Menu

Search This Blog

SIvapriya's Thachanin Thirumagal - 16

 


*16*

நித்யாவுடன் பேசும் சுவாரசியத்தில் சுற்றிலும் பார்வையை சுழற்றாத குந்தவை கல்லூரி முடிந்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க, அவள் குறுக்கே திடுமென வந்து வண்டியை நிறுத்தினான் தச்சன். நடைபாதையில் பயமுறுத்தும் வகையில் குறுக்கே வண்டி நிறுத்தியவனை திட்ட வார்த்தைகள் வெளிவரத் துடிக்க, தச்சனைக் கண்டதும் முறைப்போடு நிறுத்திக்கொண்டாள் குந்தவை.

அவளை திடமாய் பார்த்தவன் அழுத்தமாய், “ஏறு குந்தவை…”

உறுத்து விழித்த குந்தவையோ நடுரோட்டில் சண்டை பிடிக்க முடியாமல் நித்யாவிடம் தலையசைத்துவிட்டு உர்ரென தச்சன் பின்னே ஏறி அமர்ந்து, வண்டி இருக்கையை பிடித்துக் கொண்டாள்.

மெளனமாய் வண்டியை செலுத்திய தச்சன் ஒரு உணவகத்தில் நிறுத்த, கீழே இறங்காத குந்தவை, “வீட்டுக்கு போகாம எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த? அம்மா சமைச்சு வச்சிருப்பாங்க.”

“அதெல்லாம் தகவல் சொல்லியாச்சு… நீ இறங்கு.” என்று துரிதப்படுத்த இறங்கிய குந்தவை உணவக வாயிலில் சென்று நின்றுகொண்டாள்.

வண்டியை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு வந்தவன் அவளிடம் லேசாய் தலையசைத்துவிட்டு உள்ளேச் செல்ல, ‘ஏன் துரை பேசமாட்டாராமாம்? மூணு நாளா கண்டுக்காம இருந்துட்டு இன்னைக்கு அதிகாரத்தை பாரு…’ என்று மனதிற்குள் அவனை அர்சித்தப்படியே அவனைத் தொடர்ந்தாள் குந்தவை.

‘மூணு நாளா ஒரு மெசேஜ் இல்லை போன் இல்லை… இவள் திமிரும் குறையல.’ என்று அவனும் அவளை கடிந்து கொண்டிருந்தான் பதிலுக்கு.

குளிரூட்டப்பட்ட அந்த உணவு அறை இதமாய் இருக்க நேரே சென்று கைகழுவி விட்டு, எதிரெதிரே அமரும்படி இருந்த இருக்கையை விடுத்து நால்வர் அமரும் இருக்கையில் குந்தவையை சுவரோரம் இருந்த நாற்காலியில் அமரவைத்து அதை ஒட்டியே மற்றொரு நாற்காலியை இழுத்துப்போட்டு அவள் தோள் உரசும்படி அமர்ந்தான் தச்சன்.

‘இதெல்லாம் சரியாப் பண்ணுவான்.’ என்று மீண்டும் குந்தவையின் மனம் நொடித்தது.

“உனக்கு என்ன சாப்பாடு வேணுமோ சொல்லிக்கோ அப்புறம் அதுக்கும் சண்டை பிடிப்ப…” என்று அவள் புறம் திரும்பாமலேயே அவன் சொல்ல, இதழுக்குள் எதுவோ முணுமுணுத்தவள் உணவக ஊழியர் வரவும் தனக்கு தேவையானதை ஆர்டர் செய்தாள்.

தச்சனும் தனக்கு தேவையானதை சொல்லிவிட்டு மெளனம் காக்க, குந்தவை பார்வையை சுற்றும் விரட்டினாள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் அமர்ந்து உண்டுகொண்டிருக்க வேடிக்கை பார்க்க கூட அங்கொன்றுமில்லை. உடன் இருப்பவனும் அமைதி காக்க, அலுப்பு தட்டி நாற்காலியில் நெளிய ஆரம்பித்தாள். பையை நோண்டினாள். எது செய்தாலும் பொழுது நகரமாட்டேன் என்று அடம்பிடிப்பது போலத் தோன்ற, பையிலிருந்து அலைபேசியை எடுத்து ஸ்க்ரீன் லாக்கை எடுக்கும் முன்னர் அதை பிடுங்கினான் தச்சன்.

“எல்லாத்துக்கும் ரூல்ஸ் பேசுவ... போன் யூஸ் பண்ணிட்டு கைகழுவாம அப்படியே சாப்பிடக்கூடாதுனு தெரியாதா?” என்று முறைக்க,

“அதெல்லாம் எனக்குத் தெரியும்… நான் சாப்பிடுறத்துக்கு முன்னாடி திரும்ப அலம்பிப்பேன்.” என்றாள் அவளும் வேண்டுமென்றே… 

இருவருமே பேச்சைத் துவங்க இதையொரு சாக்காய் பயன்படுத்திக் கொண்டணரேத் தவிர இரண்டு பேருமே மேல் சொன்னதை பின்பற்றுபவர்கள் இல்லை. அது இருவருக்குமே மற்றவர் உடல்மொழியிலிருந்து புரிந்திருந்தது. அதே நேரம் ஆர்டர் செய்த உணவுகளும் வந்துவிட கவனம் அதில் சென்றது. 

“முதல் முறை இதுமாதிரி நாம வெளியே வந்து சாப்பிடுறோம்!” என்றான் தச்சன் இடையே. ம் மட்டும் கொட்டியவள் கவனம் உணவிலேயே பதிந்திருக்க தன் முழங்கையால் அவளை இடித்தான் தச்சன்.

“முன்ன பின்ன சாப்பாட்டையே பார்த்திராத மாதிரி இப்படி முக்குற?”

“சாப்பிட தானே கூட்டிட்டு வந்த?”

“அதுக்காக அதை மட்டுமேவா செய்வ? கொஞ்சமாச்சும் பக்கத்தில் இருக்கிறவனைப் பாருடி…”

“என்னால சும்மா ஒண்ணுமில்லாம எல்லாம் யாரையும் பார்க்க முடியாது…” அவனை குத்திக்காட்டும் நோக்கில் அவள் எதுவோ சொல்ல அதை அவனுக்கு ஏற்றமாதிரி மாற்றிக்கொண்டான் தச்சன்.

“நான் சும்மா இல்லடி… டிரஸ் போட்டுதான் இருக்கேன்…” என்று கேலியாய் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கிசுகிசுக்க, நறநறவென பல்லை கடித்து முறைப்புடன் தச்சன் புறம் திரும்பினாள் குந்தவை.

“உன் புத்தி மட்டும் ஏன் இப்படி யோசிக்குதோ தெரியல…”

“உன்னால அப்படி யோசிக்க முடியலைன்னா எல்லோரும் அப்படியே இருப்பாங்களா என்ன?” என்று தச்சன் பரிகாசம் செய்ய எரிச்சல் மெல்ல அவளை சூழ்ந்தது.

“ப்ச்… இப்போ என்ன தான் வேணும் உனக்கு?”

“அதை நான் கேட்கணும். சண்டை போட்டீயே அதுக்கு அப்புறம் ஒரு போன், மெசேஜ் ஏதாவது செஞ்சியா? நான் பேசிடுவேன்னு ஒருநாள் முழுசும் போனை ஆப் பண்ணி தானே வச்சிருந்த?” என்று அவனே குத்திக்காட்ட, அவளுக்கு காரணம் கிடைக்காமலா இருக்கும்!

“மறுநாளே நான் போன் ஆன் பண்ணிட்டேன் ஆனால் அதன்பிறகு ஒருமுறை கூட நீயும் என்னை கூப்பிடல... ஒருநாள் எடுக்கல உடனே நீயும் இவள் எப்படியோ போகட்டும்னு விட்டுட்ட தானே? சண்டை போட்ட அன்னைக்கு கூட உன்னை சாப்பிடச் சொல்லி நான் மெசேஜ் போட்டேன்.” என்று காரணம் தேடிப்பிடித்து வம்பிழுத்தாள் குந்தவை.

“நீதானே சண்டையை ஆரம்பிச்ச அப்போ நீதான் சமாதானம் பேசணும். நானே எப்போதும் சமாதானம் பேசணும்னு நினைக்கக் கூடாது.” 

“என்னது ஆரம்பிச்சேனா? நீ பண்ண காரியத்துக்கு வேற எப்படி ரியாக்ட் பண்ண முடியும்? மறுபடி மறுபடி அதை நியாபகப்படுத்தாத எனக்கு வெறியாகுது…” 

“ரொம்ப பண்றடி நீ…”

“என்ன பண்ணிட்டேன் நானு? என்கிட்டேயே தைரியமா பொண்ணுகளை சைட் அடிச்சேன்னு சொல்லுவ… லோ ஹிப் பத்தி எங்கிருந்தோ தெரிஞ்சிக்கிட்டு வந்து நான் அப்படி கட்டலைன்னு என் முகத்துக்கு நேராவே குறைப்படிப்ப… அதை கேட்டுட்டு என் பிராணநாதரே ரொம்ப நல்ல காரியம் பண்ணி இருக்கீங்கன்னு பாராட்டனுமாக்கும்? இனி ஒருதரம் எவ மேலாவது உன் கண்ணு போச்சு முழியை நொண்டி எடுத்துருவேன் பார்த்துக்கோ…” கட்டளைகள் உரிமையாய், அதிகாரமாய் பிறப்பிக்கப்ட, உதட்டை சுழித்தான் தச்சன். உணவுகள் இவர்களின் பஞ்சாயத்துக்கு இடையில் காய்ந்து போயிருந்தது. பிணக்கிலும் சூழ்நிலை உணர்ந்து இவர்களின் குரல்கள் மெலிதாகவே வெளிவர, மானம் தப்பித்தது.

“நோண்டி எடுத்த பிறகு எங்கடி பார்க்குறது… ஆனாலும் தம்மாந்துண்டு இடுப்புக்கு நீ இம்புட்டு இம்சை செய்யக் கூடாது குந்தவை. அதுவும் வேணுமே நான் தேடித் தேடிப் போய் பார்த்த மாதிரி பேசுற… உன்கிட்ட தான் அதைத் தேடுனேன் மத்தவங்களை முகத்தோட நிறுத்திப்பேன்… மீ ஜென்டில் மேன்…”

“கொழுப்பு அதிகம்டா உனக்கு. எனக்கு பத்திக்கிட்டு வருது… ரோட்டுல போற எவனாது ஒழுக்கம் கெட்டு பார்த்தாலே அவ்வளவு கோபம் வரும்… ஆனால் எனக்கு வாக்கப்படவன் நீ! அது மாதிரி இருந்தா… ஸ்… செம்ம காண்டாகுது…” என்று விரல்களை மடித்து பற்களை கடித்தாள் குந்தவை.

“அமைதி அமைதி அமைதியோ அமைதி குந்தவை தேவியாரே… நீங்க ரொம்பபப ஒழுக்கசீலியா இருக்கிறதாலத் தான் இவ்வளவு பிரச்சனையும்.”

“அதனால உன்னை மாதிரி இருக்கச் சொல்றியா?” சீற்றமாய் வந்த அவளது குரலில் சற்று பம்மியவன்,

“இல்லையே… அதாவது என்னை மாதிரியும் நீ இருக்கலாம் தப்பில்லை… நானும் தப்பா நினைக்க மாட்டேன்னு சொல்ல வந்தேன்…”

“கேவலமா இருக்கு உன்னோட ஐடியா…”

“தெரியுதுல்ல… முடிஞ்ச நிகழ்வுகளை மாற்ற நினைக்குறது இயலாத காரியம். அதை பிடிச்சிக்கிட்டு நீ சண்டை போடுறது அதைவிட மடத்தனம். இதுக்கு மேல என்ன செய்யணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ.” என்றவன் இதோடு முடிந்தது என்று உணவில் மீண்டும் கவனம் செலுத்தினான். 

குந்தவைக்கு அவன் சொல்ல வருவதும் புரிந்துதான் இருந்தது. இரண்டு நாட்களாக யோசித்துப் பார்த்தவளுக்கு அவனின் வெளிப்படைத் தன்மையில் பிரதிபலிக்கும் மெய், அவன் குற்றமற்றவன் என்பதை பறைசாற்றுவது போலத்தான் இருந்தது. அவன் சொல்லாமல் இருந்திருந்தால் அவளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை எனும்போது ஒளிவுமறைவற்ற அவனது குணத்தை சீண்டிப்பார்த்து, இருக்கும் இணக்கத்தை குறைத்து, உண்மையாக இருப்பவனை நேரெதிராய் மாற்றிவிட வேண்டாம் என்றே முடிவெடுத்திருந்தாள். இருந்தும் சின்ன சுணக்கம். அதுவும் இப்போது அவனாய் பேசவும் மறைந்திருந்தது. அமைதியாய் உண்டு முடித்தவள் கைகழுவிவிட்டு வருவதற்குள் பில் கட்டிவிட்டு அவளுக்காய் காத்திருந்தான்.

“உன் வீட்டுல ஏதாவது எடுக்கணுமா இல்லை இப்படியே நம்ம வீட்டுக்கு கிளம்பிடலாமா?” 

“வீட்டுக்கு போய் அம்மாகிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்…” என்று குந்தவை சொல்ல, அவள் வீடுக்குச் சென்றுவிட்டே கிளம்பினர். குந்தவை வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் பயணம் நெடுகிலும் அவன் தோளில் பிடிமானத்திற்காக அழுந்தப் பதிந்திருந்த அவளது கரமே அவள் மனதை காட்டிக்கொடுத்தது.

தச்சனும் வாங்கிக்கட்டிக் கொண்டவரை போதுமென்று வாயை மூடிக்கொண்டான். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவளை வீட்டு வாயிலில் இறக்கிவிட்டவன், “நீ போ குந்தவை… எனக்கு வேலை இருக்கு.”

யோசனையாய் கடிகாரத்தை பார்த்துவிட்டு நிமிர்ந்தவள், “காபி குடிக்குற நேரம் தான்… உள்ளே வந்து குடிச்சிட்டு போ…”

“இல்லை வேண்டாம்… குணாவுக்கும், வேலை செய்யறவங்களுக்கும் டீ வாங்கிட்டு போகணும். அங்கேயே நானும் குடிச்சிக்குறேன்.” என்றுவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் அவன் சென்றுவிட, பார்வையிலிருந்து அவன் மறையும் வரை அங்கேயே நின்றுவிட்டு பின் வீட்டினுள் சென்றாள் குந்தவை. 

வாயிலிலேயே அவளை எதிர்கொண்ட நீலா, “பரீட்சை எப்படி எழுதி இருக்க? போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதா குந்தவை?” 

“முடிஞ்சிடுச்சு அத்தை… எக்ஸாமும் நல்லா எழுதிருக்கேன்…”

“நல்லது… இல்லைன்னா நீதான் அங்கேயும் இங்கேயும் அலைஞ்சிட்டே இருக்கனும்.”

“ஆமா அத்தை… சீக்கிரமே முடிஞ்சிடுச்சு… அங்கேயே அப்பா ஆபஸ் பக்கத்தில் வேறொரு இடத்தில் வானதிக்கு வேலைக்கு சொல்லி இருக்கேன்.” பேச்சோடு பேச்சாய் வானதியை அங்கிருந்து கிளப்பவும், வாழ்க்கையில் வானதிக்கு ஒரு பிடிமானம் வர வேண்டுமென அவள் யோசித்து வைத்திருக்கும் வழியையும் நீலாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றாள் குந்தவை.

“ஓ… நல்ல காரியம் பண்ணி இருக்க… ஆனால் வானதி வேலையைப் பத்தி என்கிட்ட ஒண்ணுமே சொல்லலையே…” தங்களுடனேயே வானதி இருந்துவிடப் போவதில்லை என்பது நீலாவுக்கு ஏற்கனவே தெரியுமென்பதால் குந்தவை சொன்ன தகவலை எளிதாய் எடுத்துக்கொண்டார்… என்னவொன்று, பிள்ளைகள் விரைவிலேயே கிளம்பிவிடுவார்கள் என்ற சிறிய வருத்தம் மட்டுமே… 

“அவளுக்குத் தெரியாது அத்தை. இனி தான் சொல்லணும்.”

“வீட்டிலேயே இருந்த பொண்ணு. பிள்ளைங்களை வீட்டுல விட்டுட்டு வேலைக்கு போக சிரமமா இருக்கும்ல…”

“போய்த்தானே ஆகணும் அத்தை. எப்போதும் இப்படியே இருந்திட முடியுமா?”

“அதுவும் சரித்தான். இது விஷயமா நாங்க ஒன்னு யோசிச்சு வச்சிருக்கோம். மாமா வரட்டும் கலந்து பேசுவோம். இப்போ நீ போய் காபி போட்டு குடி… எனக்கு மாட்டுக் கொட்டகையில் வேலை இருக்கு.”

“சரிங்கத்தை…” என்று உள்ளே நுழைந்தது தான் தாமதம் வானதி அவளை பிடித்துக்கொண்டாள். 

“அப்பாடி வந்துட்டீயா… நீ இல்லாம எனக்கு இங்க ஒருமாதிரி இருந்துச்சு.”

“இனி உனக்கு அந்த கவலை வேண்டாம். ஊருக்கு தயாராகு.” என்றுவிட்டு அறைக்குச் சென்றாள் குந்தவை. அவளையே தொடர்ந்த வானதியின் முகம் சுருங்கிவிட, “என்னது ஊருக்கா?” என்ற அவள் குரலும் சுரத்தை இழந்திருந்தது.

“ஏன் இங்கேயே இருந்திடலாம்னு யோசனை எதுவும் வச்சிருக்கியா என்ன? என்னைக்கு இருந்தாலும் வீட்டுக்கு போய்த் தானே ஆகணும். நான் மாமாகிட்ட இன்னைக்கே பேசிடுறேன்… நாளைக்கு அங்க கிளம்ப தயாரா இரு...” என்க, கையை பிசைந்துகொண்டு நின்றாள் வானதி. 

அவளை கண்டுகொள்ளாமல் பையை அதனிடத்தில் வைத்த குந்தவை, வாட்ச்சை கழற்றி வைத்துவிட்டு அலமாரியைத் திறக்க அன்று கோபத்தில் தூக்கி எறிந்த புடவை சுருட்டி வைக்கப்படிருந்தது. ஒரு பெருமூச்சுடன் அதை எடுத்தவள் மடித்துக்கொண்டே, “பிள்ளைங்க தூங்குறாங்களா? சத்தத்தையே காணோம்?”

“ஹம்… நான் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்.” என்று வானதி முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு சென்றுவிட்டாள். அதை மனதில் குறித்துக் கொண்ட குந்தவை மாலை அன்பரசன் வந்த உடனேயே அவர் அறைக்கே சென்று வானதிக்கு வேலை ஏற்பாடு செய்து வைத்திருப்பதை சொன்னாள். இவ்வளவு அவசரமாக குந்தவை அறைக்கு வந்து பேசவுமே அன்பசரனுக்கு அவள் கடத்த நினைக்கும் விஷயமும், அதன் அவசியமும் புரிந்ததுவிட்டது.

“எப்போமா போகணும்?” 

“சீக்கிரம் வேலையில் சேர்ந்துடுறது நல்லது மாமா…” 

குந்தவையிடம் வெளிப்படும் திடம், எடுத்திருக்கும் முடிவிலிருந்து அவள் பின்வாங்கப் போவதில்லை என்பதை வெளிப்படுத்த, ஓரிரு நொடி யோசித்தவர், “சரி… அப்போ உனக்கு பரீட்சையெல்லாம் முடிஞ்சதும் நீயும் கூடப்போய் வீட்டில் விட்டுட்டு வேலையிலும் சேர்த்து விட்டுட்டு வாமா… நான் தான் பேசி வானதியை இங்க கூட்டிட்டு வந்தேன். அதனால நாம முறையா கொண்டு போய் விடுறது தான் சரி… என் சார்பா நீயே தச்சனை அழைச்சிட்டு போய் விட்டுடு.”

வானதியை இங்கிருந்து கிளப்ப நினைக்கும் போதெல்லாம் ஏதோவொரு காரணத்தால் தள்ளிப் போய்கொண்டே இருக்கிறதே என்று நினைத்தவளால் அன்பரசனின் பேச்சை மீற முடியவில்லை. 

“நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடலாம் மாமா… இந்த வார இறுதியில் பரீட்சை முடிஞ்சிடும்.” என்று தகவலையும் சேர்த்துச் சொல்ல, 

“நானும் உங்கத்தையும் வானதியை பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தோம். வானதிக்கு வாழுற வயசுமா… ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. வானதிக்கு நாம ஏன் இன்னொரு கல்யாணம் செய்து வைக்கக் கூடாது? நம்ம பக்க சொந்தத்திலேயே பார்க்கலாம். நீ என்ன நினைக்குற?”

“கல்யாணமா?”

“இதுல யோசிக்க என்ன இருக்கு குந்தவை? உன்னைவிட ரெண்டு மூணு வயசு தான் பெரியவ… ஒரு வாழ்க்கை முடிஞ்சிபோச்சுனு அப்படியே விட்டுட முடியுமா? காலத்துக்கும் தனியா விடமுடியாது…”

“அதில்லை மாமா… அவள் கொஞ்சம் மேல வந்து யாரையும் சார்ந்திருக்காம வாழ பழகட்டுமேன்னு பார்க்குறேன்…”

“திடமா இருந்தா எப்போ வேணும்னாலும் முன்னேறிடலாம். ஆனால் எனக்கென்னமோ தள்ளிப்போடாம பசங்களுக்கு விவரம் தெரியுற முன்னாடியே கல்யாணம் பண்றது நல்லதுனு தோணுது. பசங்களுக்கு விவரம் புரிய ஆரம்பிக்கும் போதே அப்பான்னு ஒருத்தரை தெரிஞ்சிகிட்டே வளருவாங்க. விவரம் தெரியுற வயசு வரும்போது அவங்களுக்கு வித்தியாசம் தெரியாது. புதுசா இணையப்போறவனுக்கும் பிள்ளைங்க சின்ன வயசிலிருந்தே கூட இருந்தா இதுவும் என் பிள்ளைங்கன்னு நினைப்பு வரும். பிடிமானம் வரும். நீ யோசி. வீட்டிலேயும் கலந்து பேசு. இந்த முறை அவரசப்பட வேண்டாம்… நிதானமா செய்வோம்…”

“சரிங்க மாமா. நீங்க சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான். பசங்க மனநிலையும் முக்கியம் தானே… ஒரு ஆறு மாசம் அவள் வேலைக்கு போகட்டும் மாமா. வெளிய போக ஆரம்பித்தால் அவளுக்கும் தன்னம்பிக்கை வரும். அப்புறம் நானே அவகிட்ட இதைப் பத்தி பேசுறேன்.” என்று குந்தவை சொல்ல, அதோடு அந்தப் பேச்சுக்கள் முடிந்தது.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் பரீட்சை என்று அதில் மூழ்கிவிட்டாள் குந்தவை. தச்சனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. அன்றும் அப்படித்தான் வேலை முடித்துவிட்டு நேரமே வீட்டிற்கு வந்திருந்த தச்சன் பார்வையில் மும்மரமாய் படித்துக் கொண்டிருக்கும் குந்தவை தான் கண்ணில்பட்டாள். 

கையோடு எடுத்துவந்திருந்த பையை ஒரு ஓரமாய் வைத்தவன், கைலிக்கு மாறியபடியே தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பவளை சீண்டினான்.

“சரியான படிப்ஸா இருப்பியோ… இன்னும் ரெண்டு நாள் இருக்கு அடுத்த பரீட்சைக்கு… ஆனாலும் எந்நேரமும் நீ படிச்சிட்டே இருக்க.” 

“எக்ஸாமுக்கு படிக்காம போக முடியுமா… இன்னும் ஒன்னு தான் பாக்கி.” என்றவள் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்தாள்.

“நானெல்லாம் படிக்காமலேயே பரீட்சை எழுதுவேன்டி…” 

“நீதானே… நீ எப்படி படிச்சி கிழிச்சிருப்பேன்னு நீ சொல்லாமலேயே எனக்குத் தெரியும்.” என்று இதழ் வளைத்து குந்தவை நக்கல் பேச, உதட்டை சுழுத்தவன், ‘இந்த அவமானம் உனக்குத் தேவையாடா.’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, ஓரமாய் வைத்திருந்த பையிலிருந்து காகிதத்தில் சுற்றி இருந்த ஒரு பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“என்னது இது?”

“பிரிச்சுப் பாருடி… இன்னைக்கு ஒரு வேலையா தஞ்சாவூர் போயிருந்தேன். அங்கிருந்து உனக்காக வாங்கிட்டு வந்தேன்.” என்று அவள் கையில் அந்த பெட்டியைத் திணிக்க, ஆர்வமுடன் அதை பிரித்தாள் குந்தவை.

“முதல் முதலா எனக்கு என்னவோ வாங்கிட்டு வந்திருக்க.” என்றவள் பெட்டியை பிரித்து அதிலிருந்ததை எடுத்துப் பார்க்க, விழிகளின் மொழிக்கேற்ப அழகிய பதுமையொன்று தலையாட்டிக் கொண்டிருந்தது தஞ்சையின் அடையாளங்களில் ஒன்றான தலையாட்டி பொம்மை. அடர் நிறங்களை சமகலவையாய் கொண்டு உடுப்பும், அதற்கேற்ப ஒப்பனையும், உடைகளில் கூட நுணுக்கமாய் செய்திருந்த வேலைப்பாடுகளும் பார்த்ததும் கண்ணையும், மனதையும் பறிப்பதாய் இருக்க குந்தவையின் உள்ளமும் அந்த பதுமையிடம் இருந்த புன்சிரிப்பை பூசிக்கொண்டது. அதோடு முதன்முதலாய் அவன் வாங்கிக்கொடுத்த பொருள் என்பதிலும் மனம் தனி உவப்பை உணர்ந்தது. 

“பிடிச்சிருக்காடி… என்னமோ இன்னைக்கு இதை பார்த்ததும் உனக்கு இதை வாங்கிக் கொடுக்கணும்னு தோனுச்சு… வாங்கிட்டு வந்துட்டேன்.” என்று அவன் ஆர்வமாய் கேட்க, அவளுக்கோ அவனை சீண்டிப் பார்க்கும் ஆர்வம் வந்துவிட்டிருந்தது. சீன்டாதே என்று ஒரு மனம் அவளை தடுத்தாலும் அதை உதறியவள், அகல விரிய முயலும் இதழ்களை இழுத்துப் பிடித்து, முகத்தில் கடுமையை கடினமாய் கொண்டுவந்து, புருவத்தை உயர்த்தி, “இது மாதிரியே நீ என்ன சொன்னாலும் எதிர்த்து பேசாம நான் தலையாட்டி கேட்டுக்கனும்னு தானே இதை வாங்கிட்டு வந்து கொடுத்திருக்க.” என்க, பதறிவிட்டான் தச்சன். 

“அம்மா தாயே உனக்கு மட்டும் எங்கிருந்து தான் இப்படியெல்லாம் தோணுதோ… நான் சாதாரணமாத் தான் வாங்கிட்டு வந்தேன்… ஆனால் நீ சொன்னது கூட சரியாத் தான் இருக்கு. நீயேன் இதை முயற்சிக்க கூடாது.” என்று அவன் தீவிரமாய் கேட்க, அவன் காதை திருகினாள் குந்தவை.

“நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்… இப்படியெல்லாம் எண்ணம் இருந்தா அதை அழிச்சிடுடா… அதெல்லாம் என்னைக்குமே நடக்காது”

“அதுதான் எனக்குத் தெரியுமே…” என்றவன் காதில் இருந்த அவள் கரங்களை தட்டிவிட்டு, தன் இருகரம் கொண்டு அவள் இடை சுற்றி வளைக்க, சுகமாய் அவன் நெஞ்சம் சாய்ந்து கொண்டாள் குந்தவை. தன் நெஞ்சில் இதமாய் சாய்ந்திருந்த அவள் தலைமீது தாடையை வைத்து அழுத்தியவன், “என்ன புதுசா இன்னைக்கு இப்படி வந்து சாஞ்சி நிக்குற?” என்று கிசுகிசுக்க, அவன் நெஞ்சிலேயே முகத்தை உரசியவள், பொம்மையை மெத்தையில் வைத்துவிட்டு, அவன் இடை சுற்றி கரம் போட்டுக்கொண்டாள்.

“நீ என்னைக்கு இதுமாதிரி கையை வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்க… நான் சாஞ்சிக்கணும் நினைக்கும் போதெல்லாம் சாரோட நினைப்பு வேறையா இருக்கும்…” என்று அவள் சிணுங்க, சீண்டல்கள் அற்ற அந்த சிறு அணைப்பு கூட தித்திப்பாய் இருந்தது. அந்த தித்திப்புக்கு எதிர்பதமாக காத்திருக்கும் காரம் தெரியாமல் இருவரும் அணைப்பில் நெகிழ்ந்திருக்க, தச்சன் அவள் உச்சந்தலையில் ஒரு முத்தம் வைத்து அவளை பிரித்தான்.

“பசங்களுக்கும் ரிமோட் சார், பொம்மை வாங்கிட்டு வந்திருக்கேன். போய் குடுத்துட்டு வந்துறேன். கேட்கனும்னு நினைச்சேன். உன் போன் என்னாச்சு? உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமான்னு கேட்க போன் போட்டேன். கிடைக்கவே இல்லை.” என்று கேட்க, 

“இந்த அறிவழகி கீழ போட்டு உடைச்சிட்டா…” என்று சோகமாய் உதட்டை பிதுக்கினாள்.

“ஓ… சரி புதுசு வாங்கிக்கலாம்.”

“புதுசெல்லாம் வேண்டாம். கடையில் கொடுத்து சரி பண்ண முடியுதான்னு பார்ப்போம்.” என்று குந்தவை மறுக்க, அவளது அலைபேசியை கேட்டு வாங்கி அதிலிருந்த விரிசலும், பின்பக்கம் உடைந்திருந்த பாகத்தையும் பார்த்து, “வேகமா போடுட்டாளா? இப்படி உடைஞ்சிருக்கு?”

“ஆமாடா… நான் அவள் இருக்குறதை மறந்துட்டு செல்லை கீழ வச்சிட்டு கிச்சனுக்கு போயிட்டேன். இந்த மேடம் அதை எடுத்து பால் மாதிரி தூக்கிப்போட்டு விளையாண்டிருக்காங்க.” 

“புதுசே வாங்கிடலாம். என் பிரென்ட் ஒருத்தன் குடந்தையில் கடை வச்சிருக்கான். அவன்கிட்ட சொன்னா வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துடுவான்.” என்றுவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் பிள்ளைகளுக்கு வாங்கி வந்திருந்த பொம்மைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

அவனைக் கண்டதுமே துள்ளலோடு தத்தை நடையிட்டவர்கள் அவன் கையில் இருக்கும் பொருளை பார்த்ததும் உல்லாசமாய் கைத்தட்டி சிரித்தனர். 

“உங்களுக்குத் தான்டா குட்டீஸ்…” என்று தச்சன் பொம்மையை ஆட்டிக்காட்ட, ஓடிவந்து அவன் கால்களை கட்டிக்கொண்டு அவன் கையிலிருந்த விளையாட்டுப் பொருளை பிடுங்கி முயன்றனர் இரு அறிவுகளும்… 

“இருங்கடா… உங்களுக்குத் தான் வாங்கிட்டு வந்திருக்கேன்.” என்று சிரித்துக்கொண்டே அறிவழகியிடம் பொம்மையை கொடுத்தவன், அறிவழகனோடு கீழே அமர்ந்து ரிமோட் காரை இயக்க, அறிவழகன் கைதட்டி சிரித்து வேடிக்கை பார்த்தான். ஆனால் பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்த அறிவழகி அவளுடையதை தூக்கி வீசிவிட்டு முற்றத்தில் கண்ணைக் கவரும் வகையில் அங்குமிங்கும் ஓடிய ரிமோட் காரை எடுத்து ஆராயத் துவங்கினாள். உடனே போட்டிக்கென அறிவழகனும் தவழ்ந்துச் சென்று அவளிடமிருந்து அதைப் பிடுங்க, அறிவழகி தரமாட்டேன் என்று மறுத்து மறுபக்கம் ஓட, அழுகைகள் துவங்கியது.

அறிவழகியை தூக்கியவன் அவள் கையிலிருந்த காரை பேச்சு கொடுத்துக் கொண்டே மெதுவாய் வாங்கி முயன்றான். 

“என் அழகி சமத்து பொண்ணு தானே… அவனோடதை அவனுக்கு கொடுத்திரு… நான் உனக்கு வேற வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு… அதை வச்சு நாம விளையாடலாம்.” என்று பேரம் பேச, பிடிவாதமாய் அதை தர மறுத்து, தன் நெஞ்சோடு அந்தக் காரை அணைத்துகொண்டாள் அறிவழகி. அவளின் செயலில் அறிவழகன் அழுகையைக் கூட்ட, அவனது வீலென்ற அலறலில் வீட்டிலிருந்த அனைவருமே முற்றத்தில் கூடி அவர்களை அமைதிப்படுத்த முயன்றனர்.

“சித்தி மாதிரியே பிடிவாதம் உனக்கு.” என்று அறிவழகியிடம் சொல்வது போல குந்தவையை சீண்ட, அவன் புறம் குந்தவை முறைப்பை வீசினாளே ஒழிய வேறேதும் பேசவில்லை.

“ரெண்டு பேரையும் வெளில கூட்டிட்டு போய் அவங்க நினைப்பை மாத்துங்க… ரெண்டுத்துக்கும் பிடிவாதம் அதிகமாகிடுச்சு…” என்றார் மங்களம்.

உடனே குந்தவை பதிலுக்கு, “செல்லம் அதிகமானதும் பிடிவாதமும் அதிகமாகிடுச்சு…” 

“சரி சரி… வெளில கூட்டிட்டு போய் வேடிக்கை காட்டு…” என்று அவளை விரட்டிய தச்சன், முக்கிய கோப்புகளும், பணமும் இருக்கும் பீரோல் அறை நோக்கிச் செல்ல, யோசனையுடன் அவனை பின்தொடர்ந்தார் நீலா.

“என்ன வேணும்?” என்று நீலா கேள்வி எழுப்ப, பீரோவைத் திறந்து அதிலிருந்து பணத்தை எடுத்து எண்ணினான் தச்சன்.

“குந்தவை போன் உடைஞ்சிடுச்சு… புதுசு வாங்கணும்… நம்ம பைய ஒருத்தன் கடை வச்சிருக்கானே, அவன்கிட்ட பணம் கொடுத்தா வீட்டுக்கே எடுத்துட்டு வந்துருவான்.” என்று பதில் கூறிக்கொண்டே இரண்டாயிரம் தாள்களை எண்ண, அதை வெடுக்கென்று பிடுங்கி அதிலிருந்து மூன்று நோட்டுக்களை மட்டும் கொடுத்தார் நீலா.

“இதுல வாங்கிக்கோ…”

“அம்மா பத்தாயிராமாவது வேணும்…” என்று அவரிடமிருந்து மீதித் தாள்களை பிடுங்க முயல, அதை பின்னே மறைத்துக் கொண்டார் நீலா.

“செலவை குறைக்கணும் தச்சா… காசை வாரியிறைச்சு செலவு பண்ற அளவுக்கு இப்போ இருப்பு இல்லை.” என்று முதலில் பொறுமையாகத் தான் சொன்னார்.

“ப்ச்… நான் என்ன லட்ச கணக்கிலா செலவு பண்றேன்? இப்படி எல்லாத்துக்கும் கணக்கு பார்க்காத.” என்று அவன் முகத்தை சுழிக்க, விவாதங்கள் விவகாரமாக மாறியது.

“லட்ச கணக்கில் செலவு பண்ண இங்க பணம் மரத்தில் காய்க்கல. ஏற்கனவே இந்த வருடம் ஏகப்பட்ட செலவு. இதுல நீ வேற விவசாயம் பண்றேன்னு லாபம் கொடுக்குற நிலத்தில் நஷ்டம் வரமாதிரி பண்ணி வச்சிருக்க. எவ்வளவு உழைப்பு போட்டாலும் இழப்பு வரப்போவது தெரிஞ்சே நிலத்தை அப்படியே விடமுடியாம வேலை நடக்க நீ கேட்கும் போதெல்லாம் காசு கொடுத்துட்டு இருக்கோம். அப்பா பார்க்குற நிலத்தில் லாபம் வந்தாலும் அது கடனை அடைக்கவும், அடுத்த போகத்துக்கு முதலீட்டுக்குமே சரியா இருக்கும். 

விளைச்சல் அதிகமா இருக்குறதால இந்த வருடம் அறுவடை இயந்திரத்துக்கும் கிராக்கியாமே… ஏற்கனவே இந்த நூறு நாள் வேலைத்திட்டம் வந்த பிறகு ஆள் கிடைக்கிறது இல்லை. இப்போ இந்த இயந்திரமும் அதில் சேர்ந்துடுச்சு. தஞ்சாவூரில் இருந்து பத்து மெஷின் தான் நம்ம சுற்று வட்டாரம் மொத்தத்துக்கும் வருதாம். அதை யார் முதலில் வாடகைக்கு எடுக்குறதுன்னு போட்டி வேற… முன்பணமா இப்போவே கொஞ்சம் கட்டி இயந்திரத்தை முன்பதிவு செஞ்சிடுறது நல்லதுன்னு அப்பா சொல்லிட்டு இருக்காரு. கிராக்கியா இருக்குறதால வாடகையும் அதிகமாம். ஒரு மணி நேரத்துக்கு ஆயிரத்து எண்ணூறு ரூபாவாம், அதுவும் எட்டு மணி நேரம் தான் வேலை செய்யுமாம். ஒரு ஏக்கருக்கு குறைஞ்சது நாலு இயந்தரமாவது வேணும். நம்ப மொத்த வயலுக்கும் இந்த வாடகையே ஐம்பதாயிரத்தை தாண்டிடுமாம். அப்புறம் கூலி, குடோனுக்கு அனுப்ப வண்டி வாடகை, சாக்கு தைக்க கூலின்னு செலவே எக்கச்சகமா இருக்கு…”

“இப்போ என்ன… நான் நஷ்டமாக்கிட்டேன் அதுனால இந்த பணத்துல கையை வைக்காதேன்னு சூசகமா குத்திக்காட்டுறீயா?” என்று எரிச்சலாய் கேட்டான் தச்சன். 

இவ்வளவு பொறுமையாய் செலவீனங்களை எடுத்துச்சொல்லியும் அதை கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் பேசுகிறானே என்ற கடுப்பில் நீலா வார்த்தையை சிதறவிட்டார்.

“பணத்தை சிக்கனமா செலவு பண்ணுன்னு சொல்றதைக் கூட உன்னால புரிஞ்சிக்க முடியல… இன்னும் எத்தனை நாள் தான் இப்படி பொறுப்பில்லாம சுத்தப்போற? இந்த லட்சணத்தில் நீ சம்பாரிச்சு கொட்டுன மாதிரி நினைச்ச நேரத்துக்கு பணத்தை எடுத்து தண்ணியா செலவு பண்ற… இன்னைக்கு மட்டும் தஞ்சாவூரு போறேன்னு சொல்லி அஞ்சாயிரம் செலவு பண்ணியிருக்க. அப்படி என்னத்த வாங்கிக் கிழிச்சேன்னு தெரியல… இதுல குந்தவைக்கு பத்தாயிரதுக்கு மேலத்தான் செலவு பண்ணுவாராமாம்… இன்னமும் இந்த குடும்பம் உங்கப்பா உழைப்பில் தான் ஓடிட்டு இருக்கு. அதை மனசுல வச்சுக்க…” என்று நீலா கடுமையாய் பேச, தச்சனின் தன்மானம் சீண்டப்பட்டதோ இல்லையோ அதை எதேர்ச்சையாக கேட்ட குந்தவையின் தன்மானம் சீண்டப்பட்டு சுயம் விழித்தெழுந்தது. 

மாமனார் உழைப்பில் தான் இருப்பதோடு இல்லாமல் தன் அக்கா, அவள் பிள்ளைகள் என குடும்பமே வாழ்வதா? என்ற எண்ணம் தீச்சுட்டது போலச் சுட, அவளால் அங்கு அதற்கு மேல நிற்கவே முடியவில்லை.

உள்ளம் உலகலம் போல் கொதிக்க, விரல்களை பிரிப்பதும் சேர்ப்பதுமாய் அவர்கள் அறையில் நடந்து கொண்டிருந்தாள். அந்நேரம் எதுவுமே நடக்காதது போல சாதாரணமாய் பணத்தை எண்ணிக்கொண்டு அறைக்கு வந்தான் தச்சன்.

“என்ன போன் வேணும்னு சொல்லுடி… இப்போ சொன்னா கடை அடைச்சிட்டு வரும்போது எடுத்துட்டு வந்து தருவான்.” என்று இயல்பாய் கேட்க, அவனை நம்பாமல் பார்த்தாள் குந்தவை.

“உனக்கு ரோஷமே வராதா?”

“ஏய் என்னடி பேச்செல்லாம் ஒருமாதிரி இருக்கு.” என்று அவன் சுதாரிக்க, அது பயனற்றுப்போனது.

“நேராவே பொட்டில் அடிச்ச மாதிரிதானே அத்தை சொன்னாங்க… உழைச்சி காசு சாம்பாரிச்சிட்டு செலவு பண்ணு, அப்பா காசுலேயே இன்னும் உடம்பை வளர்க்காதேன்னு சொன்னாங்க… அதை கேட்ட பிறகும் எந்த முகத்தை வச்சிக்கிட்டு காசு வாங்கிட்டு வந்து எனக்கு போன் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு நிக்குற? சுரணையா வராதா உனக்கு? இவ்வளவு வயசான பிறகும் அப்பா காசில் உட்கார்ந்து சாப்பிடுறது மட்டுமில்லாம உன்னை நம்பி வந்த என்னையும் இப்படி நிக்க வச்சிருக்க… இதில் என் அக்கா பசங்களுக்கு வேற காசை வாரியிறைக்குற… இன்னும் எவ்வளவு நாளுக்கு மாமா சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியும்? வீட்டுப் பெரியவரை உழைக்க அனுப்பிட்டு அவர் காசுல சொகுசா இருக்க எப்படி மனசு வருது உனக்கு? தன்மானம் குத்தல? நம்பி வந்தவளுக்கு உன்னால ஒத்த ரூபா சம்பாரிச்சு அதில் ஒரு குன்டூசியாவது வாங்கித் தர முடிஞ்சிதா? எல்லாத்துக்கும் மாமா காசு… அப்போ நீ எதுக்கு இருக்க? எதுக்கு கல்யாணம் பண்ண?” என்று அவள் சத்தம் போட, அவனுக்கும் ரத்த அழுத்தம் எகிறியது.

“ரொம்பப் பேசுற குந்தவை… இது என் வீடு. நான் என் அப்பா காசில் தான் சாப்பிடுறேன்… என் அம்மா தான் திட்டுறாங்க… எனக்கும் இங்க உரிமை இருக்கு. என்னை திட்ட என் அம்மாவுக்கும் உரிமை இருக்கு. நீ சும்மா குதிக்காத… உன்னை யாரும் எதுவும் சொல்லிட மாட்டாங்க. காசு விஷயத்தில் என்ன செய்யணுமோ அதை நான் பார்த்துப்பேன். என் அப்பா பார்த்துப்பார்… எனக்கு உரிமையான பணத்தில் தான் உனக்கும் செலவு பண்றேன்… நீ தேவையில்லாம பிரச்சனையை கூட்டாத… இங்க ஒன்னும் மாச சம்பளத்துக்கு வேலை பார்க்கல… அறுவடை முடிஞ்சா தான் காசு கைக்கு வரும்…”

“இதுதான் இதுக்குத்தான் அப்போவே நமக்கு ஒத்துவராது… இது வேண்டாம் வேண்டாம்னு சொல்லிகிட்டே இருந்தேன். யார் என் பேச்சை கேட்டா? ஏற்கனவே வருமானம் இல்லை இதில் இப்போ உனக்கு நஷ்டம் வேற… அடுத்து என்ன? எது எல்லாம் என் வாழ்க்கையில் நடக்கக்கூடாதுன்னு நினைச்சேனோ அதுவே தான் நடக்குது. இன்னும் எதெல்லாம் எனக்கு பிடிக்காததை செஞ்சு வச்சிருக்க? மொத்தமா சொல்லிடு எல்லாத்தையும் ஒரே நேரத்தில் கேட்டுட்டு மொத்தமா தலை மூழ்கிடுறேன். இப்படி ஒன்னு ஒன்னா தெரிஞ்சிக்கிட்டு தினம் சண்டை தான்...” என்று குந்தவை ஆவேசமாய் நிதானத்தை அடகு வைத்துவிட்டுப் பேச, தச்சனும் தன் பொறுமை இழந்தான்.

“எதை தலை மூழ்கிடுவ? என்னையா? என்னை விட்டுருவியா நீ? இப்போவும் நமக்குள்ள ஒத்துவராது… இதுக்குத்தான் வேண்டாம்னு முன்னாடியே சொன்னேன்னு, அதையே பாடிட்டு இருக்க? அப்போ இன்னமும் உன் மனசுல இந்த கல்யாணம் நடக்காம இருந்திருக்கலாம்னு எண்ணம் இருக்கு, அப்படித்தானே?”

“நான் எப்போ அப்படி சொன்னேன்? அப்படியெல்லாம் சொல்லல…” என்று குந்தவை மெலிதான குரலில் மறுத்தாலும், தச்சன் அதை ஏற்கும் நிலையில் இல்லை.

“சும்மா பொய் சொல்லாத… உன் வார்த்தையெல்லாம் அப்படித்தான் இருக்கு… எப்போ இவன் தப்பு செய்வான்… எப்போ இவனை வார்த்தையால குத்தலாம்னு காத்திட்டு இருக்க. நீ என்ன சொன்னாலும் துடைச்சு எறிஞ்சிட்டு திரும்ப உன்கிட்டேயே வரேன்னு உனக்கு அலட்சியம். இவன் எங்க போயிடப் போறான்… நம்மகிட்ட வந்துதானே ஆகணும்னு இருமாந்திருக்க. எப்போதும் இப்படியே இருக்காது குந்தவை…” என்றுவிட்டு அதிர்ந்த அவளது நிலையை கண்டுகொள்ளாமல் மடமடவென பேண்ட்டுக்கு மாறியவன் அவள் உணரும் முன்னே அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

அதிர்ந்து நின்றிருந்த குந்தவையின் விழி ஓரத்தில் நீர் சுரந்து ஒன்றன் பின் ஒன்றாய் போட்டி போட்டுக்கொண்டு கீழே இறங்க, தன்னுடைய எதிர்பார்ப்புகள் பொய்த்துவிட்டதால் வந்த அழுகையா இல்லை தச்சன் பேசிச் சென்ற வார்த்தைகளால் வந்த அழுகையா என்று எதற்கு அழுகிறோம் என்றே தெரியாமல் ஓசையை விழுங்கிக்கொண்டு தேம்பலுடன் குலுங்கிக் குலுங்கி அழுதாள். எவ்வளவு நேரம் தான் அழ முடியும்… சஞ்சலங்கள் அனைத்தும் கண்ணீராய் வெளியேறிப்பின் மனம் சற்று தெளிந்தார் போல உணர, முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள் யார் கண்ணிலும் படாமல் கொல்லைப்புறம் சென்று தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவிவிட்டு உள்ளே வந்தாள். வானதியின் அப்போது தான் வெளியிலிருந்து உள்ளே நுழைந்திருந்தாள். தங்கையின் முகத்தில் ஏதோ வேறுபாடு தெரிய அவளை தடுத்தவள், 

“உன் முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு குந்தவை?”

“ஒன்னுமில்லையே… தூக்கம் வரமாதிரி இருந்தது அதுதான் முகம் கழுவிட்டு வரேன்… வேலை ஏதாவது இருந்தா பார்த்துடு... நான் படிக்கப்போறேன்…” என்று வானதியிடமிருந்து நழுவிய குந்தவை, அறையில் பெயருக்கு புத்தகத்தை திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்தாள். 

மனம் சற்றுமுன் நிகழ்ந்த பிணக்கில் உழன்றிருக்க, அதிகமாக உணர்ச்சிவசப் படுகிறோமோ என்று சுயஅலசலில் இறங்கியது. எதிர்பார்ப்பை வளர்த்துகொண்டு அந்த எதிர்பார்ப்பை அவன் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கிறோமோ… கிடைத்ததை விட கிடைக்காததை நினைத்து மறுகி தானும் வதைப்படுவது மட்டுமில்லாமல் அவனையும் இம்சிக்கிறோமோ என்ற சிந்தைகள் எழுந்தாலும் அதற்கான தீர்வை அவளால் எட்ட முடியவில்லை. நீலாவே நேரில் வந்து தச்சனைப் பற்றி விசாரிக்கும் வரை அவளது யோசனைகள் தொடர்ந்தது.

“அவன் எங்க போயிருக்கேன்னு ஏதாவது சொல்லிட்டு போனானா குந்தவை? வேகமா எங்கேயோ வெளில போனான் இன்னும் ஆளைக் காணோம். போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்குறான்.” என்று தவிப்புடன் நீலா அவள் முன் வந்து நிற்க, குந்தவையின் இதயத்துடிப்பு எகிறியது. அவளுக்குத் தெரிந்தவரை தச்சன் எவருடைய அழைப்பையும் உதாசீனம் செய்து பார்த்ததில்லை. இன்று எடுக்கவில்லை என்றதும் மனதில் அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகள் வந்து பீதி ஏற்படுத்தியது.

“நான்… நான் கூப்பிட்டு பார்க்குறேன் அத்தை.” என்று தவிப்புடன் அலைபேசியை எடுக்க அதுதான் உடைந்து இருந்ததே.

“என்னோட போனிலிருந்து கூப்பிடு…” என்ற நீலாவிடமிருந்து அலைபேசியை பிடுங்கி தச்சனுக்கு அழைத்தாள். இரண்டு மூன்று முறை அழைத்தும் அவன் எடுக்காமல் போக அவளது கலக்கம் கூடியது. 

“அவன் எடுக்குற வரை கூப்பிடு.” என்று அவளது கலக்கம் பார்த்து நீலாவும் கலக்கம் அடைய, இரு பெண்களுமே அவனை திட்டாமல் இருந்திருக்கலாம் என்று தங்களைத் தானே சாடிக் கொண்டனர்.

மீண்டும் ஒன்றிரண்டு அழைப்புக்கு பின் அவன் அழைப்பை எடுக்க, அவனுக்கு பேச வாய்ப்பு தராமல் குந்தவை முந்திக்கொண்டாள்.

“ஹலோ… ஹலோ… எங்க இருக்க நீ? சீக்கிரம் வீட்டுக்கு வா… நான் உன்னை பார்க்கணும்.” என்று குந்தவை பதட்டமாய் பேச, மறுபுறம் தச்சன் ம் கொட்டினான்…

அவனின் பதிலில் திருப்தி அடையாமல், “சீக்கிரம் வந்துடு…” என்று குந்தவை இறைஞ்ச, உருகித்தான் போனான் தச்சன்.

“நான்… வந்துடுவேன்… நீ பயப்படாத…” என்று அவன் சொல்லும் போதே, இங்கே நீலா குந்தவையிடமிருந்து அலைபேசியை பிடுங்கியிருந்தார்.

“எங்கடா இருக்க? வீட்டுக்கு வராம எங்க போயிட்ட?” என்று அவர் பீதியில் கேட்க, இணைப்பு எப்போதோ துண்டிக்கப்பட்டிருந்தது.

“தச்சா… ஹலோ…”

“அவர் வந்துடுவார் அத்தை. நீங்க போய் சாப்பிடுங்க.”

“அவன் வரட்டும் அப்புறம் சாப்பிடுறேன்.” என்றுவிட்டு அலைபேசியை பார்த்துக்கொண்டே முற்றத்திற்குச் சென்றார் நீலா. குந்தவை அவன் வாங்கி வந்திருந்த தலையாட்டி பொம்மையை கையிலெடுத்துக்கொண்டு கீழே அமர்ந்து அதை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

***

குந்தவையிடம் பேசிய பிறகு தட்டுதடுமாறி எழுந்தவன் மெல்ல தோப்பில் இருந்த மோட்டார் அறைக்குச் சென்று முகம் கழுவிவிட்டு, தலையை சிலுப்பியபடியே வெளியே வந்து வண்டியில் ஏறினான்.

“தச்சா பார்த்து போடா…” என்று அரைபோதையில் குணாவின் குரலும் பின்னே கேட்க, அவனிடம் கையசைத்துவிட்டு கிளம்பியவன் இருட்டிலும், போதையிலும் தடுமாறி போக்குவரத்துக்கு குறைவாய் இருந்த அந்த சாலையில் வண்டியை மிதமான வேகத்தில் செலுத்தினான். 

மிதமான வேகத்தில் சென்றாலும் பார்வையில் தெளிவின்றி, உடலும் கட்டுப்பாட்டில் இல்லாத போது எங்கிருந்து பத்திரமாய் செல்ல முடியும்… தோப்பிலிருந்து பிரதான சாலைக்கு வந்ததுமே எதிரே வந்த லாரியின் வெளிச்சத்தில் கண்கூசி, நேரே வண்டியை அதன் முன்பகுதியில் கொண்டுபோய்  இடித்தான். இடித்த வேகத்தில் பைக்கோடு சேர்த்து அவனும் கீழே விழுந்ததில் கையிலும், காலிலும் சிறு சிராய்ப்பு. 

வண்டியை நிதானமின்றி இவன் ஓட்டி வருவதை முன்னரே கவனித்திருந்த அந்த லாரி ஓட்டுனான் சுதாரிப்பாய் தச்சன் வண்டியை மோதுவதற்கு முன்னரே நிறுத்தி இருந்தான். அவன் நிறுத்தாமல் இருந்திருந்தால் பயங்கரம் நிகழ்ந்திருக்கும்.

பொங்கிய கோபத்தோடு கீழே இறங்கிய அந்த லாரி ஓட்டுனன் தச்சனை இரண்டே எட்டில் நெருங்கி, “சாவுகிராக்கி வீட்டுல சொல்லிட்டு வந்துட்டீயா?”

“இல்லையே… கோச்சிட்டு வந்துட்டேன்…” என்றான் தச்சன் எழத் தடுமாறியபடியே….

தச்சன் சொன்ன காரணத்தில் அந்த ஓட்டுனனுக்கு என்ன தோன்றியதோ தச்சனை நெருங்கி அவனை எழுப்பிவிட்டு, அவனுக்கு ஏதும் அடிப்பட்டிருக்கிறதா என்று பார்த்தான். பின் லாரியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து, தச்சனை குடிக்க வைத்துவிட்டு அவனே பைக்கை அப்புறப்படுத்தி தள்ளி நிறுத்தினான். இரவு வேளை என்பதால் அந்த சாலையில் நடமாட்டம் அதிகம் இருக்கவில்லை. ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் அவ்வப்போது அவர்களை கடந்துச் சென்றது. உதவிக்கு வரவா என்று வழிப்போக்கர் ஒருவர் கேட்டபோதிலும் அதை மறுத்துவிட்டான் அந்த லாரி ஓட்டுனன்.

“என்ன நடந்தாலும் கோபப்பட்டு வீட்டிலிருந்தெல்லாம் வரக்கூடாது… குடும்பம் தான் முக்கியம். உன் நல்லதுக்குத் தான் உன் வீட்டில் ஏதாவது சொல்லியிருப்பாங்க… நீ வீட்டுக்கு போ… இப்படி குடிச்சிட்டு வண்டி ஓட்டாத…” என்று அறிவுரையும் சேர்த்துச் சொல்ல, தச்சனுக்கு அவனிடம் பேச தயக்கம் துளியும் இல்லை.

“நான் வீட்டுக்குத் தான் போயிட்டேடே இக்கேன்… என் என் பொண்டாட்டி டிட்டிட்டா…” ஏனோ தச்சனின் பேச்சுக்கள் மற்றவனைக் கவர்ந்தது. 

சுவாரசியமாய் தச்சனை நோக்கியவன் கதை கேட்பதுப் போல, “ஏன் திட்டுனாங்க?”

“அவள் அப்பித்தான்… என் மேல ரொம்பப… பாசம் வச்சி இருக்காளா…. ஆனால் கோபமும் நிறையா வச்சிருக்கா…” என்று சொல்லும் போதே தச்சனின் முகம் சுருங்கியது.

“உனக்கு அவங்க மேல பாசமா இல்லை கோபமா? கோச்சிகிட்டு வேற வந்திருக்க அப்போ நிறைய கோபம் இருக்கு தானே உனக்கும்?”

“இருக்கே…. நிறைய இருக்கு… ஆனால் அவளை எனக்கு ரெம்ப பிக்கும். ப்ச்... ஆனால் என் பொண்டாட்டி திட்டிட்டா...”

“சரி சரி… பிக்குறது இருக்கட்டும், திட்டு வாங்குனதும் இருக்கட்டும்… வீட்டுக்கு பத்திரமா போ… வீடு எங்க இருக்கு?”

“இங்க… இல்லை இங்கத்தான்…” என்று அந்த பிரதான சாலையிலிருந்து பிரிந்து ஊருக்குள் செல்லும் சாலையை காண்பித்தான் தச்சன். அவனின் தடுமாற்றத்தில் துணுக்குற்ற அந்த லாரி டிரைவர், “பத்திரமா போயிடுவீயா?” என்று கேட்க, அந்த நேரத்திலும் தச்சனின் வாய்க் கொழுப்பு அடங்கவில்லை.

“உன் லாரி மாதிரி எதுவும் எதிரே  வராம இருந்தா அதுமேல மோதாம போயிடுவேன்…” 

“விளங்குச்சு… தள்ளு நானே உன்னை வீட்டில் விட்டுறேன்… வீடு ரொம்ப தூரமா இல்லை பக்கமா?”

“இங்கன தான் இருக்கு…” என்று தச்சன் வழி சொல்ல, அந்த லாரி டிரைவர் முதுகிலேயே சாய்ந்துகொண்டு சவாரி செய்தான் தச்சன்.

“ஆமா…. நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க? என் பொண்டாட்டியே என்னை டிட்டிட்டா… உங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை?” 

“குடும்பத்தோட அருமை எனக்குத் தெரியும்…” என்று கசந்த முறுவலோடு முடித்துகொண்டான் அந்த இளைஞன்.

தச்சன் வழி சொல்லியபடியே குந்தவை திட்டியதை அவ்வப்போது ராகம் போல இழுக்க, சிரித்துக்கொண்டே வண்டியை வீட்டு வாயிலில் நிறுத்தினான் அந்த டிரைவர். வண்டி சாவியை பத்திரமாய் தச்சனின் சட்டை பையிலேயே வைத்தவன், கைத்தாங்கலாக வாயில் கேட்டை திறந்துகொண்டு தச்சனை உள்ளே இழுக்கவுமே, அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரு பிள்ளைகளும் தச்சனைப் பார்த்ததும் ஓசை எழுப்பிக்கொண்டு தத்தை நடையிட்டு அவனை நெருங்க முயல, பிள்ளைகளை கவனித்துக் கொண்டு அங்கு நின்றிருந்த வானதியும் தச்சனின் நிலை கண்டு பதற்றத்தில் அவனை நோக்கி வேக நடையிட்டாள். பிள்ளைகளோ அவளைவிட வேகமாக ஓடிச் சென்று அந்த பெரிய இரும்பு கேட் அருகிலேயே தச்சன் கால்களை பிடித்துக்கொண்டு நின்றனர். ஆனால் தச்சன் தான் அதை சரியாய் உணரும் நிலையில் இல்லை. அவனுடன் வந்த அந்த டிரைவர் ஆசையாய் அந்த பிள்ளைகளை பார்த்துக் கொண்டு நிற்க, அவர்களை  நெருங்கியிருந்தாள் வானதி.

“என்னாச்சு?” என்று கேட்டது தான் தாமதம், தச்சனை தாங்கிப் பிடித்திருந்தவன் முகம் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

“என்னங்க உங்க புருஷன் பொண்டாட்டி பிரச்சனை எல்லாம் வீட்டோட முடிச்சிக்க மாட்டீங்களா? இப்படி வெளில விட்டு… இவரு குடிச்சிட்டு வண்டி ஓட்டிகிட்டே என் லாரி மேல மோதப்பார்த்தாரு… நான் சுதாரிக்காம இருந்திருந்தா உங்க சொந்த பிரச்சனையால நான் உள்ள போயிருப்பேன். லாரில விழுந்தாலே லாரி டிரைவர் தான் போதையில் வண்டியை மேல ஏத்திட்டான்னு சுலபமா பழியை என் மேல போட்டு என்னை உள்ள தள்ளிடுவாங்க… ஆனால் குடிச்சிட்டு என் வண்டியில விழுந்தது என்னவோ இவன் தான்… அதை யாரும் கண்டுக்க மாட்டாங்க… சண்டை எப்போ வேணும்னாலும் போட்டுக்கலாம் ஆனால் உசுரு போனா திரும்ப வராது… இனியாவது உங்க பிரச்சனையை வீட்டோடு முடிச்சிகோங்க… இவன் வேற என்ன கேட்டாலும் என் பொண்டாட்டி திட்டிட்டானு சின்ன பிள்ளை ரைம்ஸ் மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கான்…” என்று இறுதியில் சிரித்தே விட்டான் அவன்.

“அட… ஆமானுங்க… என் பொண்டாட்டி டிட்டிட்டா…” என்று இடையில் தச்சன் திடுமென உளறினான்.

“நீங்க திட்டிட்டீங்கனு புலம்புனாலும் வீட்டு அட்ரஸ் சரியா சொலிட்டாரு… இல்லைனா ரோட்டிலேயே விட்டுட்டு போயிருப்பேன்… இன்னும் என்னங்க வேடிக்கை பார்க்குறீங்க? அழகான பிள்ளைங்க இருக்காங்க… வாழப் போறது ஒரே ஒரு முறை தான்! அதில் எதுக்கு வீண் வீம்பு, வறட்டு கவுரவம் பார்த்துகிட்டு... இனியாவது சண்டை போடாம மகிழ்ச்சியா வாழ்க்கையை மாத்திக்கோங்க…” என்றவன் தச்சனின் மீதிருந்த தன் பிடியை விலக்கி, வானதியை நோக்கி தச்சனைத் தள்ள, பிடி தளர்ந்ததும் தடுமாறி விழப்பார்த்தான் தச்சன். 

புதிதாய் வந்தவன் அவளுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் பேசிய பேச்சிலேயே அரண்டு பேச்சு வரமால் பதறி நின்றிருந்தவள், தச்சனின் மீதிருந்த பிடி தளர்ந்ததும் எங்கே தன் மீது விழுந்து விடுவானோ என்ற பயத்தில் இரண்டடி பின்னெடுத்த வானதி, ‘குந்தவை’ என்று அலறலாய் தங்கையை அழைத்தாள்.

அதற்குள் விழப்போன தச்சனை தாங்கிப் பிடித்திருந்த அந்த லாரி ஓட்டுனர், வானதியை வித்தியாசமாய் பார்த்து நின்றான். 

வானதியின் அலறலில் வேகமாக ஓடிவந்த குந்தவை, தச்சன் வேற்றான் தோளில் சாய்ந்திருப்பது கண்டு விரைந்தாள்.

“என்னாச்சு?” என்று தச்சனை நெருங்கி அவன் தோள் தொட, பதில் கூறும் முன்னரே தெளிவில்லாத நிலையிலும் குந்தவையின் குரல் கேட்டு அவள் புறம் திரும்பி தன் முழு உடலையும் அவள் மேல் சரித்து அவள் தோளிலே சாய்ந்தான் தச்சன். அவனைத் தாங்கிப்பிடித்திருந்த அந்த லாரி ஓட்டுனன் தச்சனின் கனத்தில் குந்தவை தடுமாறுவது உணர்ந்து தச்சனை பிடிக்கப் போக, அவன் கையை தட்டிவிட்ட தச்சன், குந்தவை கையை அழுத்தி பிடித்துக்கொண்டு,

“நீ தேடுனீயா… உன்னை பார்க்கத் தான் வேகமா வந்தேன்… ஆனால் நான் விழுண்டுட்டீண்டி…” என்று உளற, அவனது குழறலான பேச்சிலும், அவன் மீதிருந்து வந்த மதுவின் வாடையும் குந்தவையை அதிரச் செய்தது. அவனை நிமிர்த்த முயன்று தோற்றவள் நம்பாத குரலில்,

“குடிச்சிருக்கியா?” என்று கேட்க,

“லைட்டா…” என்று கையை அகல விரித்துக் காட்டினான் தச்சன். அதிலேயே அவள் மனம் இறுகி சோர்ந்துவிட எதுவும் பேசவில்லை அவள். அவளுக்கு பிடிக்காததில் மற்றொன்றை செய்து வந்திருக்கிறான். ஆனால் பத்திரமாய் வீடு வந்துவிட்டான் என்ற திருப்தியும், மனநிறைவும் இல்லாமல் இல்லை குந்தவைக்கு. 

“என்னாச்சு… ஏன்டா இப்படி வந்து நிக்குற? வண்டி எங்க?” என்று நீலா மறுபுறம் தச்சனை பிடித்துக்கொண்டு கேள்விகளை எழுப்ப,

“ம்மா… நான் விளுண்டுட்டேன்...” என்று சிறுபிள்ளை போல் சோகமாய் ராகம் இழுத்து நீலா புறம் சாய்ந்தான் தச்சன்.

“உள்ள இழுத்துட்டு போங்க முதல்ல… தலையில நாலு வாலி தண்ணிய ஊத்தி நாலு சாத்து சாத்துனா ஒழுங்கா இருப்பான்.” என்று அன்பரசன் வந்து தச்சனை முறைத்துக் கொண்டே கூற, நீலா அதட்டல் போட்டார்.

“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க… எல்லோர் முன்னாடியும் பிள்ளையை இப்படி வாசலிலேயே வச்சி திட்டிக்கிட்டு… அவனே விழுந்துட்டேன்னு சொல்லிட்டு இருக்கான், அடிபட்டிருக்கும் பிள்ளைக்கு… இப்போ போய் அவனை திட்டிட்டு இருக்கீங்க... குந்தவை அவனை கைத்தாங்களா அந்த பக்கம் பிடிச்சிக்கோ. நாம உள்ள கூட்டிட்டு போயிடலாம்.” என்று நீலா மெதுவாய் தச்சனை உள்ளே அழைத்துச் செல்ல, 

“நீ அதிகமா இடம்கொடுத்து தான் அவன் இப்படி சுத்துறான். கண்டிச்சு வைக்கணும்...” என்று அன்பரசனும் மனைவியை சாடிக்கொண்டே அவர்கள் பின்னாடு சென்றார். பிள்ளைகளும் அன்பரசன் கையை பிடித்துக் கொண்டு அவரோடே உள்ளே சென்றனர்.

எண்ணங்கள் அனைத்தும் தச்சனை சுற்றியே இருக்க, எவரும் அதிர்வோடு நிலத்தில் வேறூன்றி நிற்கும் அந்த லாரி ஓட்டுனரை கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் அடையாளம் தெரிந்திருக்குமா என்பது ஐயமே. தேங்கியிருந்த வானதி மட்டும் அவன் அங்கேயே நிற்பதைக் கண்டு, தயக்கத்துடன் நன்றி உரைத்தாள்.

“பத்திரமா கூட்டிட்டு வந்து விட்டதுக்கு நன்றிங்க. அவங்க என் தங்கச்சி வீட்டுக்காரர்…” என்றுவிட்டு என்ன பேசுவது என்று வானதி முழித்து நிற்க, அவனோ அங்கிருந்து நகராமல் விழியை வீட்டினுள்ளே பதித்திருந்தான்.

அவன் விழி பதிந்திருக்கும் திசையை உணர்ந்தவள் சற்று தயங்கி பின், “உள்ள வாங்களேன்… அத்தை மாமா ஏதோ அவசரத்தில் உங்களை கவனிக்கல… தப்பா எடுத்துக்காதீங்க…” அவன் நகராமல் இருப்பதால் பேச வேண்டும் என்று அவள் பேச, அவள் உள்ளே அழைத்ததும் இரண்டடி பின்னெடுத்தான் அந்த ஓட்டுனன்.

அழுந்த முகத்தை தேய்த்தவன், “இல்லைங்க… நான் வரேன்… பத்திரமா பார்த்துக்கோங்க.” என்றுவிட்டு மடமடவென வேகநடையிட்டு வெளியேறினான். வேண்டாம் என்று விட்டுவந்த பின், அனைத்தும் முடிந்து போனதாய் நினைத்து தனித்து வாழப் பழகியிருந்தவனுக்கு இன்று எதிர்பாராமல் நிகழ்ந்த சந்திப்பு அவனுள் அதிர்ச்சி, ஆவல், ஏக்கம், ஆற்றாமை என்று ஒரு ஆழிப்பேரலையையே உருவாக்கி இருந்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் இல்லை தனக்குத் தான் என்ன வேண்டும் என்ற யோசனைகள் எதுவும் எழாதபடி மூளை அதிர்வில் மரத்திருந்தது. 

உணர்ச்சிகளின் உச்சத்தில் கால்கள் தள்ளாட எப்படித்தான் பிரதான சாலை வந்து லாரியில் எறினானோ… ஏறி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த பின்னும் அங்கிருந்து வண்டியை கிளப்ப மனமில்லை. கண்களை மூடி இருக்கையில் பின்னே சாய, அப்படியே திரும்ப ஊருக்குள் சென்று தான் யார் என்று சொல்லிவிடலாமா என்ற எண்ணம் எழ, உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது போலொரு சிலிர்ப்பும், ஆற்றாமையும் சேர்ந்தே ஓடியது. அவர்கள் வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு ஓடியபின் எந்த முகத்தை வைத்துக்கொண்டு திரும்ப அவர்கள் முன்னே சென்று நிற்பது? என்ற பெருந்தயக்கம் வென்றுவிட, அவர்களை பார்த்துவிட்டதோடு மட்டுமில்லாமல், தன் பின் பிறந்தவனையும் அவன் பேசிய பேச்சுக்களையும் கண்டு, கேட்டுவிட்ட மகிழ்ச்சியில் அங்கிருந்து கிளம்பினான் ராஜராஜன்.

No comments:

Post a Comment

Most Popular