Menu

Search This Blog

Sivapriya's Thachanin Thirumagal - 21

 

*21*

“ரெண்டு நாளா ஆளே மாறிட்ட? எல்லாம் தங்கச்சியின் கைவண்ணமோ?” தச்சனை மெச்சுதலாய் பார்த்த குணா கைலியை மடித்து கட்டிக்கொண்டு கழனியில் இறங்க, தச்சன் கெத்தாய் தன் சட்டை காலரை தூக்கிவிட்டான்.

“கெத்தா இருக்குள்ள? நான்கூட எப்படி இருக்குமோன்னு யோசனையிலேயே தான் தாடி எடுத்துட்டு வேட்டி சட்டைக்கு மாறுனேன். ஆனா நம்ம மக்கா கொடுக்குற மரியாதை இருக்கே… இத்தனை வருஷத்தில எவனும் என்னை இப்படி மரியாதையா பார்த்தது இல்லைடா… வேட்டிக்குன்னு ஒரு தனி மரியாதை இருக்குடா. நமக்கு ஆகாத பயலுக கூட இப்போ தள்ளிப் போறானுங்க. கெத்துன்னு சொன்னாலே உன் தொங்கச்சி அடிக்காத குறையா எகிறிகிட்டு வருவா… ஆனால் இப்போ தான் உண்மையான கெத்து எதுன்னு புரியுது. செம்மையா இருக்குள்ள? நம்மளை மதிச்சி கும்புடு வேற போடுறானுங்க.” என்று சிலாகித்து சொல்ல, கழனியில் போட இருந்த உரத்தில் ஒருபிடி எடுத்து தச்சனின் மீது வீசினான் குணா.

“ரொம்ப பறக்காதடா. கொஞ்சம் கீழ இறங்கி தரையில காலை வை.”

சட்டையில் ஒட்டி இருந்த உரத்தை தட்டிவிட்டபடியே குணாவை முறைத்தவன், “பொறாமைடா உனக்கு. நீயும் கல்யாணம் பண்ணிக்கோ… செம்மையா வாழலாம். இதுபோல சிலபல நல்ல விஷயமும் நடக்கும்.” என்று தச்சன் கண்ணடிக்க, குணா அவனை நோக்கி மெச்சுதல் பார்வை ஒன்றை வீசி,

“இதை இப்போ நான் சொல்லியே ஆகனும். அஞ்சா நெஞ்சன்டா நீ… உனக்கு நேரதிரான பொறுப்பான பொண்ணை கட்டிகிட்டு எப்படி தான் காலத்தை தள்ளப் போறீயோன்னு நினைச்சேன். ஆனா குந்தவையை சமாளிக்குறது மட்டுமில்லாம என்னையும் கல்யாணம் பண்ணிக்க சொல்ற பார்த்தியா… அங்க நிக்குற நீ. மத்த கல்யாணமான பயலுவோ எல்லாம் கல்யாணமே பண்ணிக்காதேன்னு அட்வைஸ் பண்றானுங்க. நீதான்டா பின்ற…”

“குந்தவையை சமாளிக்கிறது எல்லாம் சப்பை மேட்டருடா. அதுக்கு பயந்தெல்லாம் கல்யாணம் பண்ணிக்காதேன்னு சொல்ல மாட்டேன்.” என்று அனாயசமாய் சொன்ன தச்சனை சந்தேகத்துடன் பார்த்து நின்றான் குணா.

“நம்புற மாதிரி இல்லையே? குந்தவை பாய்ண்டு புடிச்சி மடிக்கி பேசுற ஆளு. உன் திருட்டுத்தனம் எல்லாம் அங்க செல்லுபடி ஆகாதே.”

“குந்தவையை நான் எப்படி சமாளிக்கிறேன்னு ஆராய்ச்சி பண்ணி என்ன பண்ணப்போற? வேலையைப் பாருடா…”

“எல்லாம் என்நேரம்டா… உன் அலைப்பறை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. இன்னைக்காவது இறங்கி வேலை செய்யுற எண்ணம் இருக்கா இல்லா பண்ணையார் மாதிரி மரநிழலில் போய் கால்மேல கால் போட்டு உட்கார்ந்து வேடிக்கை பார்க்கப் போறீயா?” என்று குணா கேலியாய் இழுக்க, 

அப்பாவியாய் உதட்டை சுழித்த தச்சன், “புது வேட்டி சட்டை அழுக்காகிடும்டா.”

“அடிங்க… இன்னும் கொஞ்ச நேரத்தில் குந்தவை வந்துடும்ல. அப்போ இதை சொல்லித் தான் பாரேன்…” என்று குணா சும்மா பேச்சுக்காக சொல்ல, உண்மையாகவே அங்கு வந்து நின்றாள் குந்தவை.

“என்ன சொல்லணும் என்கிட்ட?” 

“ஒன்னுமில்லையே… நீ என்ன இவ்வளவு சீக்கிரமே வந்துட்ட? எப்படி வந்த? கிழவியை யார் கூட்டிட்டு போறா? நீ கிழவி கூட போகலைன்னு தெரிஞ்சிருந்தா நானே இங்க உன்னை கூட்டிட்டு வந்திருப்பேன்.” என்று குணாவை பேசவிடாது குந்தவையிடம் கேள்விகளை அடுக்கினான் தச்சன். 

‘உன் டக்கு இவ்வளவு தானா?’ என்பது போல குணா கேலியாய் புருவம் உயர்த்தி அவனைப் பார்த்து சிரித்து நின்றான்.

“அத்தானே பாட்டியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க… அதுதான் நான் மாமாகூட வந்துட்டேன்.” என்றாள் குந்தவை பதிலாய். 

நேற்று மதியத்திற்கு மேல் அவனுடன் வயலுக்கு வருகிறேன் என்று சொன்னவள் மதியம் இருந்த களைப்பில் வீட்டிலேயே இருந்துகொண்டாள். இன்றோ மங்களம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை செய்யும் வழக்கமான மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைக்கு குந்தவை அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லியிருக்க, கடைசி நேரத்தில் ராஜன் நான் கூட்டிச் செல்கிறேன் என்றுவிட்டான். இவளும் அன்பரசனுடன் கிளம்பி வயலுக்கு வந்துவிட்டாள். இவள் இன்று வரமாட்டாள் என்ற மிதப்பில் தான் தச்சன் குணாவிடம் வாயாடிக் கொண்டிருந்தான். அதில் இப்போது மண்விழுந்து விட்டதில் சற்று உதறலே தச்சனுக்கு. குணா தேவையில்லாமல் எதையாவது உளறி வைத்தால் மீண்டும் அவளின் உபதேசங்களை யார் கேட்பது! 

“நான் வரும்போது ஏதோ பேசிட்டு இருந்தீங்களே என்னது?” என்று குந்தவை விடாது துவங்க, அவள் கைபிடித்து தூரத்தில் இருக்கும் மரநிழலை நோக்கி இழுத்தே சென்றுவிட்டான் தச்சன்.

“டேய் மெதுவா… எனக்கு கால் தடுக்குது. ஏன் இப்போ என்னை வேகமாக இழுத்துட்டு போற? எல்லாரும் பார்க்கிறாங்க. கையை விடு.” என்று குந்தவை அடிக்குரலில் சீற, நடையின் வேகத்தை குறைத்தவன் நிழலுக்கு சென்ற பின்னே தான் அவள் கையை விட்டான்.

“என்ன பண்ணி வச்சிருக்க? அந்த அண்ணன் ஏதோ சொல்ல முயற்சி பண்ணாங்க நீ அதுக்கு அவகாசமே கொடுக்காம என்னை அழைச்சிட்டு வந்துட்ட…” என்று குந்தவை சரியாய் கேட்க, அவளுக்கு முன்னேயே தலையிலடித்துக் கொண்டான்.

“சரியான விடாக்கண்டியா இருக்கீயே…”

“அதென்னடா விடாக்கண்டி?”

“ஷப்பா… விடுடி… கேள்வி கேட்கவே பிறந்திருப்ப போல… நீ இங்கேயே இருந்து மேற்பார்வை பாரு. நான் மறுபக்கம் உரம் வச்சிட்டு வந்துறேன்.” என்றவன் அவளுக்கு அவகாசம் கொடுக்காது சட்டையை கழற்றி அவளிடத்தில் திணித்துவிட்டு, வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு தேவையானதை கையோடு எடுத்துக்கொண்டு கழனியில் இறங்கிவிட்டான்.

அவன் செல்வதையே பார்த்து நின்ற குந்தவை, ‘வேணும்னே இப்படி அவசர அவசரமா வேலை செய்யுற மாதிரி ஓடுறான். இப்போ நான் என்ன பண்றது? வேடிக்கை பார்க்கவா இங்க வந்தேன்? ஏதாவது வேலை சொல்லிட்டு போயிருக்கலாம்.’ என்று புலம்பியவள் பெருமூச்சை வெளியேற்றி, அவன் சட்டையில் இருந்த பணத்தையும் அவன் மொபைலையும் கையிலெடுத்துக்கொண்டு சட்டையை அங்கேயே மரத்தில் மாட்டிவிட்டாள். 

தெரிந்தவர்கள் யாரும் எதிரே தென்படுகிறார்களா என்று நோட்டம் விட்டபடியே காலாட நடந்து முந்திய நாள் தூர்வாரிய இடத்தை அடைந்து அங்கு வேலைபார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களோடு ஒன்றிவிட்டாள்.

இங்கோ குந்தவையிடமிருந்து தப்பித்தோம் என்ற திருப்தியில் குணாவை நோக்கி உரம் வீசிக்கொண்டு வந்த தச்சனை கேலியாய் பார்த்து சிரித்தான் குணா, “இதுதான் நீ சமாளிக்கிற லட்சணமா தச்சா… குந்தவை இப்படி இருக்கும்போதே நீ தெனாவெட்டா சுத்துறேன்னா எதாவது அப்பாவி பொண்ணு உன்கிட்ட மாட்டியிருந்தா அந்த பொண்ணு கதி ரொம்ப குஷ்டம்டா…”

“இப்போ என் நிலைமை தான் குஷ்டமா இருக்கு…” என்று குணாவை இடித்தவன், தன் வேலையை பார்த்துக்கொண்டே, “குந்தவை நல்ல பொண்ணு தான் ஆனா இருபத்திநாலு மணிநேரமும் கூடவே இருந்தா சரியா இருக்காதோன்னு தோணுது. எனக்கும் அவளுக்கும் எல்லா விஷயத்திலும் முட்டிக்குது.”

“இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி வேற ஏதோ சொன்னமாதிரி இருந்துச்சே! அதுக்குள்ள என்னடா அப்படியே அந்தர் பல்டி அடிக்குற? உங்களுக்குள்ள வேறுபாடுகள் இருந்தாலும் ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுக்காம தானே இருக்கீங்க! எல்லாம் சரியாத்தான் வரும். இல்லாத மூளையை ரொம்ப கசக்காத…” என்றான் குணா கேலியை கைவிட்டு… நண்பர்களுக்குள்ளான பேச்சுக்கள் கேலியை கைவிட்டு தீவிரமாய் மாறியது.

“ப்ச்… அதைவிடு., இங்க பக்கத்துல எங்கேயாவது குந்தவை வேலை செய்யுற மாதிரி உனக்கு தெரிஞ்ச காலியிடமிருந்தா சொல்லு. நல்ல இடமா பாதுகாப்பா இருக்கணும்.” 

“டவுனுக்குள்ள போனா நல்ல வேலை கிடைக்குமே. நீயே விசாரிக்கலாமேடா. குந்தவையும் ஏதோ வேலைக்கு போச்சே அதுக்கே தெரிஞ்சிருக்குமே?” 

“எனக்கும் குந்தவைக்கும் தெரிஞ்சா நான் ஏன்டா உன்கிட்ட கேட்கப் போறேன்? தெரிஞ்சா சொல்லு இல்லையா கம்முன்னு இரு.” என்று தச்சன் தன் இயல்பை விட்டுச் சொல்ல, குணா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

ஏற்கனவே அவர்கள் ஊரிலிருந்து இருபது மைல்கள் தள்ளி டவுனில் கிடைத்த வேலையில் குந்தவை சேர்ந்து ஒருவாரம் தான் ஒழுங்காய் சென்றிருப்பாள் அதற்குள் தொந்தரவுகள் வரத்துவங்கியது. வேலைக்குச் சென்ற புதிதில் அங்கிருப்பது பிடிபடவே இரண்டு நாள் தேவைப்பட்டது. அதன் பின்னோ அந்த அலுவலக வேலை அவளுக்கு சலிப்பாகி விட்டது. அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வேலையோ தகவல்களை கணினியில் பதிவேற்றும் வேலை. அதைத் தான் வேறேதோ பெயர் சொல்லி பூசி மொழுகி அவளை அங்கு சேர்த்துக்கொண்டனர். இளங்கலை இயற்பியல் படித்திருந்த அவளுக்கு வளர்ச்சிகளற்ற அந்த பணியை செய்வதில் சுணக்கமே. வேறு வேலை கிடைக்கும் வரை சும்மாயில்லாமல் இதையே தொடர்வோம் என்றுதான் சென்றுவந்து கொண்டிருந்தாள். அதற்கும் ஆப்படிக்கும் விதமாய் நீலா மெல்ல மெல்ல குறை படிக்கவும் துவங்கியிருந்தார்.

காலை நேரமே சமைத்து குந்தவைக்கு மதியசாப்பாடு கட்டிக்கொடுப்பதில் துவங்கிய சிறு சிறு முனகல்களும் உரசல்களும் குந்தவை வெளிவேலையைக் காட்டி வீட்டுவேலை செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்கிறாள் என்பதில் வந்து நின்றது. நீலா எதையுமே நேரடியாய் சொல்லவில்லை ஆனால் அவரின் முனகல்கள் அவ்வப்போது அந்த வீட்டில் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒன்றிரண்டு முறை தச்சன் மல்லுக்கு நின்றான். ஆனால் அவனே பேசமுடியாத வகையில் ஒருநாள் குந்தவைக்கு வேலை முடிய தாமதமாகி, அன்று பேருந்தும் தாமதமாகவே கிடைக்க, வீடுவந்து சேரவும் நேரமாகி அனைவரையும் பதைபதைக்க வைத்துவிட்டாள். 

“எங்களையெல்லாம் இப்படி பயமுறுத்தி நீ வேலைக்குப் போய் சம்பாரிச்சுத் தான் ஆகணும்னு இல்லை குந்தவை. நீ புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன். என்னை கடுமையா பேச வச்சிடாத.” என்று பட்டும்படாமல் நீலா சொல்லிவிட, குந்தவைக்கு முதலில் கோபம் தான் வந்தது.

தச்சன் நேரமே வீடு வந்துவிடுபவன் தான். அறுவடை நேரம் நெருங்குவதால் தற்போது தாமதமாய் வீடுவருகிறான். ‘அதேபோலத் தான் நானும் என் வேலையை முடித்துவிட்டு தானே வரமுடியும்? வேலைப்பளுவை புரிந்து கொள்ளாமல் என்னை மட்டும் எதற்கு சாடவேண்டும்?’ என்ற சினம் எழ அதை நேரே கேட்டும் விட்டாள்.

“மாமாவோ இல்லை உங்க புள்ளையோ இப்படி வேலையால் தாமதமா வீட்டுக்கு வந்தா வேலைக்கே போகாதீங்கன்னு சொல்லி அவங்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லுவீங்களா அத்தை?”

“அதெப்படி முடியும்?” நீலாவிடமிருந்து உடனே பதில் வந்தது.

“அப்போ என்னை மட்டும் எதுக்கு சொல்றீங்க? அவங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா? நான் ஏற்கனவே வேலைக்கு போவேன்னு சொல்லியிருக்கேன் அத்தை. எல்லாம் தெரிஞ்சும் நீங்க இப்படி பேசுறது எனக்கு வருத்தமா இருக்கு.”

“நியாயம் அநியாயம் பார்க்கிற நிலைமையில் நாடு இல்லை குந்தவை. உன்னை அவ்வளவு தூரம் வேலைக்கு அனுப்பிட்டு நீ எப்போ வருவீயோ? பத்திரமா வந்துடுவீயான்னு பயந்துகிட்டே ஒவ்வொரு நாளும் என்னால கடத்த முடியாது. உன் எண்ணம் சரியா இருந்தாலும் அது ஊரோட ஒத்துப்போகிற வகையில் இல்லை. ஆணும் பெண்ணும் சமம்னு நீ எவ்வளவு கூப்பாடு போட்டாலும் செவிடன் காதில் ஊதிய சங்காய் இங்கிருக்கிற பாதி செவிடன்களுக்கு கேட்காது. 

நீ இழுத்து போர்த்திகிட்டு போனாலும் எவன் கண்ணு நோள்ளக்கண்ணு எவன் எண்ணம் ஒழுக்கமானதுன்னும் நமக்குத் தெரியாது. என்னை காப்பாத்திக்க எனக்குத் தெரியும்னு நீ சொல்லலாம் ஆனால் வீட்டில இருக்கிற எங்களுக்கு நெருப்பை கட்டிகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. பிஞ்சிலிருந்து கிழவி வரை பெண்ணா பிறந்த யாருக்கும் பாதுகாப்பில்லை. அதுவும் நம்ம பக்கம் எல்லாம் கிராமம். சாயும்காலம் ஆறுமணிக்கு மேல இங்க சுத்துவட்டார மெயின் ரோட்டில் கூட ஆள்நடமாட்டம் குறைஞ்சிடும். தச்சனால் தினம் உன்னை அழைச்சிட்டு வரமுடியாது. அவனுக்கும் இப்போ வேலை சரியா இருக்கு. நம்ம ஊருக்கு டவுனிலிருந்து ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தான் பஸ்… எப்படி உன்னை அனுப்ப எங்களுக்கு தைரியம் வரும்னு நீயே சொல்லு.” என்று நீலா எதிர்கேள்வி எழுப்ப, குந்தவைக்கு ஆதரவாய் எப்போதும் நிற்கும் தச்சனே நடுங்கித்தான் விட்டான்.

குந்தவை வேலைக்குப் போகிறாள் என்று தெரிந்ததும் தச்சன் தன்னுடைய பழைய போன் ஒன்றை சரிசெய்து கொடுத்திருந்தான். முதலில் தன்னுடையதை தான் எடுத்துக்கொள்ள சொல்லியிருந்தான். ஆனால் அவனின் தன்மானச் சிங்கம் அவன் சம்பாதித்து வாங்கித்தரும் போனை மட்டும் தான் வாங்கிக்கொள்வேன் என்று பிடிவாதமாய் நின்றாள். வேறுவழியின்றி அவனுடைய பழைய மொபைலை சரிசெய்து கொடுத்திருந்தான். அதுவோ எப்போது சார்ஜ் தீரும் என்றே கணிக்க முடியாத அளவு இருந்தது. இருந்தாலும் அதைவைத்தே ஓட்டிவிடலாம் என்று குந்தவை அலட்சியமாய் இருந்ததன் பலன் அவளுக்கு தேவையான நேரத்தில் சார்ஜ் இறங்கி அவளை பழிவாங்கிவிட்டது. 

தாமதமாகிவிட்டது பஸ் கிடைத்ததும் வந்துவிடுகிறேன் என்பதை வீட்டிற்கு சொல்லிவிடுவோம் என்று வேலை முடித்து கிளம்பியதும் தகவல் தெரிவிக்க எத்தனிக்கும் போதே அந்த மொபைல் பல் இளித்திருந்தது. 

ஆறேழு வருடங்களுக்கு முன் எங்கு திரும்பினாலும் கண்ணில் தென்பட்ட தொலைபேசி பூத்துகளும், ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் தொலைபேசிகளும் அலைபேசியின் ஆதிக்கத்தில் மடிந்து, அவசரத்திற்கு கூட இப்போது அடுத்தவரின் அலைபேசியை வாங்கும் நிலைதான். அந்நியரிடம் அலைபேசி கடன்வாங்கிப் பேச குந்தவைக்கு விருப்பமில்லை. பார்த்துக்கொள்ளலாம் ஒருநாள் தானே தாமதமாக வீட்டிற்குச் செல்கிறோம் என்று அமைதியாய் இருந்துவிட்டாள். ஆனால் அப்போது தெரிந்திருக்கவில்லை தச்சன் அவளைத் தேடி வீட்டிலிருந்து கிளம்பியதை… 

இவள் பஸ்ஸில் ஏறிய நேரம் அவன் அவள் வேலை செய்யும் அலுவலக வாயிலில் சென்று நின்றிருந்தான். அவள் அங்கில்லை என்றதும் பேருந்து நிலையம் வந்து தேட, அவள் ஏறியிருந்த பேருந்து எப்போதோ கிளம்பியிருந்தது. ஒருவழியாய் அவள் வீடுவந்து சேர்ந்து நீலாவின் அலைபேசியில் இருந்து அவனுக்கு தகவல் தெரிவிக்கும் வரை தச்சன் பயத்துடன் டவுனிலேயே அவளைத்தேடி அலைந்து கொண்டிருந்தான். 

நீலா போட்டபோடில் அவன் அலைந்தது நினைவில் வர பதற்றத்துடன் குந்தவையை பார்த்த தச்சன், “அம்மா சொல்றதும் சரின்னு தான் தோணுது.” என்று சொல்ல குந்தவை முறைத்த முறைப்பில் தச்சன் பொசுங்காதது வியப்பே.

“என்ன நீயும் இப்படி பேசுற? நாளைக்கே நமக்கு பொண்ணு பிறந்தா… அவளை பாதுகாக்கிறதா நினைச்சி வீட்டுக்குள்ளேயே வச்சிப்பீயா? படிப்பு வேலைன்னு அவளுக்கான சுதந்திரத்தை, அவளோட தன்னம்பிக்கையை பறிச்சி உரிமையானதை கூட வேலிபோட்டு தடுத்துடுவீயோ?” என்று குந்தவை அவன் மேல பாய,

“இன்னும் பிறக்காத பிள்ளைக்கு ஏன்டி இவ்வளவு யோசிக்கிற? இப்போ உன்னை பத்தி பேசிட்டு இருக்கோம்.” என்று நுழுவாத குறையாய் தச்சன் அந்த பேச்சை கத்தரிக்க முற்பட, அதெல்லாம் குந்தவையிடம் சாத்தியமாகுமா என்ன!

“ஏன் இன்னைக்கு இல்லேன்னா எப்போதுமே பிறக்காதா என்ன? இல்லை பையனா பிறந்துட்டா அப்பாடான்னு இருந்திடுவீயோ?”

“ஏய் என்னடி நான் ஒன்னு சொன்னா நீ ஒன்னை இழுத்து விடுற? பையனோ பொண்ணோ எந்த புள்ளையா இருந்தாலும் படிக்க வைக்கத் தான் போறோம். போதுமா?”

“அப்போவும் டவுனில் நல்ல ஸ்கூலில் தான் படிக்க வைக்கணும். அப்போவும் இதே பஸ் பிரச்சனை இருக்குமே? அப்போ என்ன செய்வ? அத்தை நீங்க சொல்லுங்க… அப்போவும் இதையே சாக்கா வச்சி வீட்டிலேயே பசங்களை அடச்சிடுவீங்களா?” என்று கேள்வியை தச்சன் புறம் மட்டுமின்றி நீலாவிடமும் வைக்க, நீலா தடுமாறி பின் சமாளித்தார்.

“அதெப்படி முடியும்… வேணும்னா நீங்க டவுன்ல ஸ்கூல் பக்கம் ஜாகை மாத்திக்கோங்க. பசங்க எதிர்காலம் தான் முக்கியம். நாங்க இங்கேயே இருந்துக்கிறோம். தச்சன் இங்கன வந்து வேலை பார்த்துட்டு போகட்டும்…” என்று சொல்ல, தச்சனுக்கு மட்டுமில்லை குந்தவைக்கே அவரின் பதில் அதிர்ச்சியாய் தான் இருந்தது. என் மகன் எனக்கு முக்கியம். அவனை விட்டுத் தரமாட்டேன் என்று சொன்னவரா இவர்! என்றுதான் பார்த்தாள் குந்தவை.

“என்ன பேசுற நீ? நான் அவகிட்ட இந்த ஊரை விட்டு வரமாட்டேன் இங்கதான் இருப்பேன்னு சண்டை போட்டுட்டு இருக்கேன். நீ என்ன என்னை போகச் சொல்ற? உன் மூத்த பிள்ளை வந்துட்டான்னு என்னை கழட்டி விடுறீயா நீ?” என்று தச்சன் அதிர்ச்சியாய், ஆதங்கமாய் கேட்க, நீலாவுக்கு அழுகையே வந்துவிட்டது.

“என்னடா இப்படி சொல்லிட்ட? குந்தவை வேலைக்கு போறதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதே மாதிரி குந்தவை கேட்பதிலும் தப்பில்லையே. வீட்டுக்குள்ளேயே அடைச்சி அடைச்சு தான் ஒண்ணுமே தெரியாம இருக்கோம். நமக்கு அடுத்து வர சந்ததியாவது நாலும் தெரிஞ்சி முன்னேறட்டும்னு வெளியே கொஞ்சம் தைரியமா அனுப்புனா அதுக்கு வேட்டுவைக்கிற மாதிரியான சம்பவம் தான் நம்மை சுத்தி நடந்துட்டு இருக்கு. எனக்கு ரெண்டு மனசா இருக்கு. அவளோட தைரியத்தை பார்த்து கர்வப்பட்டிருக்கேன் ஆனால் அதுக்காக அவளோட பாதுகாப்பில் கவனக்குறைவா இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சமூகம் மாறும், மாற்றம் வரணும்னு காத்திட்டு இருக்கிறதுக்கு பதிலா நாம முன்னெச்சரிக்கையா இருந்துப்போமே… இப்போ இருக்கிற காலகட்டத்தில் நம்மை நாமே தற்காத்துக்கிறது அத்தியாவசியம். அதில் நாமே அலட்சியமா இருக்ககூடாது. அதுதான் அப்படிச் சொன்னேன்… உங்களுக்கு இனி எது சரின்னு படுதோ அதையே செய்யுங்க. நான் எதுவும் சொல்லல… எனக்கு நீங்க நல்லாயிருந்தா போதும்.” என்று கண்ணை கசக்கிக்கொண்டே சென்றுவிட்டார்.

‘அடுத்து என்ன?’ என்பது போல சோர்வாய் தச்சன் குந்தவையைப் பார்க்க,

‘இதுக்கெல்லாம் பயந்து என்னோட எதிர்காலத்தை நான் இழக்கனுமா? இன்னும் எத்தனை நாள் தான் இப்படி காரணம் சொல்லி சொல்லியே அடக்குவீங்க? முடியாது.’ என்ற திண்மையாய் பார்த்தாள் குந்தவை.

தச்சன் அதற்கு மேல் அந்த விஷயத்தில் தலையிடவில்லை. குந்தவை சொல்வதும் நியாயமாய் இருந்தது, நீலாவின் பார்வையிலும் கேடு இருக்கவில்லை. அவரவர் எண்ணத்தில் சரியாய் இருக்கிறார்கள், நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாகிவிட்டான். இந்த பேச்செல்லாம் நடக்கும் போது அன்பரசன் வீட்டில் இருக்கவில்லை, அவர் வந்ததும் நீலா அனைத்தையும் சொல்லிவிட அவராலும் எவர் பக்கமும் நின்று அடித்து பேசமுடியவில்லை. நீலாவிடம் பேசும் போது அவரின் எண்ணம் சரியென்பதாகவும் குந்தவையிடம் பேச்சு கொடுத்த போது அவள் வேண்டுவதிலும் பிழையேதும் தெரியாமல் போக இரண்டு பக்கத்தில் எந்த பக்கமும் சாயமுடியாமல் அமைதியாகிவிட்டார்.

விண்ணைத் தாண்டியே பெண்கள் சென்றுவிட்டு வந்துவிடலாம் போல ஆனால் எவ்வித பதட்டமுமின்றி வீட்டைத் தாண்டி சென்றுவிட்டு வருவது தான் கடினமாகி வருகிறது. சில பெண்பிள்ளைகளுக்கு படிப்பை தொடர்வதே பிரச்சனை என்றால் படிப்பு, அறிவு என்று எல்லாம் இருந்தும் பல குந்தவைகள் தாங்கள் நினைத்ததை சாதிக்க ஏணிகள் கிடைக்கிறதோ இல்லையோ தடைகள் மட்டும் கொட்டிக் கிடக்கிறது. சிலது வீட்டினரால், சிலது பொதுப்பிரச்சனையால்… 

வாக்குவாதத்திற்கு பின் நீலாவை எதிர்பாராது குந்தவையே சமைத்து சாப்பாடு எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்று வந்தாள். காலையில் தச்சன் அலுவலகத்தில் விட்டுவந்துவிடுவான். மாலை பேருந்தில் திரும்பிவிடுவாள். ஆனால் அதுவும் ஒரேவாரம் தான். சண்டை போட்டு சிரத்தை எடுத்து சென்ற வேலையில் திருப்தி வரவில்லை. கடமைக்கென ஏற்ற இறக்கமின்றி சீராய் செல்லும் இயந்திரத்தனமான வேலையில் அவள் தேடியது அவளை அமைதியுறச் செய்வது எதுவுமே இல்லாமல் போக அந்த வேலையை விட்டாள். அதற்கும் வீட்டில் வரவேற்போ எதிர்ப்போ எதுவும் எழவில்லை. என்னவோ செய் என்பது போல அவள் போக்கில் விட்டுவிட்டனர்.

இங்கிருந்து அருகில் இருக்கும் டவுனில் வேலைக்கு சென்று வருவதிலேயே சிக்கல்கள் இருக்க, ஏற்கனவே அவள் பிறந்த ஊரில் சொல்லி வைத்திருந்த வேலைக்கு வீட்டிலிருந்தே தினம் சென்று வரலாமா என்றெழுந்த யோசனை கூட அடிபட்டு போனது. டவுனிலே வேறு வேலை தேடலாமா இல்லை கல்யாணமான புதிதில் தச்சனிடம் சண்டையிட்டது போல தனியாய் நகரத்தில் தங்கி வேலை செய்வோமா என்று இன்னொரு கோணத்தில் எண்ணங்கள் சென்றாலும் இப்போது அனைவரையும் விட்டுவிட்டு செல்வது எந்தளவு சாத்தியம் என்பதில் ஐயமே! ஆக அவளுமே என்ன செய்வது என்ற குழப்பத்தில் தான் ஒருவாரத்தை தள்ளினாள்.

இவள் என்ன அமைதியாக இருக்கிறாள்… அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்று அனைவருமே எதிர்பார்த்திருக்க, யாருமே எதிர்பாரா வண்ணம் தச்சனுக்கு துணையாய் கழனியில் இறங்கப் போகிறேன் என்று அதிரடியாய் சொல்ல, தச்சனுக்கு துணையாய் உள்ளூரிலே இருக்கப்போகிறாள் என்ற செய்தி நீலாவை குஷிப்படுத்தியது. ஆனால் தச்சன் மட்டும் கூடவே கூடாது என்று மல்லுக்கு நின்றான்.

“நான் வேற ஏதாவது ஏற்பாடு பண்றேன் குந்தவை. உனக்கு இது பிடிக்காதுன்னு எனக்கு தெரியும், அப்புறம் ஏன் இங்கே வரேன்னு சொல்ற?”

“நான் ஆரம்பத்திலேயே தெளிவா சொல்லியிருக்கேன் வானதிக்கு அப்படி நடந்ததால் தான் எனக்கு விவசாயம் மேல ஒரு பிடிமானம் இல்லாம போச்சு… நான் தேடிக்கிட்ட வேலையும் எனக்கு திருப்தியா இல்லை. இதுக்கு மேல என் மனசை மாத்த பார்க்காத… நான் உன்கூட வரேன் அவ்வளவுதான்…” என்று பிடிவாதம் பிடித்தாள். தச்சனும் பிடிவாதமாய் அவளை மறுத்துப் பார்த்தான். அவள் கேட்டால்தானே! 

“டேய் வேலை செய்யாம என்ன கனா கண்டுட்டு நிக்குற? குந்தவையை வரச்சொல்லவா நேர்லேயே டூயேட் பாடலாம்… ஆடலாம்…” என்று குணா தச்சனை உசுப்ப, நினைவடுக்கிலிருந்து வெளிவந்து அவனை முறைத்தான் தச்சன்.

“உன் தங்கச்சியாவது டூயட் ஆடுறதாவது... கதக்களி வேணும்னா ஆடுவா… நீயும் ஏதாவது கிறுக்குத்தனமா பேசுனா உன்னையும் புட்பால் ஆடுவா…”

“என்னை ஏன்டா உள்ள இழுக்குற? ஏற்கனவே ஒருதடவை என்னை குந்தவைகிட்ட கோர்த்துவிட்டு திட்டுவாங்க வச்சது பத்தாதா… நான் ஆட்டத்துக்கே வரலடா சாமி… ஆளை விடுங்க.” என்று கையெடுத்து கும்பிடாத குறையாய் கழன்றவன்,

‘இனி இதுங்க பஞ்சாயத்தை வேற பார்க்கணுமா நானு… சீக்கிரம் குந்தவையை பேக் பண்ணி அனுப்பிடனும் இல்லைனா நம்ம தலையை உருட்டிடுவாங்க புருஷனும் பொண்டாட்டியும்…’ என்று முனகிக்கொண்டே தச்சனை விட்டு நகர்ந்தான் குணா…

***

“உன்னை எங்கெல்லாம் தேடுறது இங்க வந்து உட்கார்ந்திருக்க? என் போன் உன்கிட்ட தான் இருக்கா? சட்டையில ஒண்ணுமே இல்லை?” கதிரவன் மேற்கு நோக்கி தன் சுழற்சியை வேகப்படுத்தியிருக்க, குந்தவையை தேடிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான் தச்சன்.

“போன் பணமெல்லாம் என்கிட்டதான் இருக்கு. தூர்வாருற வேலை எவ்வளவு முடிஞ்சிருக்குன்னு பார்க்க வந்தேன்... இங்க நிறையா அக்காங்களும் வேலை பார்த்துட்டு இருந்தாங்க அவங்ககூட பேசிட்டு இங்கேயே இருந்துட்டேன். நான் இறங்கி வேலை செய்யலாம்னு பார்த்தா எனக்கு ஒன்னுமே தெரியல. நீயும் அப்படியே விட்டுட்டு போயிட்ட… உனக்கு தெரிஞ்சதை சொல்லிக் கொடுத்தால்தான் என்னவாம்? நான் இங்க வேடிக்கை பார்க்கவா வர்றேன்?” இயல்பாய் துவங்கி அவள் குரல் ஆதங்கத்தில் முடிந்தது.

“நீ நினைச்ச உடனே இறங்கி எங்களை மாதிரி வேலை பார்க்க முடியாதுடி. முதல்ல வரப்புல தடுக்காம நடக்கப் பழகு, அப்புறம் உள்ள இறங்கலாம். இப்போவே எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாம இறங்குனா சேற்றுப்புண் வரும். அரிப்பு வரும். கொஞ்ச கொஞ்சமா இந்த மண்ணுக்கு பழகிக்கலாம். அதுவரை நாங்க என்ன செய்றோம்னு பாரு… உனக்கே சிலது பிடிபடும்… அடுத்த அறுவடைக்கு நீயே இறங்கலாம்.” என்று சமாதானமாய் சொன்னவன் அவள் அருகில் சென்றமர்ந்து பாதம் நனையுமளவு ஓடிய கண்மாய் தண்ணீரில் காலை விட்டான்.

“என்னை ஏமாத்துற வேலையெல்லாம் வேண்டாம். வேணும்னே தானே நீ எனக்கு வேலை சொல்லித் தரமாட்டேங்குற. சும்மா இருக்கிறதுக்கு கடுப்பா இருக்கு.” குந்தவையின் குரல் வழக்கம் போல ஏற, தச்சன் அவன் இயல்பிலேயே நின்றான்.

“உனக்கு இது சரியா வராது குந்தவை. நீ எதிர்பார்க்கிற மாதிரி மாசாமாசம் இங்க சம்பளம் கிடைக்காது. உங்கக்காவுக்கும் குடுக்க முடியாது.” என்று தச்சன் நேரம் பார்த்து பேச, சில வினாடிகள் குந்தவையிடம் அமைதி… 

“தெரியும்… வானதி நான் பணம் கொடுத்தா வாங்க மாட்டேன்னு சொல்லிட்டா. என்கிட்ட பணம் வாங்குனா என்னை சார்ந்து என் பேச்சை கேட்டுட்டே கடைசி வரை வாழுற மாதிரி ஆகிடுமாம். அதுனால வேண்டாம்னு சொல்லிட்டா… அவள் இப்படியெல்லாம் யோசிப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை… வேலைக்கு போறால்ல நல்லா பேச கத்துகிட்டா…”

“நிஜமாவா? உன் அக்காவா இப்படி பேசுனது? இவ்வளவு மாற்றமா நம்பவே முடியலையே…” என்றான் தச்சனும் நம்பாமல். அவனுக்கு இந்த விஷயம் புதிதாய் இருந்தது. பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று அவ்வப்போது குந்தவையிடம் விசாரிப்பான்… சில நேரம் போன் போட்டு அவர்களின் மழலையை ரசித்துக் கேட்பான். மற்றபடி வானதி பற்றியோ அவள் வேலை பற்றியோ பெரிதாய் அவன் கேட்டுக் கொண்டதில்லை. குந்தவையும் சொன்னதில்லை.

“என்னாலையும் நம்ப முடியலை… ஒரு மாசமா தான் வேலைக்கு போறா அதுக்கே இவ்வளவு மாற்றமா… இவள் என் அக்கா தானான்னு எனக்கே சந்தேகம் வருது.” என்ற குந்தவையின் குரலில் இன்னும் வியப்பே.

“அவங்க இப்படி இருக்கணும்னு தானே ஆசைப்பட்ட? இப்போ அதுவே நடக்குது. சந்தோசமா இரு… உனக்கு பிடிச்சதை செய்…”

“அதுதான் உன் பின்னாடியே வந்துட்டேன்…” என்று குழைவாய் சொன்னவள் அவன் கரத்தினுள் கரம் நுழைத்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள். மனம் நிறைந்திருக்க, கொளுத்தும் வெயிலிலிருந்து அவர்களை காக்கும் புங்கை மரம் மெல்ல அசைந்து அந்த இடத்தையும் குளுமை படுத்தியது.

“இது உனக்கு செட்டே ஆகலைடி. குந்தவை பிரியாணியா இருந்தாதான் நல்லாயிருக்கும். இப்படி வழவழ கொழகொழன்னு இருந்தா எனக்கு சந்தேகம் வருதுடி…” அரிதிலும் அரிதாய் வெளிப்பட்ட அவளின் மென்மையை ரசிக்காமல் அவன் வாய் முந்திக்கொண்டுவிட, குந்தவை கடுப்புடன் நகர்ந்து கொண்டாள்.

“வரும் வரும்… நான் சத்தம் போட்டா இம்சையா இருக்கேன்னு சொல்ற… சரின்னு இப்படி பேசுனா அதுக்கும் குறை சொல்ற.”

“பின்ன பிள்ளைக்கே இப்போ வழியில்லைன்னு சொல்லிட்டு அதை வச்சு நீ எவ்வளவு சண்டை போட்ட… இதுமாதிரி இன்னும் எவ்வளவோ சொல்லலாம்… குந்தவை இப்படித்தான்னு நான் செட் ஆகிட்டேன். அதிலிருந்து மாறி நீ இப்படியெல்லாம் பேசுனா நம்ம பொண்டாட்டியா இப்படின்னு எனக்கு வித்தியாசமா இருக்குடி…”

“இப்படித்தான்னா எப்படி? நான் சண்டைக்காரின்னு முடிவே பண்ணிட்டீயோ?” என்று எதிர்கேள்வி எழுப்பியவளிடம் அடுத்த சண்டைக்கான தொனி நன்றாய் வெளிப்பட, தச்சன் இப்போது அவள் தோள் மீது கைபோட்டு அவளை தன்னோடு நெருக்கிக்கொண்டான்.

“விடுடா… எல்லோரும் பார்ப்பாங்க.” என்று வழக்கமான மறுப்பு வெளிப்பட, தச்சன் தங்கள் நெருக்கத்தை இன்னுமே நெருக்கத்தான் செய்தான்.

“நீ என் தோளில் சாஞ்சப்போ பார்க்காதவங்க இப்போவா பார்க்கப் போறாங்க… சும்மா இருடி… தண்ணீர் வந்தப்புறம் இதுமாதிரி உன்னை நம்ம வயலுக்கு கூட்டிட்டு வரணும், தோட்டத்தில் இருக்கும் போர்செட்டில் குளிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். முதல் ஆசை நிறைவேறிடுச்சு… அடுத்தது எப்போன்னு நீதான் சொல்லணும் … இங்க கண்மாயில் குளிச்சா கூட சில்லுனு நல்லாதான் இருக்கும். ஆனா நீ தான் வெட்டவெளியா இருக்குன்னு சிலுபிப்ப…” 

“தோட்டம் மட்டும் வீட்டுக்குள்ளேயா இருக்கு! அதெல்லாம் முடியாது.” என்று அவன் சொன்னது போலவே சிலுப்பினாள் குந்தவை.

“வரீயான்னு கேட்கலை எப்போ வரேன்னு தான் கேக்குறேன்.”

“அதெல்லாம் முடியாது… அங்க தோட்டத்தில் மதியம் சும்மா படுக்கவே எனக்கு ஒருமாதிரி இருந்துச்சு. இதுல நீ குளிக்கனும்னு சொல்ற… வாய்ப்பேயில்லை.” என்று மறுத்து அவனிடமிருந்து விலகினாள் குந்தவை.

தச்சனும் விடாது, “நானும் உன்னை விடுறதா இல்லை… காலையிலேயே வந்துட்டோம்னா யாருமே இருக்க மாட்டாங்க. நைட்னா கூட எனக்கு ஓகே தான்…”

“நீ சொல்ற தினுசே சரியில்லை… உன் ஆசை எல்லாம் விவகாரமா தான் இருக்கும்… நான் வரலை இந்த விளையாட்டுக்கு.” என்று குந்தவை அழுத்தமாய் மறுக்க, அவளை சந்தேகமாய் பார்த்தான் தச்சன்.

“உன் புத்தி வேறெங்கையோ போற மாதிரி இருக்கே…”

“நீ நினைக்கிறதை என் வாயில் வாங்கப் பார்க்காத… எனக்கு இப்படி வெளிய குளிச்சி பழக்கமில்லை… வேணும்னா தோட்டத்தில் ஒரு பாத்ரூம் கட்டு நான் வரேன்…” என்றுவிட்டு அவள் எழுந்துகொள்ள, தச்சன் வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டான்.

“விளங்கிடும்… உன்னை வச்சிக்கிட்டு எங்கிருந்து நான் ரொமான்ஸ் பண்ண! தண்ணீர் வந்தப்புறம் ஊருக்கு அந்தப்பக்கம் ஆத்தங்கரையில் போய் பாருடி… இன்னமும் பொண்ணுங்க அங்கத் தான் குளிக்கிறாங்க…” 

நடக்கத் துவங்கியிருந்தவள் அவன் சொன்ன செய்தியில் சட்டென நடையை நிறுத்தி திரும்பிப்பார்த்து அவனை முறைத்தாள், “அதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?”

“என்ன கேள்வி இது? திவ்யா கூட எப்போவாவது அம்மாக்கு தெரியாம அங்க போவா… நானும் அந்தப்பக்கம் போகும்போது பார்த்திருக்கேன்.” என்றுவிட, வரப்போகும் சூறாவளியை சொல்லவும் வேண்டுமா!

“என்னது பார்த்திருக்கீயா? நீ எதுக்கு அங்கெல்லாம் போற?” குந்தவை சீற, தச்சன் சுதாரித்தான்.

“யாரையாவது பார்க்கப் போவேன். அந்தப்பக்கம் வீடெல்லாம் இருக்கு.” என்றதோடு அவன் நிறுத்தியிருக்கலாம். அவன் வாய் கேட்டால் தானே! “கொஞ்சம் நிதானமா இருக்க பழகு குந்தவை. நகரத்தில் பெருசா தெரியுற விஷயம் இங்க சாதாரணமா இருக்கும். அங்க சாதாரணமா இருக்கிறது இங்க பெருசா தெரியும். நம்ம வீட்டுலேயே திவ்யா பெரியவளானதும் தான் தனியா பாத்ரூம் கட்டுனாங்க. இங்க சாதாரணமா பாவாடை கட்டிட்டு குளிப்பாங்க. அதைத்தான் காப்பியடிச்சி சிட்டியிலும் சினிமாவிலும் கையில்லாம, தோள்ல பிடிமானம் இல்லாத டிரஸ்சை நாகரீகம்னு போட்டுட்டு சுத்துறாங்க. நீதான் சிட்டிக்கு போகணும்னு சொல்லிட்டே இருப்பீயே… அங்க இருக்கிற மாதிரி நினைச்சிகிட்டு இங்க ஒருநாள் வர்றது…” என்று தச்சன் துடுக்காய் சொல்லிவிட, அவன் எடுத்துக்காட்டிய உவமையை மையமாக்கியே அவனை ஊமையாக்கியிருந்தாள் குந்தவை.

‘ரெண்டு நாள் இவ வந்ததுக்கே கண்ணை கட்டுதே… இன்னும் சொச்ச நாள் எப்படி போகப் போகுதோ… உன் வாய் தாண்டா உனக்கு வம்பை இழுத்துவிடுது. அவளுக்கு இப்படி பேசுனா பிடிக்காதுன்னு தெரியுதுள்ள அப்புறம் ஏன் இப்படி பேசி வைச்சி அவகிட்ட பேச்சு வாங்குற? அவளும் அடங்க மாட்டா உன் வாயும் அடங்காது...’ என்று மானசீகமாய் திட்டிக்கொண்டவன் இரவு உறங்கும் வரை கூட அடுத்து அவளிடம் வாய் கொடுக்கவில்லை. 

***

மங்களம் டீவி சீரியலில் ஆழ்ந்திருக்க, நீலா கொல்லையில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தார். அன்பரசனும் திண்ணையில் அமர்ந்து கணக்கு பார்த்துக் கொண்டிருக்க குந்தவை தனியாய் சிக்கும் நேரம் வரை காத்திருந்து அவளை மறித்தான் ராஜன், “தச்சன் எங்க? அதுக்குள்ள தூங்கிட்டானா?” ராஜனின் பார்வை தச்சன் அறை புறம் சென்று மீண்டும் குந்தவையிடம் வந்தது.

“இன்னைக்கு சீக்கிரம் படுத்துட்டாங்க. டாக்டர் என்ன சொன்னாங்க? பாட்டிக்கிட்ட கேட்டேன் ஒன்னுமில்லைன்னு சொன்னாங்க.” என்று மரியாதைக்காய் குந்தவை கேட்டுவைத்தாள்.

“இப்போ சாப்பிடுற மாத்திரையே தொடர்ந்து போட்டுக்க சொல்லிட்டாங்க. பெருசா ஒன்னும் பிரச்சனையில்லை.” என்று பதிலளித்தவன் ஒரு நொடி தயங்கி பின் குந்தவையை நேராய் பார்த்து,

“உன் அக்கா எப்படி இருக்காங்க குந்தவை? வேலைக்கு போறாங்க தானே? பிரச்சனை எதுவும் இல்லையே?” தயக்கம் உடைத்து ஒருவழியாய் தவிப்புடன் கேட்க, 

குந்தவை குழப்பமுடன், “நல்லாயிருக்கா அத்தான். ஏன் கேட்குறீங்க?”

குந்தவையின் கேள்வியில் சங்கடமாய் உணர்ந்தவன் புன்னகைக்க முயன்று, “சும்மா தெரிஞ்சிக்க கேட்டேன் குந்தவை. இங்கிருக்கும் போது பேசிட்டு இருந்தோம். வேலைக்கு போக தயங்குறாங்களோன்னு தோணுச்சு. ஆறுதலா பேசி அனுப்புனேன். அதுதான் இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க கேட்டேன்.” 

ராஜனின் பதிலில் குந்தவையின் குழப்பம் ஆச்சர்யமாய் மாறியது. இவர்கள் எப்போது பேசினார்கள்? வானதியும் இவரோடு பேசினாளா! 

குந்தவை மேலே எதுவும் சொல்லாமல் அமைதி காக்க, ராஜனுக்கு ஒருமாதிரி ஆகிப்போனது. குந்தவையிடம் நேரடியாய் கேட்டிருக்கக் கூடாதோ என்று தோன்றிய நேரம் அவள் வியப்பிலிருந்து வெளிவந்திருந்தாள்.

“இப்போ நல்லாயிருக்கா அத்தான். தைரியமா வேலைக்கு போயிட்டு வர்றா…” என்று குந்தவை முடித்துக்கொள்ள, ராஜனின் தடுமாற்றம் தீர்ந்தபாடில்லை.

“பசங்களுக்கும் பொம்மை வாங்கிட்டு வந்திருக்கேன். நாளைக்கு ஒரு வேலையா மயிலாடுதுறை வரை போறேன். உன் வீடு எங்கிருக்குன்னு சொன்னா பசங்களுக்கு வாங்குனதை அப்படியே கொடுத்துட்டு வந்துடுவேன்.” என்று ஒருவழியாய் சொல்லி முடித்து குந்தவையின் பதிலுக்காய் காத்திருந்தான்.

‛இவங்க பேசுறது ஏன் எனக்கு வித்தியாசமா தெரியுது? இவங்க சாதாரணமா நடந்துக்கிறது எனக்குத் தான் வித்தியாசமா தெரியுதா இல்லை இவங்க தான் வித்தியாசமா நடந்துகிறங்களா? ஒன்னும் புரியலையே… வீட்டு அட்ரஸ் கேக்குறாங்க சொல்லாம இருந்தா நல்லாயிருக்காது. இவங்க அங்க போயிட்டு வரட்டும் அப்புறம் நாம வானதிகிட்ட பேச்சு கொடுத்து பார்ப்போம்.’ என்ற முடிவிற்கு வந்தவள் அவனிடம் வீட்டு முகவரியை சொல்லிவிட்டு, 

“எல்லோருக்கும் பரிசு வாங்கி இருக்கீங்க. என் அக்கா பசங்களுக்கு கூட பரிசு ரெடியா இருக்கு. எனக்கு எதுவும் வந்தபாடில்லையே?” என்று இலகுவாய் கேட்க, சங்கடமான முறுவல் ஒன்றை உதிர்த்த ராஜன், “இங்கேயே இரு. வந்துடுறேன்…” என்று அவளை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு அவளுக்கென வாங்கி வந்திருந்த பேனாவை எடுத்துவந்து நீட்டினான்.

“எல்லோருக்கும் டிரெஸ் எடுத்தேன். உனக்கு என்ன வாங்குறதுன்னு தெரியல… இது உனக்கு உபயோகமானதா இருக்கும்னு நினைக்கிறேன்.” 

புன்னகையோடு அதை வாங்கிக் கொண்டவள், “தம்பிக்கு மட்டும் ஊரிலிருந்து வந்தவுடனே பரிசு கொடுத்தாச்சு. எங்களுக்கு எல்லாம் லேட்டா தான் வருது. அதுவும் கேட்டா தான் வருது.”

”அப்படியில்லை தம்பி கொஞ்சம் முறைச்சிக்கிட்டு இருக்கான். அவனை தாஜா பண்ணலாம்னு பார்த்தேன்.” என்று நெளிந்தவன், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்று சொல்லி, விட்டால் போதுமென நகர்ந்துவிட்டான்.

இன்னும் அங்கேயே நின்று பேச்சு கொடுத்தால் ‛அவள் அக்கா பிள்ளைகளுக்கு மட்டுமில்லை. அவள் அக்காவிற்கே அவன் பரிசு வாங்கி வந்திருப்பது எதற்கோ? ஏனோ?’ என்று அவன் மனசாட்சியே கேள்வியெழுப்பி அவனை மீண்டும் துரத்த ஆரம்பித்து விடுமே!

No comments:

Post a Comment

Most Popular