Matru Kuraiyatha Mannavan 1 - Deepa Babu

 


*1*


"துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்;

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்

கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்,

நிமலரருள் கந்தர்சஷ்டி கவசம் தனை

அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி..."

என்ற பக்தி மணம் கமழும் கம்பீர ஆண் குரல் வீடு முழுவதும் எதிரொலிக்க, அதை ஆழ்ந்து ரசித்தபடி தன் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார் மங்களம்.

அடுத்த இருபது நிமிடங்களில் இறைவனை துதிபாடி முடித்த சிவலிங்கம் நெற்றி நிறைய விபூதியை அள்ளிப் பூசிக்கொண்டு பூஜையறையை விட்டு வெளியே வந்தார்.

"என்னம்மா... இன்று உனக்கு அதிகம் சிரமம் கொடுத்து விட்டேனா?" என்று மங்களத்திடம் வந்து சங்கடத்துடன் வினவினார்.

"அட... ஏன்பா? நீங்கள் வேறு இப்படியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்... எப்பொழுதும் வீட்டில் பலவகையான பதார்த்தங்கள் செய்தாலும் நீங்கள் அதையெல்லாம் சரியாக உண்பதில்லை.

வயதாகிவிட்ட காரணத்தினால் ஆரோக்கியம் கருதி யாருக்கும் தொந்திரவாக இருக்க கூடாது என்று பச்சை, காய்கறி உணவு வகைகளை தான் அதிகம் எடுத்துக் கொள்வீர்கள். அதில் எனக்கு என்ன சமையல் வேலை பெரியதாக இருந்து விடப்போகிறது...

இன்று தான் இரண்டு வருடங்கள் கழித்து ஊரிலிருந்து பேத்தி வருகிறாள் என்று அவளுக்கு பிடித்தமானதை ஆசையாக செய்ய சொல்லி இருக்கிறீர்கள். அதுவும் இரண்டே இரண்டு உணவு வகைகள் தான். இதில் என்ன சிரமம் இருந்துவிடப் போகிறது எனக்கு?

நீங்கள் இதையெல்லாம் விட்டு விட்டு பாப்பாவுடைய பஸ் வந்து விட்டதா, மாரி அவளை காரில் ஏற்றிக்கொண்டானா என்று விசாரியுங்கள்!" என அவருக்கு உத்திரவிடும் மங்களம் சிவலிங்கத்தின் தங்கை மருமகள்.

வளவன்குடி, தென்காசிக்கு அருகில் உள்ள மலையோர கிராமம். மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து ஆர்வத்துடன் கீழிறங்கி வருடம் முழுவதும் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றால் செழுமை மிகுந்த ஊர்.

நீர் வளத்தால் இயற்கை தொழிலான விவசாயம் செழித்து ஓங்க, தான் பிறந்து, வாழ்ந்து வந்த பூர்வீக இடத்தை விட்டு செல்ல மறுத்து பிள்ளைகளை மட்டும் வெளியூர்களுக்கு அனுப்பி வைத்து விட்டார் சிவா.

கண்ணுக்கு கண்ணாக ஒரு மகனும், மகளும் உண்டு. மூத்தவர் வேதியியலில் ஆய்வுகள் மேற்கொண்டு வட இந்தியாவின் ஓர் மூலையில் ஆராய்ச்சியாளராக பணியில் அமர்ந்து விட்டார். மனைவி மற்றும் இரு மகள்களோடு அவர் குடும்பத்தின் வாசம் அங்கே என்றாகி விட, மகளின் வாசம் திருச்சியில்.

திருச்சியில் புகழ்பெற்ற பெல் நிறுவனத்தில் மருமகன் பணிபுரிய, இவர் மகள் அங்கே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியையாக பணிபுரிகிறார். அவர்களுக்கும் இவரை போலவே ஒரு ஆண், ஒரு பெண் என இரு பிள்ளைகள். பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டது, மகன் கல்லூரியில் படிக்கிறான்.

எழுபதுகளின் மத்திமத்தில் இருக்கும் அவரால் முன்பு போல விவசாயத்தில் உழைப்பை செலுத்த முடிவதில்லை என்று இயற்கை வேளாண்மை மேல் ஆர்வம் கொண்டு கல்லூரியில் அதைப் பயின்று சிறப்பாக செயல்படுத்த நினைக்கும் உள்ளூர் இளைஞன் ஒருவனுக்கு குத்தகைக்கு விட்டு விட்டார்.

அவனுடைய தொழில் திறனால் தன் நாட்களுக்கு நிகராக பயிர்கள் செழித்து வளர்வதை காண்கையில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தினமும் காலை வேளைகளில் அருகில் உள்ள முருகன் குன்றுக்கு அவனை தரிசிக்க வேண்டி ஒருமுறை மலையில் ஏறி இறங்குபவர், மாலையில் மறவாமல் தன்னுடைய நிலங்களை பார்வையிடச் சென்று விடுவார்.

தனக்கு நிலங்களை குத்தகைக்கு விட்ட பின்பும், பெரியவர் மேற்பார்வையிட வருவதுப் போல் தினமும் வருவதை தவறாக எடுத்துக் கொள்ளாத மாணிக்கமும் அவருக்கு அம்மண்ணின் மீதுள்ள தீராக் காதல் புரிந்து பெரும்பாலும் அந்நேரத்தில் அங்கிருந்து அன்றைய வேலைகள் குறித்து இவனாகவே அவருக்கு விளக்கம் கொடுக்கவும் செய்வான்.

அதில் மகிழ்ச்சி அடைபவர் அவனை மனதார பாராட்டிவிட்டு நிறைவுடன் வீடு திரும்புவார். வயதான காலத்தில் குடும்பத்தினரை விட்டு தனிமையில் வாழும் அவருக்கு இதுதான் மிகப்பெரிய ஆறுதல் தரும் விஷயம் என்பதை மிகச்சரியாக புரிந்து வைத்திருந்தான் மாணிக்கம்.

வீட்டு வேலைகளை செய்வதற்கு அவர் நிலத்தில் வேலை பார்த்து வந்த பெண்மணி தினமும் காலையில் வந்துச் செல்ல, சமையலுக்கு மட்டும் மங்களம் வந்து செய்வார் அல்லது கணவன், மகனிடம் தன் வீட்டில் இருந்து உணவை கொடுத்து அனுப்பி விடுவார். ஒரே தெருவில் நான்கைந்து வீடுகள் மட்டுமே தள்ளி இருப்பது அவர்களுக்கும் இதில் வசதியாக இருந்தது.

இரத்த உறவாக இருந்தாலும் இலவசம் என்பது உறவுகளின் சுமூகநிலையை கெடுத்துவிடும் என்று தன்னால் ஆன மளிகை சாமான்களை கடைத்தெருவிற்கு போகும் நேரம் கடைகளில் சொல்லி தங்கை மகன் சுந்தரம் வீட்டிற்கு மறவாமல் அனுப்பி வைத்து விடுவார் சிவலிங்கம். அவ்வப்பொழுது விடுமுறைகளிலோ அல்லது பண்டிகை காலங்களில் மட்டுமே அவர் வாரிசுகள் வந்துச் செல்வர். அவரவர் தொழில்களை அவரவர் கவனிக்க வேண்டும் என்பதால் சிவாவும் எதற்காகவும் ஏங்கி வேதனைக் கொள்ளமாட்டார்.

உலகின் நிதர்சனத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டு உயிர் பிரிகிறவரை தான் யாருக்கும் தொந்திரவாக இருக்க கூடாது என்று தன் ஆரோக்கியத்தில் கவனமாக அக்கறை செலுத்தி வருகிறார்.

"மங்களா... குட்டிம்மா பஸ் இப்பொழுது தான் வந்ததாம். இன்னும் பத்து நிமிடங்களில் வீட்டில் இருப்பாள். நீ நம் தமிழை வரச்சொல், அவனுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். ஓ... இன்று அவன் பள்ளிக்கு செல்ல வேண்டும் இல்லை, விடுமுறை இருக்காது.

சரி சரி, அப்பொழுது அவன் மாலையில் வந்துப் பார்த்துக் கொள்ளட்டும். நீயும் குட்டிம்மா வந்தவுடன் பார்த்துவிட்டு வேகமாக வீட்டிற்குப் போ. குழந்தையை வேறு கிளப்ப வேண்டும் அல்லவா? நான் போய் வாசலில் நிற்கிறேன், அவள் வேறு வந்து விடுவாள்!" என தன் வயதை மறந்து இருக்கும் பரபரப்பில் மாற்றி மாற்றிப் பேசியவராக ஆர்வமாக வாயிலுக்குச் செல்லும் பெரியவரை பார்த்து அன்பு பெருகியது மங்களத்திற்கு.

அவருடைய பெற்றோர்கள் எங்கோ ஓர் ஊரில் தூரமாக வசிக்க, அருகில் இருக்கும் இவர் தான் அப்பா என்று அழைக்கும் வார்த்தைக்கு ஏற்ப பாசமாக இருப்பவர். பிள்ளைகளும் அவருடைய சொந்தப் பேரன், பேத்திகளுக்கு இணையாக அவரிடம் உரிமையெடுத்து பழகுவார்கள்.

வீட்டிற்கு வெளியே காரின் ஹாரன் ஒலிக் கேட்கவும், “அட... பிள்ளை வந்து விட்டாள் போலிருக்கிறதே!” என வேகமாக சமைத்துக் கொண்டிருந்த அடுப்பை அணைத்துவிட்டு மங்களமும் வாயிலுக்கு விரைந்தார்.

காரின் கதவை திறந்துக்கொண்டு அவள் இறங்கவும், "குட்டிம்மா!" என்று நெருங்கி அவள் கையை நெகிழ்வுடன் பற்றிக்கொண்டார் சிவா.

"ஹாய் தத்து..." என அவளும் உற்சாகமாக கட்டிக்கொள்ள பெரியவர் விழித்தார்.

"என்ன தத்துவா? அப்படியென்றால் ஏதாவது இந்தி வார்த்தையா?" என்று சந்தேகம் கேட்டார்.

கலகலவென்று நகைத்தவளோ, "ஹைய்யோ... அது சுத்த தமிழ் தான். தாத்தாவை தான் சுருக்கி செல்லமாக தத்துவாக்கி விட்டேன்!" என்று உரிமையாக அவர் தோளில் கைபோட்டுக் கொண்டாள்.

"அட முருகா..." என்றவர் முகம் சுளிக்க, மங்களம் அவளிடம் நலம் விசாரித்தார்.

"என்னடா தங்கம் எப்படி இருக்கிறாய்? அப்பா, அம்மா, பாப்பா எல்லோரும் நலமா?"

"ஹாய் அத்தை... ஆல் ஆர் ஃபைன். அப்புறம் அவள் பாப்பா அல்ல இப்பொழுது பீப்பா ஆகிவிட்டாள். கல்லூரியில் எல்லோரும் கேலி செய்கிறார்கள் என இப்பொழுது தான் வாயை கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறாள்!" என்று தன் தங்கையை கேலி செய்தவள், "அப்புறம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? தமிழ் எங்கே?" என அவரிடம் கேள்வி எழுப்பினாள்.

"அவன் பள்ளிக்கு கிளம்புகிறான்டா, மெதுவாக இன்று நீ வருவதை சொல்லி பள்ளிக்கு மட்டம் போட பார்த்தான். நான் தான் இங்கே விடாது கண்டிப்புடன் சாயந்திரம் வந்துப் பார்த்துக்கொள் என்று கிளம்பச் சொல்லி விட்டேன். இன்னும் பத்து நிமிடங்களில் ஸ்கூல் பஸ் வந்து விடும், நான் போய் அவனை அனுப்பிவிட்டு வருகிறேன். நீ அதற்குள் பல் தேய்த்து விட்டு வா, காபி டிகாஷன் தயாராக இருக்கிறது. நான் வந்து சூடாக பால் கலந்து தருகிறேன்!"

"ஓ... நீங்கள் சென்று முதலில் அவனை பாருங்கள் அத்தை. ஒரு வருடமாக தனியாக வீடெடுத்து தங்கியிருந்ததால் சின்ன சின்ன சமையல் எல்லாம் எனக்கு கைவந்த கலை தான், யூ டோன்ட் வொர்ரி!" என அனுப்பி வைத்தாள்.

தன் பேத்தியை மேலிருந்து கீழ்வரை பார்த்த சிவா, "ஏன்டா குட்டி... நீ அந்தக் காலம் மாதிரி பாவாடை, தாவணி எல்லாம் கட்டு என்று எதுவும் நான் சொல்ல மாட்டேன். ஆனால் நம் ஊர் இளம் பெண்கள் மாதிரி சுடிதார், அப்புறம் இப்பொழுது பாவாடை, சட்டைக்கு ஏதோ பெயரெல்லாம் புதிது புதிதாக சொல்கிறீர்களே... அந்த மாதிரியாவது வாங்கிப் போடலாம் அல்லவா? இப்படி ஆண்பிள்ளை மாதிரி பேன்ட், சட்டையில் வந்து நிற்கிறாயே?" என்றார் ரொம்பவும் ஏமாற்றமாக.

"அச்சோ தத்து... இது பசங்க போடுகிற சட்டை இல்லை, பெண்கள் அணிகிற உடை தான். அதுவும் இல்லாமல் ப்ளைட் ஏறி இறங்கி, இங்கே பஸ் பிடித்து அலைந்துக்கொண்டு வருவதற்கெல்லாம் பாவாடையை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, லக்கேஜை ஒரு கையில் தூக்கிக்கொண்டு என்றெல்லாம் என்னால் சமாளிக்க முடியாது. இதுதான் டிராவல் செய்வதற்கு ரொம்பவும் வசதி!"

"என்னவோ போ... ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்புகிறேன் என்றதற்கும் இல்லை இல்லை நான் ஜாலியாக பஸ்ஸில் தான் வருவேன் என்று விட்டாய். இதில் தமிழ் ஒழுங்காக எழுதப் படிக்கத் தெரியாத நீ எந்த பஸ்ஸில் ஏறி எந்த ஊருக்கு செல்வாயோ என்கிற பயம் வேறு எனக்கு உள்ளுக்குள் இருந்துக் கொண்டே இருந்தது!"

"இதெல்லாம் டூ மச்... பள்ளியில் படிக்கவில்லை என்றாலும் அம்மா எங்களுக்கு தனியாக டியூசன் வைத்து தமிழ் கற்றுக் கொடுத்தது உங்களுக்கு தெரியுமா இல்லையா?" என்று முறைத்தாள் பேத்தி.

சிவலிங்கமோ பலமாக நகைக்க ஆரம்பித்து விட்டார்.

"ஹஹா... அதுதான் தெரியுமே? போன விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தப் பொழுது சுந்தர காண்டத்தை படித்துச் சொல்டா என்றால் புத்தகத்தை கையில் எடுத்து எது இந்த சந்திர காண்டமா தாத்தா என கேட்டவள் தானே நீ?" என்று நகைத்தார் பெரியவர்.

"ஹும்... தாத்தா!" என்று அவள் தரையை உதைக்க, "அடி விழும்பொழுது தான் அம்மா என தாய்மொழி வருமாம். அதுபோல உன்னை கேலி செய்தால் தான் தாத்தா என்கிற வார்த்தை கூட உன் வாயில் இருந்து ஒழுங்காக வரும் போல தெரிகிறது!" என மேலும் சீண்டினார் சிவா.

"ரொம்பவும் தான் என்னை டேமேஜ் செய்கிறீர்கள் ஓல்ட் மேன். தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி பாயுமாம், அதுபோல நீங்கள் எட்டடி பாய்ந்தீர்கள் என்றால் பேத்தி நான் முப்பத்தியிரண்டு அடி பாய்வேன் ஜாக்கிரதை!" என சுட்டு விரல் நீட்டி எச்சரித்துவிட்டு, சின்ன சிலுப்பலுடன் தன்னறைக்கு சென்றாள் ரித்திகா.

தன் பேத்தியின் அலும்பை ரசித்துச் சிரித்தவர், இவள் இங்கே வந்து விட்ட தகவலை வீட்டிற்கு தெரிவித்தாளா என்னவோ தெரியவில்லையே என யோசனையோடு லேன்ட் லைனில் சுப்பிரமணியம் வீட்டு எண்ணை தட்டினார்.

மகன் வேலைக்கு சென்றிருப்பானோ என்னவோ என்று இவர் மருமகளை அழைக்க, "ஹலோ மாமா! எப்படி இருக்கிறீர்கள்? ரித்து வந்தவுடனேயே உங்களை படுத்தி எடுக்க ஆரம்பித்து விட்டாளா?" என விசாரித்தார் காஞ்சனா.

"அப்படியெல்லாம் இல்லைம்மா... பொழுது போகாமல் உட்கார்ந்து இருந்த கிழவனுக்கு இனி பொழுது இறக்கை கட்டிப் பறக்கும்!" என வேடிக்கையாக கூறியவர், "அவள் வீட்டிற்கு வந்துவிட்ட தகவலை உனக்கு தெரிவிக்கலாம் என்று தான் போன் செய்தேன்மா!" என்றார் கூடுதலாக.

"ஓ... காரில் வரும்பொழுதே வீடு இருக்கின்ற தெருவில் நுழைந்து விட்டேன் என்று தகவல் சொல்லி விட்டாள்!”

"அப்படியா சரி சரி, சின்னக்குட்டி கல்லூரி கிளம்பி விட்டாளா? சரிம்மா நான் பிறகு பேசுகிறேன்!" என ரிசீவரை தாங்கியில் வைத்தவருக்கு பெரிய பேத்தியை எண்ணி திருப்தியாக இருந்தது.

'பரவாயில்லை... நம் பிள்ளையிடம் விளையாட்டுத்தனம் இருக்கின்ற அதே நேரம் பொறுப்புணர்வும் இருக்கிறது!'

"தத்து... இப்பொழுது எப்படி இருக்கிறது?" என துள்ளலுடன் எதிரே வந்து, நின்ற இடத்திலேயே ஒருமுறை சுழன்றுக் காண்பித்தவளை கண்டு நிறைவாகப் புன்னகைத்தார் சிவா.

குதிகாலை மறைக்கின்ற ராயல் ப்ளூ லாங் ஸ்கர்ட்டும், இடைதாண்டி நிற்கும் பேபி பிங்க் ஃபுல் ஸ்லீவ் டாப்சுமாக கண்ணுக்கு லட்சணமாக முகத்தில் என்றும் மாறா குறும்புப் புன்னகையுடன் செதுக்கிய சிற்பமென அழகுற வந்து நிற்கும் தன் வீட்டு வாரிசை ஆசையுடன் கண்களில் நிரப்பிக் கொண்டவர் அருகில் வந்ததும் நெற்றியை சுருக்கினார்.

"என்னடா குட்டிம்மா இன்னும் நீ தலையில் பின்னல் போடவில்லையா?" என்று அவளை பின்னால் எட்டிப் பார்க்க, ரித்து முகத்தை சுளித்து சிணுங்கினாள்.

"ஐயோ தத்து... சத்தியமாக அதுமட்டும் என்னால் முடியாது. அது கோணல் கோணலாக நன்றாகவே வராது. வந்தாலும் இது போன்ற ஆடைகளுக்கு பார்ப்பதற்கு கேவலமாகவும் இருக்கும். என் லெஹங்கா எடுத்து வந்திருக்கிறேன், வேண்டுமென்றால் உங்களுக்காக ஒருநாள் அதில் தாவணி போட்டுக்கொண்டு அத்தையிடம் பின்னிக் கொள்கிறேன். ஆனால் தினமும் எல்லாம் அதை எதிர்பார்க்காதீர்கள்!" என்று கண்டிப்புடன் கூறிவிட்டாள் பேத்தி.

"ம்... சரி சரி, பரவாயில்லை விடு. அப்புறம் தாத்தாவின் தொல்லை தாங்க முடியவில்லை என்று பின்னங்கால் பிடறியில் பட ஊருக்கு ஓடிவிடப் போகிறாய்!"

கேலி செய்தவரை முதலில் முறைத்து நின்றாள் பெண்.

அடுத்த நொடி அருகில் வந்து அவர் கழுத்தை கட்டிக்கொண்டு, "ஆஹான்... அப்படியெல்லாம் ஓடிவிட மாட்டேன். இந்த முறை உங்களுடன் மாதக்கணக்கில் தங்கியிருந்து, ஐயோ... பேத்தியோட தொல்லை தாங்க முடியவில்லைடா சுப்பு, எப்பொழுதுடா அவளை வந்து ஊருக்கு அழைத்துச் செல்லப் போகிறாய் என நீங்கள் உங்கள் மகனை அதட்டும் வரை விடப்போவதில்லை!" என்று மிரட்டும் ரித்திகாவை கண்டு வாய்விட்டு நகைத்தார் சிவலிங்கம்.

முதுகலையில் எலக்ட்ரானிக்ஸ் மேற்படிப்பை முடித்தக் கையோடு அவளுக்கும், அவள் தோழிக்கும் வீட்டில் இருந்து இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் இருந்த தனியார் தொழில் நிறுவனம் ஒன்றில் ஒரு வருடத்திற்கான தொழில் பயிற்சியில் சேரச் சொல்லி வாய்ப்பு தேடிவர, வந்ததை ஏன் விட வேண்டுமென்று இருவரும் விடுமுறையை கூட கழிக்காமல் உடனே வேலையில் இணைந்து விட்டனர்.

பயிற்சி முடியும் தருவாயில் இவள் தோழிக்கு வேறொரு நிறுவனத்தில் நல்லதொரு வேலை கிடைக்க அவள் அதில் இணைந்துக் கொண்டாள். இவளுக்கு பணி சற்றே அலுப்புத் தட்டவும், சிறிது காலம் தாத்தாவுடன் தங்கியிருந்து சந்தோசமாக பொழுதைக் கழிக்கப் போகிறேன் என்று இங்கே கிளம்பி வந்து விட்டாள்.

No comments:

Post a Comment

Most Popular