவசாயத்தால ஏற்பட்ட கசப்பான அனுபவம் வடுவா மனசில் இருக்கு. அதை அழிக்க என்னாலான சின்ன முயற்சி இது. ஒருவேலை அவளுக்கும் என்கூட வாழலாம்னு தோணினா என்னோட தொழிலைப் பார்த்து அவள் பயந்து பின்வாங்கக்கூடாது. நிலையான வாழ்க்கை உனக்கு காத்திட்டு இருக்குன்னு அவளுக்கு புரியவைக்கணும்னு நினைக்கிறன். எனக்கு வேற எதுவும் பெருசா கனவெல்லாம் இல்லை குந்தவை. குடும்பத்தை பிரிஞ்சி ரொம்ப வருஷம் தனியா கஷ்டப்பட்டுட்டேன், இனி கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு இங்கேயே இருந்திடுவேன். அதுபோதும் எனக்கு.”

“அதென்ன எப்போதும் வானதியை பத்தி மட்டுமே பேசுறீங்க? பசங்க?”

“பசங்க அவளோட அங்கம், அவங்களை நான் தனியா பிரிச்சிப் பார்க்கலை.”

“நல்லா பேசுறீங்க…. ஆனா அவகிட்ட எதுவும் செல்லுபடியாகாது.”

“அக்கா தங்கச்சி ரெண்டு பேருமே அழுத்தக்காரங்க. நீ எல்லாத்தையும் தெளிவா புரிஞ்சி செய்யுற, திடமா நிக்குற. அவள் குழம்பினாலும் கம்முன்னு அழுத்தமா இருக்கா.”

“இங்க மட்டும் என்னவாம்! அண்ணனும் தம்பியும் பிடிவாதக்காரங்க. வெளில பார்க்க ஆஹோ ஓஹோன்னு எல்லாத்துக்கும் வளைஞ்சு போறவங்க மாதிரி சீன் ஓட்ட வேண்டியது. ஆனா எல்லாத்திலையும் பிடிவாதம். நினைச்சதை சாதிச்சே ஆகனும்னு இருப்பீங்க.”

“தச்சன்கூட சேர்ந்து நீயும் அதிகமா வாய் பேசுற. போய் வேலையைப் பாரு குந்தவை. நானும் உங்கக்காகிட்ட பேச முடியுதான்னு பாக்குறேன்.”

“ஹலோ… அவ ஓக்கே சொன்னாலும் என் பெர்மிஷன் இல்லாம அங்கிருந்து ஒன்னும் அசையாதுன்னு நியாபகம் வச்சிக்கோங்க அத்தான்… என் உதவி உங்களுக்கு அத்தியாவசியமானது…” இயல்பான பேச்சுக்கள் உறவுகளை இணைக்கமாக்கியது. குந்தவையும் இலகுவாய் பேசினாள்.

“சரிங்க மேடம். போய் என் தம்பியை பாருங்க. நான் என் பொழப்பை பாக்குறேன்.” என்று கும்பிடு போட்டவன், குந்தவை நகர்ந்ததும் முதல் வேலையாய் வானதியை அழைத்தான் ஒரு மாதம் கழித்து. ஆம்! அவர்கள் பேசி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. அன்று தன் விருப்பை சூசகமாய் சொல்லியவன் அதன்பின் இன்று தான் அழைக்கிறான்.

இதயம் இயல்புக்கு மீறி அடித்துக்கொண்டாலும் ஒரு முடிவுடன் இருந்தவன் அழைப்பு ஏற்கப்பட்டதுமே, “என்னோட காத்திருப்புக்கான முடிவு சுகமானதா சோகமானதான்னு எனக்கு இன்னைக்கே தெரிஞ்சாகனும் வானதி?” என்று கேட்டுவிட, மறுபுறம் மூச்சுக்கள் மட்டுமே ஓசையெழுப்பி அழைப்பில்தான் இருக்கிறேன் என்று சுட்டிக்காட்டியது.

No comments:

Post a Comment

Most Popular