Nanoru Sindhu 40 - Deepababu


*40*


ஒரு கணம் அவள் செயலில் திகைத்து விழித்தவன் பின் வாய்விட்டு நகைத்தான்.

"தெரிந்தால் சரி!" என்று உற்சாகமாக தோள்களை குலுக்கியபடி தருண் காரை ஸ்டார்ட் செய்யவும், வழக்கமான வழக்கமாக ஹும்... என இதழ் சுழித்து பழிப்பு காண்பித்தாள் தன்யா.

அதைக் கண்ணுற்றவன், "நானும் சொல்ல வேண்டாமென்று தான் பார்த்தேன் இருந்தாலும் இது உன் மேனரிசம் போல் தெரிகிறது. அடிக்கடி செய்வதால் எச்சரிப்பது என் கடமையல்லவா?" என்று அவன் சுற்றி வளைத்துப் பேசவும் நெற்றியை சுருக்கியபடி அவனை புரியாமல் ஏறிட்டாள் அவள்.

"என்ன?" என்றாள் குழப்பத்துடன்.

"எதற்கெடுத்தாலும் பழிப்பு காண்பிக்கும் இந்தப் பழக்கத்தை கூடிய விரைவில் மாற்றிக் கொள்!" என்று லாவகமாக ஸ்டீரியங்கை வளைத்தபடி இலவச ஆலோசனை வழங்கினான் அவன்.

"ஏன்?"

"ஏனென்றால்... அதெல்லாம் அப்படித்தான், கேள்வி எதுவும் கேட்க கூடாது சொன்னதை மட்டும் செய்!" என்றான் உத்திரவிடும் தொனியில்.

"ஓஹோ... உத்திரவு எல்லாம் பெரியதாக இல்லை இருக்கிறது. நான் முடியாதென்று மறுத்தால்... என்னை சொல்லி விட்டு, இப்பொழுது நீங்கள் தான் ஓவர் சீன் போடுவது போல் எனக்கு தோன்றுகிறது. ஆனால் என்னவொன்று உங்களுக்கு சுத்தமாக அது செட்டாகவில்லை!" என்றவளின் விழிகள் கேலியில் மின்ன, அதன் ஒளியில் ஒரு நிமிடம் தன்னை மீறி மூழ்கினான் தருண்.

அன்று வீட்டில் அனைவரிடமும் தன் காதலை பகிர்ந்தப் பொழுது சித்து பேசியது அவனது நினைவில் எழும்பியது.

நானும் உன்னை போல் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காதவன் தான். உன் அம்மாவை கண்டதும் அத்தனையும் தலைகீழாக மாறி மனதில் கவிதையெல்லாம் கூட தோன்றியது தெரியுமா?

'இப்பொழுது நானும் தானே காதலிக்கிறேன்... அப்பொழுது எனக்கும் கூட கவிதை வருமா? முயன்று தான் பார்க்கலாமே, கருண் வேறு என்னை சாமியார் என்று விட்டான்!' என எவ்வித யோசனையுமின்றி சட்டென்று சடன் பிரேக்கிட்டு காரை நிறுத்தினான் தருண்.

"ஹேய்... என்ன இது எந்த சிக்னலும் போடாமல் நீங்கள் பாட்டுக்கு நடு ரோட்டில் திடீரென்று காரை நிறுத்தி விட்டீர்கள்? ஓ காட்... நல்லவேளை பின்னால் வேறு எந்த வாகனமும் வரவில்லை!" என்றவளின் பார்வை வெளிப்புறத்தில் அலைப்பாய்ந்தது.

நீரில் நீந்தும் மீன்கள் போல அவளின் கண்மணிகள் ஓரிடத்தில் நில்லாமல் இங்குமங்கும் நீந்த, தருண் ஒருவித மோனநிலையுடன் தன்யாவை நெருங்கினான்.

"ஆமாம்... இங்கு ஏன் நிறுத்தி..." என்று வேகமாக திரும்பியவள் வாக்கியத்தை முடிக்க முடியாமல் தடுமாறினாள்.

அவனை அவ்வளவு நெருக்கத்தில் எதிர்பாராதவளின் இமைகளும், இதயமும் படபடப்பை தத்தெடுத்துக் கொள்ள அதன் அழகில் மயங்கிய அவனோ, "ரியலி... ஸோ ஸ்வீட்!" என்று ரசித்தான்.

மூச்சுக்காற்றின் வேகம் அதிகரித்தாலும் சமாளித்துக் கொண்டு, "என்ன?" என்று முனகினாள்.

"ம்... உன் கண்களை தான் சொன்னேன், பால் வீதியில் நீந்தும் கருநிலா போல..." என்றவனின் வர்ணனையில் அவள் பக்கென்று சிரித்து விட, முறைத்தான் தருண்.

"கருநிலாவா? எந்த ஊரில் கருப்பு நிலா பார்த்தீர்கள்?" என்று இதழ் கடித்து சிரிப்பை அடக்கப் பார்த்தாள்.

"ஹும்... ரசனை கெட்ட ஜென்மம், உன்னிடம் கவிதை சொல்ல நினைத்தேன் பார் என்னை சொல்ல வேண்டும். உன் கருவிழியின் ஒளியை தான் நிலவின் ஒளியோடு ஒப்பிட்டுக் கூறினேன். எனக்கு கவிதை வரிகள் உதிப்பதே உலக அதிசயம் அதையும் இடையில் சிரித்து கெடுத்து விட்டாள்!" என்றவனின் புலம்பலை கேட்டவள் குறும்புடன் புன்னகைத்தாள்.

"ஓ! நீங்கள் சொன்னதற்கு பெயர் கவிதையா? கொஞ்சம் சொல்லி விட்டு சொல்லியிருக்கலாம் இல்லை... நான் அதற்கு முன் கூட்டியே தயாராகி சிரிக்காமல் இருந்திருப்பேன்!" என்று கண்சிமிட்டியவளை ஆழ்ந்துப் பார்த்தவன், போடி என்று விட்டு காரை எடுத்தான்.

"ஆங்... என்ன போடியா?"

"ஆமாம்... நீ என் பெண்டாட்டியாக போகிறவள் தானே?"

"ஓஹோ... பெண்டாட்டி என்றால் மட்டும் போடி சொல்வீர்களா?" என்று பதிலுக்கு பதில் வார்த்தையாடிக் கொண்டே கமலாவின் வீட்டை சென்றடைந்தனர்.

அங்கு பார்வதி, கமலா, சீனு, சித்து, சிந்து, கருண் என அனைவரும் ஒன்றாக தங்கள் வீட்டு மருமகளை வரவேற்க இன்முகத்துடன் திரண்டிருந்தனர்.

வீட்டு வாயிலில் கார் நிற்கும் வரை வாயாடிக் கொண்டிருந்த தன்யா அனைவரையும் கண்டதும் கப்பென்று அமைதியானாள்.

அதைக் கண்ட தருண், "என்ன ஜுராசிக் பார்க் உள்ளே வந்தது போல் சட்டென்று அமைதியாகி விட்டாய்?" என கிண்டல் செய்தான்.

"ப்ச்... நீங்கள் வேறு கொஞ்சம் சும்மா இருங்கள், என்னவென்று தெரியவில்லை திடீரென்று எனக்கு ஒரு மாதிரி டென்ஷனாக இருக்கிறது!" என்றவளின் முகத்தில் பதட்டம் அப்பட்டமாய் தெரிந்தது.

"ஹேய்... கூல்டாம்மா, ஒன்றுமில்லை ரிலாக்சாக வா, இங்கிருப்பவர்கள் எல்லோரும் நம் ஆட்கள் தான்!" என்று அவள் கரத்தை அழுத்தி விட்டு கீழே இறங்கினான்.

நீண்ட நெடுமூச்சொன்றை உள்ளிருந்து வெளியேற்றி தன்னை சமன்படுத்தியவள் தானும் இறங்கினாள்.

அடுத்த நொடி அனைவரும் ஆவலுடன் தன்யாவை சூழ்ந்துக் கொண்டு வரவேற்பாக உரையாட ஆரம்பித்தனர்.

அவர்களின் அன்பில் திக்குமுக்காடிப் போனவள், நெகிழ்ச்சியோடு தருணை பார்த்தாள்.

"ஹும்... எவ்வளவு சிரமப்பட்டு அந்த வீட்டில் இருப்பவர்களிடம் என் பராக்கிரமத்தை எல்லாம் வெளிப்படுத்தி சண்டையிட்டு சமாளித்து உனக்கு சாரதி வேலை வேறு பார்த்து பத்திரமாக அழைத்து வந்திருக்கிறேன் என்ற எண்ணம் இங்கே யாருக்காவது இருக்கின்றதா பார்... அனைவரும் யுவராணியை மட்டும் தான் கவனிக்கிறார்கள், இறுதியில் இந்த யுவராஜாவை வெறும் கூஜாவாக்கி விட்டார்கள்!" என்று போலியாக வருத்தப்பட்டான் தருண்.

"அடேய்... ரொம்ப தான் சாதித்து விட்டாயடா நீ? என்னவோ இந்த யுவராஜா எங்களுக்காக சிரமப்பட்டு நாடு விட்டு நாடு தாண்டி சென்று யுவராணியை அழைத்து வந்த மாதிரி இல்லை பெரியதாக கதை அளக்கிறாய்... எல்லாம் உனக்காக தானே அழைத்து வந்தாய், அப்புறம் என்ன தனியாக பாராட்டுப் பத்திரம் வேறு வாசிக்கவில்லை என புகார் செய்கிறாய்?" என்று கமலா நன்றாக தருணின் காலை வார, அதானே என்ற சித்து அவளிடம் உற்சாகமாக ஹாய்ஃபை கொடுத்தான்.

அவளின் பேச்சை கேட்டு தன்யாவின் முகம் சிவக்க, "என்ன ஓரேயடியாக எல்லோரும் ஒன்று கூடி என் அண்ணாவை ரொம்பவும் தான் கேலி செய்கிறீர்கள்? சொன்னாலும் சொல்லா விட்டாலும் என் அண்ணாவுக்கு இது மிகப்பெரிய சாதனை தான். எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத என் சகோதரன், உலக அதிசயமாக ஒரு பெண் மேல் நேசம் கொண்டு அதுவும் அவர் எதிரி நாட்டை சேர்ந்தவர் என்று தெரிந்தும் திண்மையாக அதை எதிர்க்கொண்டு வெற்றி பெற்று அழைத்து வந்திருக்கிறார் என்றால் அது என்ன சாதாரண விஷயமா?" என்று வேகமாக இடையில் புகுந்த கருண் தன் அண்ணனை ஆதரிக்கும் போர்வையில் கேலிப் பேச, தருண் அவன் காதை நன்றாக வலிக்க திருகினான்.

"டேய்... கடைசியில் நீயும் இவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு என்னை கேலிப் பேசுகிறாயா?"

"ஐயோ அண்ணா... வலிக்கிறது விடு. திருமண வீடென்றால் இப்படியெல்லாம் கேலிப் பேசினால் தான் நிகழ்ச்சிகள் சுவாரசியமாக இருக்கும் என்று யாரோ சொன்னார்கள்!" என காதை தேய்த்தபடி தள்ளி நின்றுக் கொண்டான்.

"அப்படியா... யாருடா அது?"

"ஹிஹி... அது ஞாபகம் இல்லையண்ணா!" என்றவன் தருண் மீண்டும் அருகில் வரவும், "அண்ணி! இனி நீங்கள் தான் அண்ணாவிடமிருந்தும், அம்மாவிடமிருந்தும் என்னை காப்பாற்ற வேண்டும், ப்ளீஸ்!" என்று தன்யாவிடம் சரணடைந்தான்.

"அச்சோ... என்ன நானா? நானே இங்கு அத்தையை நம்பி தான் வந்திருக்கிறேன்!" என்று தன்யா வேகமாக முழங்கவும், அங்கே எழும்பிய சிரிப்பொலி அடங்க வெகு நேரமாகியது.

மறுநாள் நல்ல சுபயோக சுப முகூர்த்தத்தில் தன்யாவின் கழுத்தில் மங்கள நாணை பூட்டி அவளை தன்னவளாக ஏற்றுக் கொண்டான் தருண்.

திருமணத்தை கோவிலில் எளிமையாக முடித்தவர்கள், ஒரு வாரம் கழித்து ஞாயிறன்று நண்பர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்து பெரியதாக ரிசப்ஷன் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தனர்.

மணமக்களை தங்கள் வீட்டிற்குள் ஆரத்தி எடுத்து ஆத்மார்த்தமாக வரவேற்றாள் சிந்துஜா.

தனது வலது காலை அடியெடுத்து வைத்து கிரஹப்பிரவேசம் செய்தவளை வாஞ்சையுடன் அரவணைத்துக் கொண்டது அக்குடும்பம்.

சம்பிரதாயங்கள் முடிந்து காலை உணவிற்கு பிறகு கமலா வீட்டினர் மற்றொரு விஷேசத்திற்கு செல்ல வேண்டி அங்கிருந்து விடைப்பெற்று சென்றுவிட ஏனைய குடும்ப அங்கத்தினர்கள் மட்டும் சற்று ஓய்வாக அமர்ந்திருந்தனர்.

அந்த நேரம் முகமெங்கும் பலமாக புன்னகை படர்ந்திருக்க ஒரு கிப்ட் பாக்சுடன் அவர்களின் அருகே வந்தான் கருண்.

"டேய்... என்னடா இது? நீ என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறாய் எங்களுக்கு?" என்று வியப்புடன் கேட்டான் தருண்.

"ஆங்... திருத்திக் கொள் இது உங்களுக்கு இல்லை, அண்ணிக்கு மட்டும் தான். ஹேவ் இட் அண்ணி!" என்று தன்யாவிடம் ஸ்டைலாக கொடுத்தான்.

சின்ன வியப்புடன் அதை கைநீட்டி வாங்கியவள், "என்ன இது?" என்று அவனிடம் ஆச்சரியமாக வினவினாள்.

"ம்... பிரித்து தான் பாருங்களேன், மற்றவர்கள் கொடுத்ததை விட நான் கொடுத்ததை தான் நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்!" என்று அவளிடம் சவால் விட்டான்.

"ஆஹாங்..." என்றபடி புன்னகையுடன் அவள் பிரிக்க ஆரம்பித்தாள்.

"அப்படி என்னடா இருக்கிறது அதில்?" என்று ஆர்வமாக வினவினான் தருண்.

"ப்ச்... அது தான் பிரிக்கிறார்கள் இல்லை, அதற்குள் என்ன அவசரம் உனக்கு? உன்னை வேறு பொறுமைசாலி என்று எல்லோரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்!" என தலையசைத்தபடி வெகுவாக அலுத்துக் கொண்டான் கருண்.

"அடிங்க..." என்று அவன் முதுகில் அடித்தவனை, "அதற்குள் ஏன் இப்படி அடிக்கிறாய்? இன்னும் அதைப் பிரித்துப் பார்க்கவேயில்லையே..." என்று தனது வழக்கமான துடுக்குதனத்தால் தன்னை மறந்து கருண் அதட்டிவிட, அவனை சற்று சந்தேகமாகப் பார்த்தான் தருண்.

அவன் சமாளிப்பதாக எண்ணிக் கொண்டு அவனிடம் ஈயென்று பல்லை வேறு காண்பித்து வைக்க, 'ஐயோ... இவன் ஏன் இப்படி பல்லை காண்பிக்கிறான்? சம்திங் ராங்... சந்தேகமே இல்லை. நிச்சயமாக இவன் என்னவோ கோல்மால் செய்து வைத்திருக்கிறான்!" என்று உதட்டை கடித்தபடி குழப்பத்துடன் பார்சலிடம் திரும்பினான்.

தன்யா முழுவதையும் பிரித்து முடிக்க உள்ளே ஒரு சின்ன பாக்ஸில் பென்டிரைவ் ஒன்று இருந்தது.

"இது என்ன ஏதோ பென்டிரைவ் இருக்கிறது. இதில் எதுவும் முக்கியமான வீடியோ இருக்கிறதா என்ன?" என்றபடி அதை திருப்பி திருப்பி பார்த்தாள் அவள்.

நடப்பதையெல்லாம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சித்துவிற்கும், சிந்துவிற்கும் விஷயம் புரிந்து விட நமட்டுச் சிரிப்போடு பார்த்திருந்தனர்.

"இதை சும்மா கைகளில் வைத்துக் கொண்டு பார்த்தால் எப்படி தெரியும்? என்னிடம் கொடுங்கள் நான் டிவியில் போடுகிறேன்!" என்று அலட்டிக் கொண்டு அவளிடமிருந்து கிட்டத்தட்ட பிடுங்கி சென்றான் கருண்.

'நோ... கண்டிப்பாக ஏதோ சரியில்லை!' என தருணின் மூளையில் அலாரம் அடிக்க, "டேய்... அதில் என்னடா இருக்கிறது?" என்று விரைவாக எழுந்து அவன் பின்னே சென்று அதை வாங்க முயன்றான்.

"அண்ணி! இங்கே பாருங்கள் உங்கள் சர்ப்ரைஸ் கிப்டை அண்ணா பிடுங்க பார்க்கிறான், அப்புறம் எனக்கு தெரியாது!" என்று அவனுக்கு பிடி கொடுக்காமல் கைகளை மேலே தூக்கியவாறு தன்யாவிடம் கூவினான் கருண்.

"ஏய் பிராடு... என்னை வைத்து தான் நீ என்னவோ விளையாடுவது போல் எனக்கு தோன்றுகிறது. ஒழுங்காக அதை என்னிடம் கொடுத்து விடு!" என்று எக்கியபடி அவனிடமிருந்து பென்டிரைவ்வை பிடுங்க முயன்றான் தருண்.

கருணின் சொல் கேட்டு எழுந்து வந்த தன்யாவும், "ப்ச்... அதை எதற்கு நீங்கள் பிடுங்கப் பார்க்கிறீர்கள், அது என்னுடைய கிப்ட்!" என்று அவனை வேறுப்பக்கமாக இழுத்தாள்.

ஏய்... என்று அவன் தடுமாறிய நேரம், கருண் நழுவி ஓடிப் போய் டிரைவை டிவியில் சொருகினான்.

உன்னை... என்று தருண் தன்யாவின் கைப்பற்றி முரட்டுத்தனமாக இழுக்க, அவள் ஆவென்று முகத்தை சுளித்தபடி மெல்லிய சத்தத்தில் அலறினாள்.

என்ன... என்னவென்று பதறியபடி சித்துவும், சிந்துவும் அருகில் வரவும் தருணுக்கு ஒரு மாதிரி பதற்றமாகி விட்டது.

இதுவரை யாரிடமும் இப்படி சிறுவயதில் கூட அவன் சண்டையிட்டுப் பிரச்சினை செய்ததில்லை எனவும் செய்வதறியாது திருதிருவென விழித்தபடி நின்றான்.

"என்னம்மா கை எதுவும் வலிக்கிறதா? தருண்... இப்படி தான் சின்னப் பெண்ணிடம் உன் முரட்டுத்தனத்தை காண்பிப்பாயா?" என்று மகனை கடிந்தபடி தன்யாவை அங்கிருந்த சோபாவில் அமர வைத்தாள் சிந்து.

"இல்லைம்மா... நான்" என மென்று விழுங்குபவனை கண்டு தன்யா ரகசியமாய் கண்ணடித்து சிரிக்க, "ஏய்... அப்பொழுது எல்லாம் நடிப்பா?" என்று பல்லைக் கடித்தவனை இழுத்து தன்னருகில் அமர வைத்தான் சித்தார்த்.

"அட இருடா... அதில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்ப்போம்!" என்றான் ஒன்றும் அறியாதவன் போல.

அதற்குள் கருண் வீடியோவை ப்ளே செய்ய, அதில் தருண் லேசான முகச் சிவப்போடும், கூச்சத்தோடும் தான் தன்யாவை விரும்புவதை மெல்லிய குரலில் கூறிக் கொண்டிருந்தான்.

"அடேய் திருட்டுப்பயலே... இதற்கு தான் அன்று என்னை பேச விடாமல் உள்ளே ஓடி விட்டு வந்தாயா எருமை... எருமை, எதற்குடா வந்த உடனேயே உன் அண்ணியிடம் இப்படி மானத்தை வாங்குகிறாய். இருடா... இதற்கெல்லாம் வட்டியோடு சேர்த்து வைத்து உன் மனைவி வரும் நேரம் அவளிடம் உன்னை பற்றி எல்லாம் போட்டுக் கொடுக்கிறேன்!" என்று தம்பியிடம் சவால் விடுத்தான் தருண்.

"கருண்... யு டோன்ட் வொர்ரி, உங்களுடைய கிப்ட் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இவர் போடுகின்ற திட்டத்தை எல்லாம் முறியடித்து நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்!" என்று கட்டை விரலை உயர்த்தி காண்பித்தாள் தன்யா.

தருண் வேகமாக திரும்பி தன்யாவை முறைக்க, சிந்துஜாவின் செவியில் எதையோ கிசுகிசுப்பாக ஓதிக் கொண்டிருந்தான் சித்தார்த் .

"கண்ணம்மா... என்ன இது? இத்தனை நாள் உன்னையும் கருணையும் சமாளிக்கின்ற வேலை மட்டும் தான் எனக்கு இருக்கும். இனிமேல் ஷிப்ட் போட்டு வேலை பார்க்க நேரிடமோ என்னவோ தெரியவில்லையே... வீட்டில் ஆளாளுக்கு அணி பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகமொத்தம் என் பேரன், பேத்திகளிடம் உதை வாங்க போகிறவர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது!" என்று தன் காதல் மனைவியிடம் இரகசிய குரலில் கூறி நகைத்தான் அவன்.


💞சுபம்💞

No comments:

Post a Comment

Most Popular