Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 20

 

*20*

உச்சி வெயில் நடுமண்டையை பிளக்க, நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி மூச்சு வாங்கினாள் குந்தவை. பிறந்தவீட்டில் சிறு சிறு வேலைகள் செய்து பழகியிருந்தவள் புகுந்த வீடு வந்தும் பெரிதாய் வேலைகள் செய்ததில்லை. மணமான உடனேயே ஏற்பட்ட தந்தையின் இழப்பு அதன் பின்னான பிரச்சனைகள், தேர்வுகள் என்று குந்தவைக்கு ஓய்வு அதிகம் தரப்பட்டது.

வானதியும் உடன் இருந்ததால் அவளே குந்தவைக்கும் சேர்த்து வேலை பார்த்துவிடுவாள். நீலாவும் முக்கிய வேலைகளை தன்வசம் வைத்துக்கொண்டு சிறுசிறு வேலைகளுக்கு மட்டுமே குந்தவையை ஏவுவார். இப்போதும் மேற்பார்வை தான் பார்க்கிறாள் ஆனால் அது என்னவோ ஏசி அறையினுள் இல்லை. சுட்டெரிக்கும் சூரியனின் மேற்பார்வையில். அதுவும் அவளாய் ஏற்றுக்கொண்டது. அவனுக்காய்!!! 

எது வேண்டாம் என்று பிடிவாதமாய் மல்லுக்கு நின்றாளோ, எதை தச்சன் செய்யக்கூடாது என்று விரும்பினாளோ அதையே அவள் ஏற்றுச் செய்ய களமிறங்கிவிட்டாள். ஏனிந்த மாற்றம் என்று அவளை கேட்காதவர்கள் யாருமில்லை! தச்சனே கூட அவளை தடுத்து, மறுத்து, பேசாமல் இருந்து என்று எல்லாம் செய்து பார்த்துவிட்டான் ஆனால் அவளை அவன் பிடிக்கு கொண்டுவர முடியவில்லை. எப்போதும் போல அவள் விருப்பத்திற்கு இவன் பணிந்து போக வேண்டியிருந்தது. அது ஒருவிதமாய் பிடித்தும் பிடிக்காமலும் என கலவையான உணர்வில் மாட்டிக் கொண்டது போல இருந்தான் தச்சன்.

“நீ ஏன்டி இதெல்லாம் செய்யுற? சொல் பேச்சை கேட்கக்கூடாதுன்னே சபதம் எடுத்திருக்க.” என்று சலித்துக்கொண்டு தன் தோளில் இருந்த துண்டால் அவள் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டான் தச்சன்.

“நீதான் நான் சொல்றதையே கேட்க மாட்டேங்கிற… உன்னையே செய்ய வேண்டாம் சொன்ன விஷயத்தை நான் செய்ய இறங்கி இருக்கேன்னா யோசிக்காமலா செய்வேன்?” என்று அவனை உறுத்து விழித்தவள் தோட்டத்தை நோக்கி நடைபோட, தச்சன் அங்கிருந்தவர்களிடம் தலையசைத்துவிட்டு நெற்றியை தேய்த்தபடி அவளை தொடர்ந்தான்.

இரண்டு நிமிட நடையிலேயே தோட்டம் வந்துவிட, கேள்வியை தாங்கியபடி பார்வையையும் நடையையும் விரட்டியவள் மோட்டார் அறையின் வாயிலில் இருக்கும் கூடையை பார்த்து அங்கு சென்றாள். கூடையில் என்ன இருக்கிறது என்று எடுத்துப்பார்த்தவள் நிழலில் அமர்ந்து கூடையிலிருந்த சாப்பாட்டு கேரியரை பிரித்து எடுத்துவைக்க, அவளருகில் சென்று அமர்ந்த தச்சன் மீண்டும் துவங்கினான், “அப்படி எதை யோசிச்சு இதில் இறங்கி இருக்கேன்னு சொல்லவும் மாட்டேங்குற… எனக்கு மனசு கேக்கலடி. நீ ஏன் வெயில்ல இறங்கி வேலை செய்யுற?”

“நான் வேற என்ன செய்யட்டும் சொல்லு? ஓடி ஓடி யாருக்கு கீழோ வேலை செய்வதற்கு பதில் நம்ம இடத்தில் நமக்காய் நாம் முன்னேற, நம்மால் நாலு பேரு முன்னேற, இந்த சமுதாயத்திற்கு சோறுபோட உழைக்கிறது எந்த விதத்திலும் தப்பில்லை.” அவன் வாயை அடைக்கும் விதமாய் அவள் பேசினும் அவனுக்கு மனது கேளவில்லை.

“நான் வேணும்னா உன்னை தினம் ஆபீசுக்கு கொண்டுவந்து விடுறேன். அம்மாகிட்ட நான் பேசுறேன். நீ ஹாயா உட்கார்ந்துகிட்டு வேலை பார்க்கிற மாதிரியான வேலையை தேடிக்கோ. இங்க வேண்டாமேடி. உனக்கு பழக்கமில்லாதது, பிடித்தமில்லாதது.”

“பழக்கமில்லாததுன்னு வேணா சொல்லு. பிடித்தமில்லாதது எல்லாம் முன்னாடி… ஒருவேளை உனக்கு நான் இங்க வர்றது பிடிக்கலையோ? அத்தானை நினைக்கிற மாதிரி தான் என்னையும் நினைக்கிறியா நீ?” என்ற குந்தவை கூர்ப்பார்வையுடன் அவனை கிடுக்கிப்பிடி போட, அவன் சோர்ந்துவிட்டான் அவளது பிடிவாதத்திற்கு முன்.

“லூசுடி நீ. நீயும் அவனும் ஒண்ணா.”

“நீயும் நானும் ஒண்ணுன்னு வேணா சொல்லலாம்.” என்று குந்தவை குறும்பாக கண்சிமிட்ட, சோர்வுகள் பின் சென்று அவன் இதழில் பூக்கத் துடித்த நகையை தவிர்க்க முடியவில்லை.

“என்னை எப்படி லாக் பண்றதுன்னு உனக்கு நல்லாவே தெரியுது. நான் தான் அந்த விஷயத்தில் மக்கா இருக்கேன்.”

“எந்த விஷயத்துல?”

“குந்தவை…” குரலில் குழையல் இழையோட தலையை சிலுப்பிக் கொண்ட தச்சன் அவளின் முகம் பார்த்து இளித்தபடி, “இம்சைடி நீ… பலநேரம் சுகம், சிலநேரம் இப்போ மாதிரி. என்னை மட்டும் இடம், பொருள், ஏவல் எல்லாம் பார்த்து பேசு, கொஞ்சுன்னு சொல்லுவ. ஆனா நீ இருக்கீயே… எப்போ எப்படி பேசுறேன்னே தெரியல… ஆனா இப்போ கொஞ்ச நாளா உன்கிட்ட மாற்றம் தெரியுது.” என்றான் அவளை யோசனையுடன் பார்த்தபடி. 

“என்ன மாற்றம்? இப்போ உன்னை கொஞ்சம் கம்மியா திட்டுறேன்.” என்று கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் சுருக்கிக் காட்டினாள்.

“இதுதான்டி மாற்றம். நான்தான் இப்படி எல்லாம் பேசுவேன். இப்போ நீ பேசுற. அதுவும் பொறுமையா பேசுற.”

“அடடா… சாப்பிடறதுக்கு பிரேக் விட்டா நீ கேள்வியா அடுக்கிக்கிட்டு இருக்க. எல்லோரும் வர்றத்துக்கு முன்னாடி சாப்பிடணும்.” என்றவள் வீட்டிலிருந்து வந்திருந்த உணவை வெளியில் எடுத்து இருவருக்குமாய் தட்டில் பரிமாறினாள். 

பார்வையாலேயே அவனை உண்ணுமாரு உந்த, உதட்டை வளைத்தவன் அவளின் பிடிவாதம் உணர்ந்து அவள் சொல்லிற்கு மறுசொல் இன்றி உண்டான். உண்டு, உழைத்த களைப்பு என்னை கீழே கிடத்தேன் என்று இம்சிக்க, குந்தவையை ஒருமுறை ஏறிட்டு பார்த்தவன் அங்கிருந்த மோட்டார் அறைக்குள் சென்று நீலாவின் பழைய புடவை ஒன்றை எடுத்துவந்து வெளியே மரத்தின் கீழ் விரித்தான். இவன் என்ன செய்கிறான் என்று பார்த்தபடியே உண்ட தட்டு, கேரியரை கழுவி அனைத்தையும் கூடையில் எடுத்து வைத்தாள் குந்தவை.

விரிப்பில் ஒருபுறம் உடலை கிடத்தியவன் சோம்பல் முறித்துவிட்டு தூக்கம் கலந்த பார்வையுடன் குந்தவை புறம் கையை நீட்டி அழைத்தான் தச்சன்.

“எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு இங்க வந்து கொஞ்ச நேரம் படுத்துக்கோ. எல்லோரும் சாப்பிட்டு ஓய்வெடுத்துட்டு தான் வருவாங்க. அதுக்குள்ள நாம ஒரு குட்டி தூக்கம் போட்ருவோம்.” 

சுற்றும் முற்றும் பார்த்த குந்தவை அவனருகில் வந்தமர்ந்து, “இங்கேயேவா?” என்று சந்தேகமாய் வினவ, 

“நம்ம தோட்டம் தான். வரும்போதே முள்வேலி வச்சி வாசலை அடைச்சிட்டு தான் வந்தேன். யாரும் வரமாட்டாங்க. குணாகிட்ட கூட இங்க வரவேண்டாம்னு சொல்லிட்டேன். அவன் வயல்லேயே இருந்துப்பான்.” என்றான் தச்சன் சமாதானமாய்.

“இருந்தாலும் எனக்கு ஒருமாதிரி இருக்கு. இப்படி வெட்ட வெளியில் படுத்து எனக்கு பழக்கமில்லை. நான் இப்படியே உட்கார்ந்துக்கிறேன்.” என்று மறுத்த குந்தவை அருகிலிருந்த மரத்தில் சாய்ந்து உட்கார்ந்துகொள்ள, தச்சன் சட்டென எழுந்து அவள் மடியில் தலைவைத்துக் கொண்டான்.

“டேய்…”

“ஷ்! சும்மா இருடி. இங்க யாரும் வரமாட்டாங்க. வேலியை நகர்த்திட்டு அப்படியே யாராவது வந்தாலும் என்ன ஆகிட போகுது இப்போ? என் பொண்டாட்டி கூடத்தானே இருக்கேன். யாரையும் தள்ளிக்கிட்டு வந்து ஜல்சா பண்ணிடலையே!” என்று வழக்கம் போல பேசி அவளிடம் வாங்கிகட்டிக் கொண்டான்.

“இடியே விழுந்தாலும் உன் புத்தி மாறவே மாறாதுடா.” 

“இடியே விழுந்தாலும் நீயும் உன் மனசுல என்ன ஓடுது... ஏன் இந்த திடீர் முடிவு? மாற்றம்? எல்லாம்னு எதுவும் சொல்லிட மாட்ட.” என்று அவனும் பதிலுக்கு முறைக்க, குந்தவையின் விரல்கள் தன்போல அவன் சிகைக்குள் புகுந்துகொண்டது.

“விடமாட்டீயே… முன்னாடி எப்போதும் ஏதோ ஒரு அலைப்புரிதல், நிதானமின்மை இருந்துச்சு. நான் நினைச்சபடி நீ இல்லை. உன்னோட அமையவிருந்த வாழ்க்கையும் தடுக்க முடியல. எனக்கு பிடிக்காத பலவிஷயத்தை நீ செஞ்ச. இதற்கெல்லாம் மேல நிகழ்ந்த அப்பாவோட திடீர் இழப்பு. எல்லாமே என்னை நுனியில் நிக்க வச்சிது. அப்பாவோட இடத்தை நான் நிரப்பணும்னு முயற்சி பண்ணேன். அதை முழுசா நிறைவேற்ற முடியலைன்னாலும் ஓரளவு குடும்பத்தை விழாம நிறுத்திட்டேன். அந்த நிம்மதி எனக்கு இப்போ இருக்கு. வானதியும் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டா. ஆஹோ ஓஹோன்னு இல்லைனாலும் கைக்கு வருமானம் வருது. அப்போவோட பி.எப். இன்ஷுரன்ஸ் எல்லாத்தையும் எப்.டில போட்டுட்டேன். இனி வானதிக்கு ஒரு துணையை ஏற்படுத்தி கொடுத்துட்டா போதும்… அதையும் செஞ்சிடுவேன். எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா…” 

“என்னனு சொல்லுடி.”

“ஆரம்பத்தில் நம்பிக்கையா இருந்த நீ இப்போ தடுமாறுற. முன்ன இருந்த நம்பிக்கை இப்போ உன்கிட்ட இல்லை.” என்று அவன் முகத்தை அழுத்தமாய் பார்த்து சொல்ல, அவளின் விழி வீச்சை எதிர்கொள்ள முடியாமல் விழி தாழ்த்தினான் தச்சன்.

“உன்னோட நம்பிக்கையை மீட்டெடுக்கணும். நீ மேல வரணும்.”

“எனக்காக நீ இப்படி வந்து கஷ்டப்பட வேண்டாம் குந்தவை. நான் ஏதாவது பண்ணி மேல வந்துருவேன். நீ இன்னும் மேல படியேன்.” என்க, எங்கோ வெறித்தபடி, “வேண்டாம்.” என்றாள் குந்தவை.

“ஏன்?”

“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.”

“ப்ச்… படிக்கிறதை தள்ளிப்போடக் கூடாது குந்தவை. சூட்டோடு சூடா படிச்சிடனும். இடையில் விட்டுப்போனா அப்புறம் அப்படியே தள்ளிப் போயிடும். ஏற்கனவே ஒரு மாசம் எதையும் யோசிக்காம விட்டுட்டோம். நான் இங்க பக்கதுல எந்த காலேஜ்ல நல்லா சொல்லித் தராங்கன்னு விசாரிக்கவா?” என்று தச்சன் கரிசனமாய் கூற அவள் சுணங்கினாள்.

“நீ படிக்க வைக்கிறேன்னு சொல்லு. படிக்கிறேன். இல்லையா நானா எப்போ என் தேவைகளை பார்த்துக்கிற அளவுக்கு முன்னேறேனோ அப்போ படிச்சிப்பேன். என்னோட படிப்பு செலவையும் மாமா மேல திணிச்சு அவரை சார்ந்திருக்க விரும்பல.” என்றாள் ஒரேபோடாய்.

“ஷப்பா… தன்மானச் சிகரமே… இப்படியெல்லாம் இருந்தா முடியாதுடி.” என்று சலித்துக் கொண்டவனுக்கு அவளது கோரிக்கைகளை நினைத்து ஆயாசமாய் வந்தது.

“என்ன முடியாது? அதெல்லாம் முடியும். என்னை என் போக்கில் விட்டிரு இல்லைன்னா என்னை படிக்க வைக்கிற அளவுக்கு நீ வளரு…” என்றாள் அவளும் தன்பிடியில் அழுத்தமாய்.

“அங்க சுத்தி இங்க சுத்தி நீ ஒழுங்கா வேலை பாருடான்னு சொல்ல வர… ரைட்டு விடு… இந்த தச்சன் முதல் வேலையா சம்பாரிக்கிறான்! பொண்டாட்டிக்கு புது போன் வாங்கித் தரான்! அப்புறம் அவளை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கப் போறான்!” 

“முதல்ல அத்தைக்கு மாமாவுக்கு ஏதாவது வாங்கிக் கொடு. அப்புறம் எனக்கு செய்யலாம்.”

“தங்கள் சித்தம் குந்தவை தேவியாரே.” என்று தச்சன் தலையசைத்து சிரிக்க, விரல்களை குவித்து அவன் கன்னத்தை கிள்ளியவள் குவிந்திருந்த தன் விரல்களுக்கே முத்தம் வைத்தாள் அவனுக்கே வைத்தது போல…

“இதெல்லாம் போங்கு…” என்று முணுமுணுத்தவன் அவள் உணரும் முன்னரே எக்கி அவளிழதில் அழுத்தமாய் துரித முத்தம் ஒன்றை வைத்துவிட்டு விலகினான்.

“வெளில இருந்தா இப்படி கொடுக்கணும்.” என்று தன் முந்திய செயலுக்கு விளக்கம் சொன்னவன் மீண்டும் எக்கி, “வீட்டுல இருந்தா இப்படி…” என்று டெமோ காட்டுவது போல அவளுக்கு அவகாசம் தராது அவளிழதலை வன்மையாய் கவ்வ, திமிறிக்கொண்டு அவனை தள்ளினாள் குந்தவை.

“பிராடு… விவஸ்தை கெட்டவன்… வெக்கமே கிடையாதுடா உனக்கு.” 

“எல்லாம் ஏற்கனவே தெரிஞ்சது தானே! நீயும் ஓயாம இதையே தான் சொல்லிட்டு இருக்க. புதுசா ஏதாவது சொல்லுடி.” என்று சிரிக்க, அவன் தோளை பிடித்து அவனை மடியிலிருந்து கீழிறக்கினாள் குந்தவை.

“என்ன ஆனாலும் உன் வாய் கொழுப்புக்கு ஒன்னும் குறைச்சல் இருக்க மாட்டேங்குது. எழுந்திரு. சாப்பிட்டு முடிச்சு வேலைக்கு ஆளுங்க வந்திருப்பாங்க.” 

“பொறுமையா போகலாம்டி. அவசரமில்லை.” என்றவன் சட்டமாய் படுத்துக்கொண்டான்.

“இப்படி நீ தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு தான் உனக்கான அடையாளம் இல்லாம தடுமாறிட்டு இருக்க. சாதிக்கனும்னா உழைப்பை போடணும். உழைப்பு இல்லாம எதுவுமே வராது.” என்ற குந்தவையின் வார்த்தைகளில் அழுத்தம் கூட, 

“எல்லாம் எங்களுக்கும் தெரியும்.” என்ற தச்சனும் இறுகினான். வார்த்தைகளும் வலுத்தது.

“உனக்கு தெரியுற லட்சணம் தான் எனக்கு தெரியுமே. சாவுகாசமா இருந்துட்டு இறுதியில பலன் வரலைன்னு ஐயோ அம்மான்னு புலம்ப வேண்டியது. என் நிலத்தை யாருக்கும் கொடுக்க மாட்டேன்னு வீராவசனம் பேசவேண்டியது. ஆனா உன்கிட்ட இருக்கிற நிலத்துக்காக புதுசா என்ன செஞ்ச நீ? மாமா என்ன பண்றாங்களோ அதைகூட நீ ஒழுங்கா செய்யல. அப்புறம் எப்படி முன்னுக்கு வரமுடியும்? பேர் வாங்கமுடியும்? நஷ்டம் இல்லாம ஓட்டுறதே பெரும்பாடா இருக்கும் போலிருக்கு. இதில சபதம் வேற…”

“ஒருநாள் வந்துட்டு விவசாயத்தையே கரைச்சு குடிச்சவ மாதிரி பேசுற? நான் எதுவுமே செய்யலைன்னு வசனம் பேசுறீயே... அதை நீ பார்த்தியா? ஏதோ ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கிடுச்சு… அதுக்காக எனக்கு ஒண்ணுமே தெரியாது, திண்ணுட்டு தூங்கத்தான் தெரியும்னு நீயா முடிவு பண்ணிடுவீயா? பயிரெல்லாம் வளர்ந்து நெல்மணி வர ஆரம்பிச்சிடுச்சு. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அறுப்பு வந்துடும். மகசூல் கம்மியானாலும் அனுபவம் நிறைய கிடைச்சிருக்கு. அடுத்த போகத்துக்கு என்ன பண்றேன்னு பாரு… இனிமே நீ இங்க ஒன்னும் புடுங்க வேண்டாம். வீட்டிலேயே என்னவோ பண்ணிக்கோ. இங்க வேலையெல்லாம் நான் பார்த்துப்பேன். எனக்கு யாரோட துணையும் வேண்டாம்.” 

“பேச்சு எல்லாம் நல்லாத்தான் பேசுற. செயல் தான் என்ன ஆகும்னு தெரியல. என்னால வீட்டில சும்மா இருக்க முடியாது. நான் இங்கத் தான் வருவேன். நிலத்தில் இறங்கி வேலை செய்றதெல்லாம் எனக்கு ஒத்துவராது. அதை நீ பார்த்துக்கோ மத்ததை நான் பார்த்துப்பேன்.” என்றாள் அவளும் பிடிவாதமாய்.

“என்னவோ பண்ணுடி… நீயும் உன் பிடிவாதமும்.” என்று கடுப்படித்தவன் எழுந்து வேலை நடக்கும் இடம்நோக்கி நடைபோட்டான். அவன் பின்னேயே குந்தவையும் செல்ல, இருவரும் அதன் பிறகு பேசிக்கொள்ளவில்லை. 

***

“முதல் முறையா நம்ம வயலுக்கு போயிருக்க. எப்படி இருக்குமா? எல்லாம் சரியா நடக்குதா? பையன் ஒழுங்கா இருக்கானா?” அந்தி சாய்ந்து வேலை அனைத்தும் நிறைவான பின் உணவும் முடிந்து ஓய்வாய் ஆங்காங்கு தூணில் சாய்ந்து அனைவரும் அமர்ந்திருக்க, அன்பரசன் ஏதோ கணக்கு பார்த்தபடி குந்தவையிடம் பேச்சு கொடுத்தார்.

“என்னை வேவு பார்க்கத்தான் அவளை அனுப்புனீங்களா?” குந்தவை பதில் கூறும் முன்னரே முந்திக்கொண்டு எகிறினான் தச்சன்.

“ஏலேய்! நீ என்ன பண்றேன்னு குந்தவை அங்க வந்து வேவு பார்த்து சொல்லித்தான் தெரியனும்னு இல்லை. எனக்கு செய்தி தானா வந்துடும். நீ கொஞ்சம் அடங்கு.” என்று அடக்கினார் அன்பரசன் அவனுக்கு அப்பனாய்.

“அதுதானே! நீங்க தான் இந்த ஊர் முழுக்க ஸ்பை வச்சிருக்கீங்களே.” என்று தச்சன் முணுக, குந்தவை அவனை ஒருபார்வை பார்த்துவிட்டு அன்பரசனுக்கு பதில் கொடுத்தாள்.

“பரவாயில்லை மாமா. எனக்கு தான் இன்னும் எதுவும் பிடிபடலை. இன்னைக்கு நம்ம நிலத்துக்கு வர்ற கண்மாய், வாய்க்கால் தூர்வாருற வேலை நடந்துச்சு. நாளைக்கு முடிஞ்சிடும்னு நினைக்கிறன்.”

“அது முடிஞ்சாலும் இப்போ பயன்தராதுமா. இந்த முறை மேட்டூர் அணை திறப்பு தள்ளிப்போகும் போலிருக்கு. கர்நாடகாவிலிருந்து வரத்து குறைஞ்சிடுச்சாம். அணை நிரம்பி, ஆத்துல திறந்துவிட்டு நம்ம இடத்துக்கு வரமுன்னாடியே நாம அறுவடை முடிச்சிடுவோம்.” என்றார் அன்பரசன் கவலையாய்.

“என்னங்க இப்படி சொல்றீங்க? நான் வந்துடும்னு நினைச்சேன்.” என்று நீலாவும் ஆதங்கப்பட, அதை ஆமோதிக்கும் விதமாய் அன்பரசன்,

“என்னைக்கு நாம நினைக்கிறது நடந்திருக்கு? வரும்னு நினைப்போம் வராது. இல்லைனா பத்தாது.”

“இப்படி லேட்டா திறந்துவிட்டா வேஸ்ட் தானே மாமா? யாருக்குமே இதனால் பயன் இல்லையே.” இருவரின் பேச்சில் தொனித்த வருத்தத்தையும் உன்னிப்பாய் கவனித்த குந்தவை யோசனையுடன் வினா எழுப்பினாள்.

“அப்படி சொல்லிட முடியாதுமா. பொதுவா குறுவை சாகுபடி சில இடங்களில் மே மாசமும் சில இடங்களில் ஜூன், ஜூலையிலும் தொடங்கும். அதிலிருந்து நூற்றிருபது நாள் தான் கணக்கு. அதுக்குள்ள நெல்மணி நல்லா வளர்ந்து அறுவடைக்கு தயாராகிடும். ஒருசில ரகம் நூறு நாளிலேயே மகசூல் கொடுத்துடும். எழுபத்தைந்து நாள் பயிரும் இருக்கு. நாம எந்த ரகத்தை விதைக்கிறோமோ அதை பொறுத்து அறுவடை மாதம் மாறுபடும். நம்ம ஊர் பக்கம் ஜூன் மாசம் பயிரிட்டு தான் பழக்கம். ஆனா இந்த முறை நாம சீக்கிரமே விதைச்சிட்டோம். போன வருஷமே தேவைக்கு அதிகமாகவே மழை பெய்ததால் நிலத்தடி நீரும் உசந்து பயிரும் நல்லா வந்திருக்கு. சீக்கிரம் அறுவடை பண்ணிடலாம். இங்க பக்கத்து ஊரில் லேட்டா விதைப்பு நடந்துச்சு. தாமதமா காவிரி பாய்ஞ்சா அவங்களுக்கு உபயோகமா இருக்கும். முன்னாடியே காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டா நம்ம பயிர் இன்னும் செழிப்பாகும். என்னதான் நிலத்தடி நீர் இருந்தாலும் மலைப்பகுதியிலிருந்து பிரத்யேகமான தாதுக்களை அடிச்சிட்டு வரும் ஆத்து நீர் வயலில் பாயுறதுக்கு ஈடாகாது. எதுவும் நம்ம கையில் இல்லைமா... நம்ம பொழப்பு வானம் பார்த்து தான் ஓடுது.” குந்தவையின் ஆர்வத்தில் மகிழ்ந்து விளக்கமாய் அன்பரசன் பதில் கூற, குந்தவையும் உரையாடலில் இயல்பாய் தன்னை புகுத்திக் கொண்டாள்.

“ச்சு... வருத்தமா இருக்கு மாமா. நீங்க இங்க தண்ணீர் வருமோ வராதோ? அறுவடைக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சி குழம்பி, காவிரியை எப்ப திறந்து விடுவாங்கன்னு காத்திட்டு இருக்கீங்க. ஆனா பாருங்க பல இடங்களில் தண்ணீர் விரையம் ஆகிட்டு இருக்கு. 

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும்போது கூட சினிமா காட்சிகளில் தண்ணீருக்கு பஞ்சமில்லை. ஆனா நாம கேட்டா மட்டும் தண்ணி இல்லைன்னு சொல்றாங்க. எத்தனை முறை ரீடேக் வாங்கி ஒரே சீனை எடுப்பாங்களோ... அத்தனை முறையும் எவ்வளவு தண்ணீர் விரையமாகுது. தவிர்க்கக்கூடிய நிலையில் இருந்தாலும் பெரும்பான்மையாய் அவங்க மழையில் நடக்கிற சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகளை தவிர்க்கிறதில்லை. அதேமாதிரி தான் இந்த குளிர்பான கம்பெனியும். நிலத்தடி நீரை உறிஞ்சி அதில் ஏதேதோ கலந்து கடைசியில் உடலுக்கு கெடுதல் தர சாறை தான் தராங்க. தண்ணியை உறிஞ்சாமல் இருந்தால் அது விவசாயத்திற்காவது பயன்படும்.”

“எல்லாருக்கும் விதவிதமா சாப்பிடனும்னு ஆசை இருக்கிற அளவுக்கு அதை விளைவிப்பவர்கள் குறைஞ்சிட்டு வராங்க... அதனால் வரும் காலங்களில் சாப்பாட்டுக்கு பஞ்சம் வரும், விலைவாசி ஏறும்னு புரியுறது இல்லை. எல்லாத் துறையும் வளர்ச்சிப் பாதையில் போயிட்டு இருக்கும் போது அதற்கு நேரெதிரா பாதாளத்திற்கு போற துறை இதுதான். நாட்டின் முதுகெழும்புன்னு சொல்லி சொல்லியே முதுகில் சவாரி செஞ்சு படுக்க வச்சிட்டாங்க. மற்ற துறைகளுக்கு கொடுக்கும் ஊக்கம் அரசிடமிருந்தே விவசாயத்திற்கு கிடைக்காதப்போ சாதாரண மனுஷங்களை குறை சொல்லி பிரயோஜனம் இல்லையே. கும்பிடுற கடவுள் மேலையும் உசுரா நினைக்குற நிலத்தையும் நம்பித் தான் இன்னமும் இதை செஞ்சிட்டு இருக்கோம். நல்லதே நடக்கும்னு நம்புவோம்.”

பேச்சுக்கள் இறுக்கமாக தச்சனுக்கு அந்த சூழ்நிலையில் துளியும் நாட்டமில்லை, “நம்பிக்கை தானே எல்லாம். சோக கீதம் வாசிக்காம போய் தூங்குங்க எல்லோரும். நீங்க இப்படி பட்டிமன்றம் போடுறதால தீர்வு கிடைச்சிடப் போறதில்லை.” என்றவன் எழுந்துகொள்ள,

“அதுதானே உருப்படியான பேச்செல்லாம் சாருக்கு அலர்ஜி ஆச்சே… உடனே சபையை கலச்சிடுவாறு… ராஜன் தான் இதிலெல்லாம் கெட்டி. விஷயாதி.”  என்று பொருமினார் அன்பரசன்.

ராஜராஜனை தூக்கி வைத்து பேசவும் தச்சனைப் பற்றி சொல்லவும் வேண்டுமா! முகக்கோணலுடன், “ஆமாம் இப்போ அதுக்கு என்னங்குற? நம்ம கண்ட்ரோலில் இல்லாத விஷயத்தை எதுக்கு தேவையில்லாம பேசி வருத்தத்தை வாலண்டியரா வாங்கிக்கணும்? நடக்க வேண்டியது நடந்தே தீரும். இந்த போகத்துக்கு நமக்கு இருக்கிற தண்ணியே போதும். சமாளிச்சிடலாம்.” என்று அசராது பேசியவன் கண்ணாலே குந்தவையும் எழச் சொல்ல அவள் அசையாது அமர்ந்திருந்தாள்.

“உனக்கு வேற தனியா சொல்லனுமா குந்தவை? வெட்டியா இங்க உட்கார்ந்து இல்லாததையும் பொல்லாததையும் பேசிட்டு வந்து அப்புறம் என்னை தொல்லை பண்ணுவ… எழுந்து வா.” என்று தச்சன் குந்தவையை அனைவர் முன்னும் அதட்ட, வரப்போகும் விபரீதம் உணர்ந்து அவர்களை விரட்டினார் நீலா.

“நேரமாச்சு போய் தூங்குங்க. நாளைக்கு நேரமே ராஜன் வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கான். அவனை பார்த்துட்டு அப்புறம் வயலுக்கு போகலாம்.” 

நீலா நினைத்தது போலவே தச்சனை முறைத்துக்கொண்டே எழுந்து அவனைத் தொடர்ந்தாள் குந்தவை.

அறைக்குள் நுழைந்ததுமே கடுப்புடன் மெத்தையில் ஏறி அமர்ந்த குந்தவை, முறைப்பதை தொடர்ந்து, “திண்ணக்கம் அதிகம்டா உனக்கு. எல்லோர் முன்னாடியும் அப்படி அதட்டுற?”

அவளது பார்வையை தூசு போல தட்டியவன் கதவடைத்துவிட்டு, “ஏன் நீ என்னை திட்டினதே இல்லையோ? நீ எப்படி பேசுவேன்னு இங்க இருக்குற எல்லோருக்குமே தெரியும். நீலாவே பிரச்சனை வேண்டாம்னு தான் நம்மளை அங்கிருந்து விரட்டி விட்டுச்சு. நீலாவையே பதற வச்சிட்டடி நீ!” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு அவளை நெருங்கி அணைத்துக்கொள்ள, அவனை தள்ளிவிட்டு முகத்தை திருப்பினாள் குந்தவை.

“என் மேல கோபமா இருக்கேன்னு நினைச்சேன். மதியம் சண்டைக்கு அப்புறம் நீ பேசவே இல்லை. முறுக்கிக்கிட்டு போன. இப்போ என்ன இழையுற?”

“ஆமா இருந்தேன். அதுக்காக அப்படியே இருந்திட முடியுமா? உன்கிட்ட பேசாம இருந்து என்ன சாதிச்சிடப் போறேன்.” எப்போதும் போல அனாயசமான பேச்சு அவனிடம்.

“அப்போ என்னோட பேசிட்டு இருந்து என்ன சாதிக்க போற? இல்லை என்ன சாதிச்ச?” என்றாள் அவளும் இடக்காய்.

“சரி தான்… உன்கிட்ட பேசினாலே சண்டை தான் வருது. இதில் எங்கிருந்து சாதிக்கிறது!” என்று தச்சனும் அலுப்புடன் சொல்லிவிட்டு படுத்துக்கொள்ள, உர்ரென்று முகத்தை தூக்கியவள், “அப்போ இனிமே என்கூட பேசாத.” என்றுவிட்டு அவனுக்கு மறுபுறம் முதுகுகாட்டி படுத்துக்கொண்டாள்.

அவளது கோபச் சிணுங்கள் அவனை குஷியாக்கிவிட்ட குந்தவையை பின்னிருந்து இறுக அணைத்தவன், “இதுகூட நல்லாயிருக்கே… பேசினா தான் எல்லாம் தடைபடுது. நேரமும் சக்தியும் விரையமாகுது. நாம நேரடியா காரியத்தில் இறங்கிட வேண்டியது தான்.” என்று வார்த்தைகளாலும், இதழொற்றல்களாலும் அவள் செவிகளைத் தீண்ட, குந்தவை இதழ்களில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. 

“கொஞ்ச நேரமாவது கோபமா இருக்க விடுறீயா என்னை? ஏதாவது பேசி மயக்கிடுற…”

“போச்சுடா… என்னதிது புதுக்கதை? நான் உன்னை மயக்குறேனா! கோபமா இருக்க விடுறது இல்லையா? பாதிநேரம் நீ முறைச்சிக்கிட்டு தான்டி சுத்திட்டு இருக்க.” என்று இவன் சிரிக்க, தன் வயிற்றில் பதிந்திருந்த அவன் கையை நறுக்கென்று கிள்ளினாள்.

“ஷ்..ஆ… வாய் மட்டுமில்லை கையும் நீளம்டி உனக்கு. பொசுக்கு பொசுக்குனு கைநீட்டுற. வளர்ப்பு சரியில்லை. என் மாமனாரை சொல்லணும்… உனக்கு அதிகம் இடம்கொடுத்து பழக்கி விட்டுட்டாரு. அவரோட வேலைக்கான வினையை நான் அனுபவிக்கிறேன்.” என்று பேச்சுவாக்கில் சொல்ல, குந்தவை சட்டென அமைதியாகிவிட்டாள். அதை சில வினாடிகள் கழித்தே உணர்ந்த தச்சன் எம்பி அவள் முகத்தைப் பார்க்க, நெற்றியில் மட்டும் கோடுகள் படர்ந்து அவளது இறுக்கத்தை காட்டியது.

“என்ன அமைதியாகிட்ட? மாமா நியாபகம் வந்துடுச்சா?” 

தச்சனின் குரல் பரிவாய் ஒலிக்க, அவன் புறம் திரும்பிப் படுத்தவள், முறுவலிக்க முற்பட்டு தோற்றவளாய், “அதெப்படி வராம இருக்கும். உருவமா இல்லைனாலும் என்னோடவே என் நினைவுகளில் தான் இருக்காங்க. என் மேல முழு நம்பிக்கை வச்சு எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. என்ன உன் விஷயத்துல மட்டும் தான் கொஞ்சம் தகராறு ஆகிட்டு. நீ வேணாம்ன்னு சொன்னதை அவர் காதிலே வாங்கல. ஏதோ வசியம் பண்ணிட்ட அவரை.”

“அது அப்படி இருக்காது. இந்த பையன் அப்பாவியா இருக்கான். நம்ம பொண்ணை கட்டிமேயக்க இந்த இளிச்சவாயனை விட்டால் வேற யாரும் கிடைக்க மாட்டாங்கன்னு அவருக்கு புரிஞ்சிருக்கும். அதுதான் புடுச்சு கட்டிவச்சிட்டாரு.” என்றான் சிரியாது.

“என்னது கட்டி மேய்க்கிறியா?” என்று குந்தவை விழிகளை உருட்ட, அவளைச் சுற்றி கரங்களை போட்டு இறுக அணைத்தவன், “இப்படி கட்டிக்கிறதையும் சொல்லலாம்.”

“நல்லா சமாளிக்க கத்துகிட்ட.”

“இல்லைன்னா உன்கிட்ட முடியுமா? அடக்கி உட்கார வச்சிட மாட்ட?” என்று தச்சன் குறை போல சொல்ல, அவனை விட்டு விலகி அவன் முகம் பார்த்த குந்தவை,

“அடக்குறனா? உன் நல்லதுக்கு தான் எல்லாம் சொல்றேன்.”

“நம்ம நல்லதுக்குன்னு வாயில வருதா பாரு…”

“அதை நான் தனியா வேற சொல்லனுமா? நான் செய்யுறதை பார்த்தாலே புரியலையா உனக்கு? எல்லாமே நம்ம எதிர்காலத்துக்கு தான் செய்றேன்.”

“அப்போ நீ என்கூட வயலுக்கு வர்றதும் அதுக்குத்தானா?” கிடைத்த சந்தர்ப்பத்தில் மதியம் விட்டதை மீண்டும் தொடர்ந்தான் தச்சன்.

“வேற எதுக்காம்? வேலைக்கு போறதில் சிக்கல் வந்தால் நான் அப்படியே வீட்டிலேயே இருந்திடுவேனா என்ன? ஏதாவது செய்யணும். அது நமக்காக இருந்துட்டு போகுது. அத்தானை கூட சேர்த்துகிட்டு வயலில் வேலை செய்ய உனக்கு விருப்பமில்லை. மாமாவையும் பக்கத்துல சேர்க்க மாட்டேங்குற. அதுதான் நான் வந்தேன்.”

“அப்போ உனக்கான அடையாளம்? நீ என்கூட வந்தா என் நிழல் தான் உன்னை பின்தொடரும். என்னோட கனவுகள் தான் உன்னோடதாவும். அது உனக்கு கண்டிப்பா பிடிக்காது. ஆரம்பத்திலிருந்தே நீ உனக்கான இடத்தை தான் தேடிட்டு இருக்க. இப்போவும் எதுவும் கெட்டுப்போயிடலை. லோன் போடுவோம் நீ மேல படி. இல்லைனா இந்த கவர்மென்ட் வேலைக்கு எல்லாம் எக்ஸாம் வைக்கிறாங்களே. அதை எழுது. ஜம்முனு ஆபீசில் வேலை பாரு. இன்னைக்கு ஒரு நாள் வயலுக்கு வந்ததிலேயே களைச்சி போயிட்ட…” என்று ஆதங்கமாய், பரிவாய் தனக்காய் யோசிக்கும் தச்சனை காணக்காண முன்பு எழாத எண்ணங்கள் எல்லாம் அவளுள் எழுந்தது. 

அதன் பிரதிபலிப்பாய் பார்வை ரசனையாய் அவன் மீது படிய, அவனது விரல்கள் அவள் வதனத்தில் கோடிழுத்தது.

“பொண்ணு பார்க்க வந்தப்போ இப்படி தான்டி என்னை பார்த்து வச்ச… அதுக்கப்புறம் இப்போ தான் என்னை முழுங்குற மாதிரி பார்க்கிற.” மையலுடன் வெளிப்பட்ட அவனது வார்த்தைகளுக்கு இணையாய் அவளது பார்வையும் அவனை ஆசையாய் வருட, ஒன்றிரண்டு வினாடிகள் கழித்தே அவன் சொன்னது அவள் கருத்தில் பதிந்து, மையலிலிருந்து அவளை எழுப்பியது.

“என்னது பொண்ணு பார்க்க வந்தப்போவா? நான் இப்படியெல்லாம் பார்த்திருக்க வாய்ப்பே இல்லையே… கல்யாணமாகி இத்தனை நாளில் இப்போதான்டா நீ என்னை இம்ப்ரஸ் பண்ணியிருக்க. லேட் பிக்கப் நீ…” என்று குந்தவை புருவம் உயர்த்தி இகழ, தச்சன் தன் ட்ரேட்மார்க் குரலில்,

“அடியேய் பொண்ணு பார்க்க வந்தப்போ என்னமா சைட் அடிச்சு எனக்கே டஃப் கொடுத்த… இப்போ ஒண்ணுமே தெரியாத மாதிரி பீலா விடுற. நான் தான் பார்த்தேனே அங்குலம் அங்குலமா என்னை சைட் அடிச்சடி நீ… நான் கூட குட் பாயா இவ்வளவு நாளா உன்னை அப்படியெல்லாம் சைட் அடிச்சது இல்லை.” என்று பாவம் போல முடிக்க, குந்தவையை கேட்கவும் வேண்டுமா… ஒரே தள்ளு… தச்சனை தள்ளப் பார்த்தாள். அந்தோபரிதாபம் அவளின் அசைவுகளை நன்கு தெரிந்து வைத்திருந்தவன் அவளை அலேக்காய் மடக்கி தன் எடையை அவள் மீது சரித்து அவளை அமுக்கிவிட்டான்.

அவனது திடீர் தாக்குதலில் மூச்சு வாங்கியவள் அவன் தாடியை பிடித்திழுத்து, “பிராடு… பேச்சைப் பாரு. இவர் பெரிய மன்மதன் இவரை சைட் அடிக்குறாங்க. சைட்டுக்குற வார்த்தையை கேட்டாலே கண்ணை நோண்டிடுவேன்… இதுல நான் இவரை சைட் அடிச்சேனாம். எண்ணம் எப்படி போகுது பாரு உனக்கு. முகம் முழுக்க முடியை வளர்த்து வச்சி வாய் எங்கன்னு தேட வச்சவன்டா நீ… என்ன ஸ்டைலோ கருமமோ இந்த தாடியை எடுத்தாத்தான் என்னவாம்? தாடியை எடுத்துட்டு முறுக்கு மீசை வச்சா கொஞ்சம் பார்க்கிற மாதிரியாவது இருப்ப.”

எப்போதும் திட்டுபவள் தன்னை ரசனையுடன் கவனித்தும் இருக்கிறாள் என்று தெரிந்துகொண்டதில் உள்ளம் குத்தாட்டம் போட சீட்டியடித்தவன், “அமுக்குணி. மனசுக்குள்ள இதெல்லாம் நினைச்சிருக்க. ஆனால் இதுவரை இதை பத்தி மூச்சுவிடல… நாளைக்கு பாரு சார் எப்படி ரெடி ஆகுறாருன்னு…”

“அப்படியே இந்த பேண்ட்டை தூர போட்டுட்டு மாமா மாதிரி வேட்டி கட்டிக்கோ. உனக்கு எடுப்பா பொருத்தமா இருக்கும்.” என்று குந்தவை கனாவுடன் சொல்ல, தச்சனின் எண்ணங்கள் இடக்காய் யோசித்து மீண்டது.

“இன்னும் வேற ஏதாவது பாக்கி இருந்தா சொல்லிடு. மொத்தமா செஞ்சிடுறேன். இப்படி கொஞ்ச கொஞ்சமா லிஸ்ட் போட்டா மலைப்பா இருக்குள்ள…”

“இப்போ நீ என்மேல இருக்குறது தான் மலை மாதிரி இருக்கு. நகருடா…”

“முடியாது போடி!”

“தள்ளுடா…”

“நீ சொல்றதை நான் கேட்கனும்னா நான் சொல்றதை நீ கேட்கணும்.”

“ஒரு ஆணியும் புடுங்க வேணாம். நான் இப்படியே தூங்கிடுவேன்.”

“தூங்கேன் பார்ப்போம்…” என்று சவாலாய் சொன்னவன் அவள் கழுத்து வளைவில் குறுகுறுப்பு மூட்ட, குந்தவை இடவலமாய் நெளிந்து புன்னகைக்க, சிறிது நேரத்திலேயே அவனின் கைவண்ணத்தில் அவளது புன்னகை சிரிப்பொலியாய் மாறி, உடலும் உள்ளமும் நெகிழ்ந்து நாணத்தை பூசிக்கொண்டது.

***

அதிகாலையே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்ல வேண்டும் என்று தெரிந்தும் மேலும் ஒரு பத்து நிமிடம் உறங்கிவிட்டு செல்லலாம் என்று நினைக்கும் போதே குந்தவை வந்து உலுக்க, எரிச்சலுடன் திரும்பிப் படுத்தான் தச்சன்.

“எழுந்திருடா. வயலில் மோட்டார் போடணுமே நேரமாச்சு. தண்ணீர் பாய்ச்சிட்டு தோட்டத்திலிருந்து அத்தான் வர்றதுக்குள்ள அவருக்கு இளநீர் எடுத்துட்டு வருவீயாம். அத்தை சொல்லச் சொன்னாங்க.” என்று குந்தவை அவசரமாய் அவனை எழுப்ப எந்த பதிலும் இல்லை அவனிடம்.

“எழுந்திருன்னு சொல்றேன்ல… வயலுக்கு போற எண்ணமே இல்லையா?” என்று குந்தவை மீண்டும் சத்தம் போட, பல்லை கடித்துக்கொண்டு போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்தி மறைந்துகொண்டான். அவனது செயல்கள் அவளது பொறுமையை சோதிக்கத்தான் செய்தது. 

“கொஞ்சமாவது பொறுப்பிருக்கா? நேத்து அவ்வளவு பேச்சு பேசிட்டு இப்போ இழுத்து போர்த்திக்கிட்டு தூங்குறதை பாரு… வாய்ச்சவடாலுக்குத் தான் லாயக்கு நீ.” என்று குந்தவை பொரிந்து தள்ள, போர்வையை விலக்கிவிட்டு கடுப்புடன் எழுந்தமர்ந்தான் தச்சன்.

“இன்னைக்கு ஒருநாள் சீக்கிரம் எழுந்துட்டு ஏன்டி என்னை படுத்துற… அவனுக்கு இளநீர் எடுக்கவெல்லாம் போக முடியாது. தண்ணியை குடிச்சிக்க சொல்லு இல்லைனா எனக்கு எப்போதும் கொடுக்குற பழைய கஞ்சியை குடிக்கச் சொல்லு. இளநீர் இல்லைனா தேஞ்சி போயிட மாட்டான்.”

“உடம்பு முழுக்க கொழுப்புடா உனக்கு… அத்தையை சொல்லணும். தடியனா வளர்த்து விட்டிருக்காங்க.”

“எதுக்கு இப்போ காலையிலேயே நீலாவை இழுக்குற?”

“அவ்வளவு அக்கறையும் பாசமும் இருந்தா அத்தை சொன்னதை செய்… அதை விட்டுட்டு வீண் காரணம் கண்டுபிடுச்சு அத்தான் மேல பகையை வளர்த்துட்டு இருக்க?”

“அவன் என்ன என்னோட எதிரியா நான் பகையை வளர்த்துக்க? சும்மா இதையே சொல்லிட்டு இருக்க?”

“அப்போ அவங்க யாரு உனக்கு?”

“இந்த நேரத்தில் இந்த பேச்சு தேவையா? நான் கிளம்புறேன்.” என்று எழ, அவனை தடுத்தாள் குந்தவை.

“என்னோட கேள்விக்கு பதிலை சொல்லிட்டு போ. அத்தான் யாரு உனக்கு?”

“இதென்ன கேள்வி. பதில் தெரிஞ்சிகிட்டே என் நேரத்தை வீணடிக்கிற குந்தவை. நகரு… எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று தச்சன் எரிந்து விழ, அவனை அழுத்தமாய் பார்த்து அவன் கையையும் இறுக பிடித்து நிறுத்தினாள் குந்தவை.

“என் கேள்விக்கான பதில் எனக்குத் தெரியும். ஆனா உனக்கு தெரியுமாங்குறது தான் எனக்கு சந்தேகம். பதில் சொல்லிட்டு உன் வேலையை பார்க்கப் போகலாம்.”

“ப்ச்… என்னடி ஏழரையை காலையிலேயே இழுக்குற. அவன் என் அண்ணன் தான் போதுமா? பதில் கிடைச்சிடுச்சா? நான் போகலாமா?”

“பதில் எனக்குத் தேவையில்லை. உனக்கு தான் தேவை. மனசுல ஏத்திக்கோ. அவங்க உன் அண்ணன். உன் கூட பிறந்தவங்க.”

“அதெல்லாம் உணரணும்டி… சும்மா சும்மா அவன் என் அண்ணன் அண்ணன்னு சொல்றதால அவன் மேல எனக்கு பாசம் பொத்துக்கிட்டு வந்துடாது. நானா உணரனும் அவன் என்கூட பிறந்தவன்னு… திவ்யா எப்படியோ அவனும் எனக்கு அப்படித்தான்னு என்னைக்கு எனக்கு தோணுதோ அப்போ நானே சரியாயிப்பேன். நீ அதுவரைக்கும் என்னை நச்சரிக்காம இருந்தாலே போதும். சும்மா குறுக்கால பூந்து எதையாவது செஞ்சிட்டு இருக்காத.” என்று கண்டிப்பு காட்ட, இது தேறாது என்று குந்தவை முனுகளுடன் நகர்ந்து கொண்டாள்.

அவள் நகர்ந்ததும் விரைவாய் கிளம்பி வயலுக்கு சென்று தண்ணீர் பாய்ச்சிவிட்டு திரும்பியவன் மறவாது தோட்டத்தில் இருந்து இளநீரும் எடுத்து வந்து நீலாவிடம் நீட்டினான்.

“எங்க உன் புள்ளை? வந்துட்டானா?” தச்சனின் கேள்வி அக்கறையின்றி ஒலித்தாலும் அவனது விழிகள் ராஜனை தேடின. 

ஏற்றுக்கொண்ட ஆர்டர்களை முடித்துவிட்டு சேர்க்க வேண்டியதை அதன் இடத்தில் சேர்த்துவிட்டு குடும்பத்துடன் மீதி வாழ்க்கையை தொடர வீட்டிற்கே வந்துவிடுவேன் என்று வானதி ஊருக்குச் சென்றவுடனேயே சொல்லிச் சென்றவன் இருபத்தைந்து நாட்கள் கழித்து மீண்டும் அன்று தான் வீடு வருவதாய் இருந்தது. அந்த பரபரப்பில் தான் நீலாவும் பெரிய மகனை கவனிக்கவென அவனுக்கு பிடித்த உணவுகளை மும்மரமாய் தயார் செய்துகொண்டிருந்தார். தச்சனும் அந்த இருபத்தைந்து நாட்களும் தன்னியல்பிலேயே சுற்றிக்கொண்டிருந்தான். ராஜன் வருகிறான் என்று தெரிந்ததும் அதிருப்தியும் சேர்ந்தே வந்து ஒட்டிக்கொண்டது.

“அண்ணன்னு கூப்பிடுன்னு எத்தனை முறை சொல்றது?” நீலா முறைப்புடன் மகனைக் கடிய, அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை தச்சன்.

“சீக்கிரம் சாப்பாடு எடுத்துவை. எனக்கு பசிக்குது.”

“குந்தவையை எடுத்து வைக்கச் சொல்றேன். ராஜன் பின்னாடி இருக்கான். போய் பாரு.” என்று நீலா வேலைக்கு இடையில் சொல்ல, தச்சன் நேராக திண்ணையில் சென்று அமர்ந்துகொண்டான். 

அவனைத் தொடர்ந்து பின்னேயே வந்த ராஜன் அவனருகில் உட்கார்ந்து, “இப்போ தான் வந்தீயா தச்சா? வயலுக்கு போயிருக்கேன்னு அம்மா சொன்னாங்க.” என்று இயல்பாய் பேச, தச்சனிடம் அந்த இயல்பு துளியுமில்லை.

“நான் வந்துட்டேன்னு தெரிஞ்சி தானே வந்து பேசுற… அப்புறம் என்ன இப்போதான் வந்தீயான்னு ஒரு கேள்வி?” என்று இடக்காய் தச்சன் வேண்டுமென்றே சொல்ல, இதழ்களை பெரிதாய் வளைத்தான் ராஜராஜன்.

“ஒண்ணா வளர்ந்திருந்தா எப்படி இருந்திருக்கும்னு கற்பனை பண்ணி, எல்லாத்தையும் தவற விட்டுட்டோமேன்னு வருத்தப்பட்டுட்டு இருந்தேன்… அதை ஈடுசெயுற மாதிரி நீ நடந்துகுற. எல்லாத்துக்கும் முகத்தை தூக்கிட்டு உன்னை யாரும் கண்டுக்கலைன்னு நீ பண்றதெல்லாம் பார்க்கும் போது வளர்ந்த சின்ன தம்பியா தெரியுற…”

அவனது பேச்சை கண்டும் காணாதது போல காட்டிக்கொண்டாலும் தச்சனால் தன் வறட்டுப் பிடிவாதத்தை இழுத்துப்பிடித்து வைத்திருக்க முடியவில்லை.

“என்னது சின்னத்தம்பியா?” என்று முகத்தை சுழித்து வினை புரிந்த தச்சன் தன்னையும் மறந்து குனிந்து ஒருமுறை தன்னை பார்த்துவிட்டு ராஜனிடம் அதே சுழிப்புடன், “சின்னத்தம்பி பிரபு மாதிரியா இருக்கேன்?” என்று கேட்க, ராஜன் சிரித்தே விட்டான். அவனின் சிரிப்பில் தச்சனின் முகம் மீண்டும் இறுகிவிட, சிரிப்பை மட்டுப்படுத்திய ராஜன்,

“கொழுகொழுன்னு அப்படி இருந்தாலும் நல்லாத்தான் இருப்ப… ஆனா களத்தில் இறங்கி வேலை செய்றீல்ல உடம்பு இப்படித்தான் இருக்கும். நீ தாடியை எடுத்துட்டு, மீசையை முறுக்கிவிட்டு, வேஷ்டி கட்டி நடந்துபோனா கம்பீரமா இருப்ப…” என்று சொல்லி தச்சனின் கன்னம் தட்டி, கையோடு எடுத்து வந்திருந்த பையையும் அவனிடம் நீட்டி, 

“உனக்காக வாங்கிட்டு வந்தேன்.” என்று அதை அவன் கையில் திணித்துவிட்டு முறுவலோடு எழுந்து சென்றுவிட, ராஜன் செல்வதையே பார்த்த தச்சன் அவன் மறைந்ததும் அவன் கொடுத்துவிட்டுச் சென்ற பையை பிரித்துப் பார்த்தான். அதில் கதர் வேட்டியும் நீலநிற முழுக்கை சட்டையும் இருந்தது.

‘பரவாயில்லை நமக்காக வாங்கிட்டு வந்திருக்கான். கொஞ்சம் பாசக்காரனா இருப்பான் போல... குந்தவை ஆசைப்பட்ட மாதிரி இன்னைக்கு இதை கட்டிட வேண்டியது தான்.’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவன், தாடியை மழித்து மீசையை முறுக்கிவிட்டு வேட்டி சட்டையில் வந்து நின்றதும் ராஜனின் மனம் குளிர்ந்துவிட்டது. அவனுக்கு குந்தவையும் இதையே சொல்லியிருப்பது தெரியாதே! தான் சொன்னதாலேயே தச்சன் இப்படி வந்து நிற்கிறான் என்று நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டான்.

“அட என்ன எல்லாம் புதுசா இருக்கு?” என்று அன்பரசன் மேலும் கீழும் இளைய மகனை பார்த்துவிட்டு தன் வேலையைத் தொடர,

“ராஜன் வாங்கிக்கொடுத்தது நல்லாயில்லாம இருக்குமா?” என்ற நீலாவின் குரல் உற்சாகமாய் சமையலறையிலிருந்து கேட்டது.

‘இது வேறையா?’ என்று சலித்துக்கொண்ட தச்சன் குந்தவையைத் தேட,

“அப்படியே உங்கப்பனாட்டம் இருக்க… இப்ப தான் உனக்கு கலையே வந்திருக்கு. குந்தவை மாட்டுக்கு வைக்கோல் வைக்க போயிருக்கா.” என்ற பதிலும் பாராட்டும் மங்களத்திடமிருந்து வந்தது. அவரிடம் தலையசைத்தவன் ஆவலுடன் குந்தவையை தேடிச் சென்று அவள் முன் நின்றான்.

“ஓய்… பொண்டாட்டி இங்க பாருடி… நீ இனி கஷ்டப்பட்டு சைட் அடிக்க வேண்டாம். அப்படியே நிமிர்ந்து பார்த்தா போதும் நீ வசதியா சைட் அடிக்க தாடியெல்லாம் எடுத்துட்டு ஐயா எப்படி ஜம்முனு வந்துட்டேன் பாரு…” என்று பற்பசை விளம்பரத்தில் வருவது போல் பளிச்சென்று பற்களை காட்டிக்கொண்டு நிற்க, நிமிர்ந்து அவனை ஒரு முறை முறைத்தவள் மீண்டும் தன் வேலையைத் தொடர, அவனின் உற்சாகம் வடிந்தது. 

“நிமிர்ந்துதான் பார்க்கச் சொன்னேன். முறைச்சு இல்லை.”

“நான் தான் நிமிர்ந்து பார்த்தேனே… உன் அண்ணன் வாங்கிக்கொடுத்ததை போட்டுகிட்டு பிலிம் காட்டிட்டு நிக்குற.” என்று அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னவள் கைகளை கழுவ, பற்களை நறநறவென கடித்த தச்சன் அங்கு குமித்து வைத்திருந்த வைக்கோலை எட்டி உதைத்துவிட்டு,

“போடி… உன்கிட்ட கேட்டேன் பாரு… இம்சைடி நீ… ஆசையா வந்தா கூட கடுப்பாக்கி விட்டுர்ற…” எரிச்சலுடன் ஆதங்கமும் சேர்ந்துகொள்ள அவள் புறம் கடினப்பார்வை வீசிவிட்டு, நிற்காமல் வீட்டு வாயிலை நோக்கி நடைபோட்டான். அவன் பின்னாலே ஓடிவந்த குந்தவை அவன் இடையை பிடித்து நிறுத்தி பின்னிருந்தே அவன் கன்னத்தில் அழுந்த இதழ் ஒற்றி எடுத்தாள்.

“உன்னை பார்த்ததும் இதுதான் செய்ய தோணுச்சு. வைக்கோல், பருத்தியெல்லாம் எடுத்ததால கை அழுக்கா இருந்துச்சு. அதுதான் சும்மா விளையாண்டேன். உடனே சாருக்கு கோபம் வந்துடுச்சு.” என்று கதை போல சொல்லி, துரிதமாய் அவனை அணைத்துவிட்டு விலக, தச்சன் முகத்தில் மறைந்த புன்னகை மீண்டும் உதித்தது.

“லூசு… கொஞ்ச நேரத்துல என்னை டென்ஷன் பண்ணிட்ட நீ…”

“இன்னைக்கான பிரியாணி கோட்டாவை கொடுக்காம விட்டா வரலாறு தப்பா பேசாது அதுதான் சும்மா…” என்று கண்சிமிட்டியவள், அவன் கரத்தினுள் தன் கரத்தை நுழைத்து, “இன்னைக்கு மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்துடு. அத்தைக்கு இன்னைக்கு நிறைய வேலை இருக்கு. தனியா அவ்வளவும் எப்படி செய்வாங்க. நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு மதியத்திற்கு மேல உன்கூட வயலுக்கு வரேன்.”

“நான் மதியம் வந்து உன்னை கூட்டிட்டு போறேன். நிறைய வேலையை இழுத்துப்போட்டு செய்யாத. நீலாவையும் செய்ய விடாத… அவன் விருந்து சாப்பாடு சாப்பிடலைன்னா ஒன்னும் ஆகிடப் போறதில்லை. சொல்லப்போனால் அவனுக்கு இருக்கிற தொப்பையாவது குறையும்.” என்று துடுக்காய் பேசி அசல் பிரியாணியை மீண்டுமொருமுறை காது எரிய எரிய அனுபவித்துவிட்டே அன்றைய வேலைக்குச் சென்றான் தச்சன்.

No comments:

Post a Comment

Most Popular