நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
கதைக்கரு
இதமான தென்றலை போல் மென்மையாக மனதை வருடும் அழகிய குறுநாவல். ஒரு ஸ்கூல் டீச்சர், ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு சிறுமி இவர்களை சுற்றிப் பின்னப்பட்ட பின்னல்களை என் பாணியில் கொடுத்திருக்கிறேன்.
இரண்டு வருடங்களுக்கு முன் லாக்டவுனில் குறுநாவலாக கொடுத்ததை வாசகர்கள் நெடுநாவலாக கேட்டதால் மீண்டும் நாயகன், நாயகியின் வாழ்க்கையை திருமணத்திற்கு பிறகு என கலகலப்பான, சுவாரஸ்யமான ரொமான்டிக் கதையாக கொடுத்து இருக்கிறேன்.
*******
கதையிலிருந்து
சிறு துளிகள்
கைவிரல்கள்
பத்தும் சில்லிட்டு உடல் வெடவெட என்று நடுங்கியபடி இருக்க, மகளை வயிற்றோடு அணைத்து பிடித்தபடி தன் பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல்
நிமிர்வாய் நின்று இருந்தாள் கயல்விழி.
இடம், மகளிர் காவல் நிலையம்.
தைரியமான பெண்
தான் என்றாலும் குற்றம் சுமத்தப்பட்டு, யாருமற்று
தனித்து இருக்கும் இந்தச் சூழ்நிலை அவளுள் சற்றே திகிலை கிளப்பி இருந்தது.
வாசலில்
காவல்துறை வாகனம் ஒன்று வேகமாக வந்து நிற்க, அதிலிருந்து இறங்கி விறுவிறு என்று காவல் நிலையம் உள்ளே வந்தவனை பார்த்து
கயல்விழியின் அழகிய கயல்விழிகள் அதிர்ந்து விழித்தது.
சுற்றிலும்
பார்வையை வீசி அவசர ஸ்கேனிங் செய்தபடி, உள்ளே நுழைந்த
அவனின் கண்களும் அவளை கண்டு லேசாக இடுங்கியது.
துணை ஆய்வாளர்
காயத்ரியின் சல்யூட்டை சிறு தலை அசைவில் ஏற்றவாறே, அமர்த்தலாக பெண்ணிடம் திரும்பினான் துணைக் காவல் கண்காணிப்பாளர் திலீப்குமார்.
காக்கி உடையில்
தன்னை கண்டதும் நெற்றியில் சிறு வியர்வை பூக்க, தவிப்புடன் தொண்டையில் அடைத்த எச்சிலை விழுங்கியவாறு கலவரத்துடன் நின்று
இருந்த பாவை அவளை ஆழ்ந்து பார்வை இட்டான் அக்காவலன்.
டி.எஸ்.பி.
திலீப்பின் பார்வையில் கயல் மட்டும் விதிர்விதிர்த்து நிற்கவில்லை, அவளிடம் அவன் பார்வை செல்லவும் காயத்ரியுமே
பதறித் தான் நின்று இருந்தார்.
தன் உறவில்
மிகவும் செல்வாக்காக விளங்கும் குடும்பத்தினருக்காக தற்பொழுது ஒரு காரியத்தை
நடத்திக் கொடுத்தால்,
அதில் மகிழ்ச்சி
அடைபவர்களிடம் நாளை பின்னே தன் தேவைகள் எதையேனும் நிறைவேற்றி கொள்ளலாம் என்று
இருந்தார் அவர். ஆனால் திடுமென்று திலீப் வந்து நிற்கவும் அவருக்கும் வியர்வை
அரும்பியது.
“என்ன பிரச்சனை?” என்றான் அங்கு நின்று இருந்த அவர்களின் முகங்களை கூர்மையாக அளவிட்டபடி.
தன் வரவில்
அதிருப்தியாகி, அவநம்பிக்கை உடன் நின்று இருப்பவளின் முகத்தில்
சில வினாடிகள் பார்வையை நிலை நிறுத்தியவன், பின் காயத்ரியிடம் திரும்பி அவர் கூற்றை கேட்டான்.
அவர்
விளக்கத்தில், “ம்ஹும்...” என்றவாறு சற்றுத் தள்ளி நின்று இருந்த அம்மாவையும், பையனையும் ஒரு பார்வை பார்த்தான் திலீப்.
“என்னம்மா? இவங்க சொல்றது...”
என்று இவன் கேட்கத்
தொடங்கவுமே,
“சத்தியமான உண்மை சார், இங்கே வந்து கூட இவங்க கிட்ட இந்தப் பொண்ணு ரொம்ப திமிரா சட்டம் பேசுது.
கொஞ்சம் கூட தப்பு செய்துட்டோம் அப்படிங்கிற பயமில்லை!” என்றார் அப்பெண்மணி வேகமாக.
ஓ... என்றபடி
திலீப் அவளை அளவிட, கயல்விழியோ சுட்டும் விழியாலே அவரை பொசுக்கி
கொண்டு இருந்தாள்.
அவள் துணிவை
கண்டு வியப்பில் புருவங்களை உயர்த்தியவன், “உங்க தரப்புல நீங்க என்ன சொல்றீங்க?” என கயல்விழியிடம்
விசாரித்தான்.
அவன் விசாரணையில்
நம்பிக்கையற்று, “நான் பல முறை சொல்லிட்டேன், யாரும் நம்பலை. இவங்க சொல்றது எல்லாமே பொய்!” என்றாள் பெண் எரிச்சலுடன்.
“ஓஹோ... சரி, அப்போ என்ன நடந்ததுன்னு என்கிட்ட இன்னொரு முறை நீங்க தான் சரியா சொல்லுங்க!” என்றவன் அசட்டையாக கேட்கவும், அவளுக்கு ஆத்திரமும், அழுகையும் ஒருங்கே சேர்ந்தே வந்தது.
எப்படியும் அவன்
விசாரணையின் முடிவு தனக்கு சாதகமாக இருக்காது என்பது அவனை பார்த்த உடனே புரிந்து
விட்டதால், வேண்டும் என்றே தேவை இல்லாதை கேட்டு, தன்னை அவமானப்படுத்தி அனுப்ப போகிறார்கள்
என்கிற எண்ணம் அவளுக்கு உறுதியாகி விட்டது.
இருந்தும் தன்
இயல்பை தொலைத்து விடாமல் விரல்களை பலமாக அழுத்தி, பிறர் கவனத்தை கவரா வண்ணம் உள்ளிருந்து அடுத்தடுத்து வேக மூச்சுக்களை
வெளியேற்றி, தன் மனதை சமனப் படுத்தியவள் அவனிடம் ஒரு
முடிவோடு நிமிர்ந்தாள்.
தன் எதிரில்
நிற்பவளை கொக்காக ஊன்றி கவனித்துக் கொண்டு இருந்தவனின் பார்வையில் இருந்து, அவள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் தப்பவில்லை.
**********
கயல்விழியும், காருண்யாவும் தங்களது வழக்கமான சன்டே
ஷாப்பிங்கை முடித்து,
மதிய உணவிற்காக சேலம்
மாநகரில் அசைவத்திற்கு பிரசித்திப் பெற்ற அந்த உணவகத்தில் அமர்ந்து இருந்தனர்.
“மெயின் ஃபுட்
என்ன வேணும்னாலும் யோசிச்சு ஆர்டர் கொடுங்க. அதுக்கு முன்னால ஸ்டார்ட்டருக்கு
ஏதாவது சூப்பும், பிரைட்
அயிட்டமும் சொல்லுங்க. அதுவே பத்து நிமிஷம் கழிச்சு தான் கிடைக்கும்!” என உத்தரவு இட்டவாறே உரிமையுடன் அவர்கள் எதிரே
வந்து அமர்ந்தான் திலீப்குமார்.
அவன் வரவையும், கட்டளையையும் கேட்டு பெண்கள் இருவரும் ஆவென்று
வாயை பிளக்காத குறையாக அவனை பார்த்து வைக்க, கேள்வியாக புருவங்களை ஏற்றி இறக்கினான் அவன்.
மெல்ல தன்னை
சுதாரித்து கொண்ட கயல் சுற்றிலும் ஒரு முறை பார்வையை செலுத்தி விட்டு பின்பு
அவனிடம் திரும்பி, “யாருக்கு ஆர்டர்
செய்யச் சொல்றீங்க?” என்றாள் குழப்பமாக.
“இதென்ன கேள்வி? எனக்குத் தான்!” என தோள்களை குலுக்குபவனை மீண்டும் புரியாமல்
பார்த்தனர் அம்மாவும், பெண்ணும்.
“உங்களுக்கு ஏன்
நாங்க ஆர்டர் பண்ணனும்?” என்றாள் கயல்விழி
வேகமாக.
“ஏன்னா... நான்
உங்களோட கெஸ்ட்!”
“நாங்க உங்களை
கூப்பிடவே இல்லையே!” எனும் பொழுதே அவளிடம்
சிறிது அலட்சியம் வந்திருந்தது.
‘என்ன? கொஞ்ச நாளா ரொம்பத் தான் விரட்டுறான்!’ என்கிற கடுப்பு வேறு மேலெழுந்து, அவளுக்குள் மெலிதாக சினத்தை கிளறியது.
“அது தான்...
ஒருத்தரை அப்படி முறையா கூப்பிடனும் அப்படிங்கிற அடிப்படை நாகரீகம் பத்தி
உங்களுக்கு ஒன்னும் விவரம் தெரியாததால நானா வந்துட்டேன்!” என்று அசட்டையாக திருப்பி பதிலடி கொடுத்தவனை, வார்த்தைகள் மறந்து பேவென்று பார்த்தாள்
கயல்விழி.
‘எப்படி பேசுறான்?’ என்று மலைப்பாக விழி விரித்தவள் அடுத்து
சுதாரித்து கோபமாக வாயை திறப்பதற்குள், இவர்கள் மேசைக்கு
உணவு ஆர்டர் எடுக்க அந்த உணவகத்தின் சிப்பந்தி வந்து சேர்ந்தார்.
அவரிடம்
சாதாரணமாக திரும்பி தனக்கு வேண்டுவற்றை ஆர்டர் கொடுத்தவன், “உங்க ரெண்டு பேருக்கும்?” என கேள்வி எழுப்ப, விடை தெரியாத மாணவிகளாக விழித்தனர் அம்மாவும், பெண்ணும்.
உள்ளுக்குள்
எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, அவர்களுக்கு
வேண்டியதையும் திலீப்பே ஆர்டர் கொடுத்தான்.
அவன் சொன்ன உணவு
வகைகளை கேட்டு, சிறுமி
ஆச்சரியமாக பார்த்தாள் என்றால் பெரியவள் அவனை ஆராய்ச்சியுடன் பார்த்தாள்.
‘இவன் ரொம்ப நாளா
எங்களை ஃபாலோ பண்றானோ... நாங்க அடிக்கடி விரும்பி வாங்கி சாப்பிடற உணவுகளை எல்லாம்
சரியா தெரிஞ்சு வச்சு இருக்கான்!’
பெண்ணின்
சிந்தனையில் குறுக்கிட்டு, “ம்... அடுத்து
உங்க ப்ளான் என்ன? ஏதாவது மூவியா
இல்ல... இன்னிக்கு எங்கயாவது கண்காட்சி, சர்க்கஸ் எதுவும்
நடந்துட்டு இருக்குதா?” என்றான் கண்களில்
கேலிச் சிரிப்புடன்.
திலீப் மீது
எந்நேரம் என்றாலும் வெடித்துச் சிதற தயாராக இருக்கும் எரிமலையாய் தனக்குள்
கயல்விழி கொதித்துக் கொண்டு இருந்தாலும், சுற்றிலும்
சலசலத்து இருக்கும் மக்கள் கூட்டத்தை கண்டு தன்னை முயன்று கட்டுப்படுத்தி கொண்டாள்
அவள்.
சிறிது நேர
காத்திருப்பிற்கு பிறகு அவர்களுக்கான உணவு வகைகள் ஒவ்வொன்றாக வந்துச் சேர, அதுவரையில் கயலின் பொறுமையை ரொம்பவும்
சோதிக்காமல் சிறுமியிடம் பொதுவாக பேச்சுக் கொடுத்து, தனக்கு வேண்டுகிற பதில்களை மெதுவாக அவளிடம்
இருந்து சேகரித்துக் கொண்டு இருந்தான் திலீப்.
டி.எஸ்.பி.யின்
பேச்சுக்கள் மகளின் வழக்கங்கள், நடவடிக்கைகள் என
அங்கேயே சுற்றிச் சுற்றி வருவதை கவனித்தவாறே உணவை முடித்தவள், இவனுக்கு என்ன வேண்டுமாம் என்கிற சிந்தனையுடன்
அவனையே பார்த்திருந்தாள்.
“கிளம்பலாமா?” என்றவன் எழவும் திடுக்கிட்டு விழித்தவள்
காருண்யாவை பார்க்க, அவளும் கை கழுவி
வந்திருந்தாள்.
‘உணவிற்கான பணம்...’ என்று யோசிக்கும் முன்னரே அது கொடுக்கப்
பட்டதற்கு அடையாளமாக, மீதி சில்லறை
நோட்டுக்கள் அடங்கிய பில் புக்கை மேசை மீது வைத்து விட்டுச் சென்றார் அந்தச்
சிப்பந்தி.
கோபமாக
நிமிர்ந்தவள், “நீங்க ஏன்
பணம்...” என்று பொரிய ஆரம்பிக்க,
“உன்னை பத்தி
என்கிட்ட வந்து இருக்குற புகாருக்கு ஸ்டேஷன்ல கூப்பிட்டு வச்சு விசாரிக்க, எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. ஆனா அம்மாங்கிற உன்
ஒருத்தி உறவை மட்டுமே நம்பி இருக்கும் இந்த குழந்தையை கலவரப்படுத்த வேணாம்னு
பார்க்கறேன்.
அமைதியா பேசிப்
பழகுறேன்னு, நான் யாருங்கிறதை
மறந்துட்டு, என்கிட்ட துள்ளுற வேலை
எல்லாம் வேணாம். என்ன புரியுதா? இப்போ கொஞ்சமும்
சத்தம் இல்லாம எழுந்து வெளியே வந்து என்னை ஃபாலோ பண்றே நீ, உன்னை விசாரிக்கனும்!” என்று மெதுவாக அடிக்குரலில் எச்சரித்தவாறே, கயலை அழுத்தமாக பார்த்து விட்டு வேக
நடையிட்டான் திலீப்குமார்.
அவன் பேச்சில்
பதற்றத்தோடு எழுந்து நின்றவள், காருவின் கை
இழுப்பிற்கு அவசரமாக குனிந்து அவளை பார்த்தாள்.
“என்ன அம்மு?”
“ஆங்... ஒன்னும்
இல்லைடா!” என்றவள் தானும் மகளின்
கையை பிடித்து இழுத்தவாறு, விரைந்து நடந்து
அவனை நெருங்கினாள்.
**********
“பேபி... நீ இங்கே
முயல்களை வேடிக்கை பார்த்துட்டு இரு, நான் அம்மா கிட்ட
சீக்கிரம் பேசிட்டு வர்றேன்!”
அவன் சொல்லுக்கு
திரும்பி கூட பார்க்காமல் அவள் வேகமாக தலையை ஆட்டவும், சன்னச் சிரிப்புடன் சின்னவளின் சிகையை கலைத்து
விட்டு பெரியவளிடம் சென்றான் திலீப்.
பார்வையாலே தன்னை
குற்றஞ்சாட்டி முறைக்கும் அவளிடம் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, “ஸீ... நான் எதையுமே விவரமா பேசுறதுக்கு முன்னால
அம்மா எல்லாம் போட்டு உடைச்சுட்டாங்க. இதுக்கு மேலே நான் உன்கிட்ட பேசலைன்னா, என் அம்மாவே என்னை வச்சு மீம்ஸ் போட்டு ஊர்
எல்லாம் மானத்தை வாங்கிடுவாங்க!” என்று அலுத்துக்
கொள்பவனை பார்த்து, இவளுக்கும்
புன்னகை அரும்பியது.
உதடு கடித்து அதை
அடக்க முயல்பவளிடம், “நீ என்ன சொல்றே?” என்றவன் அபிப்பிராயம் கேட்கவும்,
“ஏன் இப்படி?” என தயங்கியவள், “இதுவரை கல்யாணம் பத்தி எல்லாம் நான் எதுவும்
யோசிச்சதே இல்லை. எனக்கு பெருசா அதுல இன்ட்ரெஸ்ட்டும் கிடையாது. எங்களுக்கு நடுவுல
உறவா வர்ற மனுஷங்களுக்கு எங்களோட ஃபீலிங்ஸை சரியா புரிஞ்சுக்க முடியாது.
அது எல்லாம்
ரிஸ்க்... வேணாம். எதுக்கு இந்த மாதிரி தேவை இல்லாம கல்யாணம் அது, இதுன்னு குழம்பிக்கிட்டு, புதுசா எந்த ஒரு சிக்கலையும் இழுத்துக்க நான்
தயாரா இல்லை. இந்த நிம்மதியான வாழ்க்கை, இப்படியே அமைதியா
போனா போதும்னு அலுப்பா இருக்கு!” என்றாள்
சோர்வுடன்.
அவளையே கூர்மையாக
பார்த்தவன், “உனக்கு குடைச்சல்
கொடுக்கிற எந்த ஒரு உறவும் வேண்டாம்னு தெளிவா வெளிப்படையா சொல்றவ, உன் பாரங்களை தாங்கி உன்னை ஆறுதலாய் தோள் சாய்ச்சுக்க
ஒருத்தனை மனசு தேடுறதையும் பளிச்சுன்னு உடைச்சு சொல்லலாமே!” என்று அலட்சியமாக கேள்வி எழுப்ப, கயல்விழி அவனை திகைப்பாய் பார்த்தாள்.
அதெல்லாம் ஓரிரு
வினாடிகள் தான் சட்டென்று தன்னை சுதாரித்து இருந்தவள், “என்ன உளர்றீங்க?” என்று முகத்தை சுளித்தாள்.
இலகுவாக பேன்ட்
பாக்கெட்டில் கைகளை விட்டு பின்னால் இருந்த தூணில் சாய்ந்து நின்றவன், “பாருடா... உண்மையை சொன்னா உளறலாமே!” என்றான் கேலியாக.
எதிரில்
நிற்பவனின் குறுகுறு பார்வையில் தடுமாறியவள் காருவை ஒரு பார்வை பார்த்து விட்டு
தன் கைக் கடிகாரத்தை திருப்பி நேரத்தை கவனித்து, “மணி எட்டரை ஆகப் போகுது... கிளம்ப வேண்டாமா?” என சம்பந்தம் இல்லாமல் கேள்வி எழுப்பினாள்.
இதழோரம் துடித்த
சிரிப்பை அடக்கிக் கொண்டவன், “ம்...
கிளம்பலாம். கீழே போனதும் அம்மாவோட கேள்விக்கு நீ பதில் சொல்லிட்டேன்னா, உடனே நாம கிளம்ப வேண்டியது தான்!” என்றவனின் அசட்டையில் பெண்ணிற்கு கோபம் வந்தது.
“என்ன ரொம்ப
பண்றீங்க? வேணும்னே ப்ளான் பண்ணி
என்னை இங்கே அழைச்சிட்டு வந்து மாட்டி விட்டதும் இல்லாம, கிண்டல் வேற செய்யறீங்களா...” என படபடத்தாள்.
“ஹேய்... நிஜமா
அப்படி எல்லாம் எதுவும் நான் திட்டம் போடலை. சரி, போகிற வழி தானே... அப்படியே உன்னையும், பாப்பாவையும் வீட்டுக்கு வரவழைச்ச மாதிரியும்
ஆச்சு, அம்மா கிட்டயும் நேர்ல
அறிமுகப் படுத்தலாம்னு மட்டும் தான் ஆசைப்பட்டேன். கடைசியில அவங்க எனக்கும் மேல
ஒரு பெரிய திட்டம் போட்டு காத்திருந்தது சத்தியமா எனக்குத் தெரியாது!”
ப்ச்... என சலித்துக்
கொண்டவள், “உங்க அம்மா ஏன் இவ்வளவு
வேகமா இருக்காங்க? பார்த்த முதல்
நாளே ஒரு பொண்ணு கிட்ட இப்படித்தான் பேசுவாங்களா...” என்று கவலையுடன் நெற்றிப் பொட்டை அழுத்திப்
பிடித்தாள்.
“அது... எனக்கு
முப்பத்தியொரு வயசாகியும், சரியா பொண்ணு
அமையலை. போலீஸ் அப்படிங்கிறது ஒரு பக்கம் தடையா இருக்குதுன்னா, இன்னொரு பக்கம் என் ஜாதகம் வேற சொதப்புது.
அதனால நானா ஒரு பொண்ணை பிடிச்சு இருக்குன்னு சொல்லவும், சரி மகன் விரும்புறவளையே பட்டுன்னு அவனுக்கு
கல்யாணம் முடிச்சிடுவோம்னு இத்தனை அவசரம் காட்டுறாங்க!”
ஹும்... என
பெருமூச்சு விட்டவளை கொஞ்சமாக நெருங்கி நின்றவன், “பிடிக்கலையா?” என்று கிசுகிசுப்பாக கேட்க, அவள் இதயம் தடதடத்தது.
**********
இருவரும் ஒன்றாக
அமர வைக்கப் பட்டதும் அவளிடம் குனிந்து, “இப்போ எதைப்
போட்டு குழப்பிட்டு இப்படி பரிதாபமா இருக்கே நீ?” என்று கேலியாக கேட்டான்.
“ப்ச்... அது எல்லாம் ஒன்னும் இல்லை. பாப்பா
தான் புது ஆளுங்களை பார்த்து கொஞ்சம் பயந்துட்டா!”
தங்களுக்கு
பின்னால் அமர்ந்து இருந்தச் சின்னவளிடம் திரும்பிப் புன்னகைத்தவன், “அப்படியா பேபி?” என்று கேட்க, அவள் உம்மென்று பார்வையை தாழ்த்தினாள்.
“உன்னை... அப்புறம் தனியா மாட்டும் போது
கவனிச்சிக்கறேன்!” என அவளை போலியாய் மிரட்டி விட்டு, “அப்போ... நீ ரொம்ப தைரியமா தான் இருந்தே...” என்று தன்னவளிடம் புன்சிரிப்புடன்
விசாரித்தான்.
அவள் மலங்க
விழித்து விட்டு, உறுதி இல்லாமல் தலை அசைத்துக் கொண்டாள்.
“சுத்தி இத்தனை பேர் இருக்காங்க, இல்லைன்னா... இவளை கையில தூக்கிட்டு, உன்னை கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொல்லி
இருப்பேன்!”
ரொம்பவே இயல்பாக
அவன் கூற, பெண் இன்னும் விழித்தாள்.
“இந்த முழிக்கிற பொண்ணுக்கு... விழியில தொடங்கற
மாதிரி என்னென்ன பாட்டு இருக்குன்னு வேற தேடி எடுத்து ஒரு ப்ளே லிஸ்ட் போடனும்...” என்றவனை இம்முறை அவள் முறைக்க,
“எல்லோரும் உன்னை தான் பார்க்கறாங்க!”
நமட்டை கடித்து
சிரித்தபடி அவன் எச்சரிக்க, அவள் விரைவாக தன்
முகத்தை அப்பாவி பூனை போல் மாற்றிக் கொண்டாள்.
“இது தான் அந்த எக்ஸ்ப்ரஸனா?”
அவன் தீவிரமாக
கேட்க, “எது?” என புரியாமல்
பார்த்தாள்.
“அது தான்... இந்தப் பூனையும் பால் குடிக்குமா
எக்ஸ்ப்ரஸன்!”
“ப்ச்... சும்மா இருக்க மாட்டீங்க...”
அவள் அதட்டலில், “சும்மா இருக்கறதுக்கு எதுக்கு நான் உன்னை
கல்யாணம் பண்ணிக்கனும்?”
என மேலும் வம்பு பேசினான்
திலீப்.
“ஆண்டவா...” என்றவள் அலுத்துக் கொள்ள,
“நமக்குப் பின்னாடி தான் உட்கார்ந்து இருக்கார், கொஞ்சம் திரும்பிப் பார்!”
அதிர்வாய், “என்னது?” என்றாள் அவள்.
“அடி மண்டே... கோவில்ல தானே கல்யாணம்
நடக்குது...”
‘ஆமா... இல்ல...’ என தனக்குள் முறுவலித்துக் கொண்டவள், அப்படியே அவனை
பார்த்து வைக்க, அவன் முகத்திலும் புன்னகை.
“கொஞ்சம் முன்னே இருந்த மாதிரி இல்லாம, முகத்துல தனி வெளிச்சம் வந்துருச்சே...” என்றவன் கிண்டலாய் இழுக்க,
“பின்னே... நீங்க இவ்வளவு கலாட்டா செஞ்சா...”
“சரி... ரெண்டு பேரும் கூட்டத்தை பார்த்து ரொம்ப
டென்ஷன் ஆகிட்டீங்களா என்ன?”
“ம்... கொஞ்சம்... எல்லோரும் உத்து உத்துப்
பார்க்கிறாங்கன்னு காரு கூட சொன்னா...” என்றாள் பாவமாக
முகத்தை வைத்துக் கொண்டு.
“புது பொண்ணை வேற எப்படி பார்ப்பாங்களாம்? இதுல நம்ம பையனுக்கு பொண்ணு பொருத்தமா
இருக்குமான்னு கூட சேர்த்துப் பார்த்து இருப்பாங்க...”
அவன் அலட்டலில்
இன்னமும் அவள் முகத்தில் புன்னகை விரிய, “ரொம்பத்தான்...” என்று நொடித்துக் கொண்டாள்.
“டி.எஸ்.பி. சார் பேசி முடிச்சிட்டேள்னா, நான் கொஞ்சம் கல்யாண வேலைகளை பார்க்க
ஆரம்பிப்பேன். முகூர்த்தத்துக்கு வேற நாழி ஆயிடுத்து...” என்று திலீப்பிடம் கேலியாக சொன்னார் ஐயர்.
‘ஐயோ...’ என நாணத்தில் பதறி புது காதலி தலையை குனிய,
காதலனாக புதிய
அவதாரம் எடுத்தவனோ, “அட... என்ன நீங்க? எங்களை விட்டா நாள் பூரா இப்படியே தான் ஜாலியா பேசிட்டு இருப்போம். நீங்க தான்
சுதாரிப்பா இருந்து உங்க வேலையை சரியா பார்க்கனும்!” என பட்டென்று நையாண்டி செய்ய, சுற்றி நின்ற
கூட்டத்தினரிடம் சிரிப்பலை எழுந்தது.
“அது சரி...” என முனகிக் கொண்டவர், துரிதமாக திருமண
வேலைகளை தொடங்கினார்.
**********
தயக்கத்துடன்
அறைக்குள் எட்டிப் பார்த்த திலீப், அங்கே சின்னவள்
மட்டும் பெரிதும் கவலை சுமந்த முகத்துடன் எதிர்புறத்தை பார்த்து இருப்பதை கவனித்து, வேகமாக உள்ளே சென்றான்.
“என்னடா பாப்பு... நீ மட்டும் இருக்கே? அம்மா எங்கே?” என கேட்கும் பொழுதே,
குளியலறையில் தண்ணீர்
விழும் ஓசை அதிகமாக கேட்டது.
பிள்ளை பதில்
சொல்வதற்குள், “வாஷ்ரூம்ல இருக்காளா?” என்று இவனே விசாரித்தான்.
“ம்...” என சோகமாக தலை அசைத்தவள், “யாரோ ஒரு பாட்டி
அம்முகிட்ட என்னவோ அழுதுட்டே பேசினாங்க, இவங்களும்
அதுக்கு ரொம்ப அழ ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் பார்த்தா... அவங்க வேகமா எழுந்து
வெளியே போனதும், அம்முவும் உடனே பாத்ரூமுக்கு உள்ளே போனவங்க
தான், இன்னும் வெளியில வரலை!” என்றாள் கவலையாக.
“ஓ...” என இழுத்தவனுக்கு, தன்னவள் உள்ளே ரகசியமாக அழுது கரைகிறாள் என்பது
புரிந்து போனது.
வலது கரத்தால்
தனது பிடரியை அழுத்திக் கொண்டவன், ஒரு முடிவோடு
சென்று குளியலறை கதவை சத்தமாக தட்டினான்.
தண்ணீர் விழும்
சத்தம் குறைய, “குட்டிம்மா... நான் கொஞ்ச நேரத்துல வர்றேன், அமைதியா உட்காரு!” என்று கரகரத்த குரலில் பேசினாள் கயல்.
“காலையிலயே குளிச்சு முடிச்சிட்டே, அப்புறம் எதுக்கு கொஞ்ச நேரம்? பாத்ரூம் எதுவும் தேய்ச்சு கழுவிட்டு இருக்கியா
என்ன?”
திலீப்பின்
நையாண்டி சரியாய் வேலை செய்ய, வெடுக்கென்று
கதவை திறந்தாள் பெண். அதிகமாக அழுது இருந்தில் சிவந்த விழிகளுக்கு ஈடாக, இவனை மேலும் உறுத்து விழித்தாள் அவள்.
இவனோ அசராமல்
அழகிய புன்னகை ஒன்றை அவள்புறம் வீச, பெண்ணின் அகமும், புறமும் தன்னவன் மீது கிளர்ந்து எழுந்த கடும்
சினத்தால் பெரும் உஷ்ணத்தை பூசிக் கொண்டது.
“என்ன லுக்கு?” என அவளிடம் நொடித்தவன், “பேபி... அந்த
டவலை எடுத்துட்டு வா!”
என்று மகளுக்கு உத்தரவு
இட்டான்.
சிறுமியும்
அவசரமாய் ஓடி அவன் சொன்னதை செய்ய, இறுக்கமான
முகத்துடன் அழுத்தமாக நின்று இருந்தவளை பக்கத்தில் இழுத்தான் அவன்.
“ப்ச்...” என்றவள் முகத்தை சுளிக்க,
காருவோ, “ஏன் அம்மு? என்ன ஆச்சு?” என்று தவிப்புடன் அவள் கரம் பற்றினாள்.
“ஆங்... உன் அம்முவுக்கு திடீர்னு பைத்தியம்
பிடிச்சிடுச்சு!” என்றவாறு அவள் முகத்தை துடைத்தான் திலீப்.
“ஒன்னும் வேணாம்... போங்க அந்தப் பக்கம்!”
சுள்ளென்று
விழுந்து விட்டு, சென்று படுக்கையில் அமர்ந்து கொண்டாள் கயல்.
‘இவளை என்ன செய்யறது?’ என இடுப்பில் கை வைத்து நாயகன் நிற்க, காருண்யா அவளிடம் ஓடி பக்கத்தில் அமர்ந்தாள்.
இவனும் வேகமாக
சென்று மறுபுறம் அமர்ந்து கொள்ள, “என்ன வேணும்
உங்களுக்கு?” என்றாள் மனைவி சலிப்புடன்.
“நீ சொல்லு... உனக்கு என்ன வேணும்?” என்று பதிலுக்கு கேட்டான் கணவன்.
“எனக்கு எதுவும் வேணாம், என்னை கொஞ்ச நேரம் அமைதியா விடுங்க!” என்று தலையை
தாங்கிக் கொண்டாள்.
“ஆஹான்... ஆனா நீ நிஜமாவே அமைதியா இருந்துடுவியா?”
அவன் கேள்வியில்
அவள் திரும்ப முறைக்க,
ஆதரவாய் பெண்ணின் கரத்தை
தன் பிடியில் எடுத்துக் கொண்டவன் மெதுவாய் விசாரித்தான்.
“எதுக்கு இவ்வளவு அப்செட்? அம்மா என்ன சொன்னாங்க?”
அவள் விழிகள்
மீண்டும் கலங்கத் துவங்க, “விழி...” என கனிவாய் அழைத்து, அவளை தன் தோளில் ஆதூரமாக தாங்கினான்.
“நீங்க ஏன் அவங்களை மீட் பண்ணீங்க?”
“ஓகே... ஓகே... சரி விடு, ஒரு ட்ரை செஞ்சு பார்த்தோம். உங்களுக்கு உள்ளே
இருக்குற விலகல் நல்ல விதமா சரியானா, உனக்குமே
சந்தோசமா இருக்கும்னு நினைச்சோம். பட்... அப்படி இல்லை போலிருக்கே. எதுவும் சண்டை
போட்டாங்களா என்ன?”
அவள் முகம்
தாங்கி, கேள்வியாய் நோக்கினான்.
“ப்ச்... இல்லை, அவங்களுமே ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கற மாதிரி தான் தெரியுது!”
“உன்னை நினைச்சு தானே... அன்னிக்கே கொஞ்சம் கெஸ்
பண்ணேன்!”
“ம்... என்னை விட்டுட்டோம்னு குற்ற உணர்ச்சியா
இருக்கும் போலிருக்கு. ஆனா ஏத்துக்கவும் மனசு வரலை!”
வெறுமையாக
கூறியவளின் நெற்றியில் முட்டியவன், “லீவ் இட்...
இத்தனை வருஷம் தனி ஆளாவே எல்லாத்தையும் சமாளிச்சிட்டே. இனிமே நான் வேற உனக்கு
துணையா இருக்கப் போறேன். அப்புறம் எதுக்கு இவ்வளவு வொர்ரீஸ்?” என்று புன்னகையுடன் தேற்றினான்.
கயலின் மனதில்
அவன் கொடுத்த தெம்பின் எதிரொலியாக, பெரும் நிம்மதி
பிறந்தது.
‘உண்மை தானே... இனி எல்லாத்தையும் நான் மட்டுமே
சுமக்கனும்னு எதுவும் இல்லையே...’
இதயம் இறகாக மாறி
தன் எடையை துறந்து, லேசானதை போல் உணர்ந்தாள் அவள்.
நிமிர்ந்து அவன்
முகம் பார்த்தவளின் கன்னத்தை செல்லமாக கிள்ளியவன், “சியர்-அப் ஆகிட்டு வா, கீழே போகலாம்.
எல்லோரும் நம்மளை காணோம்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க!” என்று பெண்ணை எழுப்பி விட்டான்.
தயங்கி நின்றவள், “உங்களுக்கு ஒன்னும் கஷ்டமா இல்லையா... அது...
நான் இப்படி தனியா இருக்கறதை நினைச்சு... எனக்கு நேத்து இங்கே வந்ததுல இருந்து ஒரு
மாதிரி சங்கடமா இருக்கு!” என்றாள்
சோர்வுடன்.
“உன் அம்முவுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு
சொன்னேன் இல்லை... பாரு,
எப்படி
நிரூபிக்கிறான்னு...”
என காருவிடம் கேலிப்
பேசியவன்,
இவளிடம் திரும்பி, “அறிவு இருக்குதா உனக்கு? நீ தனியா இருக்கேன்னு இன்னிக்கு, நேத்திக்கு தான் தெரியுமா எனக்கு... எல்லாம்
தெரிஞ்சு, பிடிச்சு தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்?” என்று கடுப்பாக கேட்டான்.
மெல்லிய
அலுப்புடன் இன்னமும் முகத்தை சுருக்கி நின்று இருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன், மெதுவாக சிறுமியை அங்கிருந்து கிளப்ப
முயன்றான்.
“பேபி... நீ போய் கொஞ்ச நேரம் முயல் கூட
விளையாடிட்டு இரு, நான் அம்மாகிட்ட தனியா பேசிட்டு வர்றேன்!”
“ம்ஹும்... நான் அம்மு கூட தான் இருப்பேன்!”
வேகமாக கயலின்
கரத்தை பிடித்தபடி, வார்த்தை மாறாமல் கூறுபவளை பெரும் சிரிப்புடன்
கிண்டல் செய்தான் திலீப்.
“ஹலோ சின்ன மேடம்... இப்போ உங்க அம்மு என்னோட
வொய்ஃப், நான் அவளோட ஹஸ்பன்ட். இன்னமும் அவளை என்கிட்ட
இருந்து காப்பாத்த போறியா நீ?”
சிறுமியின் முகம்
யோசனையில் சுருங்க, கயலின் முகத்திலும் புன்னகை விரிந்தது.
“அன்னிக்கு என்னவோ பெருசா சொன்னே... உன்
ப்ரெண்ட் வீட்டுல அவள் அப்பா, அம்மா தனியா ரூம்
லாக் பண்ணிட்டு பேமிலி சீக்ரெட்ஸ் பேசுவாங்க அப்படின்னு. இப்போ நீ இவ்வளவு
யோசிச்சா, நாங்க எப்படி பேசறது?”
‘பேமிலி சீக்ரெட்டா...’ என அன்னை தடுமாறி நிற்க,
“ஓ... அதுவா? அப்போ ஓகே!” என சட்டென்று வெளியேறி விட்டாள் மகள்.
பக்கென்று
வெடித்த சிரிப்பை இதழ் கடித்து அடக்கியபடி கணவன் தன்னை நெருங்கவும், மனைவி திணறினாள்.
“எ... என்ன? இ... இப்போ, இந்த நேரத்துல... என்ன சீக்ரெட்?”
அவளை விழிகள்
இடுங்க பார்த்தவன், “அப்போ... நைட் பேசிக்கலாம்னு சொல்றியா?” என தீவிரமாக கேட்டான்.
எச்சிலை விழுங்கி
கொண்டவள் சிறுமி சென்ற திசையில் பார்வையை வீச, அவளின் இடை வளைத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான் அவன்.
“அங்கே என்ன பார்வை? நம்மளோட சீக்ரெட் டால்க் டைம்ல அவள் எப்பவும் டிஸ்டர்ப் செய்ய மாட்டா!” என்று கல்மிஷமாக கூறினான்.
அவள் பார்வை அவன்
முகம் நோக்காமல் எங்கெங்கோ அலைபாய, பட்டென்று
குனிந்து பெண்ணின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் ஆடவன். மூச்செடுக்க மறந்து
அவளின் தொண்டை விக்கிக் கொள்ளும் நேரம், அவள் தேகத்தில்
லேசான நடுக்கம் தோன்றியது.
“எதுக்கு இவ்வளவு பதட்டம்? ஈஸி... உன்னை மீறி அப்படி என்ன செஞ்சிட போறேன்
நான்...” என அவள் செவி அருகில் முணுமுணுத்தவன், “சரி... ரெடி ஆகிட்டியா நீ?” என்று வேறு கேள்வி எழுப்பினான்.
‘எதை கேட்கிறான் இவன்?’ என கலவரமாய் அவள் எண்ணங்கள் பயணிக்கும் பொழுது, இதயத்தின் படபடப்பும் கூடி இருந்தது.
“ம்...” என அவளின் நெற்றியில் முட்டி அவன் பதிலை வேண்ட,
“எ... எதுக்கு?” என்றாள் தடுமாற்றத்துடன்.
“ப்ச்... அதுக்குத்தான், நான் யூத்தா இல்லையான்னு நீ சர்ட்டிபிக்கேட் கொடுக்கனும் இல்லை...”
முகமெங்கும்
குப்பென்று சூடாகி சிவந்து போக, “ரொம்ப
முக்கியம்...” என வெட்கத்துடன் இதழ்களுக்குள் முனகிக்
கொண்டாள்.
“ஆமா பின்னே... என்னோட ஸ்டில் யங் வொய்ஃப் கிட்ட
இருந்து நான் டிஸ்டிங்ஸன் மார்க் வாங்கனுமே...”
“ஹும்... ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க ப்ளீஸ்...” என்று அவன் தோளில் முகம் புதைத்தாள்.
“ஓகே...” என பெருமூச்சு எடுத்தவன், அவளை ஒரு முறை
இறுக அணைத்து விடுவித்தான்.
தேகமெங்கும்
ரோமங்கள் சிலிர்த்து எழும்ப தள்ளாடி நின்றவளின் கரம்பற்றி நிலையாய் நிறுத்தியவன், “இதுக்கே ஸ்டடியா நிற்க முடியலை, இதுல மேடம் ஸோ யங் வேறயாம்!” என்று கேலியாய் நொடித்தான்.
“அச்சோ... போதும் விடுங்க, முதல்ல இங்கே இருந்து கிளம்புங்க நீங்க!” என்று சிணுங்கியபடி, அவனை பிடித்து வெளியே தள்ளினாள்.
சிரித்தபடி
நடந்தவன் சட்டென்று நின்று, “சரி... சீக்கிரம்
ரெப்ரெஷ் ஆகி கீழே வா. நான் பாப்பாவை முன்னாடி அழைச்சிட்டு போறேன்!” என்று வெளியேற முயன்றான்.
“இல்லை... அவளை உள்ளே அனுப்புங்க. பட்டுப்
பாவாடை சட்டையில இருக்கா வேற, காட்டன் ஃப்ராக்
மாத்தி விட்டுடறேன். காலையில நேரமா எழுந்தது, எந்த நேரம்னாலும் தூங்கினாலும் தூங்கிடுவா... அப்புறம் அவளை எழுப்பி மாத்தறது
கஷ்டம்!” என்றாள் கயல் அவசரமாக.
தன்னை மறந்து
அவளை இமைக்காமல் பார்த்தான் திலீப்.
**********
மதிய உணவு வந்து
சேரவும், “கயல்... சாப்பாடு வந்துடுச்சு. நீங்க பொண்ணு, மாப்பிள்ளை எல்லோரடவும் முதல் பந்தியில
உட்காருங்க. பாப்பாவை நான் பார்த்துக்கறேன், அவள் முழிச்சதும் சாப்பிட வைச்சிக்கலாம். திலீப் ஏதோ போன் வந்துச்சுன்னு
மாடிப் பக்கம் போனான் பாரு, அவனை அழைச்சிட்டு
வா!” என்று மருமகளை அனுப்பி வைத்தார்.
இவள் அங்கே
செல்லும் போது, “வாட் த ஹெல்? என்ன நினைச்சிட்டு இருக்கான் அவன் மனசுல... இப்படிப்பட்ட ஆளுங்களை பார்க்கும்
போது, அடிச்சு முகரையை பேர்த்து தொங்க
விட்டுடலாமான்னு அவ்வளவு ஆத்திரம் வருது!” என்று பற்களை அழுந்த கடித்தபடி, அடங்காத
சினத்தில் முகம் இரத்தம் என சிவந்து இருக்க ஆக்ரோஷமாக பேசி இருந்த திலீப்பை கண்டு, கயல் விக்கித்து நின்றாள்.
“ம்... அப்புறம் வேற என்ன சொன்னான்? ஓ... ப்ச்... செம கடுப்பு ஆகுது!” என்று கையை ஓங்கி பக்கத்து சுவரில் குத்துபவனை, இன்னமும் பீதியுடன் பார்த்தாள் அவள்.
“ஓகே... நாளைக்கு நான் நேர்ல வர்றேன். அதுவரை
அவனால கேஸ் வேற மாதிரி மூவ் ஆகாத அளவுக்கு சமாளிச்சு வைங்க. எனக்கு ஒரு டௌட்
இருக்கு, அதை க்ளியர் பண்ணிட்டு தான் நாம அடுத்த ஸ்டெப்
எடுத்து வைக்கனும்!” என்று மேலே எதையோ சொல்லி மறுபுறம் எச்சரித்து
விட்டு, இணைப்பை துண்டித்தான்.
அதே சிந்தனையில்
திரும்பியவன் தன் இறுக்கம் சிறிதும் குறையாது அங்கே நின்று இருப்பவளை பார்த்து, “என்ன?” என்றான்
அதிகாரமாக.
புருவம் சுளித்து
இருக்க தன்னிடம் கடுமையாக கேட்பவனை இவள் கலவரமாக பார்க்க, சட்டென்று சூழ்நிலை உறைத்து தன்னை இயல்புக்கு மீட்டான் நாயகன்.
லேசாய் முன்
சிகையை கோதியவன் முகத்தில் புன்னகையை பூசி, மனைவியின் இடை வளைத்து அருகில் இழுத்தான். வேகமாக அவன் கரத்தை விலக்கி
விட்டவள், இன்னமும் பதற்றத்துடன் நகர்ந்து நின்றாள்.
“காட்...” என சலித்தவன், “என்னடி?” என்றான்.
“ஒ... ஒன்னுமில்லை, உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க!” என்று அவசரமாக
கீழே ஓட முயன்றவளை இழுத்துப் பிடித்து அருகில் நிறுத்தினான்.
வேறுபுறம்
திரும்பி கொண்டவளின் நாடியை பற்றி தன் முகம் பார்க்க செய்தவன், “என்ன?” என்று கேலிச்
சிரிப்புடன் விசாரித்தான்.
“அது தான் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டேனே...”
முனகுபவளின்
முகத்தின் அருகே குனிந்தவன், “பயந்துட்டியா?” என்று மென்மையாக கேட்க, இவள் பார்வை உயர்ந்து அவன் விழிகளை நோக்கியது.
“ம்...?” என புருவங்களை உயர்த்த, மெல்ல அவன் தோள்
சாய்ந்தவள் ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.
“நீங்க இவ்வளவு டெரர்ரா பேசுவீங்களா?”
எச்சிலை
விழுங்கியவாறு கேட்பவளின் சொல்லில் வாய் விட்டு நகைத்தவன், “ஹேய்... நான் போலீஸ்காரன்டி. எப்பவும் உன்கிட்ட கொஞ்சிட்டு இருக்கற மாதிரியே
எல்லார் கிட்டயும் இருக்க முடியுமா?” என்று அவள்
தலையில் முட்டினான்.
“ப்ச்...” என நொடித்தவள், “அது என்ன... இப்போ ‘டி’ எல்லாம் பேச்சுல வருது?” என்றாள் வேகமாக.
“ஏன்? பிடிக்கலையா...” என்ற அவனின் குழைவில் இவள் இதயம் நெகிழ, ரகசியமாக சிரித்துக் கொண்டாள்.
“என்ன சத்தத்தை காணோம்?” என்று மெல்ல தன்னோடு அவளை இறுக்கினான்.
அப்பொழுதே
சுதாரித்தவள், “அச்சோ... மாடியில இருக்கோம்!” என்று விரைவாக விலகினாள்.
“ஆஹான்... என் மேலே சாயும் போது அது தெரியலையா?” என நக்கலாக கேட்டவன், “டோன்ட் வொர்ரி... இந்த இடம் கொஞ்சம் மறைவா தான் இருக்கும், பளிச்சுன்னு வெளியில தெரியாது!” என்று மறுபடியும் இழுத்துக் கொண்டான்.
“ஓ...” என்றவள், “என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டென்ஷன்?” என விசாரித்தாள்.
“ம்... எல்லாம் ஒரு பொண்ணால வந்த பிரச்சனை தான்!” என்றான் வெறுப்புடன்.
“அச்சோ... பொண்ணு நல்லா இருக்கா இல்ல...” என வேகமாக கேட்கும் மனைவியை கடுப்பாக
பார்த்தான் திலீப்.
“என்ன?” என்றாள் சிறு
குரலில்.
“பொண்ணுங்க எல்லோருமே ரொம்பவே உத்தமிங்க
அப்படிங்கிற ரேஞ்சுக்கு பதறாதே நீ...”
தன்னை அழுத்தமாக
முறைப்பவனின் செயலில்,
ஏதோ விவகாரமான பெண்ணுடைய
வழக்கு போல் இருக்கிறது என புரிந்து அமைதியானாள் அவள்.
“ப்ளடி பிட்ச்... பொண்ணா அவள்? தான் காதலுக்கும், சுயநலத்துக்கும் ஒருத்தனுடைய வாழ்க்கையையே அழிச்சு இருக்கா!” என்று உறுமினான்.
என்ன என்று மேலே
விவரம் கேட்க அஞ்சி அவள் தயங்கியபடி நிற்க, கணவனே அடுத்து வரிசையாக அனைத்தையும் கூறினான்.
“அந்த சதிகாரி பேரு சுப்ரியா. போன வாரம் தான்
கம்ப்ளைன்ட் வந்து அவளை அரெஸ்ட் பண்ணோம். என்ன கேஸ் தெரியுமா? தான் புருஷனுக்கு சாப்பாட்டுல கொஞ்சம் கொஞ்சமா
மோசமான கெமிக்கல் கலந்து கொடுத்து அவனை முழு இம்போடன்ட் ஆக்கிட்டா. புரியுதா...
அவனால இனிமே குழந்தை பெத்துக்க முடியாது!” என்றான் ரௌத்திரமாக.
“அச்சோ...” என அதிர்ந்து பார்த்தாள் கயல்.
**********
“அப்படியா பாட்டி?” என்று ஆர்வமாக கதை கேட்ட பிள்ளையின் கன்னம்
கிள்ளியவர்,
“ஆமா... நாம
ரெண்டு பேரும் இப்படி படுத்துக்கலாமா? கயல்... நீ அந்த
சோபாவுல படுத்துக்கறியா?” என்று மருமகளின்
வசதி கேட்டார்.
“சரி அத்தை... இது
தான் கதைப் பேச நல்லா வசதியா இருக்கும்!” என்று ஒரு
தலையணையை அதில் எடுத்துப் போட்டு தளர்வாக படுத்துக் கொண்டாள் அவள்.
“அம்மாவுக்கும், மகளுக்கும் கதைப் பேசறதுன்னா ரொம்ப பிடிக்கும்
போலிருக்கே!” என்றார் கேலியாக.
அவரிடம் ஆவலுடன்
திரும்பிப் படுத்த காரு, “ஆமா பாட்டி...
நிறைய பார்ப்போம் நாங்க!” என்று கண்களை
விரித்தாள்.
“என்னது
பார்ப்பீங்களா? போன் தான் நிறைய
யூஸ் பண்ணுவீங்களா கயல், இவளுக்கு
படிக்குற பழக்கத்தை கத்துக் கொடுக்கலையா?”
“அது இல்ல
அத்தை... இவளுக்கு இன்னும் முழுசா கோர்வையா படிக்க வராது. அதனால என்னை போட்டு
படுத்துவான்னு படிச்சு சொல்ல சலிச்சிக்கிட்டு, மொபைலை டிவியில கனெக்ட் செஞ்சு கதைகளை ஓட
விட்டுடுவேன்!” என்று அசடு
வழிந்தாள்.
“நல்லப்
பிள்ளைங்க... ஆனா இவளுக்கு மொபலை பழக்கி விட்டுடாதே நீ, அது அப்படியே ஆளை உள்ளே இழுத்துடும்!” என்று எச்சரித்தார்.
“அது எல்லாம்
அம்மு ஸ்ட்ரிக்ட் தான்... தூங்கும் போது மொபைலை பக்கத்துல கூட வச்சிக்க மாட்டாங்க.
மத்த நாள்ல தானா எழுந்து அலாரம் ஆஃப் பண்ணிட்டு வேலையை பார்க்கிறவங்க, சன்டேனா மட்டும் எழ சோம்பல் பட்டுக்கிட்டு
என்னை எழுப்பி விட்டு இம்சை பண்ணுவாங்க!” என்று சலித்தாள்
சின்னவள்.
பெரியவளோ அவளை
முறைத்து, “உன்னை இப்போ அதை எல்லாம்
யாராவது கேட்டாங்களாடி?” என்றாள்
கடுப்புடன்.
“யாரும்
கேட்கலைனாலும் என் கஷ்டத்தை நான் சொல்லுவேன்!”
பதிலுக்கு
அலட்டலாக மொழியும் சிறுமியின் பேச்சில் வாய் விட்டு நகைத்த குமுதினி, “சரி சரி... கொஞ்ச நேரம் தூங்குங்க ரெண்டு
பேரும். அப்புறம் அந்த வானரப் படைங்க நாலு மணிக்கு எல்லாம் டான்னு வந்து
நிக்கும்ங்க!” என்று அவர்களை
அமைதிப்படுத்தினார்.
மாலை எழுந்ததும்
தன் குழுவினரோடு காரு விளையாட ஓடி விட, மருமகளோடு
பேசியபடி மாடியின் ஒரு மூலையில் படர்ந்து இருந்த கொடியில் உள்ள ஜாதி மல்லி
மொட்டுக்களை பறித்து இருந்தார் அவர்.
“நீ பூ கட்டுவியா
கயல்?”
“அச்சோ... இல்லை
அத்தை, கத்துக்கவே இல்லை!”
“சரி... நான்
சொல்லி தர்றேன். கடையில வாங்கி வச்சிக்கறதை விட, நாம தொடுத்தா நல்லா நெருக்கமா கோர்த்த பூ
மாதிரி வச்சிக்கலாம்!” என்றவர் பூக்களை
எவ்வாறு விரல்களில் அடுக்கி, எப்படி நூலில்
முடிச்சு போடுவது என அவளிடம் செய்து காண்பித்தவாறே மளமளவென்று இரண்டு முழங்களை
கட்டி முடித்தார்.
“ஹப்பா... செம
பாஸ்ட் அத்தை நீங்க, என்னால ஏதோ
சுமாரா நாலு கிள்ளு தான் ட்ரை பண்ண முடிஞ்சது!”
வியந்த
மருமகளிடம், “இப்போ தானே எப்படின்னே
கத்துக்கறே... போகப் போக வேகம் வந்துடும். நீ போய் சின்னதை இழுத்துட்டு வா, தலை வாரி விடறேன்!” என்றவரின் உத்தரவில், அடுத்த நிமிடம் காரு அவரின் கைகளில் இருந்தாள்.
திலீப்பின்
நினைவு கூட இல்லாமல், மூவரும் இயல்பாய்
தங்களுக்கு என்று ஒரு புதிய உலகத்தை அமைத்தவாறு பல்வேறு கதைகளில் மூழ்கி விட, ஐந்து மணி அளவில் வீடு திரும்பியவன் ஒருவரையும்
காணாமல் மாடி ஏறி வந்து பார்த்தான்.
“கீழே கதவை கூட
லாக் பண்ணாம, இங்கே வந்து
அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க...”
அவனின் அதட்டலில்
திரும்பிப் பார்த்த கயலும், காருவும் அவனை பார்த்து
ஆர்வமாக முறுவலிக்க, குமுதினி மகனை
கடிந்துக் கொண்டார்.
“ஏன்டா? வரும் போதே நீ பார்க்கலையா... இந்த நேரத்துல
நம்ம தெருவே வாசலுக்கு வெளியில தான் உட்கார்ந்து கதைப் பேசிட்டு இருப்பாங்க.
அத்தனை பேரை தாண்டி எந்தப் பயலால வீட்டுக்கு உள்ளே வந்துட முடியும்? நம்ம ஆளுங்களோட லேசர் பார்வைகளுக்கு முன்னாடி
உங்க சிசிடிவி கேமரா எல்லாம் எம்மாத்திரம்...” என்றார் அலட்டலாக.
“ஐயோ... ஆமா
பாட்டி, முந்தா நாள் எங்களையே
எல்லாரும் அப்படித்தான் உத்து உத்துப் பார்த்தாங்க!” என்றாள் காருண்யா வேகமாய்.
கயல் சங்கடமாக
விழிக்க, திலீப்பின் முகத்தில்
அத்தனை சிரிப்பு.
“கேட்டுக்கோங்க...
உங்க ஆளுங்களோட லட்சணத்தை...” என்று கிண்டலாக
மொழிந்தான்.
“அட போடா... எந்த
ஒரு விஷயத்திலும் பாசிட்டிவ்னு ஒன்னு இருந்தா, நெகட்டிவ்னு ஒன்னு இருக்கத்தான் செய்யும்!” என்று மகனிடம் கூறி விட்டு, “இங்கே பாருடா பாப்பா... நம்ம மேலே எந்த ஒரு
தப்பும் இல்லைன்னா, யாரு எப்படி
பார்த்தாலும் நாம எதுக்கும் அசர கூடாது, பயப்பட கூடாது.
நீங்க அப்பா வீட்டுக்கு, பாட்டி
வீட்டுக்கு வந்து இருக்கீங்க. அதுக்கு எதுக்கு அவங்க பார்க்கறதை நினைச்சு கலங்கிப்
போகனும்...” என சிறுமியிடம் பேசினார்.
“ம்... ஆமா பாட்டி, அம்மாவும் சொன்னாங்க!” என்று அவளும் உடனே ஒத்துக் கொண்டாள்.
“தங்கப் பிள்ளை...” என்றவர் ஆசையாய் அவளை நெட்டி முறிக்க,
“ம்மா... என்னம்மா
இது? இவள் தலையை இப்படி
கந்தரகோலம் பண்ணி வச்சிருக்கீங்க!”
“என்னடா பண்றாங்க? இது நெசவு ஜடை ஹேர் ஸ்டைல்!”
“சின்ன வயசுல என்
தலையை படுத்துனது பத்தாதுன்னு, இப்போ இவள்
தலையில வேற கையை வைக்க ஆரம்பிச்சிட்டீங்களா?”
“என்னது... உங்க
தலையில கையை வச்சாங்களா? அது எப்படி?” என்று வியந்து கேட்டாள் கயல்.
“ம்... இந்த
மாதிரி இவங்களோட கைவரிசையை காண்பிக்கறதுக்கு அப்படின்னே மூனு வயசு வரை எனக்கு
மொட்டை போடாம முடியை வளர்த்துட்டு, இவங்க
இஷ்டத்துக்கு டிசைன் டிசைனா தினம் ரெண்டு ஹேர் ஸ்டைல் போட்டு விட்டதோட இல்லாம, எல்லாத்தையும் போட்டோஸ் எடுத்து ஆல்பமா வேற
போட்டாச்சு!” என்றான்
அலுப்புடன்.
“ஆங்... உன்னை
யாரு பையனா பொறக்கச் சொன்னா? எனக்கு வேற வழி
தெரியலை, உன்னை யூஸ்
பண்ணிக்கிட்டேன்!” என்றவரின்
அலட்டல் பேச்சில், காரு வெடிச்
சிரிப்பு சிரித்தாள்.
மனைவியோ, “வாவ்... அப்படியா அத்தை, என்கிட்ட அதை காட்டவே இல்லையே நீங்க...” என மாமியாரிடம் குறைப்பட்டு கொண்டாள்.
“இன்னிக்கு
எல்லாம் ஆளுங்க வந்துட்டு போயிட்டு இருந்தாங்க இல்ல, நாளைக்கு காட்டுறேன்!”
“விளங்கிடும்...
நல்ல மாமியாரு, மருமகள்.
ஒருத்தருக்காவது வெளியிலே அலைஞ்சிட்டு வந்து இருக்கறவனுக்கு ஏதாவது குடிக்க
கொடுக்கனும்னு தோணுச்சா?” என்றான் திலீப்
செல்ல முறைப்புடன்.
“ஐயையோ...” என நாக்கை கடித்த குமுதினி, “நீ போய் அவன் என்ன கேட்கறானோ கலந்து கொடும்மா.
நான் பாப்பாவுக்கு இதை போட்டுட்டு வந்துடறேன்!” என்று கயலை விரட்டினார்.
அவள் எழவும், “சீக்கிரம் அவளை விட்டுடுங்க... அப்புறம் உங்களை
பார்த்தாலே நாலு அடி தள்ளி ஓட ஆரம்பிச்சுடுவா!” என்று அன்னையை கேலி செய்தபடி, மனைவியின் பின்னால் சென்றான் திலீப்குமார்.
**********
அரைகுறை
விழிப்பில் தூக்கம் கலைந்து கொண்டு இருந்த கயல்விழி அறையில் கேட்ட அரவத்தில் மெல்ல
இமைகளை பிரித்துப் பார்த்தாள். காலை ஆறு மணிக்கே பரபரவென்று தனது காவல் சீருடையை
அணிந்து தயாராகி இருக்கும் திலீப்பை கண்டு மெல்ல எழுந்து அமர்ந்தாள்.
“குட்மார்னிங்!” என்றாள் கண்களை தேய்த்தபடி சோர்வாக.
ஏதோ ஒரு
இறுக்கத்தில் தீவிரமாக இருந்தவனின் முகம் சட்டென்று இளகி, அவளிடம் புன்னகையுடன் திரும்பியது.
“வெரி குட்மார்னிங்!” என அருகில் வந்தான்.
அவனையும், அவனுக்கு தனி கம்பீரம் தந்த காக்கி உடையையும்
மனைவி ரசனையுடன் கண் இமைக்காமல் பார்த்து வைக்க, அவள் கன்னம் கிள்ளியவன், “என்ன பார்வை?” என்று நெற்றியில் முட்டினான்.
அப்படியே அவன்
முதுகில் கைகளை கோர்த்து தன்னோடு நெருக்கமாக வளைத்தவள், “ஐ லவ் யூ!” என்று முனகினாள்.
“பெட் காபி மாதிரி பெட் லவ்வா?” என கேலிப் பேசியவன், “ப்ரஷ்ஷே பண்ணாத டர்ட்டி லவ்!” என்று பெண்ணை
சீண்டினான்.
“ஹும்...” என சிணுங்கியவள்,
“ஒன்லி டர்ட்டி லவ்
மட்டும் தான், கிஸ்ஸா கொடுத்தேன்...” என்று உதட்டை சுழித்தாள்.
“ஏன் கொடேன்? நானா வேணாம்னு சொன்னேன்!”
“இவ்வளவு கிண்டல் பண்றவருக்கு எல்லாம் கொடுக்க
மாட்டேன்!” என்றவள் முறுக்க,
வாய் விட்டு
நகைத்தவன், “ஓகே... டைம் ஆகிடுச்சு. டேக் கேர், பை!” என்று அவள்
கன்னத்தில் அவசர முத்தம் பதித்து விட்டு வேகமாக வெளியேற, இவள் படுக்கையை விட்டு இறங்கி அவசரமாக அவனை பின்தொடர்ந்தாள்.
“காபி...” என்று மனைவி தொடங்கும் முன்னே,
சாக்ஸ்
அணிந்தவாறு, “போட்டாச்சு, குடிச்சாச்சு. உங்களுக்கும் ஹார்லிக்ஸ் கலந்து ப்ளாஸ்க்ல வச்சாச்சு!” என்று ஷூவை கையில் எடுத்தான் கணவன்.
உதட்டில் புன்னகை
மலர அவனை நெருங்கி, மீண்டும் கைகளால் அவன் தோள்களை சுற்றி மாலை
இட்டவளை, மெல்ல அணைத்து விடுவித்து விட்டு விரைவாக
விலகினான் திலீப்.
“எமர்ஜென்ஸிடா... அப்புறம் பார்க்கலாம்!” என்று தனது தொப்பியை எடுத்து அணிந்தவன்
விறுவிறுவென்று வாசலுக்கு சென்றான்.
அங்கே அவனுக்கு
என்று தயாராக காத்திருந்த ஜீப்பில் ஏறி அமர்ந்த வேகத்தில், இவளிடம் சின்னதாக தலை அசைத்து விட்டு கிளம்பிச் சென்று விட்டான் அவன்.
மெல்லியதாக பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவள், தனது தினசரி வேலைகளை கையில் எடுத்தாள்.
வீடு சுத்தம்
செய்ய, துணி துவைக்க, பாத்திரம் தேய்க்க என ஏற்கனவே அங்கு பணிப்புரிய ஒரு பெண்மணி இருப்பதால், இவளின் வேலை வெறும் சமையலோடு நின்று விட்டது.
வழக்கமான
அவர்களின் காலை உணவின் பொழுது, ஓடிக் கொண்டு
இருந்த செய்தி சேனலில் கயலின் பார்வை கூர்மை பெற்றது.
“என்ன அம்மு ஆக்ஸிடென்ட்டா?” என்று கவலையோடு கேட்டாள் காரு.
“ம்... ஆமா, ஒன்னும் சீரியஸ் இல்ல போல... வேகமா சாப்பிடு, கிளம்பனும்!” என்று சிறுமியை துரிதப்படுத்தினாள்.
வண்டியில்
செல்லும் பொழுது அவள் முதுகில் சாய்ந்து இருந்தவள், “அம்மு... அவங்க நல்லா இருப்பாங்க இல்ல, ஒன்னும் ஆகி இருக்காது தானே?” என்று சோகமாக
வினவினாள் காருண்யா.
“இல்லைடா செல்லம்... நியூஸ்ல சொன்னதை நீ சரியா
கேட்கலையா? அவங்க வண்டியோட கீழே ரோட்டுல விழுந்ததுல லேசான
அடி தான், உயிர் சேதம் எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாங்க!”
“ம்...” என முனகியவள், “போலீஸ் அன்ட் கவர்ன்மென்ட் எவ்வளவு சொன்னாலும்
கேட்காம, அந்த மாதிரி ஆளுங்க ஏன்மா ட்ரன்க் அன்ட் டிரைவ்
பண்றாங்க? ஸெல்ப் டிஸிப்ளின் இல்லாத அவங்க செய்யற வேலையால
அவங்களோட ஹெல்த் கெடறது மட்டும் இல்லாம, என் அம்மா, அப்பா போல எத்தனை பேர் அவங்களோட உயிரை
இழக்கறாங்க. அதோட போலீஸுக்கும் தேவை இல்லாத நியூஸன்ஸ் தானே? அப்பா அங்கே தான் போய் இருக்காங்களா...” என்று கேட்டாள்.
சிறுமியின்
முதிர்ச்சியான பேச்சில் ஆயாசமாக பெருமூச்சு விட்டவள், “ஹான்... அப்படித்தான் போலிருக்கு, காலையிலேயே அதை
ஏன் என்கிட்ட சொல்லிட்டுன்னு ஒன்னும் சொல்லலை!” என்றாள் அமைதியாக.
“ஓ... ஓகே!” என்றவளிடம் அன்றைய வீட்டுப் பாடம், அவள் வரைந்து
எடுத்துக் கொண்டு இருக்கும் ஓவியம் பற்றிய பேச்சு என ஆரம்பித்து அப்படியே பள்ளி
செல்லும் வரை தொடர்ந்தாள்.
அன்றைய இரவில்
அவள் உறங்கிய பின்னே கணவனிடம் இவள் கவலையாய் சின்னவளின் மனதை தெரியப்படுத்த, அவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.
“இவளை நாம இப்படியே விட்டுட கூடாது விழி... அதிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமா வெளியில கொண்டு வரனும். இல்லைன்னா... ரொம்ப சாஃப்ட் நேட்சரா
தொட்டதுக்கு எல்லாம் சோர்ந்து போற பொண்ணா வளர ஆரம்பிச்சிடுவா. நம்ம பொறுப்புல
இருக்குற பிள்ளையை நல்ல தைரியமான, தன்னம்பிக்கை
நிறைஞ்சவளா தான் நாம வளர்த்தனும்!”
“ம்... நானும் அதைத்தான் நினைச்சு உங்ககிட்ட
சொன்னேன்!”
“தினமும் உங்க ஸ்டோரீஸ் டைம்ல, அப்படியே பாசிட்டிவ் ஸ்பீச்சஸ் அன்ட்
ப்ரோக்ராமை பாப்பாவை பார்க்க வை. மெனக்கெட்டு நாம எதையும் தனியா திணிக்கனும்னு
இல்ல, தொடர்ந்து கேட்கும் போது தன்னால அவளுக்கு உள்ளே
ஒரு நல்ல சேஞ்ச் வரும்!”
“ரியலி குட் ஐடியா!” என ஆர்ப்பரித்தவள் அவனை கட்டிக் கொண்டு, “இன்னிக்கு யூடியூப்ல உங்களோட ப்ரோக்ராம் கூட நான் பார்த்தேன்!” என்று அவனிடம் புன்னகைத்தாள்.
“என்ன ப்ரோக்ராம்? எந்த சேனல்ல வந்ததை சொல்றே...”
புருவங்களை
சுருக்கியவள், “அப்போ ஒரு சேனல்ல மட்டும் நீங்க இன்டர்வியூ
கொடுக்கலையா?” என்றாள் வேகமாக.
சிரித்த திலீப், “இல்லை... யார் எல்லாம் உருப்படியா நம்ம
மக்களுக்கு பயன்படுற மாதிரி ப்ரோக்ராம் டெலிகாஸ்ட் பண்றாங்களோ, அவங்க கேட்டா உடனே அக்செப்ட் செஞ்சிடுவேன்!” என்றான் அவளின் உதட்டை உரசியவாறு.
“ஓ... அப்படி இதுவரை எத்தனை ப்ரோக்ராம்ல பேசி
இருக்கீங்க?”
“ஒரு நாலு பேசி இருக்கேன். எல்லாமே நமக்கு டே டு
டே லைஃப்புக்கு யூஸ் ஆகறது தான், காருவோட சேர்ந்து
பாரு!”
“ம்... சரி, அப்புறம் எனக்கு இன்னொரு டவுட்டை க்ளியர் பண்ணனுமே நீங்க...”
“இன்னும் என்னடி டவுட்டு? என்னை எப்போ தான் தூங்க விடுவே நீ?” என்றான் திலீப் சலிப்பாக, கொட்டாவி ஒன்றை வெளியேற்றியபடி.
“உங்க வேலை முடிஞ்ச உடனே உங்களுக்கு தூக்கம்
வந்துடுமே...” என்று நொடித்தவள், “சரி தூங்குங்க, காலையில கேட்கறேன்!” என்று நகர்ந்து படுத்தாள்.
“வேண்டாம்மா தாயே... இப்பவே கேட்டுடு. அப்புறம்
காலையில நான் ஏதாவது அவசரமா கிளம்பும் போது தொல்லை பண்ணுவே நீ!”
முகத்தை
சுருக்கியவள், “வித்யாவோட ஹஸ்பென்ட் சொன்ன மாதிரி நான்
உங்களுக்கு தொல்லையா இருக்கேனா...” என ஏமாற்றமாக
கேட்டாள்.
அவன் திரும்பி
அமைதியாக அவள் முகத்தை பார்க்க, “என்ன?” என்றாள் உம்மென்று.
“எப்படி இப்படி எல்லாம் இமோஷனலா மடக்கறே?”
சட்டென்று கோபம்
பிறக்க, வேகமாக திரும்பி படுத்துக் கொண்டாள் கயல்.
அவளை சிரிப்புடன்
பின்னிருந்து அணைத்து,
“அடியே என் அராத்து...
அவனுக்கான பதிலை தான் நான் உடனே பட்டுன்னு கொடுத்துட்டேனே. அப்புறம் எதுக்கு உனக்கு
இந்த வேண்டாத சிந்தனை?”
என்று காதை கடித்தான்.
“ஹும்... போங்க!” என்று அவனை விலக்க முயன்றவளை இன்னமும் அழுத்தமாக வளைத்துக் கொண்டவன், “நிஜமாவே எனக்கு தூக்கம் வருதுடா விழி... நேத்தே
லேட் நைட் தானே வந்து படுத்தேன், காலையில நேரமா
போன் வந்து கிளம்பியாச்சு!” என்றான்
அலுப்புடன்.
விரைந்து
அவன்புறம் திரும்பியவள்,
“ஓ... சாரி சாரி, தூங்குங்க!” என்று அவன் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்து, அவனை கட்டிக் கொண்டு இமைகளை பூட்டினாள்.
**********
“வெரி குட்
ஈவ்னிங் பா... இன்னிக்கு சீக்கிரமா ஆறு மணிக்கே வந்துட்டீங்க...”
அப்பொழுது தான்
வீட்டிற்குள் நுழைந்த திலீப்பிடம் காரு ஆர்வமாக கேட்க, முகம் புன்னகையில் விரிந்தது அவனுக்கு.
அவளை கைகளில்
அள்ளிக் கொண்டவன், “அப்பா... ரெண்டு
நாளா வீட்டுல இல்லை. அது தெரியுமா உனக்கு?” என சிரிப்புடன் விசாரித்தான்.
“ஓ... தெரியுமே.
ஏதோ கேஸ் விஷயமா சென்னை போய் இருக்கீங்கன்னு அம்மு சொன்னாங்க!”
“எஸ்... வேலை
முடிஞ்ச உடனே கிளம்பிட்டேன். இங்கேயும் நான் அவசரமா நேர்ல போய் பார்த்தாக வேண்டிய
வேலை எதுவும் இல்லை. ஸோ... உங்க கூடவே இருந்து, தேவைப்பட்டதை போன்ல முடிச்சிக்கலாம்னு நேரா
வந்துட்டேன்!”
“சூப்பர்...” என மலர்ச்சியில் கண்களை விரித்த சிறுமியின்
நெற்றியில் முட்டியவன்,
“அம்மா எங்கே?” என்று கேட்டான்.
“அவங்களா...” என வேகமாக எதையோ தொடங்கிய சின்னவள் சட்டென்று
நிறுத்தி திருதிருவென்று விழித்து பின் அசட்டுப் புன்னகை புரிந்து, “உள்ளே தான் டயர்டா இருக்குன்னு படுத்து
இருக்காங்க!” என்று பதில்
தந்தாள்.
“டயர்டா
இருக்குன்னு படுத்து இருக்காளா... உடம்பு முடியலையா என்ன?” என்று நெற்றியை சுருக்கியபடி படுக்கை அறையை
நோக்கி வேகமாக நடந்தான்.
மீண்டும் ஒரு
ரகசிய சிரிப்பு காருவின் உதட்டோரம் துடிப்பதை கண்டு வியந்தவன் அப்படியே நின்று, “ஓய்... உன்கிட்ட எதுவோ ஒன்னு சரி இல்லாதது போல
இருக்கே...” என்று கண்களை இடுக்கினான்.
முயன்று தன்
முகத்தை இயல்பாக்க முயன்றபடி, “அப்படி எல்லாம்
ஒன்னும் இல்லப்பா!” என்று கைகளை
விரித்தாள்.
“ஆஹான்... உன்
அம்முவுக்கு உடம்பு முடியலைன்னா, நீ சோகமா தானே
இருப்பே. இப்படி எல்லாம் சிரிக்க மாட்டியே...” என்றான் சந்தேகமாக.
“போங்கப்பா...
நீங்க பயங்கரமான ப்ரில்லியன்ட் போலீஸா இருக்கீங்க. எனக்கு சிரிப்பு வருது
சிரிக்கறேன், அம்மாவுக்கு
கொஞ்சமா தான் முடியலை!”
தன்னிடம்
அலுத்துக் கொண்ட பிள்ளையின் கன்னத்தில் புன்னகையுடன் முத்தம் இட்டவன், “அது என்ன கொஞ்சமா... எதுவும் சாப்பிட்டது
ஒத்துக்கலையா?” என்று விசாரித்தான்.
“ப்ச்... என்னை
கீழே இறக்கி விடுங்க, நான் போய் ஹோம்
வொர்க் செய்யறேன். ஒரு விஷயத்துக்கு இத்தனை கொஸ்டீன் பண்றீங்க நீங்க... உங்ககிட்ட
மாட்டிக்கிற கிரிமினல்ஸ் எல்லாம் ரொம்பவே பாவம் தான்!”
அவளை இறக்கி
விட்டவன், பெரிய மனுஷியாக
புலம்பியவாறு செல்பவளின் பேச்சை கேட்டு, “அடிங்...” என்று அவளை தாவிப் பிடிக்க முயல, துள்ளிக் கொண்டு விலகி ஓடினாள் அவள்.
“நீங்க உள்ளே போய்
அம்மா கூட பேமிலி சீக்ரெட் பேசுங்க, அப்போ தான்
விஷயம் புரியும்!” என்ற வேகத்தில்
ஸ்டடி ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.
‘என்ன சொல்லுது
இந்த வாண்டு?’ என ஆச்சரியம்
கொண்டவன், அவளின் பேமிலி சீக்ரெட்
என்ற சொற்களை எண்ணி மெல்ல முறுவலித்தவாறு தங்களது அறைக்குச் சென்றான்.
ஒற்றைக் கையினால்
முகத்தினை மறைத்தபடி படுக்கையில் சோர்வாக படுத்து இருந்த கயலின் அருகில் அமர்ந்த
திலீப், “விழி...” என்று அவள் தலையை வருட,
“ம்...” என மெதுவாக முனகினாள் பெண்.
“என்னடா? ஏதோ உடம்பு முடியலைன்னு பாப்பா சொன்னா... என்ன
செய்யுது?”
தன்னவளிடம் அமைதி
நிலவவும், லேசாக எட்டி அவளின்
முகத்தை பார்த்த திலீப்பின் விழிகளில் மீண்டும் மெல்லிய வியப்பு தோன்றியது.
ரகசிய
சிரிப்புடன் கீழுதட்டை அழுந்த கடித்துக் கொண்டு இருந்தாள் அவன் மனைவி. கணவனுக்கு
உள்ளும் ஏதோ ஒரு குறுகுறுப்பு தோன்ற, அப்படியே சரிந்து
அவள் அருகில் நெருங்கிப் படுத்தான்.
அவசரமாக திரும்பி
அறை வாயிலை பார்த்தவள், “அச்சோ... கதவு
திறந்து இருக்கு!” என்று அவனை
எச்சரித்தாள்.
அவளை
பின்னிருந்து அணைத்து, “அவள் ஹோம் வொர்க்
செய்ய போயிட்டா. அதோட உன்கிட்ட பேமிலி சீக்ரெட் வேற பேசச் சொன்னா, ஸோ... இப்போதைக்கு ரூம் லாக் ஆகி இருக்கும்கிற
நினைப்புல தான் அவளே இருப்பா!” என்றான் கள்ளச்
சிரிப்புடன்.
அவன் நெஞ்சில்
முழங்கையால் ஒரு இடி இடித்தவள், “பேச்சை பாரு...
நல்லா உங்களுக்கு ஏத்த மாதிரி அந்தப் பிள்ளையே அப்பப்போ அப்பாவியா தனிமை
கொடுத்துட்டு ஓடிடுது. ஆல்ரெடி பேமிலி சீக்ரெட் பேசின பொழுதுகளோட ரிசல்ட் தான், இப்போ என்னை இப்படி ரெஸ்ட் எடுக்க வச்சு
இருக்கு!” என்று போலியாக
நொடித்தாள்.
“என்ன?” என்றவன் புரியாமல் கேட்க,
“இதுக்கு மேலே
ஒன்னும் சொல்ல மாட்டேன், நீங்களே
கண்டுபிடிங்க!” என்று பெரிதாக
முறுக்கினாள்.
“என்னடி சொன்னே நீ? நான் கேட்டதுக்கு வாயே திறக்காம, என்னை வேற கண்டுபிடிக்க சொல்றே!”
“அது எல்லாம்
அப்படித்தான்... சாதாரண மனுஷனே சாதாரணமா கண்டு பிடிச்சிடலாம், இதுல நீங்க போலீஸ் வேற...”
“சாதாரண மனுஷனே
சாதாரணமா கண்டு பிடிச்சிடலாமா...” என தனக்குள்
முணுமுணுத்தவன், அவள் முகத்தை
யோசனையோடு ஊன்றிப் பார்த்தான்.
வேண்டுமென்றே
அவள் உம்மென்று தூக்கி வைக்க முயன்று இருப்பது எல்லாம் வெறும் மேல்பூச்சாக தான்
தெரிந்தது. எதையோ தனக்குள் ரகசியமாக வைத்தபடி அலைபாயும் அவளது கயல்விழிகளும், இதழ்களுக்குள் சிரமப்பட்டு கட்டுப்படுத்தி
வைத்து இருக்கும் புன்னகையும் தனக்கு விடுக்கப்பட்ட சவாலாக தோன்றியது இவனுக்கு.
‘சின்னது மாதிரியே
இவளும் எதையோ நினைச்சு சிரிப்பை அடக்குறா... ரெண்டும் என்ன விஷமம் பண்ணி வச்சு இருக்குங்க?’ என்ற கோணத்தில் சில நிமிடங்களுக்கு முதலில்
மண்டையை உடைத்தவனுக்கு, ஒன்றும்
பிடிபடவில்லை.
‘எப்படியாவது
நாமளே தான் கண்டுபிடிச்சு ஆகனும். மகள் ப்ரில்லியன்ட் போலீஸ்னு சர்ட்டிபிகேட்
கொடுத்த மறுநிமிஷம், அம்மா இதுல
போலீஸ் வேறன்னு ஒரு இழு இழுத்து டேமேஜ் பண்றா...’
உதட்டை
கடித்தவாறு மூளையை கசக்கியவனுக்கு, சட்டென்று
மின்னல் தோன்றியது.
‘ஹேய்... பேச்சோடு
பேச்சா இவள் என்ன சொன்னா? ஆல்ரெடி பேமிலி
சீக்ரெட் பேசின பொழுதுகளோட ரிசல்ட் தான், இப்போ என்னை
இப்படி ரெஸ்ட் எடுக்க வச்சு இருக்குன்னு ஏதோ சொன்னாளே... அப்போ...’ என்று தொடர்ந்தவனின் முகம் ஆயிரம் சூரியனுக்கு
நிகராக பளீரென்று அதீத ஒளியை பூசிக் கொண்டது.
வெடுக்கென்று
அவளை தன்னருகில் இழுத்தவன், “விழி... நிஜமாவா?” என்றான் வார்த்தைக்கு தவித்து மெல்லிய
பரபரப்புடன்.
“ஒன்னுமே சொல்லாம, நிஜமாவான்னு கேட்டா என்ன அர்த்தம்?” என அசட்டையாய் இதழ்களை சுழித்தாள் அவள்.
“உன்னை...
அராத்து... அராத்து...” என்று செல்லமாக
சாடியபடி, பெண் சுழித்த இடத்தை
மோகத்தோடு சின்னா பின்னம் ஆக்கினான் அவன்.
“ஷ்... அப்பா...” என்று அவனை விலக்கித் தள்ளியவள், “எதுக்குடா இப்படி என்னை கடிச்சு வைக்கறே? வலிக்குது!” என சிணுங்கினாள்.
“என்னது? ‘டா’வா...” என்று அவன் அதிர்ந்து பார்க்க,
“இதுக்கு எதுக்கு
இவ்வளவு ஷாக்? நானும் ரௌடி தான்
ரேஞ்சுக்கு யூத் யூத்துன்னு அலட்டறீங்க இல்ல... அதுல ‘டா’ எல்லாம்
சாதாரணம்!” என்றாள் நமட்டுச்
சிரிப்புடன்.
“எது... எல்லாம்
சொல்லிக்கறாங்களே, ‘டா’ ஃபார் டார்லிங். அப்படியா... என்னை எப்படி
எல்லாம் லாக் பண்றே நீ!” என மீண்டும்
முற்றுகையிட முயன்றவனை வேகமாக தடுத்து நிறுத்தினாள் அவள்.
“இன்னும் விஷயத்தை
சொல்லலை நீங்க!”
“நீ சொன்னியா...
பெருசா புதிர் போட்டே இல்ல, நானும் சொல்ல
மாட்டேன்!” என்று இம்முறை காவலன்
முறுக்கினான்.
“ஹும்...
சொல்லுங்க போலீஸ்கார்!” என்று அவன் சட்டை
காலரை பிடித்து நெருங்க இழுத்து முத்தப் போர் தொடுத்தாள் கயல்.
**********
சிறுமியை
வாஞ்சையுடன் பார்த்தபடி கூறும் தாயின் சொற்களில் மெல்ல புன்னகைத்தவன், “கண்டிப்பாம்மா... அதுல உங்களுக்கு டௌட்டே
வேணாம்!” என்றான் இலகுவாக.
பட்டென்று அவன்
காதை பிடித்து திருகியவர், “அது
இருக்கட்டும்... நீ இப்போ என்ன சொன்னே? பேமிலி சீக்ரெட்
பேசலாம் வான்னு எதுக்கு கயலை உள்ளே கூப்பிட்டே... இப்போ தான் மூனு மாசம் முடிஞ்சு
இருக்கு, இந்த நேரத்துல எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கனும்...” என்றவர் பேசிக் கொண்டே போக, செல்ல கோபத்துடன் அவர் கரத்தை வேகமாக தள்ளி
விட்டான் அவன்.
“ம்மா... இட்ஸ் டூ பேட். என்னை பார்த்து இப்படி
ஒரு சந்தேகமா?” என்று முறைத்தான்.
“ஆமா பின்னே... அவளை நீதானே அப்படி உள்ளே
கூப்பிட்டே. உன் பொண்ணும் தான் பளிச்சுன்னு விஷயத்தை போட்டு உடைச்சிட்டாளே...”
“ஹைய்யோ அம்மா... அவகிட்ட ஒரு செல்ல சண்டை
போடத்தான் உள்ளே கூப்பிட்டேன். எனக்கு மட்டும் அது எல்லாம் தெரியாதா... இதுல உங்க
மருமகளை பத்தி சொல்லாம விட்டுட்டேனே, டாக்டர் கிட்ட
ஃபர்ஸ்ட் செக்கப் போயிட்டு வந்த அன்னிக்கே என்னை கீழே படுத்து தூங்க சொல்லிட்டா...”
அவன் சொல்லி
முடிப்பதற்கு உள்ளாகவே மகனின் நிலையை எண்ணி அவுட்டுச் சிரிப்பு ஒன்றை வெளியிட்டவர், “அவ்வளவு உஷாரா இருக்காளாடா அவ... அப்போ நீ கீழே
தான் படுக்கறியா?” என்றார் கேலியாக.
“ஆங்... அது எல்லாம் என்கிட்ட நடந்துடுமா...” என்று அலட்டலாக தனது டீஷர்ட் கையை மடித்து
விட்டவன், “நான் கட்டில்ல தான் படுத்து தூங்குவேன், என் மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு. உன் மேலே
உனக்கு இல்லைன்னா, நீ போய் கீழே தூங்குன்னு சொல்லிட்டேன்!” என்று நமட்டை கடித்து விஷமமாக புன்னகைத்தான்.
அயர்ந்து போய், “அட பாவிகளா... என்னடா இப்படி குடும்பம்
நடத்தறீங்க?” என்று தனது நாடியில் கை வைத்தார் குமுதினி.
“எப்படி நடத்துனா என்ன? ஆக மொத்தம்... ரிசல்ட் டிஸ்ட்டிங்ஷன்ல வருது இல்ல...” என்று கண் சிமிட்டுபவனை பொங்கி வரும் சிரிப்போடு மொத்தினார் பெற்றவர்.
அப்பொழுது அவனது
அலைபேசிக்கு அழைப்பு ஒன்று வர, “இதோ...
வந்துடுச்சு இல்ல...”
என நொடித்துக் கொண்டவர், “இதுக்குத்தான் நான் உன் கூட சேராம எப்பவும், மருமகள், பேத்தின்னு இருந்துக்கறது!” என்று எழுந்து
கொண்டார்.
“ம்மா... இது எல்லாம் டூ மச். அன்றைய டெபுட்டி
இன்ஸ்பெக்டரோட பொண்டாட்டி, இன்றைய
டி.எஸ்.பி. ஓட அம்மா இப்படி எல்லாம் சொல்ல கூடாது!” என கண்டிப்புடன் கூறியபடி இணைப்பை ஏற்றுக் கொண்டே விலகிச் சென்றான் திலீப்.
முகத்தில்
பெரியதாக முறுவல் விரிய,
“சரி தான் போடா!” என்று விட்டு சமையல் அறை சென்றார்.
“சாப்பிடலாமா அத்தை... டின்னர் ரெடி!”
கேட்ட மருமகளிடம், “அவன் வழக்கம் போல ஏதோ போன் கால்ல பிஸி
ஆகிட்டான். சாப்பிட்டு ரெஸ்ட் எடுப்பானா, இல்லை... வெளியில
ஏதாவது கிளம்புவானா என்னென்னு தெரியலை!” என்று தகவல்
தந்தார் அவர்.
“ஓ...” என பெண்ணின்
விழிகள் சோர்வுறும் பொழுதே, முகம் எங்கும்
மலர்ந்து விகசிக்க ஆர்ப்பாட்டமாக அங்கே வந்தான் ஆடவன்.
“ஹேய்... ஒரு குட் நியூஸ்!”
கயலும், காருவும் ஒருமித்த குரலில், “என்ன?” என்று ஆர்வமாக
கேட்கும் நேரம், குமுதினியோ மகனை நக்கல் அடித்தார்.
“என்னடா... மறுபடியும் அப்பாவாக போறியா நீ?”
“ம்மா...” என்றவன் பல்லைக் கடிக்க,
“இப்போ என்ன... நான் உண்மையை தானேடா சொன்னேன்!”
“தெய்வமே... உங்களை வச்சிக்கிட்டு என்னால
முடியலை!”
“அதுக்கு ஒன்னும் செய்ய முடியாது, இந்த ஜென்மத்துல என்னை நீ சகிச்சிக்கிட்டு தான்
ஆகனும்!” என்றார் அலட்டலாக.
சிரிப்புடன், “அம்மா... அம்மா...” என்று தாயின் கன்னம் கிள்ளி கொஞ்சிக் கொண்டவன், “எல்லா ஜென்மத்துலயும் எனக்கு இந்த டார்ச்சர் தான் வேணும்!” என்று நிறைவாக கூறினான்.
“தானா வந்து ஒரு ஆடு சிக்கும் போது, நான் வேணாம்னா சொல்லப் போறேன்!”
அவரின்
கலாட்டாவில் நாயகி சிரித்து இருக்க, “அச்சோ பாட்டி...
சும்மா இருங்க. நீங்க சொல்லுங்கப்பா... என்ன குட் நியூஸ்?” என்று வேகமாக அவன் கரம்பற்றி கேட்டாள் காருண்யா.
“பாருடா... இந்த வாண்டோட அதிகாரத்தை!” என்று அவர் செல்லமாய் நொடிக்க, பிள்ளையை தூக்கிக் கொண்டான் நாயகன்.
“என்ன தெரியுமா? நம்ம இண்டியன் கவர்ன்மென்ட் அப்பாவுக்கு ப்ரெசிடென்ட்டோட போலீஸ் அவார்ட் தரப்
போறதா மெசேஜ் கிடைச்சு இருக்கு!”
“டேய் திலீப்... நிஜமாவாடா?” என அவனை நெருங்கி கண்கள் கலங்க கேட்டார்
குமுதினி.
“ஆமாம்மா... ஏற்கனவே ஷார்ட் லிஸ்ட் ஆகி
இருக்கறதா கேள்விப்பட்டேன். இப்போ தான் உறுதியான தகவல் கிடைச்சது. என்னோட சேர்த்து
தமிழ்நாடு போலீஸ்ல இருபத்து இரண்டு பேர் இந்த விருதுக்கு தேர்வு ஆகி இருக்காங்க!” என்று அவர் கரம் பற்றினான்.
“சூப்பர்பா... கங்கிராட்ஸ்!” என்று அவனுக்கு உற்சாகமாக வாழ்த்து
தெரிவித்தாள் மனைவி.
“தேங்க்ஸ்டா விழி...” என்று அவளை மகிழ்ச்சியாய் தோள் அணைத்துக் கொண்டான் கணவன்.
“இது என்ன அவார்ட் ப்பா... எதுக்கு தர்றாங்க? புரியலை!” என்று விவரம் கேட்டாள் சிறுமி.
“சரி... நீ அவளை தூக்கிட்டு டைனிங்க்கு போய்
விவரம் சொல்லு. நானும்,
கயலும் டிபன் எடுத்துட்டு
வர்றோம், சாப்பிடலாம்!”
காவலன் நடந்தபடி, “அது எதுக்குன்னா... போலீஸ் சர்வீஸ்ல சின்ஸியரா
ஒர்க் பண்றவங்களை என்கரேஜ் பண்ற மாதிரி கொடுப்பாங்க!” என்று சின்னவளுக்கு விளக்கம் கொடுத்தான்.
“ம்... சின்ஸியரான்னா... எந்த மாதிரி
நடந்துக்கனும்?”
“நம்மளோட வேலை என்னவோ அதைச் சரியா செய்தாலே
சின்ஸியர் தான். இப்போ பாப்பாவுக்கு உன்னோட ஹோம் வொர்க் கரெக்டா செஞ்சா
சின்ஸியர்னு அர்த்தம். அப்பாவுக்கு சிட்டில, டிஸ்ட்ரிக்ட்ல நடக்குற க்ரைம் ரேட்டை குறைக்கனும், நிரந்தரமா ஒழிக்கனும்னு இப்படி சொல்லிட்டே போகலாம்!”
“எப்போங்க இந்த அவார்ட் உங்களுக்கு தருவாங்க?”
அவன் அருகில்
அமர்ந்தபடி கயல் கேட்க,
“அநேகமா வர்ற ரிபப்ளிக் டே’ல குடுப்பாங்கன்னு நினைக்கறேன்!” என்று அவள் எடுத்து வந்து இருந்த தட்டுக்களை
நால்வருக்கும் பிரித்து வைத்தான்.
“ஏன்டா திலீப்... கொஞ்ச மாசத்துக்கு முன்னே அந்த
கஞ்சா, அபின் க்ரூப்பை மொத்தமா அரெஸ்ட் பண்ணியே, அதுக்காக செலக்ட் பண்ணி இருப்பாங்களோ...”
“ம்... அதுவும், அப்புறம் என் சர்வீஸ்ல எத்தனை திறமையா, வேகமா க்ரைம்ஸை குறைச்சு இருக்கேன், கிரிமினல்ஸை
அரெஸ்ட் செஞ்சு இருக்கேன் அப்படிங்கறதையும் கவனிச்சு இருப்பாங்கம்மா!” என்றவாறு சுவாதீனமாக உண்ண ஆரம்பித்தான்.
(இந்திய அரசாங்கம் குடியரசு தலைவரின் காவல்
விருதுகளை வருடத்திற்கு இரு முறை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்
பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கி கௌரவித்து வருகிறது.
நல்லெண்ணம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் களைவது, நலிந்த நபர்களின் மனுக்களை சிறந்த முறையில்
பரிசீலனை செய்து அவர்களுக்கு உதவுவது, தனிப்பட்ட
நபர்களின் கடமை உணர்வு,
துணிச்சல் நடவடிக்கைகள்
போன்ற தொழில்முறை சாதனைகளுக்காக இப்பதக்கம் வழங்கப்படுகிறது.)
**********