Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 7

 

*7*

“அப்படியே இரு. உள்ள வராத.” என்ற மறுப்புக் குரலில் குழப்பமாய் புருவம் சுருக்கியவன், உள்ளே நுழையாமல் குதித்து திண்ணை திண்டில் அமர்ந்து கைகளை தரையில் ஊன்றி கால்களை ஆட்டிக்கொண்டே, “ஏனாம்?”

ஒன்றுமே நடவாதது போல அவன் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருக்கும் விதம் நீலாவுக்கு எரிச்சலைத் தர, அதை சிறிதும் மறைக்காமல் பெரிதாய் வெளிக்காட்ட காத்திருந்தவர் அதை அடக்கிக்கொண்டு, “துக்கம் நடந்த வீட்டிலிருந்து வந்தால் குளிக்கணும்னு தெரியாதா? வீட்டை சுத்தி கொல்லைக்கு போய் குளிச்சிட்டு உள்ள வா.” என்று அதட்ட, “இதை சாதாரணமா சொல்ல வேண்டியது தானே? ஏன் சீரியல் வில்லி மாதிரி எக்ஸ்ட்ரா எபெக்ட் எல்லாம் கொடுத்து உர்ருனு முறைச்சிகிட்டே சொல்ற?” என்று குறைபட்டுக் கொண்டவன் வீட்டிற்குள் நுழையாமல் கொல்லைப்புறத்தில் குளிக்கச் செல்ல அமைதியாய் நீலா துண்டை வைத்துவிட்டு நகர்ந்துவிட்டார். குளித்துவிட்டு துண்டை மட்டும் இடுப்பில் சுற்றியவன் தலையை துவட்டிக்கொண்டே உள்ளே நுழைய, அவனையே விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றாள் திவ்யா.

அவள் தலையை தட்டியவன், “நீ இன்னும் உன் வீட்டுக்கு போகலையா? உன் வீட்டுக்காரரும் இங்கேயே தான் இருக்காரா?” என்று இயல்பாய் வழக்கமாய் பேசும் அலட்சியத் தொனியிலேயே பேச திவ்யாவின் முகம் இருண்டது.

“ஏன் நான் இங்கே இருக்கக் கூடாதா?” என்று அழுத்தமாய் புருவங்களை ஏற்றி இறக்கிக் கேட்க,

“போடி லூசு… எப்போதும் காலில் வெந்நீர் கொட்டிகிட்ட மாதிரி இங்க வந்தாலே உன் வீட்டுக்கு ஓடி ஓடி போவ, இப்போ இவ்வளவு நாள் இங்க இருக்கியே அதுதான் கேட்டேன்.” என்றவன் தலையை திருப்பி, “ம்மா ஒரு ஸ்ட்ராங்க காஃபி,” என்று அடுப்பறை நோக்கி குரலை செலுத்தினான்.

அவனது வேண்டலுக்கு பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்க, விழிகளை சுருக்கியவன் திவ்யாவை நெருங்கி மெல்லிய குரலில், “என்ன விஷயம் நீலாவதி உர்ருனு இருக்கு? இப்போ பாத்திரமும் உருளுது?”

“நீயே கேட்டுக்கோ.” என்றுவிட்டு அவள் நகரப்பார்க்க,

“நில்லுடி கேட்டதுக்கு பதில் சொல்லாம போற? உன் வீட்டுக்காரரும் இங்க தான் இருக்காரா? அவருக்கு இங்கே பொழுது போகாதே… அவர் இருந்தா தோப்புக்கு கூட்டிட்டு போவேன்.”

அவனின் கேள்விக்கு, “சவரம் பண்ணதும் ஆளே மாறிட்ட.” என்று சம்மந்தம் இல்லாமல் திவ்யா கூற, அதன் அர்த்தம் புரியாமல் அங்கேயே மூலையில் சுவரில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியில் முகத்தை இடமும் வலமும் திருப்பிப்பார்த்து கன்னத்தை தேய்த்துக் கொண்டவன், “ஆமாடி வித்தியாசமா இருக்கு.”

“நீ செய்யறது எல்லாமே வித்தியாசமா தான் இருக்கு.” என்று பிள்ளையார் சுழியிட்டாள் தங்கை.

“என்னதான் சொல்ல வர? புரியுற மாதிரி சொல்லு.”

“நேராவே கேட்குறேன்… நேத்து வந்த சொந்தத்துக்கு அவ்வளவு முன்னுரிமை கொடுத்து மரியாதையா பேசுற… ஆனால் என் வீட்டுக்காரரை முறை வச்சிக் கூட கூப்புடுறது இல்லை. இப்போ தான் தெரியுது நீ என்னை மதிக்குற இலட்சணம்… நம்ம அண்ணன் தானேனு நீ செய்யுற எல்லாத்தையும் கண்டும் காணாம விட்டா, நீ என்னையே விட்டுருவ போல.” என்று திவ்யா அமிழ்த்தி வைத்திருந்ததை கொட்டிவிட, 

அவளது வார்த்தைக்கு பின் இருக்கும் குத்தல் அவனுக்கு புரியவில்லை. புரியவில்லை என்பதைவிட ஆழ்ந்து சிந்திப்பதில்லை. அவனுக்கு எல்லாமே நேராய் சொல்லிட வேண்டும், எதிர் இருப்பவர் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே உள்வாங்கி அந்த நொடி என்ன தோன்றுகிறதோ அதை சொல்லிவிடுவான். சொல்வதை செய்தும் விடுவான். 

“ஏய் நான் என்ன இன்னைக்கு நேற்றா அவரை அப்படி கூப்பிடுறேன்? உனக்கு கல்யாணம் ஆனது முதல் ரெண்டு வருஷமா அப்படித்தான் அவரை கூப்பிடுறேன். இன்றைக்கு என்னவோ புதுசா கோச்சுக்குற… இதெல்லாம் அவரே பெருசா எடுத்துக்கல, நீ சும்மா ஏத்திவிடாத.”

“அப்போ குந்தவை அண்ணிக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா? அவங்க ஆசைப்பட்டாங்கனு இதுவரை வழக்கத்தில் இல்லாது யாருமே செய்யாததை செஞ்சிருக்க. ஆனா நான் ஒரு சின்ன கோரிக்கை அதுவும் என் அண்ணன் என் வீட்டுக்காரருக்கு தகுந்த மரியாதை கொடுக்கணும்னு ஆசைப்பட்டு ரெண்டு வருஷமா கேக்குறேன் அதை உன்னால செய்ய முடியல. பொண்டாட்டினா ஒரு நியாயம் தங்கச்சின்னா வேறா? நாளைக்கே அவங்க மட்டும் போதும் கூடப்பிறந்தவ வேண்டாம்னு முடிவு பண்ணாலும் பண்ணிடுவேனு நினைக்கிறேன்…” 

வழக்கமான பழக்கங்களே ஆனாலும் அவன் குந்தவைக்கு ஆதரவாய் நின்ற ஒரே காரணத்தால் அவனின் அனைத்து செயல்களும் குந்தவையை வைத்து எடைபோடப்பட்டது. 

“என்னடி உளறல் இது? எதுக்கும் எதுக்கும் முடிச்சி போடுற?” என்று குரலை உயர்த்தினான் தச்சன்.

“நான் உளறல சரியாத்தான் பேசுறேன். அவங்க ஒருமுறை தான் உன்கிட்ட கேட்டாங்க நீ உடனே செவி சாச்சிட்டா. நான் ரெண்டு வருஷமா கேக்குறேன் நீ அதை காதில் வாங்குற மாதிரியே தெரியல.” என்று திவ்யாவும் எகிறினாள். இன்று உன்னை விடுவதாய் இல்லை என்ற வேகம் அவளது பேச்சில் தெறித்தது.

“பையித்தியம். நீ கேட்டதும் அவ கேட்டதும் ஒன்றா? சும்மா இருந்தா இப்படி தான் எடக்கா யோசிக்க தோணும். போ… போய் எனக்கொரு காபி போட்டு எடுத்துட்டு வா.” என்று உத்தரவாய் சொல்லிவிட்டு அவன் அறைக்குச் செல்ல,

“இதுக்கு மட்டும் நான் வேணுமா. அவங்ககிட்டேயே கேட்க வேண்டியது தானே?” என்ற திவ்யா கத்தியது முதுகின் பின் ஒலிக்க, அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் அறைக்குள் நுழைந்து திவ்யாவின் கணவன் கதிரவனை அழைத்தான்.

“எங்க இருக்கீங்க?”

“என்ன இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கீங்க மச்சான்? நான் கடையில் தான் இருக்கேன்.” என்று கதிரவன் இயல்பாய் பேச, தச்சனுமே இயல்பை கையிலெடுத்துக் கொண்டான்.

“உங்க பொண்டாட்டி இங்க தைய தக்கா தைய தக்கானு குதிச்சிட்டு இருக்கா. என்னமோ ஆச்சு அவளுக்கு… லூசு மாதிரி பேசிட்டு திரியுறா.”

“அப்படியெல்லாம் இருக்காதே… சும்மா உங்க சின்ன பிள்ளை சண்டையை என்கிட்ட தூக்கிட்டு வந்து சின்ன புள்ளை மாதிரி புகார் கொடுக்காதீங்க மச்சான்.” என்று மறுபுறமோ கதிரவன் சிரித்தான்.

“எங்களை கண்டாலே உங்களுக்கு ஒரே சிரிப்பு தான் ம்ம்ம்… தோ வந்துட்டா உங்க தர்மபத்தினி என்னனு கேளுங்க.” என்று திவ்யா காபியுடன் உள்ளே நுழையவும் அவளிடம் தன் அலைபேசியை நீட்டினான்.

அவனை முறைத்துக்கொண்டே, “அவரை எதுக்கு இப்போ தேவையில்லாம தொந்தரவு செய்யுற?” என்று கடிந்தவள் வெடுக்கென்று அலைபேசியை பிடுங்கி காதில் வைக்க,

“என்ன பண்ணி வச்சீங்க திவ்யா மேடம்? உங்க அண்ணன் கதறுறான்?” 

“ஆமா அப்படியே கதறிட்டாலும்… காபியை மொக்கிக்கிட்டு இருக்கான். என்னனு கம்ப்லைன்ட் பண்ணான் உங்ககிட்ட?” என்று திவ்யா கணவனையும் மிரட்ட, தச்சன் அவளை அடிப்பது போல கை ஓங்கி சைகை செய்தான். 

ஓங்கிய அவன் கையிலேயே சுள்ளென்று வைத்தவள் கவனத்தை கணவன் பேச்சினில் வைக்க, கதிரவன் காட்டிய கடினத்தில் முகம் சுண்டிப்போனது.

“என்ன பண்ணி வச்ச திவ்யா? நான் செய்யக் கூடாதுன்னு சொன்னதை தான் செய்து வச்சி இருக்கியா?” என்ற கதிரவனின் கேள்விக்கு இவள் ‛ம்’ கொட்ட,

“திரும்ப திரும்ப உனக்கு சொல்லிட்டே இருக்கமுடியாது. மச்சான்னு என்ன கூப்பிடலையே தவிர உன் அண்ணன் என்னை என்றைக்குமே மரியாதை குறைவா நடத்தினது இல்லை. இயல்பா பழகுறாரு. எனக்கும் அதுவே ஒத்துபோச்சு. நீ சும்மா இந்த முறை அதுஇதுன்னு எதையவாது இழுத்துவிட்டு அதுவே நாளைக்கு எங்களுக்குள் பிளவை ஏற்படுத்தினால் நீ தான் அப்புறம் வருத்தப்படுவ. மனசுல இருக்கு மரியாதையும் பாசமும், அதை வெளிப்படுத்தவும் செய்யுறாரு அப்புறம் எதுக்கு இப்படித் தான் கூப்பிடனும்னு கட்டுப்பாடு போட்டு இருக்குறதை கெடுத்துக்கணும்? இதை நீ மட்டும் இல்லை உன் அம்மாவிடமும் சொல்லிடு. மரியாதை கொடுக்கணும்னு சும்மா பெயருக்கு நேரில் முறையா கூப்பிட்டுட்டு பின்னாடி புரணி பேசுறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.”

“உடனே ஒன்னு கூடிடுவீங்களே… உங்களுக்காக பேசுனா என் பக்கமே குறையை திருப்புறீங்க? போங்க… நான் எதுவுமே சொல்லல.” என்று கடுப்பாய் மொழிந்தவள் அலைபேசியை தச்சனிடம் நீட்ட, அதை பிடுங்கியவன்,

“என்ன பிரச்சனை உனக்கு? நான் அவரை மச்சான், மாப்பிள்ளைன்னு கூப்பிட்டா இப்போ இருக்கும் நெருக்கம் வராது. ஒவ்வொரு முறை கூப்பிடும் போதும் அந்த உறவு முறைக்கான மரியாதையை குறையில்லாமல் கொடுக்கணும்னு தான் ஓடிட்டே இருக்குமே தவிர இப்போ இருக்குற மாதிரி இயல்பா எல்லாம் பழக முடியாது. எங்களுக்கு இதுவே போதும் நீ சும்மா இருக்குறதையும் ஊதி கெடுத்துடாத.”

“என் வாயை நல்லா அடைங்க.” என்று திவ்யா கடுப்பாய் முணுமுணுக்க,

“அதென்ன உன் வீட்டுக்காரரை மட்டும் நீ வெளு வெளுனு வெளுக்குற. நீ சொல்றதை அவர் கேட்கணும்னு நினைக்குற. ஆனால் இப்போ என்னவோ நியாஸ்தி மாதிரி நான் குந்தவை பேச்சை கேக்குறேன்னு குதிக்குற? அப்போ உனக்கொரு நியாயம் குந்தவைக்கு ஒரு நியாயமா?” என்று அவளது எண்ணங்களில் இருக்கும் அசட்டையான உண்மையை பட்டென்று கேட்டுவிட்டான் தச்சன். அவனது கேள்வியில் இருக்கும் உண்மை அவளை சிந்திக்க வைக்க, தன் மீது தான் தவறோ என்ற எண்ணமே வந்துவிட்டிருந்தது. 

நிறைகளை விட குறைகளே எளிதாக கண்டுகொள்ளும்படியான மனநிலை அதிகரிக்கத் துவங்க குறைகளை ஏற்றுக்கொண்டு வாழப் பழகும் நிலை அரிதாகிவிட்டது. அதிலும் குறை என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தை பொறுத்திருக்க, பல விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. 

“இல்லாத மேல்பாகத்தை ரொம்ப தட்டாத… நான் செய்யுற ஒவ்வொரு காரியத்துக்கும் இப்படி நீ அர்த்தம் கண்டுபிடிச்சிட்டு இருந்தால் யாருமே நிம்மதியா வாழ முடியாது தாயே… இதோட விட்டுரு இதை. குந்தவையிடமும் இதையே போய் கேட்டு வைக்காத, அவ அப்பாவோட இழப்பில் ரொம்ப நொடிஞ்சிட்டா.”

உண்மை புரிந்ததோ என்னவோ திவ்யாவின் உடல்மொழி முதற்கொண்டு கணநொடியில் மாற்றம் கொண்டது, “பாவம் தானே… கல்யாணம் ஆனவுடனேயே என் கடமை முடிஞ்சுதுன்னு அவங்க அப்பா கண்ணை மூடிட்டார். நீ தான் அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அடிக்கடி போன் பண்ணி பேசு, சீக்கிரமே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டும் வந்துடு. இங்க வந்தால் புது இடம்னு அவங்க கவனம் இங்க திரும்பிடும்.” 

திவ்யாவின் வார்த்தைகளை நம்பமுடியாமல் திகைத்தவன் கரத்தை காற்றுக்கு தூதுவிட்டுவிட்டு, “உங்களை புரிஞ்சிக்கவே முடியலேயே… நீங்க எல்லாம் நல்லவங்களா கெட்டவங்களா தாய்குலங்களே…” என்று கையை மேலெடுத்துக் கும்பிட, கணவனும் மனைவியும் ஒருசேர சிரித்தனர். 

கதிரவன் அழைப்பை துண்டிக்காமல் இருக்க அவனுக்கும் இவர்களின் சண்டையும் சமாதானமும் கேட்கவே செய்தது.

“என்ன லந்தா? ஏய் போடி எனக்கு பசிக்குது ஏதாவது செய்யச் சொல்லு.” என்று தங்கையை விரட்டியவன், அலைபேசியை காதில் வைத்து, “நான் புலம்புறது உங்களுக்கு சிரிப்பா இருக்கா?” என்று குரலில் கடுமை காட்ட,

“சந்தேகமே வேண்டாம் மச்சான். நீங்களும் எங்களோட சங்கத்தில் இணைஞ்சதை நினைச்சாலே உற்சாகமா இருக்கு. யாம் பெற்ற இன்பத்தை இனி நீங்களும் அனுபவிங்க..”

“உங்களுக்கு என்ன குறைச்சல்? என் தங்கச்சி உங்களை விட்டு பிரிஞ்சிருக்க முடியாம தான் இங்க தங்குறதே இல்லை. ஒழுங்கா நீங்க அயல்நாட்டுக்கு வேலைக்கு போகும் போது அவளையும் கூட்டிட்டு போறீங்க, இங்கேயே விட்டுட்டு எல்லாம் போகக்கூடாது.”

“தங்கள் சித்தம் மச்சான். ஆனால் ஒன்னு இப்போ திவ்யா கேட்ட கேள்விகள் அவளோடு முடியபோவது இல்லை. அத்தை, மாமான்னு எல்லோருமே உங்க மேல வருத்தத்தில் இருக்காங்க. நானும் அங்கேயே உங்க சார்பா அவங்ககிட்ட பேசி கரைக்கப் பார்த்தேன் ஆனாலும் அவங்களுக்கு நீங்க செய்த காரியத்தில் உடன்பாடு இல்லை. என்னாலும் ஒருகட்டத்திற்கு மேல இதில் அழுத்தமா பேச முடியல. நம்ம வீடுனா பேசிடலாம், உங்க மாமனார் வீட்டு விஷயத்திற்கு எப்படி பேசுறது? நீங்க கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க. தங்கச்சியையும் பார்த்து நடந்துக்க சொல்லுங்க.”

“வீட்டுல அப்பா அம்மாவை நான் சமாளிச்சுக்குறேன். நீங்க சொல்லுங்க… நான் செஞ்சது தப்புன்னு நீங்களும் நினைக்குறீங்களா? குந்தவை ஆசை நியாயமானது அதை தடுக்க எனக்கு என்ன உரிமை இருக்கு?”

“நான் நினைக்கிறது முக்கியம் இல்லை மச்சான். அங்க அத்தையும், மாமாவும் என்ன நினைக்குறாங்கன்னு தான் முக்கியம். அவங்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுத்திருக்கலாம்னு அவங்க ஆதங்கப்படுவது சரிதானே… நீங்க ஒத்தையா இருந்த போது தன்னிச்சையா செய்தால் அது வேற, ஆனால் கல்யாணம் ஆனபிறகு செய்தால் நம்ம குடும்பத்தில் எல்லாம் அதை வேற மாதிரி தான் பார்ப்பாங்க. குந்தவைக்கு தான் இது பிரச்சனை. நீங்க என்னனு கொஞ்சம் பார்த்து சரிப்பண்ணுங்க மச்சான். என்னோட பிரேக் டைம் முடிஞ்சிடுச்சு நான் அப்புறம் பேசுறேன் மச்சான்.” என்று அழைப்பை துண்டித்துவிட, கதிரவனின் வார்த்தைகளை உருபோட்டுக் கொண்டே கைலியை கட்டியவன் பனியனை வேகமாய் மாட்டிக்கொண்டு நீலாவை பார்க்கச் சென்றான்.

“என்ன பேசிட்டு இருந்தீங்க அண்ணனும் தங்கச்சியும் இவ்வளவு நேரம்? இப்போ தானே காபி கொண்டு போய் கொடுத்த? அதுக்குள்ள என்ன சாப்பாடு கேக்குறான் உன் அண்ணன்?”

“ப்ச்… லூசு மாதிரி அவன் கூட சண்டை போட்டுட்டேன் அம்மா. இங்கன நம்ம சொந்தகாரங்க கூட என் வீட்டுக்காரர் ஒத்துப்போகனும், எனக்காக சில விஷயங்கள் செய்யணும்னு எதிர்பார்ப்பேன் தானே… அதே தான் குந்தவை அண்ணியும் எதிர்பார்த்திருப்பாங்க…”

“நல்லா மந்திரிச்சு விட்டு அனுப்பியிருக்கான். நீ அதை அப்படியே இங்க வந்து ஒப்பிக்குற.” என்று நீலா அசராமல் நொடித்துக்கொள்ள, 

வம்படியாய் வந்து மூக்கை நுழைத்தான் தச்சன், “என்னை பத்தி ஏதோ பேசுற மாதிரி இருக்கே?”

இதற்குத் தானே காத்திருந்திருந்தேன் என்பது போல கேள்விக்கணைகளை தாமதமின்றி ஏவினார் நீலா.

“ஏன் தனியா வந்த?”

நீலா நறுக்க வைத்திருந்த கேரட்டை தூக்கிப்போட்டு பிடித்து ஒரு கடி கடித்தவன் ஒன்றும் அறியாதது போல, “இதென்ன வம்பா இருக்கு? நம்ம வீட்டுக் கிச்சனுக்கு வர ஊரையேவா கூட்டிட்டு வர முடியும்? எனக்குத் தெரியாம விருந்து எதுவும் போடுறியா என்ன?” 

அவன் கையிலேயே பட்டென்று ஒன்று வைத்த நீலா இம்முறை சுற்றி வளைக்காமல், “என்ன கொழுப்பா? எதுக்கு குந்தவையை அங்கேயே விட்டுட்டு வந்த?”

அன்னையின் குரலில் இருந்த கடுமையும், கதிரவன் சற்று முன் அளித்திருந்த எச்சரிக்கையும் புரிபட விளையாட்டை கைவிட்டவன் என்ன பிரச்சனை என்று தெரிந்துகொண்டு அதை இன்றே முடிக்கும் முடிவில், “அவளுக்கு பரீட்சை வருதுமா. முடிஞ்சதும் வருவா.”

“அப்படியா?”

“ப்ச்… என்ன அப்படியானு தெரியாத மாதிரி கேக்குற? அவங்க அம்மா உங்ககிட்ட சொன்னாங்க தானே அப்புறம் ஏன் கேக்குற?”

“அவங்க அம்மா சொன்னாங்க சரி, குந்தவை ஒருவார்த்தை கூட சொல்லவும் இல்லை, அங்கேயே இருக்கவான்னு கேட்கவும் இல்லை? நீயும் சொல்லல... அதற்குள்ள இங்க புகுந்த வீடுனு ஒன்னு இருக்குறதையே மறந்துட்டாளா அவள்? இல்லை நாங்க தேவையில்லைனு நீங்க ரெண்டு பேரும் முடிவே பண்ணிட்டீங்களா? உங்க நடவடிக்கை எல்லாம் அப்படித்தான் இருக்கு.” 

ஆதங்கமாய் நீலாவின் கேள்விகள் அவனைத் தாக்க, குடும்பச் சிக்கல்கள் அனைத்துமே புதிதாய் இருந்தது தச்சனுக்கு. பெரியவரான சுமதியே மகளை பிறகு அனுப்பி வைக்கிறேன் என்று அலைபேசி வாயிலாக அன்பரசனிடமும், நீலாவிடமும் தனித்தனியாய் சொல்லியிருக்க, இவனும் குந்தவையும் வேறு சொல்லியிருக்க வேண்டுமா? தகவல் தரப்பட்ட பிறகு இதென்ன நாங்கள் சொல்லவில்லை என்று குறைபடுகிறார்கள்? 

“நீ எதிர்பார்க்குற மாதிரி அவங்களே முறையாய் தகவல் சொன்ன பிறகு நானும் குந்தவையும் தனியா வேறு சொல்லனுமா?” என்று எண்ணங்களை கேட்டும்விட்டான்.

“அப்போ இனி என்ன நடந்தாலும் நீ சொல்லமாட்ட? கல்யாணம் ஆனவுடனேயே பெரிய மனுஷனாகிட்ட! நீ கேட்ட நிலத்தையும் உன் அப்பா கொடுத்துட்டதால இனி எங்க தயவு உனக்கு தேவையில்லைனு முடிவு பண்ணிட்ட, அப்படித்தானே? சரிடா இனி நான் என் பையன் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயங்களை வெளி மனுஷங்க மூலமாகவே தெரிஞ்சிக்கிறேன். நீ தான் பெரியாளாகிட்டியே...” என்று குமுறியவரின் குரல் உடைய, கண்களில் நீர் கசிந்துவிடுவேன் என்று பயமுறுத்திக்கொண்டிருக்க பதறிவிட்டான் தச்சன்.

“என்னம்மா இப்படி பேசுற?” என்று அவரின் கைகளை பிடித்தவன் சற்று தள்ளி இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மங்களத்தை முறைத்தான், “என்ன கிழவி உன் மருமக இப்படி என்னை தவறா புரிஞ்சிகிட்டு என்னை திட்டுது, என்னென்னவோ பேசுது நீ பார்த்துட்டு சும்மா இருக்க? ஏய் திவ்யா நீ என்னடி வேடிக்கை பார்க்குற? நீ பார்த்து வச்ச வேலைதானா இதெல்லாம்?” என்று திவ்யாவையும் சேர்த்து முறைக்க, நானில்லை என்று மறுப்பாய் தலையசைத்தாள் திவ்யா.

“அவள் கேட்பது நியாயம் தானே அப்பு. கல்யாணமாகி ஒரு ராத்திரி தான் இங்க இருந்துச்சு அந்த பொண்ணு… ஏதோ எதிர்பாராத விதமாய் அவங்க அப்பா தவறிட்டாங்க, ஒருவாரம் இருந்தோமானு இங்க வந்திருக்கணும். இழப்பு வந்துடுச்சுன்னு அதையே நினைச்சிக்கிட்டு அங்கேயே இருந்திட முடியுமா? பரீட்சை எழுதப் போகணும்னா இங்கிருந்தே போக முடியாதா என்ன? நீ இங்க அவள் அங்கேன்னு இப்படி கல்யாணமான உடனேயே தனியா இருக்குறது எல்லாம் நல்லதுக்கு இல்லை அப்பு… அதோட குந்தவையும் எங்ககிட்ட பேசினால் தானே இதுவும் என் குடும்பம், என்னோட முடிவுகள் இந்த குடும்பத்தையும் பாதிக்கும் என்கிற நினைப்பு அவளுக்கு வரும்? அங்க சபையிலேயே அந்த நினைப்பு இல்லாததால் தான் தன்னிச்சையாய் செயல்பட்டுடுச்சு.” என்று மங்களம் விந்தையாய் நீலாவின் பக்கம் பேச அந்த இடத்தில் குந்தவையை கீழிறக்க மனமேயில்லை தச்சனுக்கு. இருவருக்குள்ளும் ஏகப்பட்ட புகைச்சல்கள் இருக்கலாம் ஆனால் வீட்டின் பெண்மணிகள் மூவரும் குந்தவையின் புறம் தவறு இருப்பது போல பேச, அவள் என்னை நம்பி வந்தவள் என்ற எண்ணம் அழுத்தமாகியது.

“அவங்க அப்பா சம்மந்தப்பட்ட முடிவில் அவள் தன்னிச்சையா செயல்பட்டதில் என்ன தப்பு? பெற்றவருக்கு மகளா தன்னோட கடமையை செய்ய விரும்புனா அதில் தப்பெதுவும் எனக்குத் தெரியல. அதோடு இங்க வந்து ஒருநாள் கூட முழுசா தங்கல, நம்ம கூட இன்னும் பழக்கம் வரலை… அந்த தயக்கத்தில் அவள் விருப்பத்தை உரிமையா உங்ககிட்ட பேசலாமா வேண்டாமான்னு சந்தேகம் இருந்திருக்கலாம்… 

அடுத்து இங்கே திரும்பி வருவது தள்ளிப்போவது பற்றி அவங்க அம்மா தகவல் சொல்லிட்டாங்கனு இருந்திருப்பா. நீங்க சொன்ன மாதிரி அவள் இன்னும் இங்க தங்கவே ஆரம்பிக்கலை அப்புறம் எப்படி ஒட்டுதல் வரும்? சொல்லிட்டு செய்யணும்னு எல்லாம் எப்படி தோணும்?”

“ஆனால் நீ ஒட்டிக்கிட்டியே? இங்க வீட்டுக்குன்னு பொறுப்பா ஏதாவது செஞ்சிருக்கியா? ஆனால் பொண்டாட்டினு ஒருத்தி வந்தாள், வந்தவள் ஒருநாள் கூட முழுசா தங்கல அதற்குள் நீ அவள் பக்கம் சாஞ்சிட்ட… அவளுக்குன்னு ஓடி ஓடி எல்லாம் செய்யுற. உருகுற… பொறுப்பா பேசுவேன்னு கூட எங்களுக்கு இப்போ தான் தெரியுது. சபையில் நாலு பேர் முன்னாடி அப்படி பேசுன? அப்பா சொல்பேச்சை கூட கேட்கல… ஒருவர் இறப்பின் இறுதி பயணத்தில் பிரச்சனை செய்ய வேண்டாம், போனால் போகுதுன்னு அதை பெரிதுபடுத்தாமல் விட்டால் இப்போ இது… அவள் சொல்லாம அங்கேயே தங்கிட்டா இங்க நீ அவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்க.” துவங்கிய இடத்திற்கே நீலா பிரச்சனை கொண்டுவந்து நிறுத்த, அதற்கு மேல் பொறுமை பறந்தது தச்சனுக்கு.

“இப்போ என்ன அவள் சொல்லாதது தானே பிரச்சனை? இருங்க வரேன்...” என்று எழுந்தவன் வேகமாய் அறைக்குச் சென்று அங்கிருந்த தன்னுடைய அலைபேசியில் குந்தவைக்கு அழைப்பு விடுத்து, “பரீட்சை முடிந்ததும் வீட்டுக்கு வந்துறேன்னு அம்மாகிட்ட நீயும் ஒருவார்த்தை சொல்லிடு குந்தவை.” என்க,

“ஏன்? என்னாச்சு?”

“நீயும் நானும் சொல்லைனு வருத்தப்படுறாங்க. நாம வேற தனியா சொல்லியிருக்கணுமாம்… பிரச்சனை வேண்டாம்டி ஜஸ்ட் தகவல் சொல்லிடு… நான் அம்மாகிட்ட போன் கொடுக்கிறேன்.” என்று தச்சன் தணிந்து பேச பரபரப்பானாள் குந்தவை. 

மகளாய் பிறந்தகத்தை பற்றி யோசித்த அளவுக்கு மருமகளாய் புகுந்த வீட்டை பற்றி யோசிக்க தவறிவிட்டோமோ என்ற எண்ணம் எழ சங்கடமும் தவிப்பும் ஒருசேர அவளை வாரிக் கொண்டது. 

“நீங்க இருங்க. நானே அத்தைக்கு கூப்பிட்டு பேசுறேன். அதுதான் சரியா இருக்கும்.” என்று தவிப்பாய் பேசியவள் சற்று இடைவெளிவிட்டு தயக்கத்துடன், “அங்க என்னை தப்பா நினைச்சிட்டாங்களா? எனக்கு சொல்லணும்னு நியாபகமே வரல. அம்மா சொல்லிட்டாங்க நீங்களும் சொல்லி இருப்பீங்கனு இருந்துட்டேன்.” 

பிடித்தவனையே பிடித்தமின்மையில் மணம் புரிந்திருக்க, மனங்கள் இணையும் முன்னமே இழப்பு வந்து, இணக்கம் கொள்ள நேரமே அமையவில்லை எனும் போது தேர்ந்த மருமகளாய் நடந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு அவளை அவள் கூண்டிலிருந்து அசல் உலகிற்கு இழுத்து வந்தது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவள் ஒருவீட்டின் மருமகள் தானே? அந்த உறவுக்கான கடமைகளை இழப்பை காரணம் காட்டி பின்வாங்காமல் செய்யத்தானே வேண்டும்? அதைத்தானே எதிர்பார்க்கிறது மனங்கள். 

அவன் கணித்ததையே அவளும் சொல்ல, ‘நீ தேறிட்டடா தச்சா…’ என்று மைண்ட்வாய்ஸ் தான் முதலில் ஓடியது அவனிடத்தில்.

“ஹலோ இருக்கீங்களா? என்னாச்சு? அத்தை கோபமா இருக்காங்களா?” மீண்டும் தவிப்பாய் கேட்க, ஏனோ நெருடல் அவன் அகத்தினில். 

அதிகாரமாகவே கேட்டுப் பழகிய ஒருகுரல் இலகவும் ஏதோ இழந்த உணர்வு, “கோபம்னு சொல்ல முடியாது. வருத்தமா இருக்காங்க.” என்றவன் அதிமுக்கியமாய், “ ஆமா நீ யாரு?” என்க, குந்தவைக்கு சட்டென்று அவன் என்ன கேட்க வருகிறான் என்று புரியவில்லை.

“என்ன கேட்டீங்க?”

“நீ யாருனு கேட்டேன்டி… நான் கல்யாணம் பண்ணது ஒரு பிரியாணியை ஆனால் இப்போ ஒரு தயிர்சாதம் என்கூட பேசிட்டு இருக்கு? அதுவும் தொண்டையெல்லாம் கமறடிக்குற புளிச்சி போன தயிர்சாதம். என் பிரியாணியை துரத்திவிட்டுட்டியா என்ன?”

“புரியல.”

“ப்ச்… இந்நேரம் இதுவே என் பிரியாணியா இருந்தால் ஒவ்வொன்றிற்கும் எல்லாரிடமும் அனுமதி வாங்கிட்டு தான் செய்யணுமா? நான் இங்கத் தான் இருப்பேன்னு சொல்லியிருப்பா… ஆனா இந்த தயிர்சாதம் தயங்கித் தயங்கி கெஞ்சலா பேசுறா…” என்ற அவனது விளக்கத்தில் பெருமூச்சு அவளிடம்.

“எல்லா நேரத்திலும் பிரியாணியையே கொண்டாடுனா வாழ முடியாதுனு புரிஞ்சிடுச்சி. அதோட பிரியாணியையே தொடர்ந்து எடுத்துக்கிட்டா புண்ணாகிடும். அப்பப்போ இதமா பதமா எடுத்துக்கணும். அதுதான் குடும்பத்துக்கும் நல்லது. என் அப்பா ஆசைப்பட்டதும் அதைத்தான்.” என்று அவன் வழியிலேயே பதில் கொடுக்க, அவள் என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை அவனுக்கு. புதிர் வைத்து பேச துவங்கியது அவன்தான் எனினும் அவளது பதில் புதிரிலும் புதிராய் தெரிய, நான்கு நாட்களாகவே அழுதழுது உள்ளே போய் உடைப்பட்டிருக்கும் அவளது குரலில் இருந்தும் எதுவும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை.

“என்னடி சொல்ற?”

“ஒன்னுமில்லை… நான் அத்தைகிட்ட பேசுறேன்.” என்று அழைப்பை துண்டித்துவிட்டாள் குந்தவை.

‘என்ன சொல்றா இவள்? ஒன்னும் புரியலையே… பணிந்து போனால் தான் வாழ முடியும்னு சொல்றாளா? என்னடா கொடுமையா இருக்கு… இப்போ எனக்கு பிரியாணி கிடைக்குமா கிடைக்காதா? காலம் முழுதும் இந்த தயிர்சாதமே இருந்தால் சலிச்சி போயிடுமே… என்ன தான் ஆச்சு இவளுக்கு? அப்பா தவறியதும் இவளும் சுயத்தை இழந்துட்டாளா?’ என்று முழித்துக்கொண்டு அறையிலேயே நின்றுவிட்டான் தச்சன்.

No comments:

Post a Comment

Most Popular