Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 18

 

*18*


வார்த்தைகள் மரணித்து உணர்ச்சிகள் உச்சானிக்கொம்பில் இருக்க, தச்சன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் திவ்யா. விழி எதிரில் தந்தை, அன்னை, ஆச்சி என்று அந்த வீட்டுப் பெரியவர்கள் புதிதாய் அண்ணன் என்று சொல்லப்பட்டவனின் அருகே கண்ணீருடன் அமர்ந்து அவன் கரத்தை இறுக்கமாய் பற்றியிருக்க, திவ்யா தச்சனின் கரத்தை கெட்டியாக பிடித்திருந்தாள்.

ராஜராஜன் என்று ஒருவன் தங்களுக்கு முன் பிறந்திருக்கிறான் என்ற செய்தியே அவளுக்கு அதிர்ச்சியாய் இருக்க… சென்ற கணம் வரை பெருந்தச்சன் மட்டுமே உடன்பிறந்து கூடவே வளர்ந்தவன் என்று பதிந்திருந்த அவளது எண்ணத்தில் புதிதாய் ஒருவன் உட்புக, அதனை ஆதரவுக்கரம் நீட்டி வரவேற்க முடியவில்லை அவளால்…

“என்னடி இப்படி உட்கார்ந்திருக்க… போய் பேசு.” என்று தச்சன் திவ்யாவை உசுப்ப, 

“நீ போய் பேச வேண்டியதுதானே?” என்று துடுக்காய் கேட்டவளுக்கு மறுநொடியே ஏதோ மனதில் தோன்ற அவனை நம்பாமல் பார்த்தாள்.

“நீ எப்படி இவ்வளவு ஈசியா எடுத்துக்குற? அதிர்ச்சியா இல்லையா உனக்கு?” என்ற திவ்யாவின் கேள்விக்கு அவனிடம் மெளனம் மட்டுமே…

“என்ன அமைதியாகிட்ட? அப்போ… உனக்கு… ஏற்கனவே தெரியுமா? இப்படி ஒருத்தர் இருக்காருன்னு உனக்கு தெரியும் தானே? இல்லைனா நீ இவ்வளவு அமைதியா இருக்க மாட்ட… ஏதாவது சொல்லி இருப்ப… நீங்க எல்லோரும் சேர்ந்து என்கிட்ட மட்டும் இதை மறைச்சிருக்கீங்க!” திடுமென அவளுக்கு என்னத்தான் ஆனதோ, குரல் உயர்ந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.

“இப்போ எதுக்கு இவ்ளோ ஸீன் போடுற நீ? ஒன்னுக்கு ரெண்டு அண்ணனுங்க இருக்காங்கன்னு நீ கெத்தா சுத்தலாம்… உன் வீட்டுக்காரரை மிரட்டி வைக்கலாம்.” என்று கேலி போல தச்சன் திவ்யாவிடம் சொன்னாலும் கெத்து என்று சொல்லும் போதே பார்வை தானாய் குந்தவையிடம் சென்று நின்றது. இதற்கும் லெக்ஸர் எடுப்பாளோ என்ற பயம் தான் வேறென்ன… ஆனால் குந்தவையின் கவனம் ராஜராஜனிடம் இருந்தது.

இவர்களின் விவாதத்தை கணக்கிலேயே கொள்ளாது, “ஏய்… இங்க வாங்க ரெண்டு பேரும். அண்ணன் பாருங்க…” என்று நீலா ஆர்வமாய் தன் மற்ற இருபிள்ளைகளையும் அருகில் அழைத்துவிட்டு அவர்கள் வருகிறார்களா என்றுகூட கவனிக்காமல் அதே ஆவலுடன் ராஜன் புறம் திரும்பி, “தம்பியும், தங்கச்சியும்டா… திவ்யா தான் சின்னவ, நம்ம வீட்டு கடைக்குட்டி. திருச்சியில கட்டிக்கொடுத்திருக்கோம். மாப்பிள்ளை கதிரவன் கடையில வேலைப் பார்க்கிறாரு. நல்லா பார்த்துக்கிறாரு நம்ம பொண்ணை… மாப்பிள்ளை இன்னைக்கு ராத்திரி இங்கன வருவாரு… அப்போ பேசிப்பார்த்து எப்படின்னு சொல்லு… 

உனக்கு அடுத்தவன் பெருந்தச்சன். இங்க தான் நம்ம நிலத்தை பார்த்துக்கிறான். இப்போ தான் ரெண்டு மாசம் முன்ன கல்யாணம் ஆச்சு. அதோ இருக்கா பாரு… குந்தவை…” என்று அவர் குந்தவையை காட்டவுமே, சற்று தள்ளி சமையலறை ஒட்டி வானதியுடன் நின்றுகொண்டிருந்தவளை கண்ட ராஜனுக்கு ‘என் பொண்டாட்டி டிட்டிட்டா’ என்று புலம்பிய தச்சன் தான் நினைவுக்கு வந்தான். 

விழிகளில் குழப்பம் தெரிந்தாலும் குந்தவை நின்ற தொனியே அவளது கம்பீரத்தை பறைசாற்றி, தச்சன் தன் சொற்கள் கொண்டு பிரதிபலித்திருந்த பிம்பத்துடன் ஒத்துப்போவதாய் இருந்தது.

அடுத்து குந்தவையிடமிருந்து விலகிய பார்வை அவள் அருகில் அதிர்வுடன் நின்றுகொண்டிருந்த வானதியின் மீது பதிந்தது.

“அவங்க யாரு?” என்று ராஜன் கேட்டது தான் பலவருடங்களுக்கு பின் அவன் அங்கு பேசிய சொற்களாய் அமைந்தது.

“அது குந்தவை அக்கா வானதி… அவளுக்கு பக்கத்திலேயே கீழ உட்கார்ந்து இருக்குறது அவங்க அம்மா… நாளைக்கு உன்னோட பிறந்தநாள் வருது தச்சன் கல்யாணத்துக்கும் விருந்து வைக்கல அதுதான் ரெண்டுத்துக்கும் சேர்த்தார்ப்போல நாளைக்கு விருந்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கு.” 

“அந்த பசங்க?” பதில் தெரிந்தாலும் சந்தேகமாய் கேள்வி எழுப்பினான் ராஜன். துவக்கத்தில் அன்று தச்சனை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டபோது அந்த பிள்ளைகளை தன் தம்பி பிள்ளைகள் என்றல்லவா எண்ணியிருந்தான். தற்போது தெரிவிக்கப்பட்ட தகவல்படி தம்பிக்கு திருமணம் முடிந்தே இரண்டு மாதங்கள் தான் ஆகியிருக்க, அந்த பிள்ளைகள் தம்பியினுடையதாய் இருக்க வாய்ப்பில்லை என்று புரிந்தாலும் எழுந்த ஏமாற்றத்தை தடுக்கமுடியவில்லை.

“குந்தவை அக்காவோட இரட்டை பிள்ளைங்க…” என்று நீலா பதில் சொல்லவும், ராஜன் கண்கள் இப்போது தச்சன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் மீது வாஞ்சையாய் படிந்தது. 

“இத்தனை வருஷத்துல ஒருதடவை கூட எங்களை வந்து பார்க்கணும்னு உனக்கு தோணலையா? அவ்வளவு கொடுமை பண்ணிட்டோமா உன்னை?” அமைதியாக மகனையே கண்களில் நிரப்பிக் கொண்டிருந்த அன்பரசன் தன் மெளனம் கலைத்து வாய் திறக்க, கவனத்தை குழந்தைகளிடமிருந்து பிரித்தெடுத்து பெருமூச்சிழுத்தான் ராஜராஜன். 

கனவாகவே இறுதிவரை இருந்துவிடுமோ என்று நினைத்த கணங்கள் நிகழ்காலத்தில் நிகழும் போது உடைப்பெடுக்கும் உற்சாக ஊற்றுக்கு சற்றும் குறையாமல் கடந்த காலத்தின் வடுக்களை வன்மையாய் வருடவும் வேண்டியிருந்தது எதிர்காலத்தின் நலன் கருதி. 

“நீங்க எதுவும் செய்யலப்பா… நான் தான் தப்பு பண்ணிட்டேன். கோழை மாதிரி ஓடிட்டு திரும்ப எந்த முகத்தோட உங்களை பார்க்க வர்றதுன்னு தயக்கம். நீங்க என்னை மறந்திருப்பீங்கன்னு நினைச்சேன்.” என்று சொன்ன ராஜனுக்கே அவனது எண்ணங்கள் அபத்தமாய் தெரிந்தது. ஆனால் நிதர்சனம் அதுதானே… பல நேரங்களில் தன் பெற்றோர் தன்னை நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதினான். இப்போதோ அவர்கள் விழிகளில் போட்டிபோட்டுக் கொண்டு வெளிப்படும் ஆவலும் வருத்தமும், அன்பும் கண்ணீரும், கனிவும் வேதனையும் உண்மையை உரக்கச் சொல்லியது.

“ஐயா ராசா… உன்னை எப்படிடா மறப்போம். நீ குடும்பத்தோட முதல் வாரிசு. ஆசையா வளர்த்த பிள்ளை. நீ காணும்னு தெரிஞ்சதும் உன்னை தேடாத இடமில்லை, நீ கிடச்சிடனும்னு வேண்டாத தெய்வமில்லை. இந்த கட்டை வேகுறத்துக்கு முன்னாடி உன்னை பார்த்திடனும்னு நினைச்சேன். அதுவே நடந்துச்சு. இனி நிம்மதியா நான் கண்ணை மூடிடுவேன் ராசா…” என்று மங்களம் ராஜன் மீது சாய்ந்து அழ, தொண்டை கமறியது அன்பரசனுக்கு. 

“ஆச்சி ஏன் இப்படி பேசுறீங்க… நூறு வயசு வரை நீங்க ஆரோக்கியமா இருப்பீங்க. அம்மா சொல்லுங்கமா…”

“தெரியாம நான் ஏதாவது சொல்லி நீ திரும்ப மறஞ்சிடுவீயோன்னு பயமா இருக்கு ராசா…” என்று நீலாவும் தன் பங்குக்கு அழ, ராஜராஜன் கலக்கத்துடன் நீலா மடியில் தலைவைத்தான். புரியாத வயதில் செய்த புரியாத காரியத்தின் வீரியத்தை அவன் அனுபவித்தது மட்டுமில்லாமல் அவன் மீது அன்பு வைத்திருப்பவர்களையும் சேர்த்தே வலிக்கச் செய்து, அஞ்சவும் வைத்திருப்பது உவப்பின்றி உவர்ப்பாயிருந்தது.

“நான் புரிஞ்சிக்காம போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?”

நீலாவின் விரல்கள் பரிவாய், ஆவலாய் ராஜராஜன் சிகையில் உலா செல்ல அவரின் பார்வை அச்சு பிசகாது ராஜராஜனின் முகவடிவில் நிலைத்து, அதை நினைவடுக்கில் பதிந்து கொண்டிருந்தது. சிறுவனாய் சென்றவன் நன்கு வளர்ந்த ஆண்மகனாய் வீடுவந்து சேர்ந்திருந்தான். இடைப்பட்ட காலத்தில் மகன் எப்படித் தவித்தானோ… கஷ்டப்பட்டானோ என்று தாயுள்ளம் ஒருபுறம் பதறவும் செய்தது.

“நீ சின்ன புள்ளை அறியாம என்னமோ பண்ண. ஆனா எல்லாம் தெரிஞ்ச நானே உன்னை புரிஞ்சிக்க தவறிட்டேன். உன் மேல கரும்புள்ளி வந்திருமோன்னு பயத்தில் அப்படி நடந்துகிட்டேன். ப்ச் உனக்கு விவரம் புரிஞ்ச பிறகு என்கிட்டேயே வந்திருக்கலாமே ராசா… ஏன் அம்மா அப்படி செய்தேன்னு என்னை நாலு வார்த்தை திட்டிட்டு இங்கேயே இருந்து உன்னோட கோபத்தை காண்பிச்சிருக்கலாமே? அப்போதாவது இந்த மனசு கொஞ்சம் ஆறியிருக்கும். நீ அப்படி போனதும் உன் நினைப்பு தான் எப்போதும். புள்ளை மனசை புரிஞ்சிக்காம வஸ்ஸிட்டோமே… எவ்வளவு மனசொடிஞ்சிருந்தா வீட்டை விட்டே போயிருப்பான்னு நினைச்சு அழுகாத நாளில்லை... நாம இங்க மூணு வேலை சாப்பிடும் போது அவனுக்கு சரியா சாப்பாடு கிடைக்குதா… எங்க போய் கஷ்டப்படுறானோ… நேரத்துக்கு தூங்குறானா… உடம்பு சுகமா இருக்கான்னு தெரியாம தவிச்சி போயிட்டோம்… ராவெல்லாம் தூக்கமே வராது… இப்போ நீ வந்துட்டீல்ல இனி நீ எங்கேயும் போகக்கூடாது…” நீலாவின் அன்புக் கட்டளைகள் அவனை உருகச் செய்ய, கசங்கிய முகத்தினில் முறுவல் மெல்ல எட்டிப்பார்த்தது.

“வேலைக்கு போகலாமா இல்லை இப்படியே உன் மடியில இருந்துடவா?” என்று விழியை உயர்த்தி குறும்பாய் கேட்க, தச்சனின் முகச்சாயல் அவனிடத்தில் அச்சுபிசகாமல் பிரதிபலித்தது.

அதை ரசித்தபடியே, “இப்படியே இருந்துடேன்…” என்று நீலாவும் அவன் முகம் வருடிச் சொல்ல, அவரின் அடுத்த மகனுக்குத் தான் காதில் புகை வந்தது.

‘நான் மடியில படுத்தா மட்டும் ஏழு கழுதை வயசாகிடுச்சு இன்னும் மடியில படுக்குறேன்னு இந்த நீலா திட்டி கீழ தள்ளிவிடும். இப்ப எப்படி பேசுது பாரு…’ என்று தச்சன் முனுக, அவனருகில் இருந்த திவ்யா கூட அவனை கண்டுகொள்ளவில்லை.

“இவ்வளவு நாள் எங்கடா இருந்த? இந்த பக்கம் தான் இருந்தியா? உன்னை பக்கத்துல வச்சிகிட்டே நாங்க தான் உன்னை விட்டுட்டோமா… நீ என் எதிரில வந்தப்போ கூட உன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இந்த அப்பனும் வேண்டாம்னு நீ முடிவு பண்ணது சரிதான்… நீ நேரில் வந்தும் எனக்கு உன்னை அடையாளம் தெரியாம போச்சேடா… என் ரத்தத்தையே எனக்கு தெரியலையே... எந்த அப்பனுக்கும் இந்த நிலை வரக்கூடாது.”

“ப்பா… விடுங்க… நான் இங்கிருந்து போனப்போ அஞ்சு வயசு இப்போ முப்பத்திரண்டு… எவ்வளவோ மாற்றங்கள் வந்திருக்கு, என் முகமும் மாறிடுச்சு. அதுதான் உங்களால கண்டுபிடிக்க முடியல...” என்று ராஜராஜன் சமாதானப்படுத்த, மனம் தாளவில்லை அன்பரசனுக்கு.

“அம்மா சரியா பேரனை கண்டுபிடிச்சாங்களே எனக்குத் தான் என் பிள்ளையை தெரியல… அவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன்.”

“என்ர அப்பா மாதிரி இருக்கான் என் பேரன்! அவனை எனக்கு அடையாளம் தெரியாம போயிடுமா! நீ என் அப்பாவை பார்த்ததில்லையே அதுதான் உனக்கு அடையாளம் தெரியல அன்பு. கண்டதையும் நினைச்சு மனசை வருத்திக்காம உன் புள்ளை வீடுவந்து சேர்ந்த சந்தோசத்தை கொண்டாடு.” என்று மங்களம் மகனை அமைதிப்படுத்த, திவ்யாவுக்குத் தான் இருப்பு கொள்ளவில்லை.

“உங்களுக்குள்ள பேசுறதை நிறுத்திட்டு எதையெல்லாம் மறைச்சி வச்சிருக்கீங்ளோ அதை வரிசையா சொல்றீங்களா இல்லை நான் கிளம்பவா? என் வீடு என் அப்பா, அம்மா, அண்ணன் தான் எனக்கு பலம்னு நினைச்சிட்டு இருந்தேன்… என்கிட்டேயே சொல்லாம மறைச்சிட்டீங்கள்ள… போங்க… நீங்க எல்லோரும் ஒண்ணா இருங்க. நான் போறேன். திட்டுனாலும் கொண்டாடினாலும் என் மாமியார் கூட என்கிட்ட எதையும் மறைக்க மாட்டாங்க. ஆனா நீ மறைச்சிட்ட தானே…” அனைவரையும் பார்வையால் வறுத்தெடுத்த திவ்யா இறுதியில் நீலாவிடம் குற்றம்சாட்டும் பார்வை ஒன்றை வீசிவிட்டு கலங்கிய விழிகளை துடைத்துவிட்டு எழ, ராஜராஜனும் பட்டென எழுந்து இரண்டே எட்டில் அவளை நெருங்கி அவள் கையை பற்றி தடுத்தான். 

“ஹே… எப்போவும் யார்கிட்டேயும் கோச்சிக்கிட்டு கிளம்பக் கூடாதுமா. அவங்க சொல்லாம விட்டிருந்தால் அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும். கோபம் வந்தா இங்கேயே இருந்து சண்டை போடு. நீ இப்படி போறது சரியில்லை.” என்று ராஜராஜன் பரிவாய் சொல்ல, திவ்யா ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்து நின்றாள். 

ஏதாவது சொல்லுவாள் என்று ராஜராஜனும் காத்திருக்க, திவ்யாவின் மெளனம் அவனை வெகுவாய் சோர்வடையச் செய்தது.

“என்கூட பேசமாட்டியா?”

“நீங்களும் என்கூட பேசலையே. என்கிட்ட தான் உங்களை பத்தி சொல்லாமல் மறச்சிட்டாங்க. ஆனால் உங்களுக்கு என்னை தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. அப்படியிருந்தும் நீங்க என்கூட பேசல… என்னை நிமிர்ந்து ஆர்வமா பார்க்க கூட இல்லை. அம்மாவும் அப்பாவும் மட்டும் உங்களுக்கு போதும்னு நினைக்குறீங்க. அவங்களும் உங்களை கொண்டாடுவாங்க.”

“என்னடி பேச்சு இதெல்லாம்… அண்ணன்கிட்ட இப்படித்தான் பேசுவீயா? மரியாதை கொடுத்து பேசு.” என்று நீலா அதட்ட, 

“ஏன் தச்சனிடம் கூட நான் இப்படித்தானே பேசுவேன்… அப்போ நீ எதுவும் சொல்லல… திடீர்னு இவரும் உனக்கு அண்ணன். மரியாதை கொடுத்து பேசு அதுஇதுன்னு சொல்ற… இப்படி ஒருத்தவங்க இருக்காங்கன்னு என்றைக்காவது சொல்லி இருக்கீங்களா? இவங்க இங்க வந்தே ஒருமணி நேரத்துக்கு மேல ஆகுது இவங்க பேர் கூட என்னன்னு இன்னும் நீ சொல்லல… என்னாச்சுன்னு சொல்லல… அப்புறம் எப்படி எனக்கு இவங்க என் அண்ணன், என் குடும்பத்தில் ஒருத்தவங்கன்னு தோணும்.” என்று பதிலுக்கு திவ்யா பொரிந்து தள்ள, அவளின் பின்னந்தலையை தட்டினான் தச்சன்.

“லூசு எதுக்கு இப்போ கத்திட்டு இருக்க… எவ்வளவு வருஷம் கழிச்சு பார்க்குறாங்க… அவங்க பேசி முடிக்குறதுக்குள்ள உனக்கு என்ன அவசரம். எல்லோரையும் திட்டுற, அம்மாவை முறைக்குற… கிளம்புறேன் கிளம்புறேன்னு தேஞ்ச ரெகார்டு மாதிரி பாடிட்டு இருக்க…”

“அதை நீ சொல்லாத… கொஞ்ச நேரம் முன்னாடி முகத்தை தூக்கிவச்சிக்கிட்டு அம்மாவை திட்டல நீ… அதையே நான் பண்ணா பாஞ்சிகிட்டு வர…” என்று திவ்யாவும் சளைக்காமல் மல்லுக்கு நிற்க, நீலா தான் தவித்துவிட்டார். 

“அண்ணி அவங்களை பேச விடுங்க… நீங்க மூணு பேரும் ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கணும்னு தான் அத்தையும் மாமாவும் விரும்புவாங்க… இப்படி நீங்க ரெண்டு பேரும் தேவையில்லாம சண்டை போட்டு அவங்களைத் தான் தவிக்க வைக்குறீங்க. உட்காருங்க முதல்ல…” அவர்களுக்குள்ளேயே பேசிவிட்டு வரட்டும் என்று அமைதியாய் நின்ற குந்தவைக்கு பொறுமை பறக்க, தச்சனை முறைத்துவிட்டு திவ்யாவிடம் முறையிட, திவ்யா சற்று அமைதியானாள்.

“உனக்கு என்னைப் பத்தி தெரியனும் அவ்வளவு தானே… உட்காரு நானே சொல்றேன்…” என்ற ராஜராஜன் இப்போது தன் உடன்பிறந்தவர்களுடன் அமர்ந்து கொண்டு, அவர்களை பார்த்து மெல்ல முறுவலித்தான்.

“எனக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேர் இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா இங்கிருந்து கிளம்பி இருக்க மாட்டேனோ என்னவோ… அஞ்சு வயசு இருக்கும் நான் இங்கிருந்து கோபப்பட்டு மடத்தனமா கிளம்பின போது… தச்சன் அம்மா வயித்துல இருந்தான்… தம்பியோ தங்கச்சியோ வரப்போறாங்கன்னு ஆர்வம் இருந்தாலும் அந்த நேரக் கோபம் அப்படியே கிளம்பிட்டேன். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு இத்தனை வருடத்தில் நல்லாவே புரிஞ்சிது.” என்று அவன் இறந்தகால நினைவுகளுக்கே சென்றுவிட, திவ்யா கதை கேட்கும் தொனியில் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினாள்.

“எதுக்கு இங்கிருந்து போனீங்க?”

ராஜராஜனின் பார்வை சட்டென பெற்றோர் புறம் செல்ல, நீலாவும் அன்பரசனும் வலியுடன் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“பழசு எல்லாம் எதுக்கு இப்போ? அதெல்லாம் முடிஞ்சி போனது.” ராஜராஜன் மழுப்ப, திவ்யாவின் ஆர்வம் அதிகமானது.

“முடிஞ்சதா இருந்தாலும் வீட்டை விட்டு போகுற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு? எனக்கு தெரிஞ்சி அம்மா, அப்பா, ஆச்சி யாருமே அவ்வளவா திட்டக்கூட மாட்டாங்க. சத்தம் போட்டாலும் கொஞ்ச நேரத்தில் சரியாகிடுவாங்க. இதோ இவன் தான் அப்பப்போ திட்டு வாங்குவான் அதை அப்படியே துடைச்சு போட்டு போயிட்டே இருப்பான். ரோஷமே கிடையாது…” என்று பேச்சுவாக்கில் தச்சனின் காலை வாரினாள் அவனின் தங்கை.

“ஓய் என்னடி லந்தா… ரொம்ப பேசுன உன் வீட்டுக்காரரை மட்டும் பரதேசம் அனுப்பிடுவேன். அப்புறம் நீ இங்கேயே உன் மாமியார் கூட குடும்பம் நடத்த வேண்டியதுதான்...” என்று தச்சன் எகிறிக்கொண்டு வர, குந்தவை தலையிலடித்துக் கொண்டு அவன் அருகிலேயே வந்து அமர்ந்துகொண்டாள்.

“எல்லோரும் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்காங்க நீ மட்டும் எதுக்கு தேவையில்லாம வம்பு பண்ணிட்டு இருக்க…”

“உனக்கு என்னை ஏதாவது சொல்ல சாக்கு கிடைக்கணும்… கிடைச்சதும் உடும்பு பிடிபிடிக்குற… சும்மா இருந்தவனை உன் நாத்தனார் தானே வம்புக்கு இழுத்தா அவளைக் கேளு...” என்று தச்சனும் அவளிடம் அங்கேயே மல்லுக்கு நிற்க ராஜராஜன் இவர்களின் வாதத்தை சுவாரசியமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இவங்களை பார்த்திட்டு இருந்தா நல்லா பொழுது போகும்… இனி தினமும் பார்க்கத் தானே போறீங்க… நீங்க சொல்லுங்க. இப்போ என்ன பண்றீங்க? எங்க இருக்கீங்க? அண்ணி இருக்காங்களா?” திவ்யா ராஜராஜனின் கவனத்தை தன்புறம் திருப்ப, குந்தவை புதியவனின் முன் சங்கடமாய் நெளிந்தாள்.

“இங்கதான்னு இல்லை… ஒண்டிக்கட்டையா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரு, மாநிலம்னு சுத்திட்டே இருக்கேன். இன்னைக்கு வரைக்கும் எங்கேயும் நிலையா இருந்தது இல்லை. இருக்கணும்னு தோணினதும் இல்லை. எந்த ஊரும் இதுவரை இது உன்னோட இடம்னு என்னை உணர வச்சதும் இல்லை. சரக்கு ஏத்திக்கிட்டு மாநிலம் விட்டு மாநிலம்னு போயிட்டே இருப்பேன். வேலைக்கு லீவு, ஓய்வுன்னு ஒன்னு எடுத்ததே கிடையாது. இங்க தமிழ்நாட்டுல கோயம்பேடு, கோயம்பத்தூர், திருச்சின்னு தமிழ்நாடு முழுக்க சுத்தி இருந்தாலும் இந்த டெல்டா பக்கம் இப்போ தான் வரேன்… இங்க வந்தாலும் உங்களை எல்லாம் பார்ப்பேன்னு சத்தியமா நினைச்சு கூட பார்க்கல… காய்கறியை கும்பகோணம் மார்கெட்டில் இறக்கிட்டு அப்படியே கிளம்புறதா இருந்தேன்… திடீர்னு இங்க சரக்கு இறக்கனும் எப்போதும் எடுக்குற ஆள் இல்லைன்னு பேசிட்டு இருக்குறதை கேட்டதும், இந்த ஊரிலிருந்து கிளம்புறதுக்கு முன்னாடி அப்பா அம்மாவை ஒருமுறை பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன்.” என்று சொல்லிவிட்டு ராஜராஜன் தலை கவிழ்த்துவிட, பெற்ற மனம் பதறியது. 

“வீடு வரை வந்து எங்களை பார்த்த பிறகும் நீ கிளம்புறேன்னு சொன்னா உனக்கு எங்க மேல இன்னும் கோபம் இருக்கு… அதுதான் வாசலோட கிளம்பிட்ட…”

“அச்சோ அப்பா அப்படி கோபம் இருந்தா இன்னைக்கு திரும்ப வந்திருக்கவே மாட்டேன். அறியாத வயசில் செஞ்சது தப்புன்னு புரிஞ்ச பிறகு வேண்டாம்னு தூக்கிபோட்டுட்டு போனவன் திரும்ப எந்த முகத்தை வச்சிக்கிட்டு இங்க வர்றதுன்னு தயக்கம். ஒரு பயம்... நீங்க எல்லாம் என்னை பத்தி என்ன நினைப்பீங்கன்னு உறுத்தல்.” என்று ராஜன் தன்னிலை விளக்கம் தந்து சமாதானம் செய்ய முற்பட,

“மாமா முடிஞ்சதை திரும்பத் திரும்ப பேசுறதால மனக்கசப்பு தான் அதிகமாகும். வேதனையை நோண்டாம அடுத்து என்னனு பார்ப்போமே…” என்று குந்தவை சொல்லவும் தான் அன்பரசன் சற்று அமைதியாகி விடைதெரியா கேள்விகளை தெளிவுபடுத்தி இதற்கு இதோடு முடிவெழுத முன்வந்தார்.

“தச்சனை உனக்கு முன்னாடியே தெரியுமா? அவன் பிரெண்டானு கேட்டப்போ ஆமாம்னு சொன்ன?” 

“ரெண்டு நாள் முன்னாடி நிதானமில்லாம இவர் லாரில தான் போய் வண்டியை விட்டேன்... இவர் தான் வீடுவரை வந்து என்னை இங்க விட்டாரு…” ராஜராஜன் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசிக்கும் முன்னரே தச்சன் அனைத்தையும் ஒப்பித்துவிட ராஜராஜனின் பார்வை அன்னிச்சையாய் வானதியிடம் தான் சென்றது. 

வீட்டினருக்கு தச்சன் குடித்துவிட்டு லாரியில் வந்து மோதியது தெரியக்கூடாது என்றுதானே அவனை வீட்டிலிருந்து சீக்கிரம் விரட்டுவதிலேயே குறியாய் இருந்தாள். இப்போது உரியவனே கவலையின்றி அனைத்தையும் சொல்லிவிட, இப்போது என்ன செய்வாய் என்ற பார்வை தான் ராஜனிடத்தில். வானதியோ ஒன்றும் சொல்ல முடியாமல் அவஸ்தையுடன் நின்றாள்.

“அன்னைக்கு என்னை மாதிரியே வீட்டுல கோச்சிகிட்டு வந்துட்டேன்னு தச்சன் சொல்லவும் எனக்கு மனசு கேக்கல… நான் பண்ண தப்பை வேற யாரும் செஞ்சிறக்கூடாதுன்னு தான் தச்சனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்… அப்போ தான் உங்களைப் பார்த்தேன். நீங்க தச்சனோட நிலைமையை பார்த்து பயந்துபோய் அவனை திட்டிகிட்டே உள்ள கூட்டிட்டு போனீங்க.” என்றான் ராஜன். 

தச்சனை கொண்டுவந்து விட்டது ஒரு லாரி டிரைவர் என்று வானதி சொன்ன போது வந்த சந்தேகம் இப்போது நிவர்த்தியாகியிருந்தது ராஜனின் பதிலில்.

“அவர் யாருன்னு தெரியாத போதும் பத்திரமா வீடுவரை கொண்டுவந்து விட்டதுக்கு தேங்க்ஸ்… அன்னைக்கு இருந்த சூழலில் உங்களை சரியா கவனிக்கல. எங்களுக்கும் உங்களைத் தெரியல, ஆனால் நீங்க எங்களை பார்த்தீங்களே? இந்த வீடும் உங்களுக்கு முன்னாடியே பழக்கப்பட்டதா இருக்கும்… அப்படியே உள்ள வந்திருக்கலாமே? அத்தையும் மாமாவும் சந்தோசப்பட்டிருப்பாங்க.” எதுவும் பேசாமல் இருக்ககூடாது என்று தன் பங்குக்கு பேசினாள் குந்தவை.

“அவனுக்கு இந்த வீடு தெரிய வாய்ப்பில்லை. ராஜன் பிறக்கிறதுக்கு முன்னாடியே இந்த வீட்டில் பழுது நிறையா இருக்கவும் இதை இடிச்சிட்டு புதுசா கட்டுற வரை போக்கியத்துக்கு பக்கத்து ஊரில் இருந்தோம். வறட்சி, பஞ்சம்னு ஒரு ரெண்டு வருடம் விவசாயத்திலும் இழப்பு அதிகம் அதுனால இந்த வீட்டை முழுசா கட்டிமுடிக்கவே நாலஞ்சு வருஷமாகிடுச்சு. அவன் அங்கிருந்து போன கொஞ்ச நாளிலே இந்த வீட்டு வேலையும் முடிஞ்சிது தச்சனும் பிறந்துட்டான். அப்புறம் இங்கேயே வந்துட்டோம்.” குந்தவையின் பேச்சில் ஒளிந்திருந்த கேள்விக்கு பதிலை உதிர்த்தார் அன்பரசன்.

“எல்லாத்தையும் சொல்றீங்க எதுக்கு அண்ணன் வீட்டை விட்டு போனாங்க அவங்க பெயர் என்னனு யாருமே சொல்ல மாட்டேங்கிறீங்க…” என்றாள் திவ்யா அலுப்பாய்.

திவ்யாவின் அண்ணன் என்ற விளிப்பில் ராஜனுக்கு உச்சி குளிர்ந்தது. இது என் வீடு என்ற நினைப்பே அவளின் அங்கீகாரத்திற்கு பிறகுதான் வந்தது. முந்தியோ இது அவன் அப்பா, அம்மா வாழும் வீடு, உடன் தம்பியும் இருக்கிறான் அவன் வீடு இது… என்ற அளவில் தான் இருந்தான். இப்போது பாசத்துக்கும், சண்டைக்கும் தங்கை என்ற ஒருவள் இருப்பது தெரிய குடும்பமே நிறைவான உணர்வு. உடன் இங்கேயே தங்கி மீதி வாழ்க்கையை கழித்துவிட வேண்டும் என்ற பேராவல்.

திவ்யாவின் கேள்விக்கு பதில் கூற அனைவருமே தயங்க மங்களமே நடந்ததை சொன்னார்.

“உலகமே அண்ணாந்து பார்க்கும் கோயிலைக் கட்டியவனும் தன் வாழ்நாளில் தோல்வியே பார்க்காத பேரரசன் ராஜராஜன் பெயர் தான் இந்த வீட்டு ராசாவோட பேரு… நீலாவோட ஊரில் ஒரு திருவிழாவுக்கு போனப்போ அவள் அண்ணன் கொளுந்தியா குளிக்கப் போகுற முன்னாடி ரூமில் கழற்றி வச்சிட்டு போன வைர மோதிரம் காணோம்னு ரகளை பண்ணுனா… வீடு முழுக்க தேடியும் எங்கேயும் கிடைக்கல… அந்த காலத்திலேயே வைரம் வச்சி இருக்குற அளவுக்கு பவுசு உள்ளவ சும்மா இருப்பாளா… போலீசுக்கு போவேன்... புகார் குடுக்குறேன்னு சொல்லவும் வீடே ஆடிப்போச்சு. நம்ம சுத்துப்பட்ட குடும்பத்துக்கு போலீஸ் ஸ்டேஷன் பக்கமெல்லாம் போய் பழக்கமில்லை. அவளை சமாதானம் பண்ணி வீடு தோட்டம் துரவுன்னு எல்லா இடத்தையும் மறுபடி சல்லடை போட்ட கணக்கா தேடி ஓஞ்சி போய் உட்கார்ந்தா இந்த பயல இழுத்துட்டு வந்தா நீலாவோட அண்ணிக்காரி… 

ராஜாகிட்ட தான் மோதிரம் இருக்கு. எதுக்கு எடுத்தான்னு தெரியல… நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுத்து வளருங்க அண்ணின்னு நீலாகிட்ட சொல்லிட்டா. கூறுகெட்டவ என் புள்ளை தப்பு பண்ணியிருக்க மாட்டான்னு சொல்லாம ராஜாவை அங்கேயே வச்சு வாங்குவாங்குனு வாங்கிட்டா… நாங்க தடுத்தும் எங்களை தலைகுனிய வச்சிட்டியேன்னு புள்ளையை வஞ்சிகிட்டே இருந்தா… என்ன நடந்ததுன்னு அவன்கிட்ட கேட்கவும் இல்லை. தன் பிறந்த வீட்டுல தன்னோட மானம் மரியாதை போனதோடு மட்டுமில்லாம, இந்த விஷயம் பெருசாகி போலீஸ் வரைக்கும் போயிருந்தா ராஜா வாழ்க்கையே நாசமாகியிருக்குமேனு தோணுன பயமெல்லாம் ராஜா மேல கோபமா மாறிடுச்சு… அப்புறம் கொஞ்சம் சமாதானம் பண்ணி அன்னைக்கே கிளம்பி நம்ப வீட்டுக்கு வந்துட்டோம். 

ஆனால் ராஜா ஓயாம அழுதிட்டே இருந்தான்… தூங்கி எழுந்தா கொஞ்சம் சரியாகிடுவான்னு நினைச்சு நேரமே தூங்கியாச்சு… நல்ல அசதியல இருந்திருப்போம் போல காலையில எழுந்து பார்த்தா ராஜாவை காணோம். பதறியடுச்சு தேடிப் பார்த்து… போலீஸில் புகார் கொடுத்து, ஒரு மாசம் வரைக்குமே எங்கிருக்கான்னு கண்டுபிடிக்க முடியலை… அவன் போட்டோ காட்டி தேடுனதில் விடியற்காலையில் ஏதோ காய்கறி லாரியில் ஏறினான் என்கிற தகவல் மட்டும் தான் தெரிஞ்சுது. எந்த லாரில ஏறுனான் அது எந்த ஊருக்கு எல்லாம் போச்சுன்னு கண்டுபிடிக்க முடியல… தேடல் நீண்டுகிட்ட போச்சு, இங்க வாழ்கையும் நகர ஆரம்பிச்சுது. தச்சன் பிறந்தான். நீலா அவளாவே இல்லை. பிள்ளையை புரிஞ்சிக்காம அவன் மனசை நோகடிச்சு தொலைச்சிட்டோமேன்னு தினம் அழுகை… 

தச்சனோ வளர வளர ரொம்ப அடம் பண்ண ஆரம்பிச்சான். அவனை பார்த்துக்கவே நாங்க ரெண்டு பேரும் சக்கரம் கட்டிட்டு சுத்த வேண்டியிருந்தது. ராஜா மனசை காயப்படுத்தி அது தந்த வலியில் இந்த புள்ளையையாவது வருத்தப்படாம வளர்க்கணும்னு தான் தச்சன் எது பண்ணாலும் நீலா திட்டமாட்டா… அவனை எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டா... ராஜாக்கு பண்ண தவறை அடுத்து இருக்கும் பிள்ளைகளுக்கு செய்யக் கூடாதுன்னு தான் அதிகம் திவ்யாவையும் திட்டுனதில்லை. ஆனா இன்னைக்கு வரை மூத்தவன் மனசை உடைச்சிட்டோமே! அந்த பிஞ்சு மனசை தவிக்க விட்டுட்டோமேன்னு எங்க மூணு பேருக்குள்ளும் குற்றவுணர்ச்சி குத்திட்டு இருந்தது. இப்போ ராஜாவை பார்த்ததும் தான் மனசு நிறைஞ்சிருக்கு. நீ இனி எங்கேயும் போகக்கூடாது. இந்த ஆச்சியையும் மன்னிச்சிடு ராசா… எவ்வளவு வேதனை இருந்தா எங்களை விட்டுட்டு போயிருப்ப. நீ போனது கூடத் தெரியாம இந்த கிழவி நல்லா தூங்கிட்டு இருந்திருக்கேன்.” மங்களம் ராஜராஜனின் முகத்தை தன் நடுங்கும் கரம் கொண்டு வருட, அவர் கையை கெட்டியாக பிடித்தான் ராஜன்.

“ப்ச்… ஆச்சி இன்னொரு முறை மன்னிப்பு அதுஇதுன்னு சொன்னா அப்புறம் நான் திரும்ப போயிடுவேன்.” என்று மிரட்ட, இதயத்துடிப்பு எகிறி குதித்தது வயதானவர்களுக்கு.

“அன்னைக்கு வீட்டுக்கு பின்பக்கம் விளையாடிட்டு இருக்கும் போது காலில் ஏதோ குத்தவும் என்னனு எடுத்துப் பார்த்தா வெள்ளைக் கல்லு பதிச்ச மோதிரம் இருந்தது. யாரோடதுன்னு தெரியல சரி விளையாடி முடிச்சதும் அம்மாகிட்ட கொடுத்துடலாம்னு பாக்கெட்டில் அதை போட்டுகிட்டு விளையாடுறதில் ஆர்வமா இருந்துட்டேன்… அது எப்போ என் சட்டையிலிருந்து வெளியில விழுந்துதுன்னு தெரியல அதை அத்தை பார்த்துட்டு நீ எடுத்தியான்னு கேட்டாங்க… நாம தானே கீழிருந்து எடுத்தோம்னு நினைச்சிகிட்டு ஆமாம்னு சொல்லிட்டேன். 

ப்ச்… அதுக்கு பிறகு அம்மா திட்டவும்தான் நான் திருடி வச்சிகிட்டேன்னு அத்தை மட்டுமில்லை அம்மா கூட தப்பா புரிஞ்சிகிட்டாங்கலேன்னு அழுகை தான் வந்தது. அழுகையில் என்னோட தரப்பு நியாயத்தை சொல்லனும்னு கூட எனக்கு அப்போ தோணல… அம்மா கூட நம்பாம எல்லோர் முன்னாடியும் திட்டி அடிச்சிட்டாங்கன்னு தான் மனசுல பதிஞ்சுது. எல்லோரோட பார்வையும் என்னை நிமிர்ந்து பார்க்க விடல… கூனிகுறுக வச்சிது. எதுவுமே பிடிக்கல… எல்லோரோட குற்றம்சாட்டிலிருந்தும் கீழான பார்வையிலிருந்தும் தப்பிச்சு எங்காவது ஓடிடணும் போல இருந்தது. எதை பத்தியும் யோசிக்காம எல்லோரும் தூங்குனதும் இங்கிருந்து ஓடிட்டேன். ஊரிலிருந்து மெயின்ரோடு போன பிறகு என்ன செய்யறதுன்னு தெரியல… திரும்ப அம்மாகிட்டேயே போயிடுவோம்னு நினைக்கும் போதே கோபம் வந்துச்சு. என்னை நம்பாம எல்லோர் முன்னாடியும் அடிச்சவங்க கிட்டேயே திரும்ப போறதான்னு கோபம்… அதே கோபத்தில் கால் போன திசையில் நடந்து சந்தையில் போய் நின்னேன். அங்க கேரளா லாரி டிரைவர் ஒருத்தர் காய்கறி ஏத்திக்கிட்டு கேரளா வரை போகணும். அவரோட வந்த கிளீனர் பையன் சண்டை போட்டுகிட்டு போயிட்டான்னு புது கிளீனர் தேடிட்டு இருந்தாரு. நான் தனியா நிக்கிறதை பார்த்துட்டு என்கிட்ட விசாரிச்சாரு… 

நானும் கோபத்தில் இங்கிருந்து கிளம்பிடனும்னு எனக்கு இங்க யாரையும் தெரியலைன்னு சொல்லிட்டேன்… அவரும் கம்மியான சம்பளத்தில் உழைக்க ஒரு அடிமை சிக்கிட்டான்னு அவரோடவே கூட்டிட்டு போய் வச்சிருந்தார். அவர் போகிற இடத்திற்கு எல்லாம் அழைச்சிட்டு போனாரு. ஆரம்பத்தில் எனக்கு பெருசா எதுவும் தெரியல ஆனால் ஒரு மாசத்துக்கு மேல என்னால அங்க இருக்க முடியல… அம்மா அப்பாவை பார்க்கணும்னு தோணுச்சு. ஆனால் திரும்ப வர பயம்… சொல்லாம ஓடிட்டேன்னு திரும்ப திட்டுவாங்கன்னு நினைச்சே காலத்தை ஓடிட்டேன். வளர வளர நான் பண்ணது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு புரிஞ்சுது. அம்மா தானே திட்டுனாங்கன்னு துடிச்சிவிட்டுட்டு இருந்திருக்கணும். அந்த வயசில் அதெல்லாம் புரியல… ஏன் வீட்டை விட்டு போகணும்னு எண்ணம் வந்துச்சுன்னும் தெரியல… அந்த நேரப் பிசகல், வாழ்க்கையையே புரட்டி போட்டுடுச்சு. ஆனால் அம்மா கூட இல்லாத போதுதான் அவங்க அருமை புரிஞ்சிது.” என்று பெருமூச்சிழுத்தவன்,

“க்ளீனரா ஆரம்பிச்சு இப்போ சொந்த லாரி வாங்கி ஓட்டுறேன். இன்னொரு லாரி வாங்க காசு சேர்த்துட்டு இருக்கேன். இந்தியால அதிகமா புழக்கத்தில் இருக்குற எல்லா மொழியும் பேச கத்துகிட்டேன்” பழையதில் துவங்கி இப்போது அவன் இருக்கும் நிலை வரை கதை போல சொல்லி முடித்தான் ராஜராஜன். 

அங்கிருந்தவர்களுக்கு அவன் சொல்லாமல் விட்ட கஷ்டங்கள் நிறைய இருக்கும் என்பது புரிந்து என்ன சொல்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தனர். 

நீலாவும், அன்பரசனும் தலைகுனிந்தபடி கண்களில் நீருடன் அமைதியாய் வேதனையில் வெந்து கொண்டிருந்தனர். முதல் பிள்ளைக்கு இழைத்த துரோகத்தில் பாடம் கற்றுக்கொண்டு மற்ற இருபிள்ளைகளை நல்ல முறையில் கரைசேர்த்தாகிவிட்டது. ஆனால் அவர்களின் தவறுக்கு பலியானவனோ பெயருக்கு ஏற்றார் போல வாழாமல் எங்கோ ஒருமூலையில் கஷ்டப்பட்டிருகிறானே என்ற எண்ணம் அவர்கள் நெஞ்சை முள்கொண்டு தைத்தது.

“நீ தப்பான பாதைக்கு மறந்தும் போயிடக்கூடாதுன்னு தான் நானும் நீலா உன்னை திட்டும் போது அவளை அடக்கல… ஆனா அதுவே உன் மனசை பாதிச்சிருக்கு.” என்று அன்பரசன் வருந்திச் சொல்ல, மயான அமைதி அவ்விடத்தில்.

“மாமா அத்தையெல்லாம் எப்படி இருக்காங்க…” என்று ராஜனே மீண்டும் அமைதியைக் கலைக்க இம்முறையும் மங்களமே பதில் கூறினார்.

“அந்த நாளுக்கு பிறகு இன்னைக்கு வரை யாருமே நீலாவோட அண்ணன் வீட்டுக்கு போகல… உறவும் அப்படியே அறுந்துடிச்சு… அங்க போகாம இருந்திருந்தா இது எதுவுமே நடந்திருக்காது, நீலாவோட அண்ணனும் உனக்கு ஆதரவா பேசலை… நீ போனதும் உன்னை தப்பா தான் பேசுனான்… அதுனால மொத்தமா அந்த உறவே வேண்டாம்னு விட்டாச்சு. திவ்யா சடங்குக்கு கூட உங்கம்மாவோட ஒன்னுவிட்ட அண்ணன் தான் வந்து முறை செஞ்சாரு.”

“இவ்வளவு நடந்திருக்கு… ஆனால் எங்ககிட்ட ஒன்னுமே சொல்லலையே…” என்று திவ்யா மீண்டும் புள்ளி வைக்க,

“நீ திரும்ப ஆரம்பிக்காதமா… அப்பாவும் அம்மாவும் அதை நினைச்சு நினைச்சு அழுகுறாங்க… நீயும் அவங்க மனசு நோகுற மாதிரியே திரும்பத் திரும்ப அதே விஷயத்தை கிளறுற.” என்று ராஜராஜன் கண்டிப்பு காட்ட திவ்யா வாயை மூடிக்கொண்டாள்.

அவளின் செய்கையில் காரணமின்றி எரிச்சலுற்ற தச்சன், “என்கிட்ட மட்டும் அப்படி வாயடிப்ப… சண்டைக்கு எகிறிகிட்டு வருவ, இப்போ அப்படியே பம்முற…” என்று தங்கையை முறைத்தான்.

“அவங்க எவ்வளவு பொறுப்பா பேசுறாங்க… பார்த்தாலே மரியாதை தானா வருது… நீயும் தான் இருக்கீயே… என்கிட்ட என்னைக்காவது இது மாதிரி பேசியிருக்கியா? சடையை பிடிச்சு இழுக்குறது… என் வீட்டுக்காரர் கிட்ட தேவையில்லாததை கோர்த்து விட்டு அவரோட லெக்சரை கேட்க வைக்கிறது… என் பிரெண்ட்ஸ் கிட்ட கடலை போடுறதுன்னு ஜாலியா சுத்துனவன் தானே நீ…” என்று திவ்யாவும் தச்சனின் காலை வார, இந்த சின்ன சின்ன சீண்டல் சண்டைகளைக் கூட அனுபவிக்காமல் தவறான முடிவெடுத்து அழகான தருணங்களை தவறவிட்டு விட்டோமே என்ற ஏக்கம் ராஜனுக்கு மெல்ல எட்டிப் பார்த்தது.

“உன் சாபம் தாண்டி என் பொண்டாட்டி ரூபத்தில் வந்து பலிச்சிருக்கு.” என்றான் தச்சனும் கடுப்பாய்.

“அண்ணி நல்லா கேட்டுக்கோங்க உங்க புருஷன் என்ன சொல்றான்னு… என்னோட சாபம் தான் நீங்களாம்.” 

“நல்லா வருவடி நீ… போய் உன் வீட்டுக்காரர்கிட்ட கடலை போடு… என் வாழ்க்கையை கடல்ல மூழ்கடிச்சிடாத…”

“ரொம்பத்தான் பயம் போலேயே…”

“நானே இப்போதான் சரிபண்ணி வச்சிருக்கேன்… நீ வேற எதையாவது பேசி அவளை திரும்ப மலை ஏத்தி விட்டுறாத…”

“அந்த பயம் இருக்கட்டும்…” என்று கெத்தாக புருவம் உயர்த்தினாள் திவ்யா.

“எல்லாம் என் நேரம். உன்கிட்ட இப்படியெல்லாம் பேச வேண்டியதிருக்கு.” என்று தலையிலடித்துக் கொண்டான்.

“அதெல்லாம் இருக்கட்டும் உனக்கு எப்படி அண்ணனை பத்தி தெரியும்? உன்கிட்ட மட்டும் சொன்னாங்களா?”

“அம்மா பேசுனதை ஒருநாள் கேட்டேன்டி…” என்றான் கள்ளத்தனமாய்.

“பிராடு… ஒட்டுக்கேட்டேன்னு சொல்லு…”

“நானா போய் கேட்கல… அதுவா என் காதுல வந்து விழுந்து மனசில் பதிஞ்சிடுச்சு.”

அதிசயத்திலும் அதிசயமாய் குந்தவை குறுநகையுடன் அவர்களின் செல்ல சண்டையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சின்ன பசங்க மாதிரி எதுக்கு இப்போ அடிச்சிக்கிறீங்க? போங்க போய் வேலையைப் பாருங்க… போட்டது போட்டபடி கிடக்கு. நாளைக்கு விருந்து இருக்கு. அடியே நீலா போனது போகட்டும் இப்போ தான் புள்ளை வந்துட்டான்ல அவனை கவனிக்காம கண்ணை கசக்கிட்டு உட்கார்ந்திருக்க. போய் புள்ளைக்கு என்ன வேணும்னு கேட்டு நாக்குக்கு ருசியா ஆக்கிப்போடு. ராஜா இனி நீ எங்கேயும் போகக்கூடாது. இந்த லாரி ஓட்டுறதை எல்லாம் நிறுத்திபுட்டு இங்கனேயே எதாவது தொழில் பண்ணு. இல்லையா இருக்கவே இருக்கு நம்ம நிலம். தச்சன் கூட இப்போ தான் பார்க்க ஆரம்பிச்சான். ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கோங்க.” என்று மங்களம் அனைவரையும் சேர்த்து அதட்ட, நீலா சட்டென எழுந்தார்.

“ராஜாக்கு அசைவம்னா ரொம்ப பிடிக்கும். நீங்க போய் எதெல்லாம் கிடைக்குதோ எல்லாத்தையும் வாங்கிட்டு வாங்க…” என்று அன்பரசனுக்கு உத்தரவை பறக்கவிட்டுவிட்டு சமையலறை விரைய, 

“நானும் வரேன் அத்தை…” என்று குந்தவையும் எழுந்தாள்.

“வேண்டாம் குந்தவை. இன்னைக்கு நானே எல்லாருக்கும் சமைக்கிறேன். நீங்க பேசிட்டு இருங்க.” என்றுவிட்டு சமையலறை விரைந்தார் தன் மூத்த பிள்ளைக்கு பிடித்ததை செய்ய… 

“தப்பிச்ச மவனே… அண்ணன் வந்ததால நீ லாரில விழுந்து பண்ண சாகசத்தை யாரும் கண்டுக்கல. இல்லைன்னா இன்னைக்கு ஒரு பெரிய பஞ்சாயத்தே நடந்து அம்மா ஊரை கூட்டியிருக்கும்…” என்று ரகசியமாய் திவ்யா தச்சனின் காதை கடிக்க, அவள் தலையை கொட்டிவிட்டு எழுந்தான் தச்சன். அதற்குள் சமையலறை நோக்கி நடைபோட்ட நீலா சட்டென திரும்பி வலி நிறைந்த விழிகளுடன் ராஜனை பார்த்து நின்றார்.

“உனக்கு அசைவம் பிடிக்கும் தானே ராஜா? சின்ன வயசுல நீ ரொம்ப விரும்பி சாப்பிடுவ… இப்போ வளர்ந்துட்ட… உன் விருப்பும் மாறியிருக்கும். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு அம்மா செஞ்சுத் தரேன்…” 

“உங்கையால என்ன செஞ்சு கொடுத்தாலும் சாப்பிடுவேன்…” என்று ராஜனும் உருகிச் சொல்ல, நீலா உருக்கமாய் அவனை கண்களில் நிரப்பிக்கொண்டு வேலையில் இறங்க, வீட்டின் முற்றத்தில் நின்றுகொண்டிருந்த தச்சனின் முகம் போன போக்கில் குந்தவை அவனை நெருங்கி அவன் கையை அழுத்தினாள்.

“என்னத்தை கிறுக்குத்தனமா யோசிச்சிட்டு இருக்க?” என்று மெதுவாகவே அவள் கேட்க, அவள் கையை உதறிவிட்டு வெளியேச் சென்றான் தச்சன். அவளும் அவனின் செயலில் துணுக்குற்று வேக நடையிட்டு வாயிலிலேயே அவனை தடுத்து நிறுத்தினாள்.

“என்ன இப்போ? ஒழுங்காத்தானே இருந்த? எதுக்கு முகம் எதையோ திண்ண மாதிரி இருக்கு?”

அவன் முகம் இன்னுமே கடுகடுவென இருக்க, “ரொம்பத் தான் உருகுறான்… இவ்வளவு உருகுறவன் முன்னாடியே வர்றதுக்கு என்ன…” 

“அடேய் அவங்க வேதனை புரியாம எப்போதும் போல இடக்கா பேசி என்னை கடுப்பேத்தாத. எத்தனை வருஷ வலி, வேதனை, ஏக்கமெல்லாம் இருக்கும். அதை புரிஞ்சிக்காம முகத்தை தூக்குற? நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். நீ வந்ததிலிருந்து உங்கண்ணன் கூட பேசவே இல்லை. திவ்யா அண்ணி கூட தன்னோட கோபத்தை காட்டுனாங்க. ஆனால் நீ அண்ணியை அடக்குற மாதிரி அடக்குனாலும் வாயை திறக்கல. உன் வாய் சும்மா இருக்காதே? என்ன விஷயம்?” என்று அவள் கேட்டது தான் தாமதம் தச்சன் பொரிந்து தள்ளிவிட்டான்.

“இப்போ அவன் யாருன்னு தெரிஞ்ச பிறகு பக்கம் பக்கமா வசனம் பேசுறவன் வீட்டுல எல்லோரையும் பார்த்த அன்னைக்கே வரவேண்டியது தானே? இல்லைன்னா இன்னைக்கு அவனை நான் உள்ள கூட்டிட்டு வந்தேனே அப்போதாவது தான் யாருன்னு சொல்ல வேண்டியது தானே? என்கிட்டேயாவது சொல்லி இருக்கலாமே… அதெல்லாம் செய்ய மாட்டான்.

இவனா ஏதாவது நினைச்சுகிட்டு வீட்டை விட்டு போவானாம்… எல்லாம் புரிஞ்ச பிறகும் வரமாட்டானாம்… வீடுவரைக்கும் வந்தும் கூட அவனுக்காக தினம் அழுதுட்டு இருக்குறங்களை கண்டுக்காம கிளம்பிடுவானாம். அப்புறம் அவனே கடைசி முறை பார்க்கணும்னு சொல்லிக்கிட்டு வீட்டுக்கே வருவானாம்… இவ்வளவு பேசுறானே அம்மா தான திட்டுச்சு… அப்பாவும் கிழவியும் அவனுக்கு ஆதரவா தானே இருந்தாங்க? விவரம் புரிஞ்ச பிறகு அவங்களுக்கா வரவேண்டியது தானே? அதை செய்யாம எல்லாத்தையும் அவன் விருப்பத்துக்கு பண்ணினதுக்கான பலனை நானும், என் அப்பா அம்மாவும் தான் அனுபவிச்சோம்.

இவனாலத் தான் இன்னைக்கு வரைக்கும் என்னை நம்பி என் விருப்பத்துக்கு இங்க யாரும் என்னை விட்டது கிடையாது. பார்க்கத்தான் என் விருப்பத்துக்கு எல்லாரும் தலையசைக்கிற மாதிரி தெரியும் ஆனால் அவங்க இழுக்குற இழுப்புக்குத் தான் நான் போயிட்டு இருக்கேன். அவங்களுக்கு அவங்களை மீறி நான் போயிடுவேன்னு பயம்… நீ எப்போதும் குறைபட்டுட்டே இருப்பீயே விவசாயம் பார்க்கிறவன் எனக்கு வேண்டாம் வேண்டாம்னு… எனக்கு ஆரம்பத்தில் விவசாயம் மேல ஆர்வமெல்லாம் கிடையாது. ஆனால் என்னைக்கு எனக்கு முன்னாடி ஒருத்தன் கோச்சிகிட்டு ஓடிட்டான்னு தெரிஞ்சுதோ அன்னைக்கு மாத்திகிட்டேன் என்னோட ஆசையை… அவன் விட்டுட்டு போனதால ஏற்பட்ட மனக்கஷ்டத்தை எக்காரணம் கொண்டும் நானும் திரும்பக் கொடுத்திடக்கூடாதுன்னு தான் இந்த ஊரிலேயே சுத்திட்டு இருக்கேன்.”

“கொஞ்சம் மூச்சு விடுடா… அடுக்கிகிட்டே போற… இப்போ என்ன பிரச்சனை அதைச் சொல்லு…”

“அடியேய் என்னை வெறுப்பேத்தாத… ஒருத்தன் எவ்வளவு தம்கட்டி பேசிட்டு இருக்கேன் அதை கண்டுக்கிறீயா நீ? நீலாவும் அவன் வந்ததும் அப்படியே கண்டுக்காம அவனுக்கு சமைக்குறேன்னு போயிடுச்சு.”

“அதுக்கு இப்போ என்ன செய்யணும்னு சொல்ற? அவங்க சமைக்குறதை நீயும் தான் சாப்பிடப்போற… இதுக்கு முன்னாடி அத்தை முந்தானையை பிடுச்சி அப்படியே கொஞ்சி குழாவிட்டு இருந்தியா என்ன? அவங்கள எதிர்த்து பேசி அவ்வளவு வாயடிப்ப… சண்டை போடுவ… இப்போ என்னமோ சின்ன புள்ளை மாதிரி முறுக்கிக்கிற?” என்று இடைவெளி விட்டவள் மீண்டும்,

“உனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும். எல்லாமே புரிஞ்சி தெரிஞ்சு தானே நீ விட்டுகொடுத்து போயிருக்க? அப்புறம் எதுக்கு அதை ஒரு குறையா சொல்ற? நாம மனசார நல்லதுன்னு நினைச்சு செஞ்சதை என்னைக்குமே குறையா பார்க்கக்கூடாது. அப்படி குறையா பார்த்தால் நீ விட்டுக்கொடுத்ததற்கே அர்த்தமில்லாமல் போயிடும்…” என்று இயல்புக்கு மாறாய் அவள் நிதானமாய் எடுத்துக் கூறினாலும் அது அவன் மண்டையில் ஏறுவதாய் இல்லை.

“உனக்கு புரியாது போடி…” என்று கடுப்படித்துவிட்டு கிளம்பிவிட்டான் தச்சன். குந்தவை யோசனையுடன் அவன் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

No comments:

Post a Comment

Most Popular