Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 22




 *22*

‘உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க, வாசலில் நிற்கச் சொல்லியிருக்கேன்.’ என்று அலுவலக உதவியாளர் அவளிடம் வந்து செய்தியைக் கடத்த, வியப்புடன் தன் இருக்கையில் இருந்து எழுந்தாள். 


‘நம்மள யாரு பார்க்க வருவா! வீட்டில எதுவும் பிரச்சனையா? அம்மா வந்திருப்பாங்களோ? இல்லைன்னா நான் வேலைக்கு வர்றது தெரிஞ்சு என் மாமியார் பிரச்சனை பண்ண வந்திருப்பாங்களோ? அவங்களா இருந்தா என்ன பண்றது?’ எண்ணங்கள் திசையெங்கும் சிதற, பதட்டம் தானாய் வந்து ஒட்டிக்கொண்டு கால்களை நகரவிடாமல் கட்டிப்போட்டது.

“உங்களை தான் யாரோ பார்க்க வந்திருக்காங்களாம். நீங்க என்ன இங்க நின்னுட்டு இருக்கீங்க? வேலை நேரத்தை கடத்தாம சீக்கிரம் பேசி அனுப்புங்க. மேனேஜர் பார்த்தா திட்டுவாரு.” என்று சகஅலுவலர் அவளை உசுப்ப, கையை பிசைந்துகொண்டே அந்த சிறிய அலுவலக வாயிலை அடைந்தாள். அங்கோ யாரும் இல்லாமல் போக, விழிகள் தவிப்பு மற்றும் ஆவலைத் தாங்கி ஒருமுறை சுற்றி வந்தது. 

“என்னை தேடுறீங்களா?” என்று திடுமென பின்புறம் பக்கவாட்டிலிருந்து குரல் ஒலிக்க, பதறித் திரும்பியவள் அங்கு நின்றுகொண்டிருந்தவனை கண்டு ஓரடி பின்னே நகர்ந்துவிட்டாள். 

இவரா! என்ற குழப்பமும் பதட்டமும் பல்க, குரல் வெளியே வரமாட்டேன் என்று அடம்பிடித்து நின்றது.

“இந்த பக்கம் வந்தேன்… அப்படியே இதை குடுத்துட்டு போகலாம்னு…” என்று இழுத்தவன் அவளிடம் ஒரு பையை நீட்ட, அவள் அதை வாங்கும் எண்ணமின்றி அவனையே இமைக்காது பார்த்து நின்றாள்.

அவளின் அதிர்வை உணர்ந்தவன், “நான் இங்க வருவேன்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க. வேலையா ஒரு மாசம் போல சுத்திட்டு இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். வரும்போது பசங்களுக்கு கொஞ்சம் பொம்மையெல்லாம் வாங்கிட்டு வந்தேன். நீங்க அங்க வரும்போது கொடுக்கலாம் தான் நினைச்சேன், ஆனா முன்னாடியே இங்க ஒரு வேலை வந்துடுச்சு… இவ்வளவு தூரம் வந்துட்டு பசங்களை பார்க்காம போக மனசு வரலை.”

“ப… பசங்க வீட்டுல இருப்பாங்க. நான் அம்மாகிட்ட சொல்றேன் நீங்க போய் பாருங்க.” அவனின் நீண்ட விளக்கத்திற்கு பின் சற்று தெளிந்து, தயங்கி பின் சுதாரிப்பாய் பதில் கூறினாள். இம்முறை அவனிடம் பேச்சு வாங்கக்கூடாது என்ற எண்ணம் திண்ணமாகியது.

“பசங்களை பார்க்கணும்னா நேரா நான் அங்கேயே போயிருப்பேன். குந்தவை உங்க வீட்டு முகவரி தான் குடுத்துச்சு. ஆனா நான் தான் அம்மாகிட்ட நீங்க வேலை பாக்குற ஆபீஸ் பேரை கேட்டு தெரிஞ்சிக்கிட்டு அட்ரெஸ் கண்டுபிடிச்சு வந்தேன்.” உன்னைப் பார்க்கத் தான் வந்தேன் என்ற செய்தி அவன் பதிலுக்கு பின் ஒளிந்திருக்க, தெளிந்திருந்த அவள் மனம் மீண்டும் பதட்டமாகியது. 

“நீங்க எதுக்கு என்னை தேடி வரணும்?” விரல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொள்ள, வார்த்தை திணறலுடன் வெளிவந்தது.

“இப்படி வாசலிலேயே நின்னு பேசணுமா? கொஞ்ச தள்ளி நின்னு பேசலாமே!” என்று ராஜன் சற்று நகர்ந்து செல்ல, அலுவலகத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்த வானதி, “இப்போ தான் ஒரு மாசமா இங்க நான் வேலைக்கு சேர்ந்திருக்கேன். இப்படி இடையில் ப்ரேக் எடுத்து பேசிட்டு இருந்தா ஏதாவது சொல்லுவாங்க. மேனேஜரும் திட்டுவாரு.” என்று தயங்கிச் சொல்ல, நிராசை அவனை சூழ்ந்துகொண்டது.

“வீட்டுக்கு வந்தா பேச சங்கடமா இருக்கும்னு தான் இங்க வந்தேன். சரி நீங்க வேலையைப் பாருங்க. நான் கிளம்புறேன்.”

“இல்லை இல்லை… இங்கேயே ஒருமணி நேரம் காத்திருக்கீங்களா? நான் சீக்கிரமே வேலை முடிச்சிட்டு லஞ்ச் டைமோட பெர்மிஷன் கேட்டுட்டு வரேன்.” என்று அவசரமாய் இயல்புக்கு மீறி அவனிடம் இறைஞ்சினாள் வானதி. 

எங்கே அவன் சென்றுவிடுவானோ என்ற தவிப்பு! எதற்காக தன்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறான் என்று தெரிந்துகொள்ள அவா! என ஒருவித பரவசத்தில் அவள் கையை பிசைந்துகொண்டு அவன் முகம் பார்த்து நின்றாள்.

“நான் காத்திருக்கேன். நீங்க முடிச்சிட்டு வாங்க… என் போன் நம்பரை குறிச்சிக்கோங்க, வேலை முடிஞ்சதும் ஒரு போன் பண்ணுங்க நானே இங்க வந்துறேன்…” என்றான் ராஜனும் சற்றும் குறையாத ஆர்வத்துடன்.

“என் போன் உள்ள இருக்கு. என் நம்பர் சொல்றேன், நீங்க எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க நான் சேவ் பண்ணிக்கிறேன்.” என்று தன் எண்ணை சொன்னவள், அவனிடம் விடைபெறும் விதமாய் தலையசைக்க, அவளிடம் கண்சிமிட்டி நகர்ந்தான் ராஜராஜன்.

காத்திருக்கிறேன் என்று எளிதாய் சொல்லிவிட்டான் தான் ஆனால் அந்த காத்திருப்பில் முரணாய் சுகமும் பரபரப்பும் கூட்டு சேர்ந்துகொண்டு அவன் அமைதியை பதம் பார்த்து தவிக்க விட்டுவிட்டது. எதற்கு இத்தனை தவிப்பு? ஆர்வம்? என்ற கேள்வி வண்டென குடைந்தாலும் விடை தேட விழையவில்லை மனம். இந்த விஷயத்தில் தம்பி போலவே நடப்பது நடக்கட்டும் என்று மனம் செலுத்திய திசையில் வானதியை பார்க்க வந்து விட்டான். அடுத்து? காத்திருப்பு எப்போது முடியுமோ என்ற பரபரப்பு தான் அந்நேரம்…

இவனுக்கு சற்றும் குறையாத பரபரப்புடன் பதட்டமாய் உள்ளே வேலை செய்கிறேன் என்ற பெயரில் சொதப்பிக் கொண்டிருந்தாள் வானதி. எந்த தைரியத்தில் அவனை காத்திருக்க சொல்லிவிட்டு வந்தோம்! எதற்காக அவன் தன்னை பார்க்க வர வேண்டும்? இல்லை எதற்கு இவளும்தான் கிளம்புகிறேன் என்றவனை காத்திருக்க சொல்ல வேண்டும்! என்ற எண்ணமே அவளை அமைதியடைய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. 

“கணவனை இழந்து ஆதரவில்லாம இருக்கிற பொண்ணுங்குற சலுகையால் தான் நீ இங்க வேலையில் இருக்கேன்னு நியாபகம் இருக்கட்டும்மா… இப்படியே வேலையை சொதப்பி இழுத்தடிச்சிட்டு இருந்தா வேலைக்கு பங்கம் வந்துடும் பார்த்து நடந்துக்கோ…” தப்பும் தவறுமாக கடிதத்தை அச்சிட்டு தேவையான ஆவணங்களை முறையாக இணைக்காமல் கோப்புகளை ஒப்படைத்த வானதியை அவளது உயரதிகாரி கடிந்துகொள்ள, அத்தனை நேரம் ராஜனைச் சுற்றியே வந்த எண்ணங்களும் பரபரப்புகளும் அடங்கி கழிவிரக்கமும் எதிர்காலம் குறித்த பயமும் முன்வந்துவிட்டது.

“அடுத்த முறை சரியா பண்ணிடுறேன் சார்… எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்.” என்று படபடப்புடன் சொன்னவள் தவறை திருத்தி புதிதாய் கடிதம் தயாரித்து ஒப்படைத்துவிட்டு தான் நிம்மதி மூச்சுவிட்டாள். 

ஆனால் அதற்குள் மதிய உணவு இடைவேளை முடியும் தருவாயில் இருந்தது. ராஜராஜனுக்கு கொடுத்த வாக்கா இல்லை உணவா? இரண்டில் ஒன்றுக்கு தான் நேரமிருக்கிறது என்று அவள் குழம்பிய போதே அவள் அலைபேசி அதனின் இருப்பை உணர்த்த, அதை எடுக்கும் முன்னமே அழைப்பது ராஜனாகத் தான் இருக்கும் என்று முந்திக்கொண்டு யூகித்தது உள்ளம். யூகம் சரியாய் இருக்க, தயக்கத்துடன் அழைப்பை ஏற்றாள் வானதி.

“வேலை முடிஞ்சிடுச்சா? மணியாகுதே, சாப்டீங்களா?” என்ற அவனது அக்கறையான குரலில் அவளின் தவிப்பு கூடித்தான் போனது.

“இல்லை… வேலை… இப்போ தான் முடிஞ்சிது, இனிதான் சாப்பிடனும். இன்னைக்கு பர்மிஷன் கேட்டுட்டு வர்றது சந்தேகம் தான். உங்களை வேற தேவையில்லாம காத்திருக்க சொல்லிட்டேன்.” என்றாள் தற்போது உயரதிகாரியிடம் வாங்கிய பேச்சை நினைவில் கொண்டு…

இரண்டு வினாடி அமைதிக்கு பின் நிதானமாய் ராஜனிடமிருந்து வந்தது பதில், “பரவாயில்லைங்க… நாம பேச இன்னும் நேரம் வரலை போல… நான் இன்னொரு நாள் வரேன். அங்க வீட்டில் ஒண்ணா இருந்தப்பவே என்னை பார்த்து ஒளிஞ்சி ஒளிஞ்சி போனீங்க, இப்போ கஷ்டம் தான். எப்படி இருக்கீங்கன்னு பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன். வேற ஒண்ணுமில்லை.” 

“பசங்களுக்கு பொம்மை வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொன்னீங்க.. அதை குடுக்காம கிளம்புறீங்க?” அவன் கிளம்புகிறேன் என்றதும் வானதிக்கு சரளமாய் வந்தது பேச்சு.

“நான் வீட்டுல குடுத்துட்டு போறேன்.” தேவைக்கு அதிகமாய் அவளை பார்க்க நேராக வந்துவிட்டு திடுமென கத்தரித்தது போல பேசி இணைப்பை துண்டித்துவிட, வானதியே அவனை அழைத்து, “நான் பேசுறதுக்கு முன்னாடி நீங்களே முடிவு பண்ணி பேசி முடிச்சிடுறீங்க.” என்றாள் குறையாய்...

“இதை சொல்லத்தான் கூப்டீங்களா?” என்றான் அவனும் சலைக்காது. 

“இல்லை… அது… வந்து நீங்க ஏன் அப்படி சொன்னீங்க?”

“எப்படி?”

“வீட்டுக்கு வந்தா பேச சங்கடமா இருக்கும்னு? எதுக்கு சங்கடப்படனும்?” ஒருவழியாய் தனக்கெழுந்த வினாவை வானதி வெளிப்படுத்திவிட, ராஜன் மீண்டுமொரு இரண்டு வினாடிகளை தன்வசமாக்கிக்] கொண்டு,

“எனக்கு ஒன்னுமில்லை. நீங்கதான் என்னை கண்டாலே ஓடி ஒளிவீங்க…” பாதி உண்மையை மட்டும் கூறிய ராஜராஜன் அவள் எதுவும் சொல்வாளா என்று காத்திருக்க, வானதி என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாகிவிட்டாள்.

“என்ன பேச்சையே காணோம்? நான் கிளம்பவா?”

“கிளம்புறேன்னு கால்ல வெந்நீர் கொட்டின மாதிரி குதிக்கிறவரை பிடிச்சி வச்சி என்ன செய்ய முடியும்?” என்று சலித்த வானதி அழைப்பை துண்டித்துவிட, இம்முறை திரும்ப அழைப்பது ராஜனுடையதாகியது.

“என்ன சொன்னீங்க?” என்று ராஜன் பரபரத்தான் வானதி அழைப்பை ஏற்றவுடன்.

“இதை கேட்கத் தான் கூப்பிட்டீங்களா?” என்றாள் அவளும் சாதுர்யமாய். அதை எண்ணி பெருமை வேறு பட்டுக்கொண்டாள். அவனை பேச்சில் தோற்கடித்ததாக நினைப்பு, வேறென்ன!

ஆனால் ராஜனோ உன் பேச்செல்லாம் என்னை மடக்கிவிடுமா என்ன என்பது போன்று அழுத்தமாய் பேசினான், “நான் கேட்டதையே நீங்க திரும்ப கேட்கவேண்டாம். நீங்க சொன்னது எனக்கு நல்லாவே புரிஞ்சுது. ஆனா உங்களுக்கு புரிஞ்சிதான்னு எனக்கு தெரியல…”

“எனக்கு எதுவுமே தெரியாது, புரியாதுன்னு நீங்களும் முடிவு பண்ணீட்டீங்களா?” சாயம் வெளுத்து வானதியின் உள்மனம் விழித்தெழுந்துகொள்ள, அவளது நம்பிக்கை எல்லாம் பின்சென்றுவிட்டது.

“நீங்க அப்படித்தான் வெளில காட்டிக்குறீங்க… அப்படித்தான் இருக்கீங்க. ஆனா…”

“ஆனா?”

“ஆனா இப்போ உங்க பேச்சுல சுதாரிப்பு தெரியுது. யோசிச்சு பேசுறீங்க. என்னையே மடக்கி பேச முயற்சி பண்றீங்க.” என்று சிரித்தான் ராஜராஜன்.

அழுத்தமாய் துவங்கியவன் இறுதியில் அவள் மனம் குளிரும்படி பேசிவிட, வானதிக்கு ஏதோ சாதித்த உணர்வு. அது துள்ளலுடன் இயல்பாய் அவள் குரலில் வெளிப்பட்டது. எத்தனை மாதங்களுக்கு பின் வரும் துள்ளளோ! அவளே அறியாள்.

“அது என்ன என்னையே? நீங்கென்ன அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா?” 

“இல்லையா பின்ன? நாம முதல்ல சந்திச்சப்போ பேயடிச்ச மாதிரி ஆன்னு என் வாயை பார்த்து நின்னுட்டு, பேச வேண்டிய நேரத்தில் பேசாம எல்லாத்துக்கும் பதட்டப்பட்டு என்னை வெளில துரத்த அவசரப்பட்டு, அப்புறம் பேசவே பயந்துட்டு ஒதுங்கிக் போனீங்க… ஆனா இப்போ பாருங்க நீங்களே என்னை போனில் கூப்டீங்க, என்கூட சரளமா பேசுறீங்க.”

“இப்போ நல்லா பேசுறேனா?”

“அதலென்ன சந்தேகம்?”

“இல்லை… எதுனாலும்… எனக்கு பயம் தான் முதல்ல வந்து நிக்கும். குந்தவை மாதிரி தைரியமா என்னால பேச முடியாது, இருக்க முடியாதுன்னு நினைச்சிப்பேன். அந்த நினைப்புலேயே என்னையும் அறியாம எனக்குன்னு ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ளேயே சுத்திட்டு இருந்தேன், இருக்கிறேன். அந்த வேலியை உடைச்சிட்டு என்னால வெளில வரமுடியும்னு தோணல. ஆனா நீங்க சொல்றதை கேக்கும் போது ஆறுதலா இருக்கு, ஏதோ சாதிச்ச மாதிரி இருக்கு.” என்றாள் மறையாமல். அவனைக் கண்டாலே ஒதுங்கியவள் இப்படி அவனிடம் இயல்பாய் தன்னுணர்வுகளை வெளிப்படுத்தும் அளவுக்கு நெருங்கியது ராஜனின் சாமர்த்தியமோ, இயல்போ! எதுவோ ஒன்று அவன்பால் பாதுக்காப்பை, நட்பை உணரச் செய்தது. அது அவனுக்கும் புரிந்தது.

“நீங்க இப்படி என்கூட பேசுறதிலேயே நீங்க உங்க கூட்டை விட்டு வெளியே வர முயற்சி பண்றீங்கன்னு தெரியுதே…”

“ஆனா எனக்கு குந்தவை மாதிரி யோசிக்க தெரியல… இப்போ கூட எனக்கு யாராவது தோள் குடுத்து உனக்கு நான் இருக்கேன்னு சொன்னா அவங்க கூடவே போயிடணும்னு தோணுது. அப்போ நான் மாறலைன்னு தானே அர்த்தம்?” தன்னுள் எழுந்த மாற்றங்களை களையெடுக்கும் விதமாய் வானதி கேள்வி எழுப்ப, ராஜனும் தீவிரமானான்.

“குந்தவை மாதிரி மாறினா நீங்க குந்தவையா தான் இருப்பீங்க… வானதியா இல்லை.” என்று அவன் அழுத்தமாய் சொல்ல, வறட்சியாய் சிரித்தாள் வானதி.

“வானதியா இருக்கிறதில் பெருமை இல்லையே. வானதிக்கு தன்னம்பிக்கை கிடையாது, அவளுக்கு பறக்கத் தெரியாது… அவளுக்குன்னு சொல்லிக்கிற மாதிரி எதுவுமில்லை. அவள் ஆசைப்பட்டது கூட அவளுக்கு கிடைக்கலை. அவளை மாதிரி இருந்து என்ன சாதிச்சிட முடியும்?”

“ஏன் இவ்வளவு விரக்தி இந்த வயசுலேயே? உங்களுக்குன்னு இரண்டு முத்தான பசங்க இருக்காங்க, உங்களுக்கு ஒன்னுன்னா ஏன்னு கேட்க துணிச்சலான தங்கச்சி இருக்கா, அவள் குடும்பமும் இருக்கு. இவ்வளவு பேரோட ஆதரவும் ஆசியும் இருக்கும் போது நீங்க நல்லாயிருப்பீங்க.”

“யாரையும் சார்ந்து இருக்காதீங்கன்னு சொல்லிட்டு இப்போ நீங்களே இப்படி சார்ந்திருக்கிறதை பத்தி பேசுறீங்களே?” 

“சார்ந்திருக்கிறது இப்போ பிரச்சனை இல்லைங்க. எந்த விஷயத்தில் சார்ந்திருக்கீங்கன்னு தான் பிரச்சனை. நம்மோட சுக துக்கங்களை பங்கெடுத்துக்க நம்மை சுத்தி நாலு பேரு வேணும். நமக்காக நிற்க நம்ம குடும்பம் வேணும். ஆனா உங்க வாழ்க்கையை பற்றிய முடிவெடுக்கிற உரிமை உங்ககிட்ட இருக்கணும். தங்கச்சி சொல்லிட்டா, அம்மா சொல்லிட்டாங்கன்னு கண்ணை மூடிகிட்டு அவங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்ட கூடாது. அந்த அர்த்தத்தில் தான் அன்றைக்கும் சொன்னேன் இப்போவும் அதே தான்…”

“இது மாதிரி என்கிட்ட யாரும் சொன்னதில்லை, நிதானமா பேசினதில்லை. பணம் காசை எல்லோருமே முக்கியமா பார்த்தாங்க…  என்.. என் வீட்டுகாரர் கூட கடன் சுமையை மட்டும் மனசுல வச்சிக்கிட்டு தப்பான முடிவெடுத்துட்டாரு… எனக்கு என்ன வேணும்… நான் என்ன எதிர்பார்க்கிறேன். நானும் பசங்களும் எப்படி சமாளிப்போம்னு எதைபத்தியும் யோசிக்காம போயிட்டாரு…”

“எனக்குன்னு இதுவரை நான் யோசிச்சது இல்லை. முதல்ல அப்பா அப்புறம் என் மாமியார், வீட்டுக்காரர் அப்புறம் குந்தவை சொல்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு அப்படியே இருந்துட்டேன்… 

ஆனா ஒரு விஷயத்தில் தீர்க்கமா இருந்தேன்… பணம் காசைவிட என்ன நடந்தாலும் உன்னை விடமாட்டேன்னு ஆறுதலா சொல்றவங்க தான் எனக்கு வேணும்… அவங்க கூடவே இருக்கணும்னு நினைச்சிதான் நான் என் அப்பா, அம்மா குந்தவையை அண்டியே இருந்தேன். ஆனா எப்போதும் அப்படியே இருக்க முடியாதுன்னு நீங்க சொன்ன பிறகு தான் புரிஞ்சிது.” என்று சொன்னவளின் சொல்லப்படாத வருத்தத்திற்கு பின் அவள் கணவன் எடுத்த தவறான முடிவினால் நிலைகுலைந்த அவளது வாழ்க்கையை எண்ணி அதிகம் பயந்து காயப்பட்டிருக்கிறாள் என்றமட்டில் அவனுக்குப் புரிந்தது. அவள் இவ்வளவு மாறியதே பெரிய விஷயமாய் தெரிந்தது!

“போதும்… ரொம்ப யோசிக்காதீங்க. இப்போ சரியான வழியில் தான் போயிட்டிருக்கீங்க. உங்களுக்குன்னு நேரம் வரும் போது நீங்க ஆசைப்பட்ட மாதிரியே உங்களுக்கான தோள் கிடைக்கும். உங்களை கண்ணுல வச்சி பார்த்துக்கிற நல்ல துணை கிடைப்பாரு.”

“இல்லை வேண்டாம்… நான் ஆசைப்பட்டது எப்போவோ முடிஞ்சி போச்சு. என்னால இன்னொரு வாழ்க்கையை நினைச்சி பார்க்க முடியாது. இப்படியே விட்டிருங்க, இதைபத்தி பேச வேணாமே.”

“நான் பேசாம இருந்தா எதுவும் நடக்காமலா இருந்திடும்? உங்களுக்குன்னு ஒரு துணை தேவை, உங்க பசங்களுக்கு தக்கப்பனோட அன்பும் அவசியம். அது அமையும்.”

“சொன்னா புரிஞ்சிக்கோங்க. எனக்கு… எனக்கு தெரியல,.. எப்படி இன்னொருத்தரை என் பசங்களோட அப்பாவா என்னால ஏத்துக்க முடியும்?”

“ஏன் முடியாது? வீட்டுலையும் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க விருப்பப்படுறாங்க. அதுதான் சரியா வரும்.”

“இப்போ தான் வீட்டுல சொல்றாங்கன்னு இல்லாம என் வாழ்க்கையில் முடிவெடுக்கிற உரிமை என்கிட்ட இருக்கணும்னு சொன்னீங்க. எனக்கு துணை வேண்டாம்னு சொல்றேன் ஆனா நீங்க இப்போ மாத்தி பேசறீங்க… வீட்டில விருப்பப் பட்டுட்டாங்கன்னு உடனே நான் ஒத்துக்கணுமா?” 

அவளது பேச்சுக்கள் குதர்க்கமாய் தெரிய கடுப்பாகிவிட்டான் ராஜராஜன். கடுப்பில் பன்மை ஒருமையானது. 

“ஸ்… இதுதான் உன்கிட்ட பிரச்சனை வானதி. எதை ஏத்துக்கணுமோ அதை ஏத்துக்க மாட்ட, எதை கேளுன்னு சொல்றோமோ அதை மறுத்து பேசுவ. இப்படி உல்டாவா எல்லாத்தையும் பண்ணிட்டு இருந்தா எப்படி? எந்தெந்த விஷயத்தில் பெரியவங்க சொல்றதை கேட்கணுமோ அதுக்கு வீம்பு பிடிக்காம கேட்டுக்கனும். எதுக்கு வீம்பு பிடிக்குமோ அதில் பிடிவாதமா இருக்கணும். நீ எல்லாத்தையும் உல்டாவா பண்ற…”

“இப்போ எதுக்கு எல்லோர் மாதிரியும் நீங்களும் என்கிட்ட சத்தம் போடுறீங்க? நீங்க மட்டும் தான் பொறுமையா பேசுறீங்கன்னு சொல்லி கொஞ்ச நேரம் கூட ஆகலை. அதுக்குள்ள என்னை திட்டியாச்சு… இப்படி திட்ட தான் வந்திருக்கீங்கன்னா கிளம்புங்க. போங்க…” 

ஒருமைக்கு மாறிய அவனது விளிப்பை கவனித்தாளோ இல்லையோ அவனுடன் சரளமாய் பேசும் தன்னையே எண்ணி வியந்து கொண்டாள். அவள் இதுபோல பேசியதில்லையே! கடைசியாய் இது போன்றதொரு இலகுவான அதே சமயம் அழுத்தமான நிதர்சனங்களை யாரிடமும் பகிர்ந்துகொண்டதாய் நினைவிலுமில்லை! அவளது ஆழ்மனதை எழுப்பி அதிலிருக்கும் சந்தேகங்களை வெளிக்கொணர்ந்ததும் இல்லை. ஆனால் இன்றோ! வியப்பு தான்!

“நான் வந்த வேலை முடியாம கிளம்புறதா இல்லை வானதி. நீ முதல்ல வெளிய வா… பசங்களுக்கு மட்டுமில்லை உனக்கும் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்.”

“நீங்க எதுக்கு எனக்கு வாங்கிட்டு வரணும்? பசங்களுக்கு மட்டும்தான்னு சொன்னீங்க?” 

“அப்புறம் நீங்களும் மத்தவங்க மாதிரிதான்னு சொல்றதுக்கா… வந்து வாங்கிட்டு போ.”

“என்னால வரமுடியாதுன்னு சொல்ல தானே கூப்பிட்டேன்.” என்றவள் நாக்கை கடித்துக்கொள்ள, இதழை வளைத்த ராஜன் இலகுவாய்,

“அதைத்தவிர மத்தது எல்லாம் பேசியாச்சு. நீ வா…”

“இங்க திட்டுவாங்களே?”

“திட்டுனா போடா நீயும் உன் வேலையும்னு சொல்லிட்டு வந்துடு.”

“ஆ… நீங்க என்ன முதலுக்கே வேட்டு வைக்குறீங்க?”

“உன் கையை பிடிச்சுக்கிட்டு உனக்கு நான் இருக்கேன்னு சொல்ல ஒரு ஆள் இருந்தா எதுக்கும் கவலைப்பட மாட்டேன்னு சொன்ன? அப்புறம் ஏன் வேலையை பத்தி கவலை? நீ வந்து வாங்கிட்டு போ…”

“கொஞ்சம் புரியுற மாதிரி பேசுங்களேன். இப்போவே யாரோ எனக்காக என் கையை பிடிக்க காத்திட்டு இருக்குற மாதிரியே பேசுறீங்க.”

“நான் சொன்னத்துக்கான அர்த்தம் என்னைக்கு உனக்கு புரியுதோ அப்போ எல்லாம் தானா புரியும். நீ இப்போ வெளில வந்து பையை வாங்கிக்கிறீயா இல்லை நானே உள்ள வரவா?” என்று அவன் மிரட்டல் விடுக்க, பதறிய வானதி,

“ஐயோ அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க… நானே வரேன்.” என்று இறைஞ்சியவள் அவசரமாய் வெளியே வந்தாள். அலுவலக வாயிலிலேயே அவன் நின்று கொண்டிருக்க அவனிடம் நேரேச் சென்று முகத்தை சுழித்தாள்.

“ரொம்ப மிரட்டுறீங்க.” அவளின் சுணக்கத்தை புறந்தள்ளியவன், பையை அவளிடம் நீட்டி, “இதுல உங்க மூணு பேருக்கும் இருக்கு. எடுத்துக்கோ. இன்னொரு நாள் நீ வீட்டில் இருக்கும் போது வந்து பசங்களை பார்க்கிறேன்.”

“எனக்கு எதுக்கு வாங்கிட்டு வரணும்னு கேட்டேன். நீங்க பதிலே சொல்லலை.” அவள் பையை வாங்காது கேள்வி எழுப்ப, அவள் கையில் அதை திணித்தவன்,

“பார்த்ததும் உனக்கு இதை வாங்கிக் கொடுக்கணும்னு தோணுச்சு… அதுதான் வாங்கிட்டு வந்தேன்.”

“உங்களுக்கு ஏன் தோணனும்?” என்றாள் பட்டென கேள்வியாய்!

“என்கூட இவ்வளவு நேரம் பேசனும்னு உனக்கு ஏன் தோணுச்சோ அதே காரணத்தால் தான் எனக்கும் இதை உனக்காக வாங்கனும்னு தோணுச்சு.”

அவனது புதிரான பதிலில் ‛நான் ஏன் இவ்வளவு நேரம் இவர்கூட பேசணும்?’ என்ற கேள்வி கோந்தென வந்து ஒட்டிக்கொள்ள, அதன் பின் அவள் எண்ணங்கள் முழுதையும் ஆக்கிரமித்தது என்னவோ ராஜராஜன் தான்.

“நான் கிளம்புறேன். நீ போய் சாப்பிடு. பேசிட்டு இருந்ததில் நேரம் போனதே தெரியலை.”

“நீங்களும் சாப்பிட்டு கிளம்புங்க.” என்று வானதியும் அக்கறையாய் சொல்ல, அவளைப் பார்த்து மென்முறுவல் வீசி கண்சிமிட்டினான்.

அவனது சிமிட்டலில் அவளது விழிகள் மலர, இதழ்களும் மெலிதாய் வளைந்தது. அவள் பார்வையை விட்டு மறையும் வரை ராஜன் அவ்வப்போது அவளை திரும்பிப் பார்த்துச் செல்ல, அவன் மறைந்ததும் வானதி அவசர அவசரமாய் தன் இருக்கைக்குச் சென்று அவன் கொடுத்துச் சென்ற பையில் என்ன இருக்கிறது என்று பிரித்துப் பார்த்தாள். அதில் பிள்ளைகளுக்கு பொம்மைகளும், ஒரு சிறிய பர்ஸும் இருந்தது. பொம்மைகள் பிள்ளைகளுக்கும் பர்ஸ் அவளுக்குமென்று பார்த்தவுடனேயே புரிந்தது.

‛என்ன பர்ஸ் இருக்கு! இதுக்கு தான் இவ்வளவு அக்கப்போரா?’ இதுதான் இருக்கும் என்று எதையும் யூகிக்கவில்லை, இருக்க வேண்டும் என்றும் எண்ணவில்லை. ஆனால் அந்த சிறிய பர்ஸை பார்த்ததும் இவ்வளவு தானா! என்ற எண்ணம் எழாமலும் இல்லை. 

அதிருப்தியுடன் அதை திறந்துப் பார்க்க, புதிய ஐநூறு ரூபாய் தாள்கள் சில இருந்தது, அதோடு சிறு குறிப்பொன்றும் இருந்தது. யோசனையுடன் அதை கையிலெடுத்துப் படிக்க அதிலோ தமிழ் எழுத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தது. அதையெல்லாம் சேர்த்துப் படிக்கவே அவளுக்கு ஐந்து நிமிடங்கள் தேவைப்பட்டது.

‘யார் இருந்தாலும் இல்லையென்றாலும் உன்னை எவரிடமும் கையேந்த விடாமல் இந்த தாள்களும் அதை ஊதியமாய் பெற்றவனும் உனக்கு துணையாகவே இருப்பான்.’ என்ற அந்தக் குறிப்பு அவளது இதயத் துடிப்பை எகிறச் செய்ததோடு மட்டுமில்லாமல் அந்த எழுத்துக்கள் போலவே அவளது கரங்கள் நர்த்தனமாடி நடுங்கத் தொடங்கியது. அறிவழகியும், அறிவழகனும் அவன் அகக்கண்ணில் வந்து செல்ல, அந்த பர்ஸ் தானாய் கீழே விழுந்து, அதிலிருந்த ரூபாய் தாள்கள் காற்றோடு கலந்து அவள் மனம் போல திசை எட்டிலும் பறந்து சென்றது.

No comments:

Post a Comment

Most Popular