Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 6





*6*


மாற்றம் ஒன்றே மாறாதது என்பது வெறும் வார்த்தை இல்லை போலும் அதிலிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் மெய். ஆனால் அந்த மாற்றம் எத்தகையது என்பதில் தான் ஒருவரின் மனநலன் தீர்மானிக்கப்படுகிறது. என்ன செய்வது என்று வழி அறியாது சஞ்சலமாய் அலையும் போது வழி கிடைத்துவிட்டால் அந்த மாற்றம் வாழ்க்கையையே மாற்றியமைப்பது போல, இருந்தவற்றை இழக்கும் வலி தரும் மாற்றமும் வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைத்துவிடும். முன்னம் இருக்கும் மாற்றம் ஒருவரை ஒருபடி மேலே ஏற்றினால் பின்னர் இருப்பது ஒருவரை கீழிறக்கும் வல்லமை படைக்கும். அந்த வல்லமை வென்றுவிட ஓய்ந்துபோனாள் குந்தவை.

மணம் முடித்த மறுநாள் கதிரவன் உதயமாகும் முன்னமே தச்சனின் அலைபேசி அழைக்க முதலில் விழித்தது குந்தவை தான். சண்டை போட்டுவிட்டு இரவு ஒருவர் முகம் ஒருவர் பாராது அசதியில் படுத்திருந்ததற்கு மாறாய் விடியற்காலை இருவருமே மற்றவரின் மீது கை போட்டு படுத்திருந்தனர். அதிலும் தச்சன் உரிமையெடுத்து அவளை முழுதும் அவனுக்குள் வளைத்து அவள் தோளிலேயே தலை வைத்து படுத்திருக்க கோபம் வருவதற்கு பதில் முதன்முறையாய் நாணம் எட்டிப்பார்த்தது குந்தவைக்கு. எல்லாமே நொடிபொழுது தான் அதற்கு மேல் அவளை சிந்திக்கவும், ரசிக்கவும் விடாமல் தச்சனின் அலைபேசி சிணுங்கியது. வேண்டுமென்றே தன் இடை சுற்றி இருந்த அவன் கையை நறுக்கென்று கிள்ளி எழுப்ப, அலறிக்கொண்டு எழுந்தான் தச்சன்.

“ஏன்டி இப்படி தூக்கத்திலும் இம்சை பண்ற? உன்னை கல்யாணம் பண்ணது தப்புதான் ஒத்துக்குறேன். இப்போ திருப்தி தானே உனக்கு?” என்று தூக்கக் கலக்கத்தில் எரிச்சலாய் மொழிந்தவன் திரும்ப படுக்க, குந்தவையின் முகம் வாடியது.

திருமணம் வேண்டாம் என மறுத்து, மணமான நாளிலேயே அவனை வறுத்து இந்த திருமணம் சரிவராது என புரியவைக்க முயன்றது அவளாகினும், அவன் வழியாய் இந்த பந்தமே தவறு என்று கேட்டதும் மனம் ஆதவனை இழந்த தாமரையாய் வாடியது.

“உங்களுக்கு ஏதோ போன் வந்துச்சு.” என்று சுருதி இறங்க சோகம் இழைத்தவள், எழுந்து அவன் அலைபேசியை கையிலெடுத்து, தனக்கு முதுகுகாட்டி குப்புற படுத்திருந்தவனை சுரண்டி எழுப்பி அலைபேசியை கொடுத்துவிட்டு கீழே இறங்க முற்பட, அலைபேசியில் கண்ணை பதித்துக்கொண்டே அவள் கைபிடித்து தடுத்து அவள் மடியினில் தலை வைத்து படுத்துக் கொண்டான் தச்சன். அவனை விலக்கவும் முயலவில்லை, அவனை கொஞ்சவுமில்லை. சற்று முன் வாடிய மனதிற்கு இட்ட மருந்தாகவே அந்த நிமிடத்தை அமைதியாய் அனுபவித்தாள் குந்தவை. அவ்வளவே…

“என்னப்பா? எதுக்கு போன் பண்ணியிருக்க? கதவை தட்ட வேண்டியது தானே?” என்று தச்சனின் குரல் மட்டும் அவளுக்குக் கேட்க மறுபுறம் என்ன செய்தி வந்ததோ சட்டென்று எழுந்தமர்ந்தான் தச்சன்.

“நான் வரேன்.” என்று அலைபேசியை அணைத்தவன் பரபரப்பாய் குந்தவையிடம் பார்வை பதித்து, “சீக்கிரம் கிளம்பு. அவசரமா போகணும்.” என்றுவிட்டு வேகமாய் இறங்கினான். அவனைவிட துரிதமாய் செயல்பட்டவள் அவனை போகவிடாமல் கைபிடித்து தடுத்து, பதற்றத்துடன், “என்னாச்சு?”

தயங்கியவன் அவள் கன்னத்தை மெலிதாய் தட்டிவிட்டு, “கிளம்பு குந்தவை.” என்று இறுகிய முகத்திற்கு நேரெதிராய் இளகிய குரலில் சொல்லிவிட்டு நிற்காமல் தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட, ஏனென்றே புரியாத ஐயம் அவளை சூழ்ந்துகொண்டது. எவரிடமும் கேட்கலாம் என்று அறையை விட்டு வெளியே போனால் அனைவருமே ஒருவித அமைதியில் கிளம்பிக் கொண்டிருந்தனர். ஒருவரும் அவளிடம் காரணம் கூறாமல் கிளம்பு கிளம்பு என விரட்டி கிளப்பி அழைத்துச் செல்ல, கார் அவளது வீட்டில் சென்று நிற்கவுமே அங்கிருந்த சூழலில் அவள் இதயம் பரபரப்பாய் அடித்துக்கொண்டு நுரையீரல் ஒருமுறை வேலைநிறுத்தம் செய்து மீண்டது.

“என்னாச்சு? ஏன் எல்லோரும் வந்திருக்காங்க?” கேள்வி மற்றவரின் செவி எட்டியதா என்ற சந்தேகத்தில் தன்னருகில் இருந்த நீலாவிடம் மீண்டும் தன் கேள்வியை முன்வைக்க, பார்வை தன்னாலேயே தச்சனை தேடியது.

“உள்ள போ குந்தவை.” நீலா அவளை வீட்டினுள் இழுக்க முயல, வாயிலிலேயே வேரூன்றி நின்றாள் குந்தவை. அடுத்த அடி எடுத்துவைத்து உள்ளே செல்லும் தைரியம் அவளுக்கு இல்லை என்பது அவள் முகத்தில் மண்டிக்கிடந்த தவிப்பிலும் பயத்திலுமே புரிபட, ஏற்கனவே உள்ளே நுழைந்திருந்த தச்சன் வேகமாய் வெளிவந்து குந்தவையின் கைபிடித்து உள்ளே இழுத்தான்.

“நான் வரமாட்டேன். அப்பாவையும் அம்மாவையும் இங்க கூப்பிடுங்க.” நிஜத்தை எதிர்கொள்ள திராணியற்று நிழலிலேயே தஞ்சம் கொள்ள நினைக்க, விழிகள் அப்பட்டமான பிடிவாதத்தையும், அச்சத்தையும் வெளிப்படுத்தியது.

“நீயே உள்ள வந்து பாரு.” என்று தச்சன் இழுக்க, அவனது உடல்பலத்திற்கு ஈடுகொடுத்து தன் பிடிவாதத்தால் ஆணியடித்தாற் போல நின்றாள் குந்தவை.

‘எதிலும் பிடிவாதம் தானா?’ என்று அப்போதும் எரிச்சல் தான் தச்சனுக்கு.

“கல்யாணம் ஆகி இங்கிருந்து புகுந்த வீட்டுக்கு போனவ அப்பன் உயிரையும் சேர்த்து கூட்டிட்டு போயிட்டா… அம்மாடி குந்தவை உள்ள போய் அப்பாவை பாருமா... ” என்று வீடுமுன் குழுமியிருந்த கூட்டத்தினில் இருந்து எவருடைய குரலோ சத்தமாய் ஒலிக்க குந்தவையின் சப்தநாடியும் அடங்கி மனமெல்லாம் மரத்துப் போனது. முன்பு வானதியை பேசினர், இப்போது இவள்.

பிறந்தவீட்டில் நிகழ்ந்தால் என்ன புகுந்த வீட்டில் நிகழ்ந்தால் என்ன துயரம் அனைத்துக்கும் அவ்வீட்டின் பெண்ணவளே காரணம் என அவள் தலையிலேயே கட்டி அதை நம்பும் கூட்டம் இன்னும் இங்கே இருக்கத் தான் செய்கிறது. அப்படிப்பட்டவர்களை களையெடுக்கும் மெத்த படித்தவர்களோ சரியான பக்குவமின்றி எதையோ பிடித்துக்கொண்டு எதன் பின்னோ ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

தன் குடும்பத்தினரை உள்ளே செல்லுமாறு சைகை செய்த தச்சன் குந்தவையை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்றான்.

வெறித்த பார்வையோடு நுழைந்தவளை சுமதியும், வானதியும் கேவலுடன் கட்டிக்கொள்ள நாசுக்காய் நகர்ந்து கொண்டான் தச்சன்.

“இதயத்தில் கோளாறு இருந்ததை அப்பா சொல்லாமையே மறச்சிட்டாருடி… நாலு மணிக்கு வலிக்குதுன்னு சொன்னாரு ஹாஸ்பிடல் போகும் முன்பே...” என்று வானதி விசும்ப, அனைத்தும் புரிவது போல இருந்தது குந்தவைக்கு.

அவள் கணிப்பு சரியென்றால் தந்தையுடைய பிரச்சனை அவள் தச்சனை வேண்டாம் என்று சொல்லி, அவன் வீட்டிற்கு வந்து கலாட்டா செய்த பிறகு தான் தெரிந்திருக்க வேண்டும். தன் விருப்புக்கு மாறாக திருமணம் செய்ய அன்னை ஒப்புக்கொண்டது கூட இதற்காகத்தான் இருக்கும் என்று யூகிக்க… அவளுடைய கணிப்பு கனக்கச்சிதமாய் சரியாகத்தான் இருந்தது. வானதியும் வைத்துக்கொண்டு இதயக்கோளாறை சொல்லி பயமுறுத்த வேண்டாம் என்று மறைத்து குந்தவையின் திருமணத்தை நடத்தினர்.

வெறித்த பார்வை குற்றம்சாட்டும் விதமாய் மாறி சுமதியை துளைக்க, “சிகிச்சைக்கு லோனுக்கு ஏற்பாடு செஞ்சிட்டு இருந்தாரு அதுக்குள்ள நம்மை விட்டுட்டு போயிட்டாருடி.” என்று பெருங்குரலெடுத்து அழ, குந்தவையின் நாசி புடைத்து, இதழ் துடித்து முகமெல்லாம் சிவந்தது. ஆனால் அழவில்லை. கண்கள் கலங்கி மட்டும் இருந்தது.

‛என்னடா இவள் இவ்வளவு அடம் பண்றா. ஆனாலும் மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை, இவள் வித்தியாசம்டா தச்சன்.’ என்று அந்நேரத்திலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

“பசங்க எங்க?” தந்தையை பற்றி விசாரிப்பாள் என்ற எண்ணத்திற்கு மாறாக குழந்தைகளை கேட்க, வானதி ஒருநிமிடம் விழித்துவிட்டு, “பெரியம்மாகிட்ட இருக்காங்க.” என்க குந்தவையின் பார்வை குழந்தைகளைத் தேடியது. அவர்களோ அவளின் பெரியம்மாவிடம் இருக்காது வானதியின் மாமியாரிடம் இருக்க, நந்தன் அமைதியாக உறங்கும் கண்ணாடி பேழை அருகில் சென்றவள் ஓரிரு நிமிடம் அவரை கண்களில் நிரப்பிக் கொண்டு, பின் கண்களை மூடி கண்ணாடிப் பேழையின் மீது தலை சாய்த்து நின்றவள் சில நிமிடங்களிலேயே ஒன்றுமில்லாதது போல நேராக வானதி மாமியாரிடம் சென்று பிள்ளைகளை வாங்கி தன் மடியில் அமர்த்திக்கொண்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

வானதியின் மாமியார் அவளை ஏற இறங்கப் பார்க்க, அவளின் செய்கைகளையே சற்று தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த தச்சனின் தோள் தட்டி, “குந்தவை இப்படி அமைதியா இருக்குறது நல்லதில்லை. அடக்கி வச்சிருந்தா அழுத்தமாகி மனசு விட்டு போயிடும். நீ கொஞ்சம் என்னனு பாரு.” என்று சொல்லிவிட்டு அன்பரசன் அங்கிருந்து நகர, குந்தவையின் மீது அழுத்தமாய் பதிந்தது அவனது பார்வை.

அப்படி என்ன வீம்பும்? பிடிவாதமும்? அழுதால் குறைந்தா போய்விடுவாள்? ஏற்கனவே ஏத்தம் அதிகம் இப்போ அழுகாம அடக்கிக்கிட்டு இருந்தா சொல்ல முடியாது அதையே கோபமா வளர்த்துகிட்டு உன்கூட சண்டை போட்டாலும் போடுவா… என்று அவன்பாட்டிற்கு சிந்தித்துக் கொண்டே செல்ல எப்பொழுதும் போலவே அவன் கணிக்கும்படி இல்லை அவள். அவளது எண்ணங்களில் வேறு சிந்தனைகள். மூன்று பேருமே பெண்களாய் இருக்க ஆளுமை செலுத்தி முடிவெடுக்கும் அதிகாரம் இவ்வீட்டில் யாருக்கும் இல்லை என்று கணக்குப்போட்டு எவரும் தங்களை ஆள நினைக்கலாம் என்ற கணிப்பு மனதினில் ஓட, அடுத்து என்ன என்ற சிந்தனை தான்…

“வரவேண்டியவர்கள் எல்லாம் வந்தாச்சு. சட்டுப்புட்டுன்னு அடுத்து ஆகுற வேலையைப் பாருங்க.” என்று நந்தன் உறவினரிடமிருந்து குரல் வர சலசலப்பு துவங்கியது.

நந்தனுக்கு இரண்டுமே பெண்களாகிவிட யார் இறுதி காரியங்கள் செய்வது என்று பங்காளிகளுக்குள் பிரச்சனை எழ, ஒருமித்த முடிவு எட்டும் முன்னமே,

“என் அப்பாவுக்கு நான் செய்வேன்.” என்றாள் குந்தவை.

பார்வை மொத்தமும் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்திருப்பவளிடம் சென்று பின் தச்சனிடமும், அவன் குடும்பத்தினர் மீதும் படிந்தது.

“நம்ம வழக்கத்தில் பொண்ணுங்க இறுதி காரியங்கள் செய்வது எல்லாம் இல்லையே. அது சின்ன பொண்ணு தெரியாம பேசுது. சரி தானே?” என்று நந்தன் பக்க உறவினர் இப்போது நேரடியாய் அன்பரசனிடமே பேசினார், குந்தவை அவர்களின் பொறுப்பு என்ற நினைப்பில்.

“அவங்க சொல்றது சரிதான் குந்தவை. நமக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை.” என்று அன்பரசனும் நேரடியாய் குந்தவையிடம் பேச,

“இல்லைங்க மாமா. நான் தான் செய்வேன். எங்களுக்காகவே வாழ்ந்து, உழைச்சி எங்க மகிழ்ச்சி தான் அவருடையதுனு இருந்தவருக்கு நாங்க தான் செய்யணும் மாமா. அது தான் தர்மம், அது எங்களுடைய உரிமையும் கூட. சும்மா சம்பிரதாயத்திற்காக என் அப்பாவோட நெருங்கி பழகாதவங்க செய்றதில் எனக்கு உடன்பாடில்லை.” என்று அழுத்தமாய் தன் எண்ணத்தை பேச,

“என்ன தம்பி பொண்டாட்டியை பேசவிட்டு பார்த்துட்டு இருக்கீங்க? மாமனார் சொல்றதையும் கேட்க மாட்டேங்குதே பொண்ணு.” என்று பேச்சு இப்போது தச்சன் புறம் திரும்பியது.

‛அவள் என்னமோ என் பேச்சுக்கு அடங்குறவ மாதிரி எதுக்கைய்யா இப்போ எல்லோரும் என்னை பார்க்குறீங்க? அவங்க அப்பா அவ விருப்பம். அவள் விருப்பத்துக்கு விட்டுடுங்க.’ என்று சொல்ல ஆசை தான் ஆனால் அனைவரும் கூடியிருக்கும் சபையில் இப்படியெல்லாம் பேசிட முடியுமா என்ன? அதுவும் அங்கிருப்பவர்கள் யாரையுமே அவனுக்குத் தெரியாது. அவன் சொந்தங்கள் கூட பெரிதாய் அங்கில்லை...

“என்ன மசமசனு பார்த்துட்டு நிக்குற? எடுத்து சொல்லுடா குந்தவைக்கு. இதெல்லாம் இழுத்தடிக்குற காரியம் இல்லை.” என்று அன்பரசனும் தச்சனை உசுப்ப, நீலாவும் மங்களமும் அனைத்தையும் சுணக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைவரின் பார்வையும் தச்சனை அழுத்தத்திற்குள் தள்ள யோசனையுடன் குந்தவையை பார்த்தவன், “பெரியவங்க சொல்றதை கேளு குந்தவை.” என்க, அழுதழுது ஓய்ந்து போயிருந்த சுமதியும், “உன் வீட்டுல என்ன சொல்றாங்களோ அதை செய் குந்தவை.” என்று சொல்லவும், சட்டென்று கண்ணிலிருந்து நீர் வழிந்திருந்தது குந்தவைக்கு.

‘அப்போ இது என் வீடு இல்லையா? அவர் என் அப்பா இல்லையா? அவர் சம்மந்தமான முடிவு எடுக்கக்கூட எனக்கு உரிமையில்லையா? கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போனா என்னை பெற்றவர்கள் வெளியாளாகி விடுவார்களா?’ என்று அவளது கண்ணீரில் ஒளிந்திருந்த ஆதங்கம் அங்கிருந்த எவருக்கும் புரியவில்லை. அவர்களுக்கு புரியவில்லை என்றால் என்ன… என் உரிமையிலிருந்து நான் விலக மாட்டேன் என்ற பிடிவாதம் அவளிடம் இருந்தது.

அதே பிடிவாதத்துடன் தச்சனைக் நோக்கியவள், “இல்லை நான் தான் செய்வேன்.”

அவளது பதிலில் சலசலப்பும் கூடியது… தச்சனுக்கு அழுத்தமும் கூடியது…

“இதெல்லாம் நல்லாவா இருக்கு? குடும்பத்து பொண்ணுங்க இப்படியெல்லாம் பிடிவாதம் பிடிக்கலாமா? நேற்று தான் கல்யாணம் ஆச்சு இப்போவே நீங்க சொல்றதையும் கேட்க மறுக்குது. இது விளையாட்டு காரியம் இல்லை மாப்பிள்ளை தம்பி. நீங்க இலகுவா இருக்கீங்க… கொஞ்சம் இறுக்கிப் பிடிங்க அப்போ தான் கேட்கும்.” என்று அவனை வேறு உசுப்ப, சபை நடுவில் தச்சனுக்கு தன்மானம் சீண்டப்பட்ட உணர்வு. இப்படித் தான் பலது வெளியுலகத்தால் கிடைக்கவேண்டிய இயல்பான உரிமை கூட மறுக்கப்படுகிறது.

ஒருவர் அடக்க மற்றொருவர் அடங்கித்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற தவறான புரிதல் பரவலாகிக் கிடக்க, ஒருவரை ஒருவர் அடக்காமல், ஒருவொருக்கு ஒருவர் அடங்காமல் சரிசமமாய் உணர்வுகளை பகிர்ந்துகொண்டு வாழும் வாழ்வின் ருசி சொற்ப இலக்கத்தினருக்கே வாய்க்கப்பட்டிருப்பது இது போன்ற வெளியிலக மாயத்தால் தானே…

அப்படி அவன் அவளை அடக்கி வீரனாக வேண்டும் என்று உசுப்பிவிட்ட மாயத்தில் தச்சனும் குரலை உயர்த்தி, “என்ன பேசுற நீ? எல்லோரும் இவ்வளவு சொல்றாங்க… யார் பேச்சையும் கேட்கக் கூடாதுனு முடிவு பண்ணிட்டியா?”

இதுவே வேறு சூழ்நிலை என்றால் அவனின் ஆதிக்க குரலுக்கு எதிர்க்குரல் எழுப்பி இருப்பாள். இப்போதோ மனதால் சோர்ந்திருக்க, தட்டுத்தடுமாறி குழந்தையை கீழே விட்டுவிட்டு எழுந்து அவனிடம் வந்தவள், நீர் திரண்டிருந்த சிவந்த விழிகளுடன், அதரங்கள் துடிதுடிக்க, “அப்பாவோட இறுதி நாட்களில் அவருடன் பேசாமல், அவரோட கடைசி நொடிகளில் கூட நான் நிம்மதியாக இருக்கவிடல… என்னை நினைச்சிகிட்டே தான் இருந்திருப்பார். அதுக்கு நான் நியாயம் செய்யணும். அப்பாவோட ஆன்மாவுக்காவது தன்னோட கடமை முடிஞ்ச திருப்தி கிடைக்கட்டும். பெண்ணா பிறந்த ஒரே காரணத்திற்காக எங்களுடைய உரிமையை மறுக்கிறது தர்மமே இல்லை. நீங்களாவது என்னோட இந்த நியாயமான விருப்பத்துக்கு தடையாய் இருக்காதீங்க. ” என்று வேண்டல் போல வைக்க,

அவளின் இறங்கிய குரலும், இறைஞ்சும் உடல்மொழியும் சுத்தமாய் பிடிக்கவில்லை தச்சனுக்கு. சண்டை போட்டால் கூட தேவலாம் என்றிருந்தது. இத்தகைக்கும் அவர்களுக்குள் தம்பதிக்குண்டான வழக்கமான பழக்கங்கள் இன்னும் வரவில்லை. பேசியதே மொத்தம் மூன்று நான்கு முறை தான். அது அனைத்துமே சண்டையில் தான் முடிந்திருக்கிறது. அதற்குள்ளேயே அவள் சண்டையே போடலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டிருந்தான் தச்சன்.

ஆனால் அவளோ தன்னை திரைக்குள் மறைத்து அமைதியாய் மனதிற்குள் கண்ணீர் சிந்தினாள். தந்தை விட்டுச் சென்றுவிட்டார் என்ற வலியை விட, அவரின் நலனை கவனிக்காமல் அவரின் இறுதி காலத்தில் பேசாமல் இருந்து அவரை வாட்டிய குற்றவுணர்ச்சி தேளாய் கொட்டி துடிதுடிக்க வைத்தது.

“வேற வழி இல்லையா? அவள் விருப்பமும் நியாயம் தானே. அவர் பெண்ணே செய்தால் அவர் ஆன்மா ஏற்றுக்காமையா போயிடும்?” தச்சன் அவளுக்குத் தோதாய் பேச அதுவே பிரச்சனைக்கு அடித்தளமாய் அமையும் என்ற எண்ணமிருக்கவில்லை. அவனை பொறுத்தமட்டில் இந்த சடங்கு சம்பிரதாயத்திற்கு எல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பழக்கமுமில்லை. குந்தவையின் நிலையில் இருந்து பார்க்கும் போது அவள் கேட்பதில் தவறொன்றும் தெரியாமல் போக அதை மற்றவர்கள் ஏற்கணுமே…

“உன்னை என்ன செய்யச் சொன்னா நீ என்ன செஞ்சிட்டு இருக்க?” என்று அன்பரசன் கடிய,

“சின்ன பசங்க, அதுகளுக்கு ஒன்னும் தெரியல சம்மந்தி. எங்க பங்காளிங்க நாலு குடும்பம் இருக்கோம் அதில் பையன் முறையில் இப்போ என் தம்பி பையன் மட்டும் தான் இங்க இருக்கான். அவனை வைத்தே செய்திடுவோம்.” என்று நந்தனின் உறவுகள் வலியுறுத்த இம்முறை குந்தவைக்கும் சேர்த்து குரல் கொடுத்தான் தச்சன்.

“அதெல்லாம் சரிதாங்க மாமா. இதில் நாமெல்லாம் முடிவு செய்றதை விட உரிமைப்பட்டவங்களே முடிவு செய்யறது தானே சரியாக இருக்கும். குந்தவையே எல்லாம் செய்ற மாதிரி ஏதாவது வழியிருந்தால் மாமாவுடைய ஆன்மாவும் சாந்தியடையும், அவருடைய பொண்ணுங்களும் நிம்மதியடைவாங்க.”

முணுமுணுப்புகள் சத்தமாக உருபெற… அன்பரசன் தச்சனை ஒருபுறம் கடிய, மகளை ஒருபுறம் கடிந்தார் சுமதி.

“இறுதி காரியம் செய்யறது பையன் முறை உள்ளவர்கள் தான் செய்யணும். இது இன்றைய ஒருநாளோடு முடியறது இல்லை. அடுத்து வரும் சந்ததி வரை இதோட மிச்சங்கள் தொடரும். நீ பெரிய இவன் மாதிரி தேவையில்லாமல் எல்லாத்தையும் மாத்த பார்க்காத.” அன்பரசன் கடுமையாக பேச அதெல்லாம் அவனுக்கு ஒருபொருட்டாகவே தெரியவில்லை. முதல் முறையா அவரிடம் பேச்சு வாங்குகிறான்…

“என்ன பிடிவாதம்டி உனக்கு. ஏன் உன் வாழ்க்கையோட விளையாடுற. உன் மாமனார் மாமியார் சொல்றதை கேளு. எங்களுக்கு பையன் முறை உள்ளவனே செய்யட்டும்.” என்று சுமதி காட்டமாய் பேச, நந்தன் இழப்பை விட அவருக்கு இறுதி காரியங்களும் மரியாதைகளும் யார் செய்வது என்பது தான் பேசுபொருளானது.

பெண்களை பெற்றவர்கள் நிம்மதியாக தங்களின் இறுதி பயணத்தில் உறங்க ஏதுவாக செய்யப்படும் இறுதி காரியங்களில் கூட சிக்கல் இருப்பதை என்னவென்று சொல்வது? முன்னர் வேண்டுமென்றால் கூட்டுக் குடும்பமாய் ஒருவரின் மீது ஒருவர் தூய்மையான அன்பு செலுத்தி அனைத்துக்கும் தகுதியானவர்களாக இருந்தார்கள்… இன்று சூழ்நிலை அப்படி இல்லையே. பெற்றது பெண்களாகினும் கிஞ்சித்தும் குறையாத பாசத்தை பெண்கள் தங்களின் பெற்றவர்கள் மீது செலுத்துகிறார்கள். அந்த பாசத்திற்கு உண்டான உரிமையை ஏதாவது ஒருவிதத்தில் நிறைவேற்ற வழி ஏற்படுத்தித் தருவதில் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.

“இங்க பாருங்க மாப்பிள்ளை… முறைப்படி இறுதி காரியங்கள் செய்பவருக்கு அந்த வீட்டில் சகல உரிமையும் இருக்கு. சொத்தில் கூட பங்கு கேட்கலாம் ஆனால் நாங்க இங்க உரிமை எடுக்க வரல, நந்தனும் பெருசா சொத்து சேர்த்து வைக்கல. நீங்க என்ன சொன்னாலும் பொண்ணுங்களை மயானத்திற்கு எல்லாம் அழைத்துச் செல்ல முடியாத. எங்க கடமையை செய்ய விடுங்க. நீங்க குறுக்கால பூந்து குட்டையை குழப்பாதீங்க.”

“இப்போ என்னதாங்க பிரச்சனை. குந்தவை நேரடியா இறுதி சடங்குகள் நடக்கும் இடத்திற்கு வந்து எதுவும் செய்யக்கூடாது அதுதானே? என்னென்ன செய்யணுமா, எதை வீட்டில் செய்ய முடியுமோ அதை இங்கேயே குந்தவையை வச்சு செஞ்சுடுங்க. வீட்டிற்கு வெளியே மற்றதை அவள் சார்பா நான் செய்றேன். நம்ம வழக்கப்படி வீட்டு மாப்பிள்ளை பேச்சுக்கு மரியாதை கொடுக்கணும், கொடுப்பீங்க தானே?” என்று ஒரேபோடாய் தச்சன் போட சலசலப்பு அடங்கியது.

அவன் குடும்பத்தினர் அதிர்ச்சியை வெளிப்படுத்த, குந்தவையிடம் விசும்பல் வெளிப்பட்டது. இறுதிச் சடங்கில் வரப்போகும் நடைமுறை சிக்கல்களை பற்றி அவள் ஏற்கனவே யூகித்து ஐயப்பட்டுக் கொண்டிருக்க, அவளுக்காக தச்சன் பேசவும் அந்த ஐயம் அடியோடு தகர்ந்து தந்தையின் இழப்பு தந்த வலி பிரதானமானது. இனி தச்சன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வர, விசும்பல் பெருகி அப்படியே தரையில் மடிந்து அமர்ந்து, முகத்தை கால்களுக்கு இடையில் மறைத்துக்கொண்டு குலுங்கினாள்.

அவள் அழட்டும் என்று அமைதியாய் வானதியும், சுமதியும் அவளின் இருபுறமும் அமர்ந்துகொள்ள, அவளின் பேரழுகையை காணச் சகிக்காமல் வெளியேறிவிட்டான் தச்சன்.

அதன் பின் காரியங்கள் மளமளவென நடக்க, வீட்டிலேயே வானதி மற்றும் குந்தவையிடமிருந்து சம்பிரதாயத்திற்கு அக்கினியை வணங்கி கொடுக்க, குந்தவையிடமிருந்து பெற்றுக்கொண்டு அவள் சார்பாகவே இறுதி காரியங்களை செய்து முடித்தான் தச்சன். அன்பரசனோ நீலாவோ எவரும் வாய் திறக்கவில்லை. திவ்யாவுக்கு கூட தச்சனின் செயல்கள் நீலாவின் கூற்றை உறுதிப்படுத்துவது போலவே தெரிந்தது.

தாடியும் மீசையும் மழிக்கப்பட்டு ஆற்றில் குளித்துவிட்டு வேட்டியும், தோளில் ஒரு துண்டுடன் தச்சன் திரும்ப வீட்டிற்கு வர, உறவினர்கள் கூட்டம் முற்றிலும் குறைந்திருந்தது. தச்சன் குடும்பமும், சுமதியின் அக்கா குடும்பம் மட்டுமே இருந்தனர். வீடு சுத்தம் செய்யப்பட்டிருக்க வானதியை கண்ட தச்சன் பார்வையை அலையவிட்டு, கேள்வியை அவள் புறம் வீசினான், “குந்தவை எங்க?”

“ரூமில் இருக்கா.” என்று கையை காண்பிக்க, தாமதியாது விரைந்து அறைக்குள் நுழைந்தான். தலையிலிருந்து நீர் சொட்ட சொட்ட, கண்களிருந்தும் நிற்காமல் நீர் வழிந்துகொண்டிருந்தது. தரையில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் பார்வை விட்டத்தை வெறிக்க, மெல்லிய விசும்பல் மட்டும் வெளிப்பட்டது.

“குந்தவை.”

அவனின் தவிப்பான அழைப்பில் பார்வையை பிரித்து அவன் புறம் செலுத்தியவள், கையையும் அவன் புறம் நீட்டினாள். அதை பற்றிக்கொண்டு தச்சன் அவளருகில் அமர, அவன் தோள் சாய்ந்தவள், “இன்னும் கொஞ்சநாள் எங்ககூட இருந்திருக்கலாம் தானே? நானும் கல்யாணம் செய்துகிட்டேன்… என்ன அவசரம் அவருக்கு?” என்று விசும்ப, சங்கடமாய் அவள் தலையை வருடினான் அவன்.

இந்த இன்னுயிர் இனியும் எனக்கு வேண்டாம் என்பவனை விட்டுவிட்டு இன்னும் சில காலம் பொறுத்திருந்தால் கடமைகளை முடித்துவிடுவேன் என்பவரை சீக்கிரமே கூட்டிச் சென்றுவிடுகிறது இயற்கை. நந்தனின் நிலைமை இரண்டாம் ரகம்.

“என்னிடம் உண்மையை சொல்லியிருந்தா நானும் ஏதாவது செய்ய முயற்சி செஞ்சிருப்பேன். அட்லீஸ்ட் அவர்கூட ஒழுங்கா பேசவாவது செஞ்சிருப்பேன். நான் இப்போ அவர்கூட முன்ன மாதிரி பேசணுமே… ” என்று சிறுபிள்ளை போல விசும்ப, என்ன சொல்லுவான் அவன்? அவள் தந்தை மீது கோபம் கொண்டு பேசாமல் இருக்க தன்னுடைய அழுத்தமும் ஒரு காரணம் தானே என்ற எண்ணம் எழாமல் இல்லை.

“என்னோட பிடிவாதம் தான் என் கண்ணை மறைச்சிடுச்சு… அப்பாவை திரும்ப வரச்சொல்லேன் நான் அவரை நல்லா பார்த்துப்பேன். அவர் சொல்படி நடப்பேன். கஷ்டம் கொடுக்க மாட்டேன். நாம சந்தோசமா வாழுறதை பார்க்கணும்ல அவரு...”

இருக்கும் போது விட்டுவிட்டு இல்லாத போது புலம்பி என்ன பயன்? சின்ன கோபம், பிடிவாதம் என்று உப்புபெறாத காரணத்தை பிடித்துக்கொண்டு முகத்தை திருப்பினால் பின்னர் புலம்பி நஷ்டம் தான் மிஞ்சும். நிலையில்லாத உலகில் உறவுகளை நிலைத்துக்கொள்ள நிதானமும் தேவையே…

“அண்ணன் அப்பா கூப்பிடுறாங்க… கொஞ்சம் வரியா?” அவர்களின் தனிமையை இடையிடும் விதமாய் அறை வாயிலிருந்து திவ்யா கூப்பிட,

“நான் வந்துறேன் குந்தவை. நீ இப்படி அழாத உடம்புக்கு ஆகாது.” என்று அவள் கண்ணீரை துடைத்துவிட்டு கன்னம் தட்டி விடைபெற்றவன், தந்தையை சந்திக்க வர, அவரோ பிடிகொடுத்து பேசாமல், “நாங்க கிளம்புறேன் தச்சா. வீட்டுல போட்டது போட்டபடி இருக்கு. நீ இங்க இருந்து காரியம் எல்லாம் முடிச்சிட்டு வா.”

“அப்பா நீங்களும் கிளம்பிட்டா நல்லாயிருக்காதுப்பா. என்ன செய்யணும்னு நீங்க முன்ன இருந்து சொல்லுங்க. பெரியவங்க யாராவது இருக்கணுமே…”

“அதான் நீயே பெரிய மனுஷனாகிட்டியே… தனியா முடிவெடுக்கவும் கத்துகிட்ட. எல்லாத்தையும் முடிச்சிட்டு சீக்கிரம் உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வா…” என்றுவிட்டு கிளம்ப நீலா அப்போதும் வாய் திறக்கவில்லை.

அவரின் கோபம் புரிந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்கிற தைரியத்தில் இருக்க, அது அவ்வளவு எளிதானதாக இருக்க வாய்ப்பில்லை என்று யார் சொல்லி புரிய வைப்பர்…

அதன் பிறகு குந்தவையிடம் தனியாக பேச அவகாசமே கிடைக்கவில்லை. வானதியும், அவள் பிள்ளைகளுமே அவளை சூழ்ந்திருக்க மூன்று நாளும் மொட்டை மாடி வாசியாகிவிட்டான். வழக்கத்திற்கு மாறாக குந்தவையும் அமைதியுடன் நடமாட, அவளை தொந்தரவு செய்யவும் மனமில்லை தச்சனுக்கு. பொழுது போகாமல் அறிவழகனை தூக்கிக்கொண்டு சுற்றினான். மூன்று நாள் கழிந்ததும் ஊருக்குச் செல்லவென அவளை அழைக்க,

“பைனல் எக்ஸாம்ஸ் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்குது. எழுதி முடிச்சிட்டு வரவா?” என்று குந்தவை அனுமதி வேண்ட, என்னடா இது ஆர்டர் போடாம அனுமதி கேக்குறா என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியடையாமல் எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் தனியாகவே ஊருக்குச் செல்ல… சுமதியும் மரியாதை நிமித்தமாய் மகளை பரீட்சை முடிந்து அனுப்பி வைக்கிறேன் என்று தகவல் சொல்லியிருக்க… தச்சனுக்கு காத்திருந்தது அடுத்த சிக்கல்… 

No comments:

Post a Comment

Most Popular